Thursday, September 18, 2008

குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்

அசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ்

கடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா மற்றும் முன்னணி நிறுவனமான பிஸ்லரி உட்பட பலவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிப்படுத்தியது டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன் விளைவாக அரசு குப்பியில் அடைக்கப்பட்ட தண்ணீருக்குத் தர நிர்ணயம் செய்யவேண்டிய கட்டாயம் உருவானது. இவற்றை அருந்துவதைவிட நீரை சுட வைத்துக் குடிப்பதே சிறப்பானது என்ற 'நல்ல ' முடிவுக்குப் பொதுமக்களும் வந்தனர்.

6 மாதங்களின் பின்னர் அதிரடியாய் மற்றொரு தாக்குதலையும் மேற்கொண்டிருக்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன்மூலம் கோக், பெப்சி ஆகிய இருபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான 12 குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி நச்சுக்களின் எச்சம் இருப்பதை வெளிப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட உடனேயே நாடாளுமன்றத்திலும் நாட்டிலும் ஒட்டுமொத்த உணர்வும் இவற்றிற்கு எதிராக வெடித்துக் கிளம்பியது. உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தடை விதித்தன. வணிகர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவமாணவியரும் களத்தில் இறங்கி இவற்றை உடைத்தனர்.

கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டதைப் போன்ற உணர்வை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தின. இந்த ஆய்வு குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் சுனிதா நாராயணன்,
'குப்பி நீரைக் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, பிற தயாரிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தியக் குப்பிக் குடிநீர்ச் சந்தையின் மதிப்பு 1000 கோடி ருபாய். இந்தியக் குளிர்பானச் சந்தையின் மதிப்போ சுமார் 7,000 கோடி ரூபாய். இது இன்னும் பலமடங்கு விரிவடைய வாய்ப்பும் உள்ளது.

இன்னொரு முக்கிய விசயமும் உள்ளது. குப்பிக் குடிநீரோ, குளிர்பானமோ அல்ல, பூச்சிக்கொல்லிதான் எமது இலக்கு. பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த கொள்கை உருவாக்கப்படவேண்டும். ஒருமுறை நமது மண், உணவு, நீர் மாசுபட்டுவிட்டால் அவற்றை தூய்மையாக்க ஆகும் செலவு மிக அதிகம். நமக்கு இவற்றை ஒழுங்குபடுத்தக்கூடிய மிகக் கடுமையான சட்டங்கள் தேவை ' என்கிறார்.
இந்த ஆய்வில் பெப்சி நிறுவனத்தின் பெப்சி, மவுண்டன் டியூ, டயட் பெப்சி, மிரிண்டா ஆரஞ்சு, மிரிண்டா லெமன், புளூ பெப்சி, செவன் அப், கோகோ கோலா நிறுவனத்தின் கோகோ கோலா, ஃபான்டா, லிம்கா, ஸ்பிரைட், தம்ஸ்அப் ஆகியவையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசு கண்காணிப்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன. இதில் இந்தக் குளிர்பானங்களில் லின்டேன், டி.டி.ற்றி., குளோர்பைரிபாஸ், மாலதியான் போன்ற பல்வேறு நச்சுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நச்சுக்களின் தன்மை என்ன என்றும் அவை எவ்வளவு இருந்தன என்றும் பார்ப்போம்.

லிண்டேன்: அனைத்து குளிர்பானங்களிலும் இது காணப்பட்டது. இது அனுமதிக்கத்தக்க அளவைக்காட்டிலும் 42 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக 21 மடங்கு அதிகமாக இருந்தது.

இது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் சீர்குலைக்கும் தன்மை வாய்ந்தது. புற்று நோயையும் உருவாக்கக்கூடியது. இது சுவாச மண்டலம், செரிமான மண்டலங்கள் மூலமாக கொழுப்புத் திசுவில் சேர்கிறது. இது மனித கல்லீரல், சிறுநீரகம் முதலியவற்றைப் பாதிக்கும். பிறப்புக் கோளாறுகள், ஆண்மைக் குறைவு, பெண்களின் பாலியல் உணர்வைக் குறைப்பது போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

டி.டி.ற்றி: டை குளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் எனப்படும் இந்த பூச்சிக்கொல்லி டயட் பெப்சி தவிர அனைத்து குளிர் பானங்களிலும் காணப்பட்டது. இதுவும் 42 மடங்குவரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக பெப்சி தயாரிப்புகளில் 16 மடங்கும் கோகோ கோலா தயாரிப்புகளில் 9 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டது.

இது பாலியல் வள˜ச்சியை சீர்குலைக்கும், ஆண்களின் விந்தணுவின் தரத்தைக் குறைக்கும், பெண்களிடம் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. இது ஈஸ்ரோஜன் போன்று செயல்படுவதால் மார்பகப் புற்று, கருச்சிதைவு, எலும்பின் அடத்தியை குறைப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குளோர்பைரிஃபாஸ்: இது அனைத்து குளிர்பானங்களிலும் காணப்பட்டது. இது அதிகபட்சமாக 72 மடங்கு காணப்பட்டது. சராசரியாக 42 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.

இது குழந்தைகளையும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிக்கும். குழந்தைகளின் மூளை வள˜ச்சியைப் பாதிக்கும். தொடர்ந்து பாதிக்கப்படுவோர் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், வலுவற்ற தசைகள் போன்ற பாதிப்புக்கு ஆளாவார்கள்.

மாலதியான்: இது 97% குளிர்பானங்களில் காணப்பட்டது. 196 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. கோகோ கோலாவில் 137 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.

இது மனித மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல, பிறப்புக் கோளாறுகள், தசைகளை பலவீனப்படுத்தல், பக்கவாதம், போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது.

மொத்தமாகப் பார்க்கும்போது, பூச்சிக்கொல்லிகள் மிரிண்டா லெமனில் 70 மடங்கும், கோகோ கோலாவில் 45 மடங்கும் ஃபான்டாவில் 43 மடங்கும், மிரிண்டா ஆரஞ்சில் 39 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் செவன் அப்பில் 33 மடங்கும் லிம்காவில் 30 மடங்கும் புளூபெப்சியில் 29 மடங்கும் மவுண்டன் டியூவில் 28 மடங்கும் தமஸ் அப்பில் 22 மடங்கும் டயட் பெப்சியில் 14 மடங்கும் ஸ்பிரைட்டில் 11 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டன.
இதில் பெரும் கொடுமை என்னவென்றால் குளிர்பானங்களின் தரம் குறித்த எந்த வரையறையும் இந்தியாவில் இல்லை என்பதுதான். (தற்போது, குப்பிக் குடிநீருக்கான தரமே குளிர்பானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.)
உலக சுகாதார நிறுவனம், உணவு மற்றும் வேளாண்துறை, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை எனப் பலவும் பலவிதத் தர அளவைகளைக் கொண்டுள்ளன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது ஐரோப்பிய தர அளவை தனது சோதனைக்கு பயன்படுத்தியது.

இதே பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் குளிர்பானங்களும் டெல்லியில் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் எவ்வித பூச்சிக்கொல்லிகளும் காணப்படவில்லை.
இதைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமன்றத்தில் பிரச்சினை பெரிதாக வெடித்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'உங்களைப் போல் இந்த தகவல் என்னையும் திடுக்கிட வைத்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து உறுப்பினர்கள் இங்கு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ' என்றார்.
ஆனால், ஆகஸ்ட் 21 ஆம் நாள், நாடாளமன்றத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், 'பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட 12 வகை குளிர்பானங்களின் மாதிரிகள் சோதனைக்காக மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்தட்ப ஆராய்ச்சி கழகம், கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது வந்து இருக்கின்றன. குளிர்பானங்களில் அபாயகரமான கூடுதல் நச்சுத்தன்மை ஏதும் இல்லை என்று அந்த முடிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது.

சில மாதிரிகளில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைவிட நச்சுத் தன்மை குறைவாகவே உள்ளது. ஆனால் 9 மாதிரிகளில் சில மடங்குகள் அதிகமாக இருக்கின்றன. உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் பார்த்தால் இந்த குளிர்பானங்கள் நல்ல நிலையில் பாதுகாப்பானதாகவே உள்ளன. ஆனால் குளிர்பான தயாரிப்பாளர்கள் கூறியதைப் போல 100க்கு 100 என்ற அளவில் ஐரோப்பிய நாடுகளின் தரம் பின்பற்றப்படுகிறது என்ற உறுதி மொழி நிரூபிக்கப்படவில்லை ' என்றார்.

சுஷ்மா சுவராஜின் அறிக்கைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்க எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர் சதுர்வேதி கேள்வி விடுத்தார்.

'உற்பத்தி செய்யப்பட்ட காலம், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மழையால் நீரிலுள்ள பூச்சிக்கொல்லிகளின் வீரியம் குறைவது என இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நாங்கள் எடுத்த மாதிரிகள் இன்னமும் இருக்கின்றன. அவர்கள் சோதித்த முறையை கணக்கில் கொண்டே இதற்கான சரியான காரணத்தைக் கூற முடியும். எனினும், தாம் சோதனை செய்ததில், தமது தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லிகளே இல்லை என்று தெரிந்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவித்தது பொய் என்றாகிவிட்டது. டி.டி.ற்றியும், லின்டேனும் எமது சோதனையில் கண்டறியப்பட்டதைவிட அதிக அளவில் இருப்பது அரசின் சோதனையில் தெரியவந்துள்ளது ' என்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர்.

ஆய்வுக்கூட முடிவுகள் உண்மைதானா என்பதைக் கண்டறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத் தன்மை இருந்ததாக கூறப்பட்டது குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தும் என்று சபாநாயகர் மனோகர் ஜோஷி அறிவித்தார்.

இதனிடையே குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத்தன்மை இல்லை என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் சுஸ்மா சுவராஜின் படத்துடன் பெப்சி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக குறைகூறினர். இதையடுத்து சுஸ்மா சுவராஜின் தொனி மாறியது. பெப்சியை கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினார். பெப்சி நிறுவனமும் அவ்வாறே நடந்துகொண்டது. ஆனால் இதன்விளைவாக மைசூர் ஆய்வறிக்கை, கொல்கத்தா ஆய்வறிக்கை இரண்டுமே குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிக்காட்டிய செய்தி தன் சக்தியை இழக்கச்செய்யப்பட்டது.

இதனிடையே குமுதம் இதழ் இயற்கை வேளாண்மைப் பிரச்சாரகர் கோ. நம்மாழ்வாரின் பேட்டியுடன் ' காய்கறிகளிலும் பூச்சிக்கொல்லிகள் அதிகமிருக்கிறது ' என்ற செய்தியை 'போஸ்டரில் ' போட்டு வியாபாரம் நடத்தியது. இதனால், 'எல்லாவற்றிலுமே பூச்சிக்கொல்லி இருக்கிறது; குளிர்பானத்திலும் இருக்கிறது ' என்ற எண்ணம் சராசரி மக்களின் மனதில் விதைக்கப்பட்டது. புகழுபெற்ற சிறுநீரக மருத்துவரும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான மதுரை டாக்டர் சேதுராமன் கோக், பெப்சி அருந்தும் போராட்டத்தை அறிவித்தார். நடிகர் மன்சூர் அலிகானும் இதையே செய்தார்.

'தண்ணீர் உட்பட விவசாய மூலப்பொருட்களில் மட்டும்தான் எந்தளவுக்கு பூச்சிக்கொல்லி வேதிகள் உள்ளன என்று ஆராயலாம். கோக், பெப்சி போன்ற நிறைவு செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்தக்கூடாது; அப்படி நடத்துவது சரியல்ல ' என்று ஆகஸ்ட் 31 அன்று டெல்லியில் நிருபர்களைக் கூட்டிவைத்து ஓலமிட்டனர் கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் குப்தாவும் பெப்சி கோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பக்சியும்.

பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே தரமானவையாக இருக்கும், அவங்களோட குவாலிட்டிய நாம மெயின்டெய்ன் பண்ண முடியுமா ? என்றெல்லாம் பேசும் மோகிகள் மேற்கண்ட சொற்களை கூர்ந்து படிக்கட்டும்.
இன்னும் சில விசயங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
பூச்சிக்கொல்லிகள் என்பன இந்தக் குளிர்பானங்களில் கலந்துள்ள மாசுக்கள். ஆனால், இக்குளிர்பானங்களின் தயாரிப்பில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் மணமூட்டிகள், சுவையூட்டிகளின் இனிப்பான்கள், கரியமிலவாயு, வண்ணமூட்டிகள், அமிலங்கள் போன்றவை குறித்தும் அறிவியல் உலகம் இப்போது கவலைப்படத் தொடங்கியுள்ளது.
ஏனெனில், குளிர்பானங்களில் முக்கியபொருள் தண்ணீராகும். இது 86%-90% வரை இருக்கிறது. சுவையூட்டுவதற்கு காஃபின் போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இனிப்பிற்காக, சீனி, சாக்கரின், அஸ்பர்டேம் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

குளிர்பானம் மேலும் குளிர்ச்சியாய்த் தெரிய வைப்பவை அதில் சேர்க்கப்படும் கரியமில வாயுவாகும். இது குமிழிகளாக வெளியேறும்போது குளிர்பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள மணமும் வெளித்தெரிகிறது.

தாகம் தணிப்பது, இனிப்பை நிலைப்படுத்துவது போன்றவற்றுக்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. கராமல், அல்லது பீட்டா கரோட்டின் போன்றவை வண்ணமூட்டிகளாக பயன்படுத்தப் படுகின்றன.
கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காக நாட்டிரியம் பென்சோயேட், பொட்டாசியம் சோர்பேட், கந்தக டை ஆக்சைடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. காற்றேறி கெடுக்காமல் இருப்பதற்காக (ஆண்டி ஆக்சிடென்ட்) அஸ்கார்பிட் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. திண்மையூட்டுவதற்கு பெக்டின், ஆல்ஜினேட்ஸ், கராஜென் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றால், தொப்பை வயிறு, நீரிழிவு, பற்சிதைவு, சத்துக்குறைவு, இதய நோய், பலவித நரம்புக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்குளிர்பானங்களை அருந்துவதால் பொதுவாக ஏற்படும் சிக்கல், உடலில் அமிலத்தன்மை அதிகமாவதாகும். இதனால் வயிறு எரிதல், வயிறு பாதிக்கப்பட்டு வயிற்றுவலி, நிரந்தர செரிமானக் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் ஏற்படும்.
கரியமிலவாயுவானது தேவையில்லை என நமது உடலால் வெளியிடப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இக்குளிர்பானங்களை அருந்தும்போது பெருமளவு சர்க்கரையும் கரியமிலவாயுக் குமிழ்களும், பாஸ்பாரிக் அமிலமும் நம் உடலிற்குள் சென்று, எலும்புகளிலுள்ள தாதுக்களை அகற்றி பலவீனப்படுத்துகின்றன. இதனால் எலும்புகள் எளிதில் உடையலாம். குறிப்பாக பாஸ்பாரிக் அமிலமானது எலும்புகளிலுள்ள சுண்ணாம்புச் சத்தை கரைத்துவிடுகிறது.

