Saturday, December 13, 2008

மின்சாரத் தட்டுப்பாடு: எதிர்கொள்வது எப்படி?

தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு திடீரென்று ஏற்பட்டதல்ல. மின்னாக்கம் (மின்சார உற்பத்தி) மின்சாரத்தின் பயன்பாட்டுத் தேவையைவிட ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் தேவையை எட்ட முடியாத அளவுக்கு இடைவெளி அதாவது பற்றாக்குறைக் கூடிவிட்டது.

மின்சாரத்தை மற்ற பொருள்களைப் போலச் சேமித்து வைக்க முடியாது. உணவுப் பொருளான நெல்லைக் களஞ்சியங்களில் போதுமான அளவுக்குச் சேமித்து வைத்துக் கொண்டு தேவையானபோது எடுத்துப் பயன்படுத்துவதுபோல மின்சாரத்தைச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியாது.

மின்னாக்கிகள் தொடர்ந்து இயங்கிப் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை மின்சாரக் கட்டமைப்பக்குள் செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். தேவை கூடக் கூட மின்னாக்கமும் கூட வேண்டும். தேவைக்குக் கட்டுப்பாடில்லை. அது ஒரே சீராகப் பெருகிக் கொண்டே போகும். ஆனால் மின்னாக்கம் அப்படியில்லை. மின்னாக்கத்திற்கு ஒரு உச்சகட்ட அளவுண்டு. அதற்குமேல் இயங்கிக்கொண்டிருக்கிற மின்னாக்கிகள் அதாவது மின் நிலையங்களில் உள்ள மின்சார உற்பத்தி இயந்திரங்கள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் மின்சாரத்தை அளிக்க முடியாமற்போய் இயங்காமல் நின்றுவிடும்.

தமிழ்நாட்டில் உண்டாக்கப்படும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அனல்மின் நிலையங்கள் அளிக்கின்றன. எண்ணூர், தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்கள் முழுத் திறனளவில் இயங்குகின்றன.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உண்டாக்கப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்காக ஓர் அளவு மின்சாரம் கிடைக்கிறது. இது நடுவணரசின்கீழ் உள்ள தனி நிறுவனம். ஆதலால் நம் தேவைக்கேற்ப மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுக்கு இல்லை.

நீர்மின் நிலையங்கள் உண்டாக்கும் மின்சாரம் மிகமிகக் குறைவானதே.தமிழ்நாட்டில் உள்ள சிற்றாறுகளில் (காவிரி உள்பட) நீர்வரத்து மிகமிகக் குறைவு. இவ்வாறுகளிலும், பருவ காலங்களில் மட்டுமே ஓடும் குறைந்த அளவு நீரைத் தேக்கி அதிலிருந்து மின்சாரத்தை உண்டாக்கி வருகிறோம். நீர் மின் நிலையங்கள் நிறைவு நிலையை எய்தி விட்டமையால் இனிப் புதிதாக நிறுவத்தக்க நிலையங்களுக்கு வாய்ப்பு இல்லை. மிகச் சிறிய அளவில் காவிரியாற்றில் ஈரோட்டுக்கு அருகில் மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்... என்றொரு பழம்பாடல் இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.

காற்றாலைகள் மூலமும் மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. முதன்முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு என்ற சிற்றூரில் காற்றாலைகள் நிறுவப்பட்டன. அக்கால கட்டத்தில் இக் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைப் பெருமளவில் உண்டாக்க முடியுமா என்று அறிந்து கொள்ளவே இவ்வாலைகள் மின்வாரியத்தால் நிறுவப்பட்டன. அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு ஆகும் செலவு இல்லாமல் இயற்கையாக வீசும் காற்றின் விசையால் இவை இயங்குவதால் மின்சாரம் உண்டாக்கும் செலவு குறைவே. வெறும் பராமரிப்புச் செலவு மட்டுமே.