இக்குளிர்பானங்களின் அமிலத்தைன்மையால் பல்லின் மேற்பூச்சு அரிக்கப்பட்டு பற்சிதைவு ஏற்படுகிறது.மேலும், குளிர்பானங்களுக்கு கருவண்ணம் கொடுக்க பயன்படுத்தப்படும் 'கராமல் ' என்ற பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும்.

நம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடிய காஃபின் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது உடலின் சுண்ணாம்புச் சத்து சிறுநீர் மூலம் வெளியேறுவதை அதிகரிக்கிறது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு கருவளர்ச்சிக் குறைபாடு, குறைப் பிரசவம், பழக்க வழக்கங்களில் மாற்றம், மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படும். மேலும், தூக்கமின்மை, பதற்றம், கவலை, கோபப்படுதல், இதய துடிப்பில் மாற்றம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

ஆக, பூச்சிக் கொல்லிகளே இல்லாமற்போனாலும் கூட இந்தக் குளிர்பானங்களால் நமக்குக் கெடுதல் ஏற்படும் என்பதே உண்மை.
அப்புறம் ஏன் நாம் இவற்றை அருந்தித் தொலைக்க வேண்டும் ?
000000

இரு கட்டுரைகளும் ஆகஸ்ட் மாத சுற்றுச்சூழல் புதிய கல்வி இதழில் வந்துள்ளன. அவற்றில் கூடுதல் செய்திகள் திண்ணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
-அசுரன்

தமிழர் உணவு

தொ பரமசிவம்

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின் விளை பொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

'சமைத்தல் ' என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது 'அடுதல் ' எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்தி ருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது.

நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.

நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்கவழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது.

கிழங்கு வகைகளில் சிலவும் (பனங்கிழங்கு), புன்செய் தானிய வகைகளில் சிலவும் (சோளக் கதிர்), சிறு பறவை இறைச்சியும் ஏழை மக்களால் சுட்டு உண்ணப்படுகின்றன. கடினமான கிழங்குகளும் (சர்க்கரைவள்ளி, ஏழிலைக் கிழங்குகள்) நீரிலிட்டு அவிக்கப்படுகின்றன. அரைத்த அல்லது இடித்த மாவுப் பொருள்கள் நீராவியில் வேக வைக்கப்படுகின்றன (இடியாப்பம், இட்டிலி, கொழுக்கட்டை). இடித்த மாவுடன், சூடான இனிப்புப் பாகினைச் சேர்த்துக் கட்டி அரிசி, பொரிவிளங்காய், பாசிப்பயற்று மா உருண்டை செய்யப் படுகின்றன. மாவுப் பொருள்களுடன் இனிப்புப் பாகு கூட்டி மீண்டும் எண்ணெயில் பொரித்து முந்திரிக்கொத்து, அதிரசம் (பாசிப்பருப்பு மா, அரிசி மா) ஆகியன செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் உறைப்புச் சுவையுடைய மசாலா கூட்டி பஜ்ஜி, வடை செய்யப்படுகின்றன. புலவு அல்லது காய்கறிகளுடன் உறைப்பு மசாலா கூட்டி எண்ணெய் இட்டுத் தாளித்துக் குழம்பாகவோ அல்லது தொடுகறியாகவோ ஆக்குகிறார்கள்.

மாவுப் பொருள் களுடன் காய்கறிகள் சேர்த்து, எண்ணெய் தடவிச் சுடும் உணவு வகைகளில் அடை, தோசை ஆகியன அடங்கும். இலை (அடை) வடிவில் செய்யப்படுவதால் அது அடை எனப்பெயர் பெற்றது. வெந்த தானியத்துடன் வெல்லம், கருப்புக்கட்டி ஆகியன சேர்த்துத் திரவ வடிவில் ஆக்குவது பாயசம்.

சங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கத் தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு (இலட்டுவம்), எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சருக்கரைப் பொங்கல் (அக்கார வடிசில்), பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன. விசய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில்தான் இட்டளி (இட்டிலி), தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக் குறிப்புக்கள் கிடைக் கின்றன. ஆனால் இவை கோயிற் பண்பாட்டைப் பிரதிபலிப்பதனால், பெருவாரியான மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அறிய இவற்றைப் போதிய சான்றுகளாகக் கொள்ளமுடியாது.

திடப் பொருள்களையும் இறைச்சிப் பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக்காலத்தில் 'சட்டினி ' என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்த துவையல் 'கைமா ' என்ற உருதுச் சொல்லால் வழங்கப்படுகிறது.
எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது (நெல்லரிசி, குறு நொய் அரிசி, சோளம், கம்பம்புல், கேழ்வரகு, வரகரிசி) கஞ்சியாகும். கஞ்சியினை 'நீரடுபுற்கை ' என்கிறார் திருவள்ளு வர் (நீர் + அடு + புல் + கை).

கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர்.
வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உண வாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்த வரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள்.

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி ' எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெளிளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.

பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெய்யில் இட்ட பண்டங்கள் (குறிப்பாக வடை, பஜ்ஜி, மிக் சர், காரச்சேவு போன்றவை) அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விசய நகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.
'லாலா மிட்டாய்க் கடை ' என்பது புதுவகை உணவுகளைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வருகிறது. நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் பிரிவினர் புதிய இனிப்பு வகைகளை அறிமுகப் படுத்தினர். சருக்கரை, கோதுமை, நெய், கடலைமா ஆகியனவே இவற்றின் மூலப் பொருள்கள். சருக்கரைக்குப் பதிலாகக் கருப்புக் கட்டி சேர்த்து நாடார் சாதியினர் வைக்கும் இனிப்புக் கடையை மிட்டாய்க் கடை என்றே சொல்வார்கள். கிராமப்புறத்து மக்கள் இனிப்பு விற்கும் கடைகளை 'அந்திக்கடை ' (மாலை நேரத்துக்கடை) என்றே வழங்கி வந்தனர். லாலா, மிட்டாய் என்பன முறையே இந்தி, உருதுச் சொற்களாகும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண் ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை. அவற்றின் பொரு ளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சருக்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்து விட்டன.

உணவு என்பது இன்று ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. இனிமை ததும்பும் சருக்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகள் ஒடுக்கப்படுவதற்கு அதே சருக்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது. இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத் தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.

கேன்சர் கல்பாக்கம்:

முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு
வணக்கம்.

காவல் துறையினருக்கு பாலின நிகர் நிலை வகுப்புகள், ஆசிரியர் இடமாற்றத்துக்கு பகிரங்க கவுன்சிலிங் முறை போன்ற உங்கள் ஆட்சியின் சில நல்ல பணிகளை நான் பாராட்டுகிறேன் என்றாலும் பொதுவாக நான் உங்கள் அரசியலை ஆதரிப்பவன் அல்ல.
எனினும் எனக்கும் நீங்கள்தான் முதலமைச்சர். உங்களுடன் உடன்படுவோர், உடன்படாதோர் எல்லாருடைய நலனும் உங்கள் பொறுப்புதான். எனவே தமிழகத்தின் ஒரு பொதுப் பிரச்சினையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பி இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகத்தை நவீன வசதிகள் நிறைந்த வளாகமாக உருவாக்கும் கனவு ஒன்று உங்களுக்கு இருக்கிறது. அதற்காக இடம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். மகாபலிபுரம் அருகே மலேசிய அரசு உதவியுடன் புதிய தலைமையகம் கட்ட திட்டம் கூடத் தீட்டியிருக்கிறீர்கள். தற்காலிகமாக ராணி மேரி கல்லூரி வளாகத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதன் சட்டப்படியான சரி தவறுகள் இப்போது நீதி மன்றத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இருக்கட்டும்.

மெரினாவானாலும் சரி , மகாபலிபுரமானாலும் சரி இரண்டுமே கல்பாக்கத்திலிருந்து எவ்வளவு தொலைவு என்பதுதான் முக்கியம். சென்னை 60 கிலோமீட்டருக்கும் குறைவு. மகாபலிபுரம் 10 கிலோமீட்டருக்கும் குறைவு. கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் போதும். சென்னை நகரம் அவ்வளவுதான். செர்னோபில் கதி ஏற்படும். கதிர்வீச்சுக்கு ஆட்சி நடத்துவது அதிமுகவா, திமுகவா என்ற வேறுபாடுகளெல்லாம் கிடையாது. கடவுளை விடக் கதிர்வீச்சு சமத்துவத்தில் நம்பிக்கையுள்ளது. கடவுளாவது சிலரை ஏழையாகவும் சிலரை பணக்காரராகவும் சிலரை புத்திசாலிகளாகவும் சிலரைப் பாமரராகவும் படைத்துவிட்டார் என்கிறார்கள். கதிர்வீச்சு இந்த பேதம் எதுவும் பார்க்காது. அதற்கு நீங்களும் ஒன்றுதான். கருணாநிதியும் ஒன்றுதான்.
பயங்கரவாதிகளுக்கு கல்பாக்கம் போன்ற கடலோர அணு உலைகள் 'சிட்டிங் டக் ' என்று சொல்லக்கூடிய எளிமையான இலக்குகள். அதன் மீது விமானத்தில் ஒரு குண்டு போட்டால் போதும். அணுக்க்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும். அப்படியொன்று நடந்தால் அதை முன்கூட்டி அறிந்து தடுக்கும் அறிவும் அற்றலும் நமக்கு உண்டா என்பது எனக்கு சந்தேகம்தான். ஏனென்றால் அண்மையில் அமெரிக்க விமானமும் ஹெலிகாப்டரும் கல்பாக்கம் மீது ரவுண்ட் அடித்துவிட்டு சென்ரபோது அதைத்தடுக்கவோ, முன்கூட்டி அறியவோ நமக்கு முடியவில்லை என்று செய்தி படித்திருப்பீர்கள்.

அப்படி ஏதேனும் பயங்கரவாதிகள் வந்து தாக்கினால்தான் கல்பாக்கத்தால் ஆபத்து என்று நினைக்க வேண்டாம். கல்பாக்கத்திலே விபத்து நடந்தாலே போதும். விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. அப்படி விபத்து நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? உங்கள் அரசா ? மத்திய அரசா ? விபத்து வரையில் போக வேண்டாம். இப்போதே கல்பாக்கத்தின் கதிர் இயக்கத்தால் சுற்று வட்டாரங்களில் புற்று நோய் அதிகரித்தால் அதற்கு யார் பொறுப்பு ? உங்கள் அரசா ? மத்திய அரசா ?

மத்திய அரசுதான் என்று உங்கள் அதிகாரிகள் உங்களிடம் சொல்லக்கூடும். கல்பாக்கம் மத்திய அரசின் அணுசக்தித்துறை, ராணுவத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனம்; இதில் மாநில அரசுக்கு சம்பந்தமும் பொறுப்பும் கிடையாது என்பார்கள்.

மத்திய அரசு புத்திசாலி. உங்கள் அரசு அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொள்கிறது. நாளைக்கு ஏதாவது தவறு வந்தால், மாநில அரசே எல்லாம் சரியென்று சொல்லியிருக்கிறதே என்று வசதியாகச் சொல்லிவிட முடியும்.

கல்பாக்கத்தில் அணு குண்டு தயாரித்தாலும் சரி, அல்லது அணு சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரித்தாலும் சரி, எதைத் தயாரித்தாலும் அணுக்கழிவு என்பதே ஆபத்தானது. இன்று வரை உலகில் எங்கும் அணுக்கழிவை சக்தியிழக்கச் செய்து பாதுகாப்பானதாக ஆக்க எந்த தொழில் நுட்பமும் கிடையாது. பல தலைமுறைகளுக்கு அணுக்கழிவுகளிலிருந்தே கதிரியக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனவே கல்பாக்கம், கூடன்குளம் திட்டங்களெல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க நிறைய அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்றாலும், இப்போது என் கடிதத்தின் நோக்கம் அதை விவாதிப்பது அல்ல.
கல்பாக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களும், அங்கே தற்காலிக வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் சுற்று வட்டாரக் கூலித்தொழிலாளர்களும், அந்த வட்டாரப் பகுதி மக்களும் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது பற்றிய எங்கள் கவலையை தெரிவிப்பதே நோக்கம்.
கல்பாக்கம் வட்டாரத்திலேயே தனியார் மருத்துவராகப்பணி புரிந்து வருபவர் டாக்டர் புகழேந்தி.

கேரளத்தில் கதிரியக்க பாதிப்பு பற்றிய ஆய்வுக்காக புகழ் பெற்ற அறிஞர் வி.டி.பத்மநாபனுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர் புகழேந்தி. பாதுகாப்பான சூழலுக்கான மருத்துவர் அமைப்பு ( Doctors for Safer environment- DOSE) என்ற சமூக அககறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.ரமேஷ். இவர் தமிழக அணு உலைத்திட்டங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். இவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகுந்த கவலை தருகின்றன.

ஏனென்றால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பவர்கள் உங்கள் அரசின் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள்.அண்மையில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டவர் உங்கள் அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சர். அது மெய்தானா என்று பரிசீலிக்க வேண்டியது உங்கள் அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம்.
அறிக்கைகள் எப்படியிருந்தாலும் அசல் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்டவே இந்தக் கடிதம்.
மாண்புமிகு அமைச்சர் செம்மலை கடந்த மாதம் 20ந்தேதியன்று ' அணு மின் நிலைய ஊழியர்களுக்கு கதிர்வீச்சினால் புற்று நோய் ஏற்படுவதில்லை ' என்று ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டார். ( தினமணி- 21-3-2003) இந்த ஆய்வைச் செய்தவர் உங்கள் அரசின் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வி.எஸ்.ஜெயராமன்.அறிக்கை கூறும் தகவல்கள் இதோ: கதிர்வீச்சால் பாதிப்பு உண்டா என்று கல்பாக்கத்தில் மொத்தம் 15,020 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஊழியர்கள் -5462. அவர்களுடைய இல்லத்துணைவர்கள் ( spouses)- 3969. குழந்தைகள் - 5589. இவர்களில் மொத்தம் 14 பேருக்கு மட்டுமே புற்று நோய் அறிகுறிகள் இருந்தனவாம்.

ஆனால் நமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி ஏற்கனவே அணு மின் நிலைய மருத்துவமனையிலேயே 167 பேர் புற்று நோய அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புற்று நோய் அறிகுறி இருக்கிறதா என்று காஞ்சி மருத்துவமனை எப்படி சோதித்தது ? நாம் விசாரித்த அளவில், ஊழியர்களின் சட்டையைக் கூடக் கழற்றி சோதனை செய்யவில்லை. அப்போதுதான் அக்குள் இடுக்கில் தொடை இடுக்கில் கட்டிகள் உருவாகியிருக்கிறதா என்பதை மருத்துவர் கண்டறியமுடியும். சாதாரணமான இருமல், சளிக்கு ஒரு மருத்துவரிடம் சென்றாலே, சட்டையைக் கழற்றிவிட்டு சோதிப்பார்கள். எனவே நடத்தப்பட்ட சோதனை எந்த அளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. பல சோதனைகள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவை நடத்தப்படவே இல்லை என்று சோதனைக்குச் சென்ற பலர் மூலம் தெரிய வருகிறது.
ஓரளவுக்கு கதிர்வீச்சு இருப்பது உடலுக்கு நல்லது என்று வேறு உங்கள் அரசுமருத்துவர் ஜெயராமன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த ஓரளவு என்ன என்று உலகிலேயே யாருக்கும் தெரியாது. இதில் வினோதம் என்ன்வென்றால், மத்திய அரசின் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( atomic energy regulatory board) செயலாளர் திரு கே.எஸ்.பார்த்தசாரதி 27-2-2003ல் 'இந்து ' ஏட்டில் எழுதிய கட்டுரையில் ' குறைந்த அளவு கதிர்வீச்சு மனிதனுக்கு நலம் தருவதென்று ஒருபோதும் நிறுவப்படவில்லை. தீங்கு தருவது என்றும் முடிவு கட்டுவதற்கும் இல்லை. ' ( Low dose ezposure has never been shown to be beneficial to man. It has not been conclusively shown to be harmful either) என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல. இதே கட்டுரையில் அவர் ஐ.நா சபையின் அறிவியல் குழு, குறைவான கதிர் வீச்சு அளவு என்ற கோட்பாட்டையே ஏற்க மறுத்துவிட்டது என்று கூறியிருக்கிறார். அதாவது ஒருவர் வருடத்தில் எந்த அளவுக்கு கதிர் வீச்சை உடலில் வாங்கிக் கெ 'ள்ளலாம் என்பதற்கு அளவு நிர்ணயிக்க முடியும் என்பதையே அந்த குழு நிராகரித்து விட்டது.

பல மேலை நாட்டு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான கதிர்வீச்சு ( 30 மடங்கு குறைவாக இருந்தபோது கூட) புற்று நோய் ஏற்பட்டது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Rosalie Bertell, Chris Busby என்று புகழ் பெற்ற ஆய்வாளர்களின் விவரமான அறிக்கைகள் இணைய தளத்தில் படிக்கக்கிடைக்கின்றன.

ஆனால், கல்பாக்கத்திலும் இந்தியாவின் மற்ற அணு உலைகளிலும், ஊழியர்கள் வருடத்தில் இந்த அளவு கதிர் வீச்சு வாங்கினால் ஆபத்து இல்லை என்று ஒரு அளவை வைத்துக் கொண்டுதான் இந்த நிர்வாகங்கள் வேலை வாங்கி வருகின்றன. ஊழியர்கள் அணியும் பிலிம் பேட்ஜில் கதிரியக்கம் பதிவாகும். இதைக் கொண்டுதான் அவருக்கு எவ்வளவு கதிர் வீச்சு ஊடுருவியது என்பது தெரியும். உள் ஊடுருவலை அளக்க தனி கருவி, தனி சோதனை தேவை.

இதில் கொடூரம் என்னவென்றால் எந்த ஊழியருக்கும் அவர் எந்த அளவுக்கு கதிர் வீச்சை வாங்கியிருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதில்லை. அவர் ஆபத்தான அளவுக்கு வாங்கிவிட்டார் என்று நிர்வாகம் கருதும்போதுதான் அவருக்கு தெரிவிக்கப்படும். என் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவ்வப்போது வங்கியில் விசாரிக்கும் உரிமையை விட அதி முக்கியமான இந்த உரிமை ஊழியருக்குக் கிடையாது.
தற்காலிக வேலைக்காக பக்கத்து கிராமங்களிலிருந்து அழைத்து வரப்படும் படிப்பறிவற்ற கூலித் தொழிலாளர்களின் நிலைமை என்ன ? உங்கள் ஆதரவாளர்கள் பத்திரிகை படிப்பவர்கள் அல்ல என்று அண்மையில் கூறியிருந்தீர்கள். இந்தத் தொழிலாளர்கள் அந்தப் பிரிவினர்தான். பத்திரிகை படித்தால் கதிர்வீச்சு பற்றி எதிலேனும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்.

சுரேஷ் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 26) 2001ல் நிண நீர் சார்ந்த புற்று நோயில் ( non-hodghkins lymphoma) இறந்து போனார். ஆறுமுகம் என்ற தற்காலிகத்தொழிலாளருக்கு 24 வயதிலேயே 50 வயதுக்காரர்களுக்கு மட்டுமே பொதுவாக வரக்கூடிய குடல் புற்று நோய் ஏற்பட்டு செத்துப்போனார். செல்வகுமார் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 20) 9-7-2002 அன்று cotress spring என்ற பொருளை flaskலிருந்து எடுக்கும்படிபணிக்கப்பட்டார். எடுத்ததும் எச்சரிக்கை மணி ஒலித்தது. காரனம் அது அதிகக் கதிரியக்கம் உள்ள பொருள். அவரது மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் neutrophils எண்ணிக்கை 22 சதவிகிதம்தான் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சாதாரணமாக இது ஒருவருக்கு 40 முதல் 75 சதம் வரை இருக்க வேண்டும். குறைந்திருப்பதற்கு கதிர்வீச்சு பாதிப்பே காரணம். புற்று நோய் வரும் ஆபத்தில் இருக்கும் செல்வகுமார் தனக்கு ஊடுருவிய கதிர்வீச்சு அளவைத்தெரிவிக்கும்படி கல்பாக்கம் நிர்வாகத்திடம் கடிதப்பூர்வமாகக் கேட்டிருக்கிறார். இது வரை பதில் இல்லை. உள் ஊடுருவல் கதிர்வீச்சை அளவிடும் கருவி தனியார் யாரிடமும் கிடையாது. அணு சக்தி அமைப்பிடம் மட்டுமே உண்டு.

இவ்வளவு அஜாக்கிரதை நிலவும் கல்பாக்கத்தில் பெரிய விபத்து ஏற்பட்டால் நீங்கள், நான், ரஜினிகாந்த், ஸ்டாலின், நக்கீரன் கோபால் எல்லாருமே ஒரே கதியைத்தான் அடைவோம். அப்படி பெரிய விபத்து ஏற்படாமல் இதுவரை இருப்பதற்குக் காரணம், சிறப்பான பாதுகாப்பு அக்கறை அல்ல. உங்கள் நம்பிக்கைப்படி பார்த்தால் கடவுள்தான் காப்பாற்றிவருகிறார். என் கருத்தில், தற்செயலாக தப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
பெரிய விபத்து நடந்துவிடக் கூடாதே என்ற கவலை அதிகமாவதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரப் பின்பற்றப்படுவதில்லை என்பதால்தான். ஆனால் இதை வெளியில் தெரியவிடாமல், 1962ம் வருட அணு சக்தி சட்டம், ரகசியம் என்று பயமுறுத்தி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இல்லை என்று அங்குள்ள ஊழியர்களின் சங்கமே கவலை தெரிவித்து வேலை நிறுத்தம் செய்வோம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னால் எச்சரித்திருக்கிறது. BARC facilities employees ' association எனப்படும் ஊழியர் சங்கம் 24-1-2003ல் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கும் அதிர்ச்சியான தகவல்கள் இதோ:

2001 மே 30ந் தேதி இரவு புளுட்டோனியம் ரிகன்வர்ஷன் பகுதியில் விதிகளுக்கு முரணாக இரவு வேலை செய்யப்பட்டது. சேஃப்டி விதிகளை பின்பற்றாததால், நியோப்ரின் கையுறை ஓட்டையாகி, ஊழியர் எஸ்.சிவகுமார் என்பவருக்கு உள் கதிர்வீச்சு ஏற்பட்டது.
2002 டிசம்பர் 19 அன்று அதே பிரிவில் விபத்து ஏற்பட்டது. காற்றில் கதிரியக்கம் கடுமையாக அதிகரித்தது.இந்த தருணத்தில் தரப்பட வேண்டிய பிளாஸ்டிக் உடை, நல்ல காற்று சுவாசிப்பதற்கான கருவிகள் தரப்படவில்லை. ஊழியர்கள் மதுசூதனன், ராஜன் இருவருக்கும் கதிர் வீச்சு ஏற்பட்டது.

2003 ஜனவரி 21அன்று இதுவரை இந்திய அணுசக்தித்துறை வரலாற்றிலேயே ஏற்பட்டிராத ஒரு விபத்து கல்பாக்கம் KARPல் ஏற்பட்டது. சீனிவாச ராஜு என்பவர் ஒரு திரவத்தை எடுத்து வர அனுப்பப்பட்டார். அது என்ன திரவம், அதன் கதிரியக்கத்தன்மை என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரியாமல் அவர் அதை எடுத்து வரச் செய்யப்பட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் அதைக் கையாண்டார். லேபரட்டரியின் எச்சரிக்கை மணி ஒலித்தபிறகுதான் அந்தத் திரவத்தின் அதிக கதிரியக்க ஆபத்தினால் எச்சரிக்கை எழும்புகிறது என்பது உணரப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் காமா மீட்டர் இருந்திருந்தால் அவர் அதைக் கையாளாமல் தடுத்திருக்கலாம். இதன் விளைவு மிகச் சிறு வயதிலேயே ராஜு மிக அதிக உள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டார். ஒரே நாளில் சுமார் 40 R அளவு. (ஒருவர் ஒரு வருடத்துக்கு அதிகபட்சம் 5 R அளவுக்கு உட்படுத்தப்படலாம் என்று பல ஆண்டுகள் முன்பு இருந்தது மாற்றப்பட்டு இப்போது அதிகபட்சம் ஆண்டுக்கு 1 R என்று உள்ளது. ராஜு பெற்றது ஒரே நாளில் 40 Rக்கு மேல்).
KARP அணு உலைப் பகுதியில் எப்போதும் கழுத்தை முறிக்கும் அவசரத்தில்தான் வேலை வாங்கப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் இங்கே நடக்காத ஒரே விபத்து உலையிலிருந்து கசிவு (criticality) ஏற்படுவதுதான். அதுவும் நடந்துவிடும்.

மேற்கண்ட தகவல்கள் ஊழியர் சங்கத்தின் கடிதத்தில் இருக்கின்றன. இதற்குப் பிறகு 15 நாட்கள் கழித்து 11-2-2003ல் இன்னொரு கடிதத்தை சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பியது. முன்கடிதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எழுப்பிய 10 கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் மெளனமாக இருக்கிறது. இந்த மெளனம் தொடர்ந்தால், பிப்ரவரி 16 இரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்குவோம் என்று சங்கம் இந்தக் கடிதத்தில் எச்சரித்தது. அதன் பிறகுதான் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. முழுமையான தீர்வுகள் இன்னமும் வரவில்லை.

இப்படி அதிஆபத்தான ஒரு அணு உலையில் அதிமெத்தனமாகவும் அதி அலட்சியமாகவும் இருக்கும் மத்திய அரசு, அங்கே எல்லாம் நன்றாகவே உள்ளது என்று மக்களை ஏமாற்ற உங்கள் அரசைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக்கூடாது. அணு உலைப் பணியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால், மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டபிறகும், காஞ்சி அரசு மருத்துவமனை இயக்குநர் எதற்காக கல்பாக்கம் நிர்வாகத்தின் சார்பில் தவறான தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் ?

குறைந்தபட்ச அணுக்கதிர் வீச்சு உடலுக்கு நல்லது என்கிறார் அவர். ஒரே பிரிவில் பணியாற்றி 'குறைந்தபட்சக் கதிர்வீச்சு ' பெற்று செத்துப்போனவர்கள் பட்டியல் இதோ : திரு மோகன் தாஸ். இவருக்கு multiple myeloma. கதிரியக்கத்தால் வரும் சகஜமான புற்று நோய் இது. எலும்பு மஜ்ஜைப் பகுதியில் உருவாகும் பிளாஸ்மா செல்களை பாதிப்பது. அடுத்தவர் திரு சிவசங்கரன் பிள்ளை. ரத்தப் புற்று நோய். திரு செல்லப்பன் என்பவரின் குழந்தை ஊனமாகப் பிறந்து இறந்துவிட்டது. திரு கான் என்பவருக்கு பிறப்புறுப்பில் புற்று நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் வாழ்ந்து வருகிறார். நால்வரும் கல்பாக்கத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள்.
பாதிக்கப்படுவது கல்
பாக்கத்தில் பணி புரியும் ஊழியர்களும் குடும்பத்தினரும் மட்டுமல்ல.சுற்று வட்டாரங்களிலும் கதிரியக்கம் இருக்கிறது. ( ஏற்கனவே மீன்வளம் இந்தப்பகுதியில் பாதிக்கப்பட்டுவிட்டது தனிக்கதை.) மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஒரு சாட்சியம் ஆறாவது விரல்.
சினிமாவில் டபிள் ரோல் செய்யும்போது இரட்டையரில் ஒருவருக்கு மட்டும் ஆறு விரல் என்பதை வைத்து வில்லனை அடையாளம் கண்டுபிடிக்கச் செய்வது ஒரு உத்தி. உண்மையில் ஆறு விரல் என்பது மரபணு சிதைவின் அடையாளம். நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் ( consanguinous marriage) செய்வது பல மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதன் ஒரு வெளிப்பாடு ஆறு விரல். மருத்துவ ரீதியாக இது polydoctyly syndactyly என்று அழைக்கப்படுகிறது. ஆறு விரலுக்கு இத்தகைய மண உறவு அல்லாத காரணம் கதிர்வீச்சுதான். கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் இது ஏற்படுகிறது.

கடலோரம் உள்ள கல்பாக்கத்தின் வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவளம் இருக்கிறது. இடையில் புதிய கல்பாக்கம், தேவநேரி,மகாபலிபுரம்,வெண்புருசம்,கொக்கிலமேடு முதலிய இடங்கள் உள்ளன. தெற்கே 45 கிலோ மீட்டர் தூரத்தில் மரக்காணம். நடுவே மெய்யூர் குப்பம், செட்ராஸ் குப்பம்,புதுப்பட்டினம் குப்பம், ஒய்யாலி குப்பம்,கடப்பாக்கம், கைப்பாணி குப்பம் முதலிய இடங்கள் உள்ளன.

டாக்டர் புகழேந்தி இந்தப் பகுதிகளில் ஆறு விரல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்று ஆய்வு செய்தார். அதாவது நெருங்கிய உறவில் திருமணம் செய்யாத குடும்பங்களில் மட்டுமாக.12 வயதுக்குக் கீழே ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை : செட்ராஸ் குப்பம்- 2 டவுன்ஷிப்- 3 புதுப்பட்டினம் - 1 ஒய்யாலிகுப்பம் -2 தேவநேரி - 2 மகாபலிபுரம் - 1. இருபது 20 வயதுக்கு மேல் ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை - மரக்காணம் - 1, புதுப்பட்டினம் குப்பம் - 1, மெய்யூர் குப்பம் - 2 தேவநேரி குப்பம் - 3, ஒய்யாலிகுப்பம் - 4, செட்ராஸ் குப்பம் - 5.