ஆனால் இவற்றால் உண்டாக்கப்படும் மின்சாரத்தின் அளவு அனல் மின் நிலைய மின்சார அளவோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவே. காற்றாலைகளின் மூலம் மின்சாரம் உண்டாக்கும் திட்டத்தை அப்போது வாரியமும் அரசும் விரிவுபடுத்தவில்லை. அப்போது கைவசம் வைத்திருந்த அனல்மின் நிலையத் திட்டங்கள் மூலம் தேவைக்கேற்ற மின்சாரத்தை உண்டாக்கிக் கொள்ள முடிந்த காரணத்தில் காற்றாலைத் திட்டங்களில் வாரியம் முனைப்புக் காட்டவில்லை. ஆனால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உண்டாக்குவதில் தனியார் துறை இறங்கியது.

முதலில் உயர் அழுத்த மின்சாரம் வாரியத்திடம் பெற்றுவந்த பெரிய பயனீட்டாளர்கள் காற்றாலைகள் மூலம் மின்சாரம் அமைப்பதற்கு அரசாங்கம் வழங்க முன்வந்த பல சலுகைகள் காரணமாக காற்றாலைகளை நிறுவத் தொடங்கினர். காற்றாலைகள் அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லையோரப் பகுதியில் மேற்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய் போன்ற காற்று வீசும் முப்பந்தல் என்ற ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள் ஏற்றவையாகக் கருதப்பட்டு அங்கே பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டன.

அதன்பிறகு நெல்லை மாவட்டம் கயத்தாரிலும், கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்திலும் மேலும் பல காற்றாலைகள் நிறுவப்பட்டன. இவையனைத்தும் தனியாரால் நிறுவப்பட்டவையே. இவ்வாலைகளின் மொத்தத் திறனளவு 3000 மெகாவாட்டுகளாகும். இவ்வாலைகள் உண்டாக்கும் மின்சாரத்தை மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது. காற்றாலைகளில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவ காலங்களில் பருவக்காற்று வீசும் மாதங்களில் மட்டுமே மின்சாரம் கிடைக்கும்.

காற்றாலைகளில் உணடாக்கப்படும் மின்சாரத்தின் அளவைத் தேவைக்கேற்பக் கூட்டவோ, குறைக்கவோ வழியில்லை. இயற்கையில் வீசும் காற்றின் அளவை ஒட்டியே மின்னாக்கம் அமைவதால் மின்சாரம் ஆண்டு முழுவதும் ஒரே அளவில் ஒரே சீராகக் கிடைக்க வாய்ப்பில்லை. கிடைப்பதை அப்படியே முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு அன்றாடத் தேவைக்கேற்ப அனல் மின்சாரத்தையும், புனல் மின்சாரத்தை யும் கூட்டியோ, குறைத்தோ மின்வாரியம் சமன்செய்து கொள்கிறது.

மின் வாரியத்தின்கீழ் இயங்கும் அனல் மின் நிலையங் களின் மொத்தத் திறனளவு 3290 மெகாவாட்டுகள். இம் மின் நிலையங்களில் பராமரிப்புப் பணியின் பொருட்டுச் சில அலகுகள் இயங்காத போதும் எஞ்சியுள்ளவை முழுத் திறனில் இயங்கும் நிலையில் 2850 மெகா வாட்டு மின்சாரம் கிடைக்கிறது. அதாவது இராமதாசு கேள்வியயழுப்பும் ஆக்குதிறன் 87 விழுக்காட்டில் அனல்மின் நிலையங்கள் இயங்கு கின்றன. இது அனைத்திந்திய சராசரிக்கும் மேலேயிருப்பதால் தமிழ்நாட்டு மின்வாரியத்தைக் குறை சொல்லமுடியாது.

நீர் மின் நிலையங்களின் மின்னாக்குத் திறன் அதிகமிருப் பினும் நீரின் இருப்புக்கேற்ப இவற்றிலிருந்து பெறும் மின்சாரம் இன்றைய நிலையில் 1793 மெகாவாட்டுகள். மின் வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனல் மின் நிலையங்கள் நீர் மின் நிலையங்கள் இரண்டும் சேர்ந்து 4640 மெ.வா. வழங்கு கின்றன. இன்றயை சூழ்நிலையில் தமிழ்நாட்டின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 8650 மெகாவாட்டுகள்.