இந்த விவரங்களை டாக்டர் ரமேஷ் உங்கள் அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கொடுத்து அவர்களை மேற்கொண்டு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே எந்த நிறுவனமும் புதிய திட்டம் தொடங்கும் முன்பு உங்கள் அரசின் சுற்றுச்சூழல் வாரியத்திடமும் ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் முதலில் சூழல் பாதிப்பு அறிக்கையை ( envrionment impact assessment EIA) தயாரிக்க வேண்டும். பிறகு இது பற்றிய பொது விசாரணையை நடத்த வேண்டும். கல்பாக்கத்தில் புதிய 500 மெகாவாட் அதிவேக ஈனுலை ( prototype fast breeder reactor PFBR) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்காக சுற்றுச்சூழல் ஆய்வு நடத்திய கண்துடைப்பை டாக்டர் ரமேஷ் விவரிக்கிறார்.

ஜூன் 2001ல் காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பொது விசாரணை இன்னும் மூன்று தினங்களில் நடக்கும் என்று அறிவிக்கிறார். சட்டப்படி 30 நாள் நோட்டாஸ் தரவேண்டும்.இதை எதிர்த்து கோஸ்ட்டல் ஆக்ஷன் நெட்வொர்க் என்ற தொண்டு நிறுவனம் உயர் நீதி மன்றத்தில் வழக்கு போட்டதும், மறு நோட்டாஸ் தரப்பட்டு ஜூலை 27, 2002ல் பொது விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அணுசக்தி அமைப்பு தந்த சூழல் பாதிப்பு அறிக்கை பல டெக்னிக்கல் கோளாறுகளுடன் இருப்பதை விளக்கும் தன் அறிக்கையை டாக்டர் ரமேஷ் உங்கள் அரசின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் தந்தார். அதை அணுசக்தி அமைப்பு கண்டுகொள்ளவில்லை.

பொது விசாரணை காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தபோது பெரும் கூட்டம். அணு சக்தி நிர்வாகம் பஸ்சும் சோறும் கொடுத்து அழைத்து வந்திருந்த பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், சட்ட மன்ற உறுப்பினர் பலரும் கல்பாக்கம் நிர்வாகத்தால் பதில் கூற முடியாத கேள்விகளை எழுப்பினார்கள். கூட்டம் முடிந்ததும் அணுசக்தித்துறை இயக்குநர் டாக்டர் போஜ் நிருபர்களிடம் எப்படியும் திட்டமிட்டபடி டிசம்பரில் அணு உலை கட்டட வேலை தொடங்கும் என்றார். இப்படிச் சொல்வதை உங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் கடுமையாகக் கண்டித்தார். பொது விசாரணை விவரங்கள் டெல்லிக்கு அமைச்சகத்துக்கு சென்றன. டிசம்பரில் உலைக் கட்டட வேலை தொடங்கவில்லை.

பிறகு 2002 ஜூலை மாதத்தில் கட்டட வேலை ஜனவரி 2003ல் தொடங்கும் என்று டாக்டர் போஜ் அறிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைப்பும் மாநில சுற்றுச்சூழல் அமைப்பும் ஒப்புதல் தந்தது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
அதே ஜூலை மாதத்தில் 25ந் தேதியன்று கல்பாக்கம் மேப்ஸ்-2 உலையில் குளிர்விப்புப் பகுதி யில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளர் இறந்தார். பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அத்தனை பேரும் தற்காலிக தொழிலாளர்கள் என்கிறார் டாக்டர் ரமேஷ். இதே ரியாக்டரில் 1998ல் இதே பகுதி விபத்துக்குள்ளாயிற்று.

கல்பாக்கத்தில் விபத்து நடந்தால் உடனடியாக சுற்று வட்டார மக்களைப் பாதுகாப்பாக வேறு ஊர்க்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை ஜூலை 28ந்தேதியன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்போது பஸ் பிரேக் டவுன் ஆயிற்று. காவல் துறை உட்பட எந்த அதிகாரியின் வயர்லெஸ் கருவிகளும் வேலை செய்யவில்லை. அசல் விபத்து நடந்தால், அப்போது இதே நிலைமை இருந்தால் மக்கள் கதி என்ன ?
முழு நேர ஊழியர்கள் சார்பில் தயங்கித் தயங்கியாவது குரல் எழுப்ப தொழிற்சங்கம் இருக்கிறது. காண்ட்டிராக்ட் கூலிகளாக வரும் எண்ணற்ற படிப்பறிவற்ற இளம் தொழிலாளர்களுக்காகவும் அப்பாவி பொது மக்களுக்காகவும் குரல் தரக்கூட ஆள் இல்லை.அது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக்கடிதம்.

புற்று நோய் என்பது ஒரே நாளில் வெளிப்பட்டுவிடுவதில்லை. நீண்ட காலம் இருந்து தொல்லை தந்து உயிர் குடிப்பது. இவ்வளவு அபாயகரமான நோயை ஏற்படுத்தக்கூடிய கதிரியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்ன தயாரிக்கிறோம் ? அணுகுண்டா ? மின்சாரமா ?
மின்சாரம் என்றே வைத்துக் கொள்வோம். ஏழை விவசாயிகளுக்கு மின் கட்டணத்தை நீங்களே இனி கட்டப்போவதாக அறிவித்திருக்கிறீர்கள். நல்லது. ஆனால் நீங்கள் வாங்கப்போகும் மின்சாரத்துக்கு எப்படி பணம் செலுத்துவீர்கள் ? கல்பாக்கம் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவைக் கட்டும்படி உங்களிடம் கேட்டால், மின்கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் கட்டுப்படி ஆகாது.

டாக்டர் ரமேஷின் ஆய்வுப்படி 1999-2000த்தில் தமிழ்நாட்டில் 4814.986 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆயிற்று. இதில் 27.562 சதவிகிதம் எடுத்துச் செல்லுவதில் வீணானது ( transmission loss). 21.297 சதம் விவசாயத்துக்கு. மின்வாரியத்துக்கு வருமானம் மீதி சுமார் 51 சதவிகிதத்திலிருந்துதான் வரவேண்டும். அதிலும் 20 சதம் (பொது விளக்கு, குடி நீர் போன்று) அரசு உதவி பெற வேண்டிய இனத்தில் சேரும். எனவே 31 சதம் மின்சாரத்தைதான் நீங்கள் விற்க முடியும். அதில் வரும் பணத்திலிருந்துதான் நெய்வேலிக்கும், கல்பாக்கத்துக்கும் பணம் தரமுடியும்.

கல்பாக்கம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கும் அதற்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்தமே கிடையாது. பெரும் நஷ்டம்தான். எதற்காக மத்திய அரசு தனக்கும் நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு தமிழக ஏழை மக்களுக்கும் புற்று நோயை ஏற்படுத்திக் கொண்டு கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் ?

அணுகுண்டு தயாரிப்பதுதான் அசல் நோக்கமாக இருக்கலாம். அதை வெளியில் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழக மக்கள் தரும் விலை என்ன ? தலைமுறை தலைமுறையாகப் புற்று நோய், genetic disorders, மலட்டுத்தன்மை இவற்றை எதற்காக தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் ? வட தமிழ்நாட்டு வன்னியர்களும் தலித்துகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவது போதாது என்று தென் தமிழ் நாட்டு தேவர்களும் தலித்துகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவதற்காகக் கூடங்குளத்தையும் தாரை வார்த்து வைத்திருக்கிறோம்.

1988ல் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு சற்று முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கருணாநிதியையும் முரசொலி மாறனையும் சந்தித்து அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கினோம். எப்படி கேரளாவும் ஓரளவு கர்நாடகமும் இதற்கு அனுமதி தருவதே இல்லை என்பதை சுட்டிக் காட்டினோம். கூடன்குளத்தில் அணு உலை கூடாது என்று செயற்குழுவில் தீர்மானம் போட்ட தி.மு.க, ஆட்சியில் அமர்ந்த உடனே கொள்கை பல்டி அடித்துவிட்டது.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவர்கள் பதவி ஆசையுடைய அரசியல்வாதிகள். அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் சமூகத்தை நேசிக்கிற அரசியல் அறிஞர்கள் (statesmen). ஒரு stateswoman ஆக செயல்பட இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
இந்தியா அணுகுண்டு தயாரிப்பதையெல்லாம் உங்களால் நிறுத்த முடியாமல் இருக்கலாம்.

ஆனால் தமிழகக் குடிமக்களின் நலனுக்குப் பொறுப்பான முதலமைச்சர் என்ற முறையில் 'மிகக் குறைந்தபட்சம் கல்பாக்கமும் பின்னர் கூடன்குளமும் தங்கள் ஊழியர்களிடமும், பொது மக்களிடமும் கதிரியக்கம் பற்றிய எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகப் பகிர்ந்துகொண்டேயாக வேண்டும்; நியாயமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தே ஆக வேண்டும். சுயேச்சையான விசாரணைகளுக்கு தங்களை உட்படுத்தியே தீர வேண்டும் ' என்று கட்டாயப்படுத்தி செய்யவைக்க உங்களால் முடியும். அணுசக்தித்துறை எல்லாவற்றையும் மறுக்கும். போலியான அறிக்கைகளை அனுப்பி உங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும். அதற்கெல்லாம் மசியாமல், நீங்கள் கல்பாக்கம் பகுதி மக்கள் நலனையும் கூடன்குளம் மக்கள் நலனையும் கருதி சுயேச்சையான விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரணையும் ஆய்வும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

செய்வீர்களா ?
அன்புடன்
ஞாநி

ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்















































































முகவுரை: மதிப்புக்குரிய நண்பர் ஞாநி எழுதிய 'கான்சர் கல்பாக்கம் ' என்ற கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!























கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணி செய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் பெற்றவர், ஆறு விரல்காரர் ஆகியோரின் வட்டாரப் பட்டியலைக் காட்டி, அவை யாவும் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறைசாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!












1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணு குண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட பின்பு, 58 ஆண்டுகளாக அணுக்கதிர்ப் பொழிவில் நரக வேதனையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் தேசத்தில், 53 அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்கி 43,490 MWe ஆற்றல் மின்சக்தியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன!












வட அமெரிக்காவிலே மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையம் எட்டு அணு உலைகளைக் [8x500 MWe] கொண்டு, முப்பது ஆண்டுகளாக (2000-4000) MWe ஆற்றலைப் பரிமாறிப் பல மில்லியன் மக்கள் நடமாடும் டொரான்டோ நகரின் விளிம்பிலே பாதுகாப்பாக இயங்கி வருகிறது! கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் உலைத் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்று ஞாநி நக்கல் புரிகிறார்! அப்படி என்றால், 2000 ஆண்டு வரை பாதுகாப்பாக இயங்கி 351,000 MWe மின்சக்தி உற்பத்தி செய்து கொண்டிருக்கும் உலகின் மற்ற 436 அணுமின் நிலையங்களையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எந்த இடங்களில் உள்ளது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனிதர் பணி செய்யும் போது உடல் நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவரது எதிர்ப்பு வாதங்களுக்கு வலுவைக் கொடுக்கும்!

அணு உலைகளில் நேரடிப் பங்கேற்றுச் சேமித்த எனது அனுபவங்கள்
முதலில் எனது அணுவியல் அனுபவத்தைப் பற்றிச் சிறிது கூற விழைகிறேன். 1956 இல் யந்திரவியல் எஞ்சினியராகி 1957 ஆண்டு முதல் 2002 வரை சுமார் 45 ஆண்டுகள், இந்திய அணுசக்தித் துறைகளிலும், கனடாவின் அணுமின் உலைகளிலும் இயக்கம், பராமரிப்பு, அணுவியல் நுணுக்கம், பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடிப் பங்கு கொண்டு, உலகின் அணு உலைகள் [கனடாவின் NRX, அமெரிக்காவின் Three Mile Island, ரஷ்யாவின் Chernobyl] சிலவற்றின் விபத்துகளை ஆராயும் ஆய்வுக் குழுவில் பணி செய்திருக்கிறேன். 1975 இல் ஒரு மாதம் தங்கி ஜெர்மனியின் மூன்று அணு உலைகளைக் கண்டு ஆழ்ந்து நோக்கி அவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு அமைப்புகளை அறிந்து வந்திருக்கிறேன்.












பம்பாயில் கனடா இந்திய ஆய்வு அணு உலையை [CIRUS Reactor] ஆறு ஆண்டுகள் இராப்பகலாய் இயக்கிப் பல விபத்துக்களைக் கையாண்டிருக்கிறேன். ராஜஸ்தான் அணுமின் உலையில் [Rajasthan Atomic Power Station] எட்டாண்டுகள் பணியாற்றி, அவற்றில் மூன்று ஆண்டுகள் அணு எருவூட்டும் யந்திரங்களில் [Nuclear Fuelling Machines] எரிக்கோல்களுடன் [Nuclear Fuel Bundles (Fresh & Spent)] தொடர்பு கொண்டிருக்கிறேன். கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் [Madras Atomic Power Station], நான்கு ஆண்டுகள் டெக்னிகல் சூபரின்டென்டன்ட் எஞ்சினியராகப் பணியாற்றி, அங்குள்ள வேக அணுப் பெருக்கி அணு உலை [Fast Breeder Reactor] அமைக்கப்படும் போது நேராகப் பார்த்து இருக்கிறேன்.

கனடாவின் டக்லஸ் பாயின்ட் அணுமின் நிலையத்தில் [Douglas Point Nuclear Power Station] மூன்றரை ஆண்டுகள் எரிக்கோல் யந்திரங்களைக் கையாண்டு அணு உலைக்கு எரிபொருள் ஊட்டி யிருக்கிறேன். அதுபோல் கனடாவின் புதிய, மிகப் பெரிய புரூஸ் அணுமின் நிலையத்தில் [4x750 MWe=3000 MWe] பத்தாண்டுகள் எரிக்கோல் ஊட்டும் யந்திரங்களை இயக்கிப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, அடுத்து ஆறு ஆண்டுகள் அணு உலைப் பாதுகாப்புத் துறையில் நேரடிப் பங்கேற்றிருக்கிறேன். குறிப்பாகக் கடந்த 45 ஆண்டுகள் ஆயிரக் கணக்கான ஊழியர்களுடன் உலவிப் பாதுகாப்பாகப் பணியாற்றி, ஓரளவு கதிரடி [Radiation Dose] வாங்கி, வீண் கதிரடி படாமல் உடல் நலமோடு இன்னும் வாழ்ந்து வருகிறேன். ஓய்வுக்குப் பின் ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் தற்சமயத்திலும் கதிர்வீசும் அணு உலைத் தளங்களில் அடிக்கடி உலவி தகவல்களைச் சேகரித்து வருகிறேன். எனது கட்டுரையின் முடிவான ஒரே ஒரு விளம்பர அறிக்கை:- பாரத அணுமின் உலைகளில் பணி புரிய, யாரும் அஞ்ச வேண்டிய தில்லை!

ஞாநியின் கட்டுரையில் நிஜமற்ற, தவறான சில கருத்துக்கள்
1.
ஞாநியின் கருத்து:கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!












எனது விளக்கம்:செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்: அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அந்த கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட ஸ்டால் கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா!
விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!

2. ஞாநியின் கருத்து: பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!


































எனது விளக்கம்: விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிக்க போதிய நீரில்லாது, எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிர்க் கழிவுகள் பொழிந்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் துன்புறுவர்! ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது! கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா!

3. ஞாநியின் கருத்து:கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங்களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?












எனது விளக்கம்: அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் 'அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ' [Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப்பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.












4. ஞாநியின் கருத்து: கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு!












எனது விளக்கம்: அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! நண்பர் ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்! பஸ்மாசுரன் காலத்தில் அணுசக்தி விஞ்ஞானம் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலைகளை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க கனநீர் அழுத்த இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில் இயங்கி வருகிறது!
KudanKulum Reactor

1986 இல் செர்நோபிள் அணு உலை விபத்துக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள், எஞ்சினியர்கள் கூடி கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு நிபுணர்களின் உதவியால் பல முறைகளில் மேன்மைப் படுத்திய VVER-1000 [Version:392] இரட்டை அணு உலைதான் கூடங்குளத்தில் தற்போது நிறுவகம் ஆகி வருகிறது! அந்த அணு உலைகள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கோட்டை அரண்கள் இருப்பதால், செர்நோபிள் அணு உலைபோல் வெடிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் கிடையா! VVER-1000 அணு உலையில் மிதவாக்கியாக எளிய நீர் [Light Water] பயன்படுகிறது! திரள்கரி [Graphite] அடுக்குகள் அல்ல!

5. ஞாநியின் கருத்து: கல்பாக்க ஊழியர், தற்காலிக ஊழியர், வட்டார மக்கள் ஆகியோர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள் ?


































எனது விளக்கம்: அணு உலைகளில் பொது ஊழியருக்கு அணு உலை பற்றியும், பாதுகாப்பு வழிகள், உடல்நலக் கவச நெறிகள் பற்றியும் விளக்கமான பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. தற்கால ஊழியருக்கு சிறிதளவு பயிற்சியே அளிக்கப் படுகிறது. ஆயினும் அவர்கள் பணி புரிகையில் பயிற்சி பெற்ற பொது ஊழியர் முழு நேரமும் அவர்களை நேரடி மேற்பார்வை செய்து வருகிறார்கள். வட்டார மக்களுக்கு சினிமா, டெலிவிஷன், பொதுக் கூட்டம், மற்றும் அறிவிப்புகள் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.

6. ஞாநியின் கருத்து: அணு உலைப் பணியாளருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்! கல்பாக்க வட்டாரத்தில் பணியாட்கள், அவரது குடும்பத்தார் 15,020 பேர்களைச் சோதித்ததில் 167 நபர்கள் புற்று நோய் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கல்பாக்கம் மருத்துவ மனையிலே சிகிட்சை பெற்று வருவதாக அறியப்பட்டது.












எனது விளக்கம்: முக்கியமாகச் சொல்ல வேண்டியது, கல்பாக்கம் மருத்துவ மனையில் புற்று நோயாளிகளுக்கு சிகிட்சை தர எந்த விதக் கருவியோ அல்லது போதிய வசதியோ எதுவு மில்லை! அங்கு புற்று நோய் சிகிட்சைக்குத் தேவையான டாக்டரும் இல்லை! எப்படி 167 பேர்கள் கல்பாக்கத்தில் புற்று நோய்ச் சிகிட்சை பெற்று வந்தார்கள் என்பது ஆச்சரிமாக இருக்கிறது!

என் தாய் கல்பாக்கத்தில் 1979 ஆகஸ்டு மாதம் புற்று நோயில் காலமானார்! கல்பாக்கத்தில் எஞ்சினியாரான எனது நண்பர் கலாசேகர் புற்று நோயில் இறந்தார். மேலும் அணுமின் உலைகளில் 25 ஆண்டுகள் பணியாற்றிய எனது மேலதிரிகாரி ராமமூர்த்தி ரத்தப் புற்று நோயில் காலமானார். இருபது ஆண்டுகள் கதிரடி நான் வாங்கியதற்கும், என் தாயாருக்குப் புற்று நோய் வந்ததற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது! கல்பாக்க வட்டாரத்தில் உள்ள பின்புலக் கதிர்வீச்சால் [Background Radiation], என் தாயாருக்குப் புற்று நோய் வரவில்லை! அதே போன்று, என் நண்பர் கல்பாக்கத்தில் பணி செய்தாலும், அவரது புற்று நோயிக்கு அணு உலைக் கதிர்வீச்சுக் காரண மன்று! என் மேலதிரியின் புற்று நோயும் கதிர்வீச்சால் உண்டாக வில்லை! அணு உலை எதிர்ப்பாளி ஒருவர் இந்த மூன்று சம்பவங்களையும் தனக்கு ஆதரவாய்ப் பயன்படுத்திக் கொண்டு, அணு உலைப் பணியாளரும், அவரது குடும்பத்தாரும் புற்று நோயில் செத்து வருகிறார்கள் என்று பறை சாற்றலாம்!












அணு உலையில் பணி புரிபவர்களுக்கு, அணுக் கதிரடியால் உடனே புற்று நோய் தாக்கப் படுவது அபூர்வம்! மேலும் ஊழியரின் குடும்பத்தாருக்குப் புற்று நோய் தொற்றுவது மிக மிக அபூர்வம். மேலும் புற்று நோய் தொற்று நோய் அன்று! மேற்கூறிய 167 பேரின் புற்று நோய்கள் அணுக்கதிர் தாக்கப் பட்டதால் வந்தவை என்பது கதிரியல் மருத்துவர் [Radiation Specialist] நிரூபிக்க வேண்டும்! கல்பாக்க வட்டாரத்தில் புற்று நோய் வர வேறு பல காரணங்களும் இருக்கலாம்!

7. ஞாநியின் கருத்து: கல்பாக்க அணு உலை ஊழியர்கள் பணி புரிகையில் வாங்கிய தனிப்பட்ட கதிரடி அளவுகள் அவருக்குக் காட்டப் படுவ தில்லை! வாங்கும் அளவு வரையரை மீறினால் மட்டுமே ஊழியருக்கு அறிவிக்கப் படுகிறது.












எனது விளக்கம்: ஞாநியின் இக்கூற்று முற்றிலும் உண்மை யானது. கனடா போன்ற மேலை நாடுகளில் பொது அறிக்கைப் பலகையிலே தனிப்பட்டோர் கதிரடி அளவுகள், ஆண்டுக்கு நான்கு தடவை அறிவிக்கப் படுகின்றன. பாரதம் அம்முறையைப் பின்பற்ற வேண்டும். அணு உலை யூனியன் அதை ஒரு கோரிக்கையாய் எடுத்து மாநில அரசின் துணையோடு சாதிக்க வேண்டும்.

8. ஞாநியின் கருத்து: தணிந்த அளவு கதிரடி [Low Radiation Dose] வாங்கிய தற்காலிக ஊழியர் ஒருவர் புற்று நோயில் மரணம்! ஒருவர் குடல் புற்று நோயில் தாக்கப் பட்டார்! ஒருவருக்கு ரத்தப் புற்று நோய். ஒருவருக்குப் பிறப்புறுப்பில் புற்று நோய்! ஒருவருக்குக் குழந்தை அங்க ஊனமாகப் பிறந்தது! கல்பாக்க வட்டாரத்தில் ஆறு விரல்காரர் அநேகர் காணப் பட்டனர்!












எனது விளக்கம்: பாரத அணுவியல் துறையகம் ஆரம்பம் முதலே அகில நாட்டுக் கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழு [International Commission of Radiological Protection (ICRP)] தயாரித்த, கதிரடி அளவியலைத் தானும் தழுவிக் கொண்டது. தணிந்த கதிரடி பட்டோர், அம்முறைப்படி அமைந்த கதிரடிப் பட்டியலைக் காண வேண்டும். கதிரடி அட்டவணையில் காணப்படும் விளைவுகளை இதுவரை யாரும் பிழையென்று நிரூபித்த தில்லை! மேற்கூறிய எல்லா விதப் புற்று நோய்கள், அங்க ஈனம், ஆறு விரல் முளைப்பு போன்றவை யாவும் தணிந்த கதிரடியால் விளந்தவை என்று கதிரியல் மருத்துவரால் நிரூபிக்கப் படாமல் பறை சாற்றுவது நியாய மற்ற வாதங்கள்!

உயிரியல் விளைவுகள் [Biological Effects]:அகில நாட்டு விஞ்ஞானக் கதிர்வீச்சு விளைவுகள், [United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation (UNSCEAR-1993)], அகில நாட்டுக் கதிரியல் பாதுகாப்பு, [International Commission on Radiation Protection (ICRP-1990)], அகில நாட்டு விஞ்ஞானக் கதிர்வீச்சு உயிரியல் விளைவுகள் [National Academy of Sciences ' Committee on the Biological Effects of Ionizing Radiation (BEIR-1990)] ஆகிய முப்பெரும் பேரவைகள் வரையறுத்த அட்டவணைக் காண்க. (UNSCEAR-1993), (BEIR-1990) இரண்டும் புனைந்த 'புற்றுநோய் எதிர்பார்ப்பு விளைவுகள் ' [Cancer Risk Estimates]: ஒரு ரெம் தணிந்த கதிரடி [Low Radiation Dose of 1 Rem] வாங்கும் பணியாளிகள் 10,000 பேரில் 4 பேர் புற்று நோயுற்று மரணம் அடையலாம் என்று அனுமானிக்கிறது. அதே சமயத்தில் வேறு விதங்களில் புற்று நோய் பெற்று இறப்பவர் எண்ணிக்கை 10,000 இல் 2500 பேர் [கனடாவின் புள்ளி விவரம்]! ஆகவே எவரெல்லாம் கதிர்வீச்சால் புற்று நோய் உற்றார் என்பது கதிரியல் மருத்துவரால் நிரூபிக்கப்பட வேண்டும்!












இனவழி விளைவுகள் [Genetic Effects]: விலங்கினங்களை வைத்து ஆராய்ந்ததில், கதிர்வீச்சால் ஏற்படும் 'இனவழி எதிர்பார்ப்பு விளைவுகள் ' [Risk of Genetic Effects] ஒரு ரெம் வாங்கிய 10,000 ஊழியரான பெற்றோர்களில் ஒருவர் அங்க ஈனக் குழந்தையைப் பெறலாம் என்று அனுமானிக்கப் படுகிறது!

9. ஞாநியின் கருத்து: பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரப் பின்பற்றப் படுவதில்லை! கையுறையில் ஒட்டை உண்டாகி ஒருவர், பிளாஸ்டிக் உடை கிழிந்து ஒருவர், கதிர்த் திரவத்தைச் சுமந்து ஒருவர் [40 Rem Dose] கதிரடி வாங்கினர்!












எனது விளக்கம்: கையுறை ஓட்டை, பிளாஸ்டிக் கவச உடைக் கிழிவு ஆகியவற்றால் பட்ட கதிரடி தவிர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால் அணு உலைகளில் வேலை செய்யும் போது, அவ்விதம் ஏற்பட்டால் பணியாளர் உடனே அவற்றை மாற்றிக் கொள்வர். அதிகரித்து வாங்கிய அவரது கதிரடிகள் உடனே கருவிகளில் தனியாக அளக்கப்படும். 40 ரெம் கதிரடி வாங்கிய நபரையும் அவரது நேரடி நிர்வாகியையும் அழைத்து, உடல்நல விஞ்ஞானிகளின் குழு [Health Physicists] ஏன், எப்படி, எங்கே நிகழ்ந்தது என்று உளவு செய்து, தக்க நடவடிக்கைகள் எடுக்கும். பணியாளியின் நிர்வாகி தவறு செய்தது கண்டு பிடிக்கப் பாட்டால், அவர் மீது புகார் நடவடிக்கை செய்து அவருக்கு எச்சரிப்பு அறிக்கை அளிக்கப்படும்.

அணுசக்தி யுகத்தை விட்டு மாட்டு வண்டி யுகத்துக்கு யாத்திரை!
கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் உலைத் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்று குறிப்பிடும் ஞாநி ஏனோ ஆதாரங்களைக் காட்ட வில்லை! அப்படி என்றால், 2000 ஆண்டு வரை உலகில் பாதுகாப்பாக இயங்கி 351,000 MWe மின்சக்தி உற்பத்தி செய்து கொண்டிருக்கும் மற்ற 436 அணுமின் நிலையங் களையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்! பாரத நாட்டில் 13 அணு உலைகள் இயங்கி சுமார் 2620 MWe ஆற்றல் மின்சக்தி அளித்து வருகின்றன! 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா அணு குண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட பின்பு, 58 ஆண்டுகளாக அணுக்கதிர்ப் பொழிவில் நரக வேதனையில் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் தேசத்தில், 53 அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்கி 43,490 MWe ஆற்றல் மின்சக்தியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன!
திரிமைல் தீவு விபத்தில் தொய்ந்து போன அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் ஓடிக் கொண்டு 97,400 MWe ஆற்றலை அனுப்பிக் கொண்டிருக் கின்றன! பாரதம், கனடா நாடுகளை விடக் கடும் கட்டுப்பாடு நெறிகளில் அவை யாவும் பாதுகாப்பாக இயங்கிய வண்ணம் உள்ளன! தற்போது மின்சக்தியின் தேவை பெருகிக் கொண்டு வருவதால், கடந்த காலத்தில் மூடப்பட்ட பழைய அணுமின் உலைகள் பல அமெரிக்காவிலும், கனடாவிலும் திறக்கப் பட்டு புதுப்பிக்கப் படுகின்றன!

1986 இல் செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சூழ்மண்டலத்தில் கதிர்ப் பொழிவுகளைப் பரப்பிய ரஷ்யாவில் இப்போது 29 அணுமின் உலைகள் 19,843 MWe மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன! அரை மாங்காய் வடிவான தென்கொரியாவில் 16 அணுமின் உலைகள் 12,990 MWe ஆற்றல் மின்சக்தி [இந்தியாவை விட 5 மடங்கு அணுமின் சக்தி] பரிமாறி வருகின்றன! முதல் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் முழுப் பங்கேற்ற பிரிட்டனில் 35 அணுமின் நிலையங்கள் [12,960 MWe], பிரான்ஸில் 59 அணுமின் உலைகள் [63,000 MWe], மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் அநேக அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன!