இத் தேவையில் பாதியளவுக்கே அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மின் நிலையங்கள் மின்சாரம் அளிக்கின்றன. எஞ்சிய தேவையைத் தமிழ்நாட்டு மின்சார வாரியம் நடுவணரசின் கட்டுப்பாட்டிலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மூலம் நிறைவுசெய்து கொள்கிறது.இப்போது காற்றாலைகள் மூலம் பெற்றுவந்த மின்சாரம் காற்றின் விசையை ஒட்டி மின்னாக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக மிகவும் குறைந்து போயிற்று.

நெய்வேலி அனல் மின் நிலையம் நடுவணரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. 1ஆம் அனல் மின் நிலையத்தின் திறனளவு 600 மெகாவாட்டுகள். இந்த 600 மெகாவாட்டு மின்சாரத்தில் நெய்வேலி நிறுவனத்தின் தேவைபோக எஞ்சியுள்ள 475 மெகாவாட்டு மின்சாரமும் தமிழ்நாட்டுக்கே அளிக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். இம்மின் நிலையத்து மின்னாக்கத் தின் தொய்வு காரணமாக இப்போது 105 மெகா வாட்டுகள் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறது.

நெய்வேலி 1ஆம் அனல் மின்நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மின்நிலையத்தின் திறனளவு 420 மெ.வா. இதில் இப்போது உண்டாக்கப்படும் 226 மெ.வா. மின்சாரத்தில் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பது 166 மெ.வா. மட்டுமே.

நெய்வேலியின் 2ஆம் அனல்மின் நிலையத்தின் திறனளவு 1470 மெ.வா. இதில் தமிழ்நாட்டின் பங்கு 466 மெ.வா. ஆனால் கிடைப்பது 262 மெ.வா. மட்டுமே. மேலேகண்டுள்ள படி நெய்வேலியிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய - ஒப்பந்தப்படி உரிமையுள்ள மின்சாரம் (475 + 226 + 466) 1167 மெ.வா. ஆகும். மொத்தம் (600 + 420 + 1470) 2490 மெ.வா.

மின்னாக்குத்திறன் கொண்ட நெய்வேலி மின் நிலையத்தில் 80 விழுக்காடு மின்னாக்கம் இருப்பின் 2000 மெ.வா. கிடைக்கும்.இதில் தமிழ்நாட்டுக்கு ஒப்பந்தப்படி அளிக்கப்படவேண்டிய 1167 மெ.வா. போக எஞ்சியுள்ள 833 மெ.வா. மின்சாரம் அண்டை மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய 1167 மெ.வா. மின்சாரம் முழுதாகக் கிடைக்கப் பெற்றாலே தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த 1167 மெ.வா. மின்சாரத்தைக் குறைத்துக் கொண்டு இப்போது நெய்வேலி 533 மெ.வா. மட்டுமே கொடுக்கிறது.

அ. நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியால் இயங்குவது.

ஆ. மின்னாக்கும் திறனளவு 2490 மெ.வா.

இ. தமிழ்நாட்டுக்கு ஒப்பந்தப்படி அளிக்கப்பட¼ண்டியது 1167 மெ.வா.ஈ.

இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது 533 மெ.வா.திறனளவில் கால் பங்கு தமிழ்நாட்டுக்கு! முக்கால் பங்கு அண்டை மாநிலங்களுக்கு!

தமிழர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றப் படுகிறார்கள் என்று இதிலிருந்து தெளிவாக விளங்கும். தமிழ் நாட்டின் உரிமையைப் பறிக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டரசுக்கு இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நெய்வேலி அனல்மின் நிலையத்தின் மின்சாரம் முழுவதுமாகத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்குமானால் தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடே வர வாய்ப்பில்லை.

முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் முக்கால் பங்காவது, மின்சாரத் தட்டுப் பாட்டால் அவதியுறும் தமிழக மக்கள் அரசுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கிவிட்ட பிறகாவது அரசு இதில் கருத்தூன்றித் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்று இதற்கு ஒரு தீர்வுகாண முயலவேண்டாமா? முயலவேண்டும். இவ்வுரிமை கூட்டாட்சியில் நிலைநாட்டப்பட வேண்டும்.முன்னெப்போதும் கண்டிராத மின்சாரத் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை மின்சார வாரியத்தில் பெரும் பொறுப்புகளில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றுள்ள நான் என்னுடைய பட்டறிவின் அடிப்படையில் அரசின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியுமின்றி என் கருத்தை முன் வைக்கிறேன்.