ஞாநி பயமுறுத்துவது போல் புற்று நோய் பணியாளிகளுக்கும், அவரது குடும்பங்களுக்கும், வட்டாரப் பொது மக்களுக்கும் உண்டாகி வருகிற தென்றால், அவற்றைப் பல ஆண்டுகளாய் இயக்கி வரும் 31 உலக நாடுகள் அவ்வித இன்னலுக்கு அஞ்சி, ஏன் 436 அணுமின் நிலையங்களை இழுத்து மூடவில்லை! அணுமின் உலைகளால் மாந்தருக்குப் புற்று நோய் வரும் என்று பயமுறுத்தி, அணு உலைகளை மூடச் சொல்லும் ஞாநி, அணு யுகத்திலிருந்து பின்னோக்கிச் சென்று, பாதுகாப்பாக வாழ மீண்டும் 'மாட்டு வண்டி யுகத்துக்குப் ' பாரதத்தை இழுத்துச் செல்ல விரும்புகிறார்! அப்பணியில் அவருக்கு வரவேற்புக்குக் கிடைக்காது, பலத்த எதிர்ப்புகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

அணு உலை விபத்துகள் எவ்வாறு கையாளப் படுகின்றன ?
ஞாநி அச்ச மூட்டுவது போல், இந்திய அணு உலைகள் ஊழியருக்குப் பாதுகாப்பு இல்லாமல் கதிரடி கொடுத்தும் யந்திரங்களோ, அன்றி உடனே கான்சர் உண்டாக்கும் கொடிய சாதனங்களோ அல்ல! போபால் ரசாயனத் தொழிற்சாலையில் 1984 டிசம்பரில் மனிதத் தவறால் ஏற்பட்ட பயங்கர விபத்து போல், பாரத அணுமின் உலைகள் எதனிலும் இதுவரை நேரவில்லை! டெல்லிக்கு அருகில் உள்ள நரோரா அணுமின் உலையில் 1993 மார்ச்சில் யந்திரப் பழுதுகள் உண்டாகி வெடிப்பு ஏற்பட்ட போதும், பாரத இயக்குநர்கள் அணு உலையைப் பாதுகாத்துக் கதிர்வீச்சு வெளியாகாமல் காப்பாற்றி யுள்ளார்கள்!












ஆனால் ரஷ்யாவின் செர்நோபிள் அணுமின் உலையில் நேர்ந்த பயங்கர விபத்து போல் கல்பாக்கத்திலோ அன்றி கூடங்குளத்தில் வளர்ந்து வரும், ரஷ்ய அணுமின் உலைகளிலோ நிகழப் போவதில்லை! காரணம் அந்த அணு உலைகள் யாவும் பாதுகாப்பாக நாலடித் தடிப்புக் கோட்டை அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன! சீர்குலைந்த செர்நோபிள் அணு உலையில் கோட்டை அரண் இல்லாததால்தான், கதிரியக்கம் சூறாவளிபோல் பரந்தது! கட்டுப்பாடு அற்ற பலவித மனிதத் தவறுகளால் ரஷ்ய அணு உலையில் வெடித்தது போல் பாரத அணுமின் உலைகளில் நிகழவே நிகழாது!

உலகெங்கும் முற்போக்கு, பிற்போக்கு, மற்றும் இடைப்போக்கு நாடுகள் முப்பத்தி ஒன்றில் 438 அணுமின் நிலையங்கள், இப்போது மின்சாரம் பரிமாறி வருகின்றன! அணுசக்தி ஆக்கம், உடல்நலப் பாதுகாப்புத் துறைகளில் [Radiation Health Physics] பாரதம் முற்போக்கு நாடாக முன்னேறியதற்குத் திறமைமிக்க இயக்குநர்கள், பராமரிப்புப் பணியாட்கள், உடல்நல விஞ்ஞானிகள் [Health Physicists], அணுமின் நிலைய பாதுகாப்புத் துறைகள், அணுசக்திக் கட்டுப்பாடு வாரிய நிபுணர்கள் [Nuclear Regulatory Board] ஆகியோரே காரணம்.
அணு உலைகளில் கதிரடி விளைவுகள் எவ்வாறு கையாளப் படுகின்றன ?
பாரத மாந்தர் அணுமின் நிலையங்களில் பணிபுரிய அஞ்ச வேண்டிய தில்லை! பணியாளிகளுக்கு அணு உலைப் பயிற்சிக் கூடங்களில் உயர்ந்த பயிற்சி முறைகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப் படுகின்றன. அணு உலையில் பாதுகாப்பு விதிகளை மீறிப் பணி செய்கையில் ஏற்படும் கதிரடி நிகழ்ச்சிகள், விபத்துகள் [Radiation Incidents & Accidents] மூன்று குழுவினரால் சீராக ஆராயப் படுகின்றன. ஒன்று ஷிஃப்ட் குழு. இரண்டாவது உடநல விஞ்ஞானக் குழு. மூன்றாவது பாதுகாப்பு துறைஞர் அமைக்கும் தனிக்குழு. அந்த மூன்று குழுக்களும் தனித்தனியாக இயங்குபவை. பணியாளர் ஒருவருக்குக் பெரும் கதிரடி நேர்ந்த சில நிமிடங்களில், அந்த ஷிஃப்ட் இயக்குநர் அதிபதி அனைத்து விபரங்களையும் சேகரித்து, நேரடியாகத் தீர விசாரித்து கதிரடிப் பதிவுக் குறிப்பிலும் [Radiation Log], ஷிஃப்ட் குறிப்பிலும் [Shift Log] கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஓரிரு நாட்களுக்குள் உடல்நல விஞ்ஞானிகள், விபத்தில் சிக்கிய பணியாளியின் கதிரடித் தீவிரத்தைத் தெளிவாக மேலும் பிலிம் பாட்ஜில் [Radiation recorded Film Badge] ஆராய்ந்து, உடனடியாகச் செய்ய வேண்டிய மருத்துவ முறைகளைக் கையாளு வார்கள்.

தீவிரக் கதிரடி விபத்துக்குத் [Major Radiation Accidents] தனிக்குழு ஒன்று அமைக்கப் பட்டு விளைவுகள், காரணங்கள், தவிர்ப்பு முறைகள் ஆகிய யாவும், ஆராய்ந்து காணப்பட்டு பதிவுத் தகவல் மூலம் மேலதிகாரிகளுக்கும், அணுசக்திக் கட்டுப்பாடு வாரியக் குழுவினருக்கும் அனுப்பப் படுகிறது. எந்தப் பெரும் கதிரடி நிகழ்ச்சியும் அந்த மூவரது நேரடிக் கவனத்து வராமல் போகாது.












கல்பாக்க மின்சார நிலையத்தின் அணு உலைகள், வேகப் பெருக்கி அணு உலை [Fast Breeder Test Reactor] ஆகியவற்றில் கதிர்வீசும் அணுப்பிளவுக் கழிவுகள் பேரளவில் உள்ளன. எவ்விதப் பயங்கர விபத்து நேர்ந்தாலும், கழிவுகள் கோட்டை அரணிலிருந்து வெளியேறுவது அபூர்வம். ஆனால் அணுப்பிளவுக் கழிவுகளை மீள் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலையில் [Spent Fuel Reprocessing Plant] பயன்படும் கழிவுகளின் அளவு, அணு உலைகளின் கழிவுகளோடு ஒப்பிட்டால் சிறிதளவே. பாதுகாப்புக் கவசங்களை முறையாக அணியாமல், பாதுகாப்பு நெறி முறைகளைப் பின்பற்றாமல் பணி செய்தால், இயக்குநர் கழிவுகளின் கடும் கதிரடித் [Severe Radiation Dose] தாக்குதலில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகள், உடல்நல விஞ்ஞானிகள் அத்தகைய தவறுகள் நேரா வண்ணம் இராப் பகலாய்க் கண்காணித்து வருகிறார்கள்.
அணுமின் உலை எதிர்ப்பாளிகளுக்கு ஓர் ஆலோசனை!
பாரத மாந்தர் அணுமின் நிலையங்களில் பணிபுரிய அஞ்ச வேண்டிய தில்லை! அணு மின்சக்தி மீது அச்சமும், வெறுப்பும் வளர்ந்து வருவதைப் புறக்கணித்து, அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக் கொள்ள பாரத மக்களுக்குத் திறமும், அறிவும், பொறுமையும் உள்ளன! அணு உலை ஆதரவாளிகள் அணுமின் சக்தியை ஆக்க வழிகளில் முன்னேற்றும் போது, எதிர்ப்பாளிகள் அது பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருவதற்குக் காவற்பணி புரியலாம்! மேலும் 'அணுசக்திக் கட்டுப்பாடு வாரியத்தில் ' [Atomic Energy Control Board] கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு மனித நலத்துறையைக் [Health Physics Dept] கவனித்து வரலாம்! படைப்பாளிகள் விமானத்தை உருவாக்கிய போது, பயந்த எதிர்ப்பாளிதான் பாதுகாப்பாக இறங்க பாராசூட்டைக் கண்டுபிடித்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் பரிமாறிக் கொண்டு, மக்களுக்கு பணி செய்து வர போவது, அணுமின் நிலையங்களே! அந்த மெய்விதியை ஏற்றுக் கொண்டு ஆதரவாளரும், எதிர்ப்பாளரும் இணைந்து ஆக்க வினைகளில் ஈடுபடுவதுதான் மனித நாகரீகம்! அணுசக்தியின் பலன்கள், பாதகங்கள், பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அடிக்கடிப் புகட்டி, அதனால் எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கையாளும் முறைகளைத் திரைப்படம், டெலிவிஷன் மூலம் பள்ளிக்கூட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுநபர் அனைவருக்கும் எடுத்துக் காட்டி, பக்க ஊர்களில் பயிற்சிகள் அளிக்க மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, கிராமிய அரசுகள் முன்வர வேண்டும்!
அணுமின் நிலைய எதிர்ப்பாளிகள் பாரதத்தின் அணு உலைகள் சிலவற்றை ஒரு முறை அல்ல பல முறை நேரில் கண்டு, கதிரியக்கம் எவ்வாறு கையாளப்படுகிறது, கதிர்வீச்சு எவ்விதம் கவசத்தால் குறைக்கப் படுகிறது, மனித நலம் எப்படி பாதுகாக்கக் படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வது அவரது எதிர்ப்பு வாதங்களுக்கு வலுவைக் கொடுக்கும்! மேலும் கதிரியக்கக் காப்பு முறைகளை ஆதரவாளர் மேற்கொண்டும் செம்மைப் படுத்த அந்த அனுபவங்கள் பயன் உள்ளதாக இருக்கும்!












மேற்கொண்ட தகவல்களுக்கு 'அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ' தயாரித்த நெறிகள், வழிகாட்டி முறைகள் [Atomic Energy Regulatory Board: Codes & Guides] ஆகியவற்றை www.aerb.gov.in என்னும் அகிலவலை முகப்பில் நோக்குக!






















thanks: jayabar@bmts.com

இந்தியாவின் சுற்றுச்சூழல்: கரடுமுரடான ஒரு பயணம்

இப்போது சுற்றுச்சூழல் செய்திகள் நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாவது முன்னைப் போல அரிதான ஒரு விஷயமாக இல்லை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா ஆற்றவுள்ள எதிர்வினை பற்றி, ஜூலை 15ம் தேதி பிரதமர் கூட்டிய கூட்டச் செய்தி பல நாளிதழ்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தது. அதற்கு சில தினங்கள் முன்பாக, வழக்கமான தரம்தாழ்ந்த அரசியல் சதியாலோசனை செய்திகளை புறந்தள்ளிவிட்டு, புலிகளின் எண்ணிக்கை குறைந்த அதிர்ச்சிச் செய்தி முக்கிய இடம்பிடித்தது.

கோலா பாட்டில்களில் பூச்சிக்கொல்லிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் பேரணைகளை எதிர்க்கும் மக்கள் போராட்டங்கள் மற்றும் அது போன்ற செய்திகள் காலைஉணவு நேரங்களில் நாம் படிக்கும் வழக்கமான செய்திகள் ஆகிவிட்டன.முதல்பக்கத்தில் அதிக அளவு இடம்பிடித்தாலும் அதற்கு நேர்முரணாக, நாட்டின் சுற்றுச்சூழல் மிகமோசமான அழிவைச் சந்தித்து வருகிறது. நமது இயற்கை வளங்கள் மோசமாக அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க வேண்டிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும் தப்பித்து ஓடுபவையாகவும், 'வேலியே பயிரை மேயும்' வகையிலும் செயல்பட்டு வருகின்றன.எந்தக் காலத்திலும் இதேபோன்ற மோசமான நிலைமை இருந்ததில்லை.

நாடு விடுதலை பெற்று முதல் 20 ஆண்டுகளில் காடுகள் மற்றும் காட்டுயிர்களை கணக்குவழக்கின்றி அதிவேகமாக அழித்தது மற்றும் கடுமையான மாசுபடுத்துதல் தீவிர கவலையை தோற்றுவித்தது. அதைத் தொடர்ந்து ஓங்கிஒலித்து கவனத்தைக் கவர்ந்த முதல் குரல்களில் ஒன்று, உத்தராகண்ட் என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் சிப்கோ இயக்கப் பெண்கள் நடத்திய போராட்டம்தான்.தங்கள் வாழ்க்கையாகவும், வாழ்வு ஆதாரமாகவும் திகழ்ந்த காடுகளை அழிப்பதற்கு எதிராக அவர்களே ஒருங்கிணைந்தனர். 1970, 1980களில் அரசு கொண்டு வந்த பல சட்டங்கள், கொள்கை முடிவுகள் (எடுத்துக்காட்டுக்கு, காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள்), சுற்றுச்சூழலை கையாள ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கக் காரணமாக அமைந்தன.

வெகுமக்கள் இயக்கங்கள்இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள பல வெகுமக்கள் இயக்கங்கள் மற்றும் சமூக உரிமை அமைப்புகள் அந்தக் காலத்தில் பிறந்தவையே. அமைதிப் பள்ளத்தாக்கில் கேரள அரசு ஒரு புனல் மின்நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டது. இந்தியாவில் எஞ்சியுள்ள ஒரு சில மழைக்காடுகளை காக்க வேண்டிய போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அது அமைந்தது. ஆனால், 1980களின் மத்தியில் முன்வைக்கப்பட்ட நர்மதை அணைகளுக்கு எதிராகத் தோன்றிய இயக்கம், பேரணைகளுக்கு எதிரான உலகின் மிக முக்கியமான இயக்கங்களுள் ஒன்றாக உருவெடுத்தது. சுற்றுச்சூழல்-வளர்ச்சி இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரும் விவாதத்தை நடுத்தரவர்க்க மக்களிடையே இந்த இயக்கம் உருவாக்கியது.அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் கல்வி ஒரு மதிப்புமிக்க துறையாக மாறியது. தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவை மிகக் கடுமையான நாட்கள், தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் சுற்றுச்சூழல் குழுக்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் அந்த நம்பிக்கை, வீண்போய்விட்டது.நம்பிக்கை வீண்போனது உண்மைதான், ஆனால் போராட்டம் நின்று போய்விடவில்லை.

காடுகள் மற்றும் காட்டுயிர்கள் அவ்வளவு காலம் சந்தித்து வந்த அழிவு, வெளிப்படையாகக் குறையத் தொடங்கியது. ஆனால் மிக மோசமான விஷயம் அதற்குப் பிறகுதான் வந்தது.1991ல் அழிவு சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகள், இந்தியாவை உலகமயமாக்க காலத்துக்குள் தள்ளிய அதேநேரம், முந்தைய பத்தாண்டுகளில் பெற்றிருந்த சுற்றுச்சூழல் லாபங்கள் தலைகீழாக்கப்பட்டன. மீன், கனிம வளம் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்கப்பட்டது, கனிமச் சுரங்கத் தொழில் போன்ற துறைகளில் வெளிநாட்டு மூலதனம் வரவேற்கப்பட்டது, அந்தத் துறையில் உரிமம் வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டது.

இந்தியாவின் பண்பாட்டு மற்றும் சூழலியல் நுண்ணுணர்வுமிக்க பகுதிகள் என்ற அடையாளத்துடன் அதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த பகுதிகள், திறந்துவிடப்பட்டன. 21ம் நுாற்றாண்டுக்குத் தாவும் ஆர்வத்தில், இதுபோன்ற பெரும் தவறுகள் கவனிக்காமல் புறந்தள்ளப்பட்டுவிட்டன.1980க்குப் பிறகு காட்டுப் பகுதிகள், காடுகள் சாராத நடவடிக்கைகளுக்காக திறந்துவிடப்பட்டன. கடந்த 6, 7 ஆண்டுகளில்தான் இது போன்ற நடவடிக்கைகள் 50 சதவிகிதம் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சாலைகள் அமைக்கவும், கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ள நினைப்போரும்

இப்படிப்பட்ட காட்டுப்பகுதிகள் வேண்டும் என்று கேட்பதே, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம்.1980க்குப் பிறகு கனிமச் சுரங்கம் தோண்டுவதற்காக 95,000 ஹெக்டேர் காட்டுப் பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 63 சதவிகிதம் 1997 மற்றும் 2005க்கு இடையிலான எட்டு ஆண்டுகளில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரியல் ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் அதிக நுண்ணுணர்வுமிக்க பகுதிகளான சட்டிஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், மேகாலயா மற்றும் பல மாநிலங்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்தத் திணைக்கே உரிய பழங்குடிகளும் காட்டுயிர்களும் முற்றிலும் அழிவை சந்திந்து வருகின்றன. 'உள்நாட்டு காலனி ஆதிக்கம்' என்ற புதிய அலை நாட்டை விழுங்கி வருகிறது.விடுதலைக்குப் பிறகு பெரும் ஏற்றஇறக்கங்களைச் சந்தித்த நமது சுற்றுச்சூழல், இன்று கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதைவிட மோசம் என்னவென்றால், சுற்றுச்சூழலைக் காக்க ஏற்கெனவே இடப்பட்டிருந்த சில தடுப்பு நடவடிக்கைகள் தற்போது கழற்றிவிடப் பட்டுவிட்டன.கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் செயலாளர் (ஆ. ராசா, முன்னாள் செயலாளர் ஆகிய இருவரும் தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டனர்), பல முக்கிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிச் செயல்பட்டனர்.

வளர்ச்சித் திட்டங்கள், சூழலியல் சார்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றனவா என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டு, 'சுற்றுச்சூழல் பாதிப்பு முன்மதிப்பீடு அறிவிக்கை' 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் எளிதில் உரிமம் பெற வசதியாக, இந்த அறிவிக்கை மாற்றியமமைக்கப்பட்டது. பல கடற்கரையோர சூழல் அமைப்புகளை பாதுகாக்க உதவிகரமாக கடலோர ஒழுங்காற்றுச் சட்டம் இருந்தது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தக் கடற்கரைகளையே நம்பி உள்ளனர். வர்த்தக நடவடிக்கைகள் எளிதில் நடைபெற ஏற்ற வகையில், இந்த சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. நிலைத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனங்கள் அமைத்திருந்த, மக்கள் பிரநிதிகளை இடம்பெற்றிருந்த 'சூழலியல் நுண்ணுணர்வு பகுதி குழுக்கள்' போன்றவற்றைக் கலைப்பதற்கு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.அதேபோல பங்கேற்பு நடைமுறைகள் மீது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்டிய அலட்சியம் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுக்களில் 'ஆமாம்சாமி போடுபவர்களே' (அதிலும் பலர் ஆண்கள்) நியமிக்கப்பட்டனர். 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒர் அலசலில், ஆறு நிபுணர் குழுக்களில் இருந்த 64 உறுப்பினர்களில், வெறும் இரண்டு காட்டுயிர் நிபுணர்கள் மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மட்டுமே இடம்பிடித்திருந்தனர்.

தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வரையறுப்பதற்கு நடத்தப்பட்ட ஆலோசனைகள் மற்றும் 'சுற்றுச்சூழல் பாதிப்பு முன்மதிப்பீடு அறிவிக்கையை மாற்றியமைக்க நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பெரும்பாலும் அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களோடு நிறுத்திக் கொள்ளப்பட்டன. கண்துடைப்பு நடவடிக்கையாக சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பங்கெடுக்கச் செய்யப்பட்டன. தேசிய பல்லுயிரிய செயல் திட்டத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்பு தேசிய அளவில் செயல்படுத்திய திட்டத்தில் பங்கேற்பு நடைமுறைக்கு வழி இருந்தது. ஆனால் அமைச்சகம் தற்போது அந்தத் திட்டத்தை புதைத்துவிட்டது.அதேநேரம், இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை அடையத் துடிக்கும் மத்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை பற்றி எந்தக் கவலையும் படவில்லை. இந்தியாவின் சுற்றுச்சூழலை காக்க வேண்டிய அடிப்படை பணியை அமைச்சகத்தின் பொறுப்பில் புதிதாக அமர்ந்துள்ளவர்கள் கையில் எடுப்பார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.புத்தாயிரம் ஆண்டின் இரண்டாவது பத்தாண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து வரும் வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருத்தவரை இந்தியா பெருமைப்பட்டுக் கொள்ள ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? முதல்கட்டமாகப் பார்க்கும்போது, வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

இந்தத் துறை கவனம் பெறத் தொடங்கி பல பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், நிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய அடிப்படைத் திட்டம் நம் நாட்டில் இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால், நீர்த்தேவை மற்றும் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் பகுதிகளை பாதுகாக்க முடியும். நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்த ஒரு திட்டம் தேவை என்று உலக நாடுகளிடம் இந்தியா ஒப்புக்கொண்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னும், அதை சுட்டிக்காட்டுவதற்கான அடையாள முறையோ, அளவீடுகளோ நம்மிடம் இல்லை. நாம் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் தெளிவில்லை என்பதை இந்த அம்சம் உணர்த்துகிறது.நம் நாட்டில் புவி வெப்பமடையும் வாயுக்கள் வெளியீடு குறைவதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. மேற்கிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நம் மீது எந்த மாசுபாட்டைச் சுமத்தி வந்தனவோ, அதையோ டாடா போன்ற நம்முடைய பன்னாட்டு நிறுவனங்களும் பிற நாடுகளின் மீது சுமத்தி வருகின்றன.

கனிமச் சுரங்கம் தோண்டுவதற்காக நிலத்தை வாங்குவது அல்லது அழிவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுவது போன்ற நடவடிக்கைகள் சமூக மற்றும் சூழலியல் ரீதியில் அழிவை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்பும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வளவுக்கும், நம் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது அனைத்து தேவை களுக்கும் நேரடியாக இயற்கை வளங்களைச் சார்ந்துள்ளனர். தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப் புறங்கள் இயற்கை வளங்களை உறிஞ்சி வருவதால், அவற்றை சார்ந்திருப்போர் வாழ்க்கை நடத்த கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

நம்பிக்கை அடையாளங்கள் இருந்தபோதும், நம்பிக்கை வற்றிவிடவில்லை. அழிவை ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கை களால் பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, அதிகரித்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவற்றில் சில: வர்த்தக மீன்பிடித்தல் மற்றும் மீன் பண்ணைகளுக்கு எதிராக பாரம்பரிய மீனவர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு, சீர்குலைக் கப்படாத இயற்கைகாட்சிகளை அழிக்கும் ஆபத்தை விளைவிக்கும் பேரணைகளுக்கு எதிராக சிக்கிம் புத்தத்துறவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தெரி விக்கும் எதிர்ப்பு, கோகோ கோலா தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று கிராமமக்கள் வற்புறுத்துவது, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் புதிய பைத்தியக் காரத்தனத்துக்கு தங்கள் நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகள் என்று பல நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் ஆங்காங்கு தென்படுகின்றன.

மற்றொரு நம்பிக்கை அமைதியான ஒன்று. மாற்றுகளை முன் வைக்கும் புரட்சியை உள் ளடக்கமாகக் கொண்டது: மகாராஷ்டிராவில் பரவிவரும் இயற்கை வேளாண் வலையமைப்புகள், ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் வறட்சி தாக்கக்கூடிய பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்படாத நீர் சேகரிப்புத் திட்டங்கள், ஒரிசா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் பல மாநிலங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தன்னார் வமாக நடைபெறும் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை.இவைதவிர, சில தனியார் நிறுவனங்கள் வேறு முறைகளை கையாண்டு வியாபாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளன. அதேநேரம், 'தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு' என்ற பெயரில் ஊதிப் பெருக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரும்பாலும் கண் துடைப்புத் தன்மை கொண்டவை.நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் காலநிலை மாற்றப் பிரச்சினையைக்கூட, நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகப் பார்க்க வாய்ப்பு உள்ளது.

பிரதமர் உண்மையிலேயே அக்கறையுடன் பேசினார் என்று வைத்துக் கொண்டால், பொது போக்குவரத்து மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப் படும். அதேநேரம் உலக அளவிலான தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், எல்லாம் மூழ்கிப்போக நேரிடும் என்பதை இந்தியாவின் மூலதனச் சந்தை உணர வேண்டும்.தோல்விகள் பலவற்றைச் சந்தித்து இருந்தாலும், தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள பூவுலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு உருவாக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அறிவு சார்ந்த பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்ட பல சமூகங்கள் இன்னமும் நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றன. நவீன காலத்திய புத்தாக்கச் சிந்தனை கொண்ட சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். உண்மையிலேயே புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவனங்களை அவர்கள் அமைத்துள்ளனர்.ஒடுக்குமுறைகளை சுமத்தும் வலிமையான சக்திகளைக்கூட அசைக்கக்கூடிய, அமைதியான வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் திறன் நம்மிடம் உள்ளது. அதிகாரம் பரவலாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு தொடர்பாக நாம் மேற்கொண்ட பரிசோதனைகள் எதிர்காலத்திலும் பலனளிக்கக் கூடியவையே.

இன்னும் சில பத்தாண்டுகளில் விடுதலை நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சூழலியல் மற்றும் சமூகப்புரட்சியை ஒருங்கிணைக்கும் தொலைநோக்குப் பார்வை நமக்குக் கிடைக்கும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை அந்தப் பார்வை மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.

thanks: அசிஷ் கோத்தாரி தமிழில்: ஆதி வள்ளியப்பன்

Wednesday, September 17, 2008

லேமேன் வீழ்ச்சியும்.. இந்திய அதிர்ச்சியும்

நியூயார்க்: திவாலாகிவிட்ட லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பிரிட்டனின் மாபெரும் வங்கியான பர்க்லேஸ் முன் வந்துள்ளது.உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings) நேற்று முன் தினம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்க தந்த பணம் 613 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், இந்தப் பணம் திரும்பி வரவில்லை.இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர்களாவது உடனடியாதத் தேவை என்ற நிலையில், யாரும் முதலீடு செய்ய முன் வராததால் மஞ்சள் நோட்டீஸ் தந்துவிட்டது.

பவேரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து 1850ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர் ஹென்ரி லேமேன், இமானுவேல் லேமேன், மேயர் லேமேன் சகோதரர்கள்.இந்த நிறுவனம் ஆரம்பித்த முதல் வர்த்தகம் பருத்தி வியாபாரம் தான். அடுத்ததாக புரோக்கரேஜ் உள்ளிட்ட துறைகளில் இறங்கியது.அடுத்து அமெரிக்காவின் ரயில் பாதையை அமைக்கும் திட்டத்துக்கே நிதியுதவி செய்யும் நிலைக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. அமெரிக்கா சந்தித்த மிகப் பெரும் பொருளாதார சவால்களை எல்லாம் கூட தாக்குப்பிடித்தது இந்த நிறுவனம்.

கொடுத்த கடனில் மூழ்கி...
இதுவரை நஷ்டத்தையே பார்த்திராத இந்த நிறுவனம், இப்போது தான் கொடுத்த கடன்களிலேயே மூழ்கிப் போய்விட்டது.மெரில் லின்ஜ் நிறுவனமும் இதே போன்ற நஷ்டத்தை சந்தித்தாலும் கூட, ஒரேயடியாக மூழ்கும் முன்பே அதை பேங்க் ஆப் அமெரிக்காவிடம் 50 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு தப்பிவிட்டது.ஆனால், லேமேன் நிறுவனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை.

இந்த நிறுவனத்தை வாங்க பர்க்லேஸ் வங்கி முன் வந்தது. ஆனால், அவர்கள் சொன்ன விலையைப் பார்த்துவிட்டு பர்க்லேஸ் ஓடிவிட்டது.இப்போது திவால் ஆகிவிட்ட லேமேன் நிறுவனத்தின் மதிப்பு முழுமையாக சரிந்துவிட்டதால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்க திரும்பி வந்துள்ளது பர்க்லேஸ் வங்கி.இப்போது இந்த நிறுவனத்தின், அதிகம் நஷ்டத்தை சந்திக்காத சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பர்க்லேஸ் முன் வந்துள்ளது. இதனால் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேருக்கு வேலை தப்பிவிடும் எனத் தெரிகிறது.

40,000 வேலைகள் பறிபோகும்...
ஆனால், லேமேனின் பெரும்பாலான பிரிவுகள் மூடப்படுவது நி்ச்சயமாகிவிட்டதால் சுமார் 40,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.மும்பையில் 2,500 ஊழியர்கள்..இதில் லேமேனின் மும்பை அலுவலகத்தைச் சேர்ந்த 2,500 பேரும் அடக்கம். இதில் பெரும்பாலானவர்கள் லேமேனின் பிபிஓ பிரிவைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் தவிர, லேமேன் நிறுவனத்தின் பல நாட்டு அலுவலகங்களில் பெரும் அளவில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது வேலைகளும் பறிபோகவுள்ளது.

ஐஐஎம் பட்டதாரிகள்...
இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு ஐஐஎம்கள் மற்றும் முன்னணி கல்வி நிலையங்களில் படித்தவர்கள். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆண்டுக்கு சில கோடி ஊதியத்தில் பணியில் உள்ளவர்கள்.ஐஐஎம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிதி நிறுவனங்களில் தான் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் வரும் ஆண்டுகளில், ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்துவது பெருமளவில் குறைந்துவிடும் என்றும் தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படாத வரை இந்த நிலை தொடரலாம்.

சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அடி...
இதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் புதிய சிக்கல் முளைத்துள்ளது. நெருக்கடிக்கு ஆளாகிவிட்ட லேமேன், மெரில் லின்ஜ், ஏஐஜி ஆகிய சர்வதேச நிதி-இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர்களை சத்யம், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.இப்போது இந்த நிறுவனங்களே கரைந்துபோய்விட்ட நிலையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது.மேலும் இந்த நிறுவனங்களுக்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பணியமர்த்தப்பட்ட டீம்கள் கலைக்கப்படலாம். இந்த டீம்களின் ஊழியர்களை வேறு பிரிவுகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் மாற்றியாக வேண்டும்.