அரசுக்கு மின்சாரத்துறை மிகவும் முகாமையான துறை. ஓர் ஆட்சியின் வெற்றி தோல்வி இத்துறையினைத் திறம்பட மேலாள்வதைப் பொறுத்தே அமைகிறது. இத்துறையின்மீது எப்போது அரசின் கவனம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இத்துறையை வெற்றிகரமாகக் கையாளுங்கால் ஏனைய துறைகளும் இத்துறையைச் சார்ந்தே இருக்குங் காரணத்தால் அனைத்துத் துறையிலும் வெற்றியை ஈட்டமுடியும்.துறையின் தலைமைக்கு ஆளுமைத் திறனும் தொழில் நுட்பப் பட்டறிவும் இன்றியமையாதன.

67க்குப் பிறகு அமைந்த அரசுகள் இதில் போதிய கவனஞ் செலுத்தவில்லை. அவ்வப் போது அரசுக்கு வேண்டியவர் என்ற ஒரே காரணத்தைவைத்து இன்னார் இத்துறைத் தலைமைக்குத் தகுதியுடையவரா என்று ஆய்ந்து பாராமல் தகுதியும், திறமையும் இல்லாத பல பேர் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

மின்சாரத்தின் தேவை ஒவ்வோர் ஆண்டும் பெருகிக் கொண்டே வருகிறது. ஆனால் இத் தேவையை எதிர் கொள்ளத் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கான திட்டங்கள் உரிய காலத்தில் போட்டு, அவற்றுக்கான அரசின் ஆணைகள் பெற்றுத் திட்டங் களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். வருமுன் காப்போம் என்பது வெற்று முழக்கமாகப் போய்விட்டது. நடுவணரசு தமிழ் நாட்டைப் பற்றிப் போதுமான கவனம் எடுத்துக் கொள்வதில்லை.

தமிழ்நாட்டில் இருந்த அரசுகளும் இதில் போதிய கவனஞ் செலுத்துவதில்லை. ஏனோ தானோவென்று இருந்து விட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் மின்சாரத்தை உண்டாக்கும் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமலே போய்விட்டன. ஒரு திட்டத்தைப் போட்டால் அது செயல்பாட்டுக்கு வருவதற்கு அய்ந்தாறு ஆண்டுகள் ஆகலாம்.

திட்டமே இல்லாதபோது எப்படி நஞ்சு போல் ஏறிக்கொண்டிருக்கும் மின்சாரத் தேவையை எதிர் கொள்ளுமோ இந்த அரசு? எண்ணிப் பார்க்க வேண்டிய - முதன்மை தர வேண்டிய ஒன்றாகும் இது.

கூடங்குளம் அணுமின் நியைத்தில் அடுத்த ஆறு மாதங்களில் ஒரு யூனிட்டு செயல்படத் தொடங்குமெனச் சொல்லிக் கொண்டுள்ளனர். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.இப்படிப்பட்ட மிகவும் மோசமான சூழ்நிலையில் தட்டுப்பாட்டை மேலும் உண்டாக்கும் செயல் ஒன்றில் அரசு தன்னை அறியாமலே ஈடுபட்டு வருகின்றது. இலவயமாகத் தொலைக் காட்சி வழங்குவது எந்த அளவுக்கு மின்சாரத் தேவையை அதிகரிக்கும் என்று அரசு எண்ணிப் பாராதுள்ளது. வீட்டு மின்னிணைப்புகளில் பெரும்பகுதி மின்சாரம் தொலைக் காட்சிக்கே செலவிடப்படுகிறது என்பதை எம்முடைய ஆய்வு சொல்லுகிறது.

வசதியற்றோர் வீடுகளில் நாள்முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவயமாகக் கொடுத்த பிறகு மக்கள் அதைப் பார்க்காமலிருப்பார்களா? மக்கள் அனைவரும் தொலைக் காட்சியைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடியப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.முன்பெல்லாம் காலை 6 மணிமுதல் 8 மணிவரையும், மாலை 6 மணி முதல் 9 வரையிலும் மின்சாரப் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கும்.