இந்திய சந்தையில் ரூ. 2,000 கோடி கரைந்தது...
இன்னொரு சிக்கலும் உள்ளது. லேமேன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையிலும், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிலும் ரூ. 2,000 கோடி வரை முதலீடுகளைச் செய்துள்ளன. இந்த முதலீடுகள் இப்போது காற்றோடு கரைந்துவிட்டன. இந்த முதலீடுகளுக்கு இப்போது எந்த மதி்ப்பும் இல்லை.இதனால் இந்த முதலீடுகளைப் பெற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.ஐசிஐசிஐ...குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி. லேமேன் முதலீட்டைப் பெற்றுள்ள இந்த வங்கியின் இங்கிலாந்து கிளைக்கு 80 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ஐசிஐசிஐயின் ஒட்டுமொத்த லாபத்தோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் பெரிய நஷ்டம் இல்லை என்கின்றனர்.

ரிசர்வ் வங்கி கிடு்க்கிப்பிடி...
இதற்கிடையே லேமேன் நிறுவனத்தின் இந்திய கிளைக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தனது அனுமதியில்லாமல் எந்தவிதமான பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என ஆர்பிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Thanks: thatstamil.com

Saturday, September 13, 2008

வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார் மன்மோகன் சிங். அவரோடு சேர்ந்து சோனியா, காங்கிரஸ், முலாயம், தி.மு.க, பா.ம.க எல்லாருக்கும் வரலாற்றில் இடம் கிடைத்துவிட்டது. அது என்ன இடம்? கடைசியில் சொல்வோம்.
அமெரிக்காவுடன் போடும் அணு ஒப்பந்தத்துக்குத் தேவையான அனுமதியை அணுசப்ளைக் குழு நாடுகள் கொடுத்துவிட்டன என்பது அவற்றுக்கும் அமெரிக்காவுக்கும்தான் சாதகமான செய்தி; இந்தியாவுக்கு அல்ல.


அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவரை இந்தியாவை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஆறேழு நாடுகள் கடைசி வரை எதிர்ப்பு காட்டின. இந்தியா மறுபடியும் அணு ஆயுத சோதனை செய்யமுடியாமல் தடுக்க வேண்டும் என்பதே அவற்றின் நிபந்தனை.
அவர்களை மனம் மாற்றியது கடைசி நிமிடத்தில் வேண்டுமென்றே `வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் மூலம் அமெரிக்கா அம்பலமாக்கிய புஷ் அரசின் ரகசியக் கடிதம்.

இந்தியாவுக்கு சலுகை காட்டுகிறோமா என்ற கேள்விக்கு செனட்டர் பெர்மனுக்கு அமெரிக்க அரசு அனுப்பிய கடிதம் அது.
இந்தியா அணு குண்டு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும். எரிபொருள் நிறுத்தப்படும் என்பதை அந்தக் கடிதத்தில் அமெரிக்கா பகிரங்கமாக சொல்லிவிட்டது. 1973லும் அமெரிக்கா அப்படிச் செய்தது. இனிமேலும் இந்தியா குண்டு வெடித்தால் அமெரிக்கா கழுத்தறுத்துவிடும் என்பது நிச்சயமாகத் தெரிந்ததும் அணுசப்ளை குழுவின் 45 நாடுகளும் சம்மதம் கொடுத்தன.ஆனால், மன்மோகன் வகையறாக்கள் தொடர்ந்து இங்கே பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துவிடவில்லை என்பது முதல் பொய். `நாங்களாகவே அணுகுண்டு சோதனை நடத்துவதை நிறுத்திவைத்துவிட்டோம். இனி நடத்தும் வாய்ப்பில்லை' என்ற வாக்குறுதியை சொல்லித்தான் அணு சப்ளைக் குழுவை இந்திய அதிகாரிகள் இணங்க வைத்திருக்கிறார்கள்.


இந்திய அணு சக்தித் துறைத் தலைவர் அனில் ககோட்கர் மறைமுகமாக சொல்லி விட்டார். குண்டு வெடிப்பதாக இருந்தால், அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை பாதிக்காமல் தொடர்வதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றார். அதாவது குண்டு வெடித்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் சப்ளையை நிறுத்திவிடுவார்கள் என்று இதற்கு அர்த்தம்.

`இனிமேல் குண்டு வெடிக்க மாட்டோம், அணு ஆயுதப் பரவலை தடுப்பதுதான் எங்கள் கொள்கையும் கூட' என்று இந்தியா சொல்வது இன்னொரு பொய். அப்படியானால் இந்தியாவில் இருக்கும் எல்லா அணு உலைகளையும் சர்வதேச அணுக்கழகக் கண்காணிப்புக்கு உட்படுத்த முன்வரலாமே ? சில உலைகளை பிரிப்பது ஏன் ?

சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் பொய் சொல்கின்றன. எல்லாருக்கும் இன்னொருவர் சொல்வது பொய் என்பதும் தெரியும். இருந்தும் ஒரு நாடகமாடுகிறார்கள். ஏன்? இந்த நாடகம் எல்லாம் அணு ஆயுத தடுப்புக்காக அல்ல. அவரவர் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளத்தான்.
அணு சப்ளைக் குழு என்ற அமைப்பு, பெட்ரோலிய எண்ணெய் தயாரிக்கும் நாடுகளின் கூட்டமைப்பு போல இன்னொரு வணிக அமைப்புதான். அது ஆயில் வியாபாரம். இது அணு வியாபாரம்.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்பதை ரகசியக் கடிதம் சொல்கிறது. இந்தியா வாங்கப் போகும் எட்டு அணு உலைகளில் இரண்டை அமெரிக்காவிடம் வாங்கினால் கூட, அங்கே 3000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்குமாம். அணு சப்ளைக் குழு சம்மதம் கொடுத்துவிட்டதை வைத்துக் கொண்டு, இந்தியா இதர நாடுகளுடன் அணு வர்த்தகத்தை ஆரம்பித்துவிடக் கூடாது. 123 ஒப்பந்தம் எங்கள் செனட்டில் ஏற்கப்படும்வரை காத்திருந்து எங்களுடன்தான் முதலில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் கான்டெலசா ரைஸ் பேச (புலம்ப) ஆரம்பித்துவிட்டார்.

இந்தியாவிலோ, ரிலையன்ஸ், ஜின்டால், வீடியோகான் முதலிய 40 தனியார் நிறுவனங்கள் வெளி நாட்டுக் கூட்டுடன் அணு உலை அமைக்க அரசிடம் மனு போடத் தொடங்கிவிட்டன. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இறங்கப் போகும் துறை இது.

இதுதான் அடுத்த பெரிய ஆபத்து. ஏனென்றால், அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது.

கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.
சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்பது இங்கே நடக்கும் ஊழல் ஆட்சிகளின் கீழ் ஒரு சட்டப்படியான மோசடி. தியாகராய நகரில் விதி மீறிக் கட்டிய வியாபாரிகளின் கட்டடங்களை இடிக்காமல் தடுக்க அவசரச் சட்டம் போட்டதில் தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாருக்கும் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக உள் விஷயங்கள் அறிந்த பல நிருபர்கள் சொல்கிறார்கள்.

`சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் சிறுமிகளை கொத்தடிமையாக வேலைக்கு வைத்துச் சுரண்டும் தொழிலதிபர்களில் ஒருவர் கூட இது வரை கைது செய்யப்படவில்லை. திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து இந்தச் சுரண்டல் பாலியல் கொடுமை உட்பட நடக்கிறது.

அது மட்டுமல்ல, மேலை நாடுகளில் சுற்றுச்சுழல் இயக்கங்கள் விழிப்பாக இருப்பதால், அங்கிருந்து குப்பைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். வாராவாரம் பிரிட்டனில் வீடு தோறும் திரட்டும் குப்பை இந்தியாவுக்கு வருகிறது. அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், வந்தாரை வாழவைக்கும் நம் தமிழகத்துக்கு.

கோவை அருகே விவசாயக் கிணறுகளில் 180 டன் அமெரிக்கக் குப்பைகளை கொட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 டன் இறக்குமதிக் குப்பை அழுகிக் கொண்டிருக்கிறது. சேது கால்வாய்த் திட்டம் தப்பித்தவறி நிறைவேறி, அதில் கப்பல்களும் ஓடினால், தமிழக அரசியல்வாதிகள், குப்பைக் கப்பல் கான்ட்ராக்ட் ஏலம் விட்டு இன்னும் கொள்ளையடிக்கதிட்டம் தீட்டலாம்.

`டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடும், பிரிட்டிஷ் டி.வியும் இந்தக் குப்பை மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. வேஸ்ட் பேப்பர் மறு சுழற்சி என்ற பெயரில் எப்படி எல்லா விதமான கழிவுகளும் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் படித்தால், வயிறு எரிகிறது. குமாரபாைளையத்தில் ஒரு விவசாயக் கிணற்றில் வெளி நாட்டு மருத்துவமனைக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன.

இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !

அதனால்தான் சொல்கிறேன். அணு ஒப்பந்தத்தைத் திணித்த மன்மோகன் முதல் ஆதரித்த அத்தனை பேருக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம் உண்டு. தேசத் துரோகிகள் பட்டியலில். இதர ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாரும் அதே பட்டியலில்தான்.

இன்னும் பத்து வருடம் ஆனாலும் புதிய அணுமின்சாரம் வரப்போவதில்லை. 20 வருடம் ஆனாலும் மொத்த மின்சாரத் தேவையில் பத்து சதவிகிதம் கூட கிடைக்காது. அணுகுண்டு தயாரிப்பது நிச்சயம் நடக்கும்.

இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது.

இந்த வாரக் குட்டுகள் மற்றும் கேள்விகள்:

திராவிடர் கழக மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மீ.கி.வீரமணி பட்டருக்கு.

குட்டு 1: பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்க விடாமல் தடுப்பதை நான் ஓ பக்கங்களில் கண்டித்து எழுதியதற்காக என்னை `பார்ப்பான் என்றும் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாதவன் என்றும் கூலிக்காக தொலைக்காட்சியில் `அய்யா' தொடரைத் தயாரித்தேன் என்றும் விடுதலையில் என் மீது அவதூறுகள் செய்திருப்பதற்காக.கேள்வி 1: சொந்த பத்திரிகை நடத்த பணபலம் இல்லாதவனாக இருந்தபோதும் கருத்துச் சுதந்திரத்துக்காக சிறிய அளவில் ஒரு பத்திரிகையை நடத்த மீண்டும் மீண்டும் முயற்சித்து தோற்றுப்போவது எனக்குப் பெருமைதான். பெரியார் போல ஒருவர் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து சேர்த்த ணத்தில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்உங்களைப் போல எனக்கு இல்லாதது குற்றமா?

கேள்வி 2: பொதிகைக்காக அய்யா தொடரைத் தயாரித்ததில் எனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்புதான் ஏற்பட்டது என்பதை உங்கள் இயக்க நண்பர்கள் உட்பட பலரும் அறிந்திருக்கும் நிலையில், கூலிக்காகத் தயாரித்தேன் என்று சொல்லஉங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் வீடு, கார், ஏ.சி. அறை, உணவுச் செலவு, போக்குவரத்து செலவு உட்பட வாழ்க்கைச் செலவு அனைத்தையும் இத்தனை வருடமாக நீங்கள் என்ன தொழில் செய்து சம்பாதித்தீர்கள்? இவற்றையெல்லாம் தருவது உங்கள் இயக்க அமைப்புகள்தானே? எனவே நீங்கள் செய்து வந்த பெரியார் பிரசாரம் எல்லாமே கூலிக்காக செய்து வந்ததுதான் என்று சொன்னால் என்னை விட அதிகமாக உங்களுக்குத்தானே பொருத்தமாக இருக்கும் ?

கேள்வி 3: சில வருடங்களுக்கு முன்னர் , `நந்தன் வழி' இதழ் நிறுவனர் அருணாசலத்துக்கும் எனக்கும் கருத்து மோதல் ஏற்பட்டபோது, அவரை `புதிய பார்ப்பனர்' என்று நான் வர்ணித்து எழுதிய கடிதத்தைப் பாராட்டி என்னிடம் தொலைபேசியில் பேசியது மட்டுமல்ல, விடுதலையில் பிரசுரித்தும் மகிழ்ந்தீர்களே, அப்போது நான் பார்ப்பானாக உங்களுக்குத் தெரியவில்லையா?

கேள்வி 4: 1983-ல் காஞ்சி சங்கராச்சாரி ஜயேந்திர சரஸ்வதியை சின்னக் குத்தூசியும் நானும் சந்தித்து விட்டு வந்து அவரை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரைகளை நூலாக வெளியிட்டீர்களே, அப்போது நான் பார்ப்பானாகத் தெரியவில்லையா?

கேள்வி 5: பெரியாரின் எழுத்துகளின் அறிவுசார் சொத்துரிமை உங்களுக்கே உரியது என்று இப்போது உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறீர்களே, என் கட்டுரையை என் அனுமதி பெறாமல், எனக்குத் தெரிவிக்காமல் நூலாக உங்கள் அமைப்பு வெளியிட்டு 25 வருடமாக விற்பனை செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறதே? என் அறிவுசார் சொத்துரிமையை நீங்கள் திருடிக் கொண்டதும் குற்றம் இல்லையா? அதற்கான இழப்பீடாக வருடத்துக்கு 4 லட்சம் ரூபாய் வீதம் 25 வருடங்களுக்கான ஒரு கோடி ரூபாயை எப்போது எனக்கு அனுப்பிவைப்பீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?.

இந்த வாரப் பூச்செண்டு
சேலம் கந்தப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் நுழைய இதுவரை தடை செய்யப்பட்டிருந்த தலித்துகளை அனுமதிக்கும்படி உயர் நீதிமன்றம் இட்ட கட்டளையை போலீஸ் உதவியுடன் நிறைவேற்றியிருக்கும் தமிழக அரசுக்கு இ.வா.பூஇந்த வார நினைவூட்டல்

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு. பொது நலனுக்காக விவசாய நிலங்களையெல்லாம் கையகப்படுத்தும் உரிமையுடைய உங்கள் அரசு, அதே பொது நலன் கருதி செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்கு முன்பாக அவர் எழுத்துகளை நாட்டுடைமையாக்குவதை அறிவிக்க, இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருக்கிறது. உங்களுக்காக 129 பூச்செண்டுகள் காத்திருக்கின்றன.
thanks: Kumudam - Jnnani
முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.


கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா? ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா? என்ன கொடுமை......


கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?
அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........


கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது. அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது. கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.
உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ? என்ன கொடுமை.......


கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.
அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.

அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா. அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.

ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை? உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை? அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......


கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா? புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?
உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......

கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.
அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல். விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா? என்ன கொடுமை.......


கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை. ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை. தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்? ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?
மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை: "இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்.''

பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

இ.வா.பூச்செண்டுசகிப்புத்தன்மையின் உச்சத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு.

thanks: Kumudam - Jnanni