காலையில் ஏற்படும் அதிகரிப்பு விவசாயப் பம்பு செட்டுகளை ஒரே நேரத்தில் இயக்குவதால் ஏற்படுவது, மாலையில் விளக்கெரிவதால் ஏற்படுவது. இப்போது தொலைக்காட்சிப் பயன்பாட்டுக்கு வந்து எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டபிறகு இரவு நேர மின்சாரப் பயன்பாட்டின் அளவு எதிர்கொள்ள முடியாத உயரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.

இக்கட்டுரை எழுதும் நாளன்று உச்சகட்ட மின்சாரம் 10625 மெ.வா. ஆகும். இதைக் குறைப்பதற்காகத்தான் சுமையை இறக்கிப்போடுதல் என்ற அதிரடி நடவடிக்கையயடுத்துச் சுமையைக் குறைக்கிறார்கள். இதனால்தான் பகல் இரவு எந்த நேரத்திலும் மின்சாரத் தடை உண்டாக்குகிறார்கள். இதற்கு முன்னறிவிப்புக் கொடுப்பதென்பது இயலாத ஒன்று.

சரி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு செய்யவேண்டியதென்ன என்பதையும் கூறுகிறோம்.நடுவணரசில் உள்ளவர்களில் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர் இல்லை. நடுவண் கட்டமைப்பிலிருந்து நம்முடைய இன்றைய மின் தேவைக்கேற்ப இப்போது பெறுவதை விடவும் மேலும் வலியுறுத்தி, கெடுபிடி செய்து பெற்றேயாகவேண்டும்.

நெய்வேலியிலிருந்து தமிழ்நாட்டின் தேவைபோக எஞ்சியதை மட்டுமே அண்டை மாநிலங்களுக்குப் பங்களிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது.அண்மையில், நடுவணரசின் மின்சாரத்துறை அமைச்சர் செயராம் ரமேசை, அசாம் மின்சாரத் துறை அமைச்சர் பிரதயுத் யோர்டோலாய என்பவர் 21.9.2008இல் சந்தித்துப் பேசியுள்ளார்.

அசாமில் தேசிய அனல் மின் குழுமத்தால் சாலகத்தி என்ற இடத்தில்750 மெ.வா. திறன் கொண்ட ஒரு அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது 2010ஆம் ஆண்டின் இறுதியில் இயக்கி வைக்கப்படஉள்ளதால் இம் மின் நிலையம் உண்டாக்கும் 750 மெ.வா. மின்சாரத்தையும் அசாமுக்கே அளிக்கவேண்டும் என்று அம்மாநில அமைச்சர் கேட்டுள்ளார். அப்படி ஒரு மாநிலத்தில் நிறுவப்படும் அனல் மின் நிலையத்தின் முழு மின்சாரத்தையும் அம் மாநிலத்துக்கே அளிப்பது என்பது புதிதல்ல.

இதற்கு முன்பே ஆந்திராவில் இம்மாதிரி அனல் மின் நிலைய மின்சாரமும் மற்றும் அரியாணாவில் பரிதாபாத் அனல் மின் நிலையத்தின் மின்சாரமும் முழுவதும் அந்தந்த மாநிலங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, அதுபோல அசாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுவரும் தேசிய அனல்மின் குழுமத்தின் சாலகத்தி அனல்மின் நிலையத்தின் 750 மெ. வாட் மின்சாரம் முழுவதையும் தன் மாநிலத்துக்கே ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். நடுவணரசின் அமைச்சரும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.

மேற்சொன்ன செய்தியையும், நம் மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி நடுவணரசிடம் எடுத்துச் சொல்லி, நம் மாநிலத்தில் உள்ள நெய்வேலி மற்றும் கூடங்குளத்தில் இவ்வாண்டின் இறுதியில் வரவிருக்கும் முழு மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே அளிக்கவேண்டுமென்றும், நம் தேவை போக எஞ்சியுள்ளதை மட்டுமே அண்டை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து, அப்படிப் பெறுவதில் வெற்றிபெற்றாலொழிய இப்போதைய கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஒருபோதும் நீங்காது.

இது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும், இன்னும் சொல்லப்போனால் இனிவரும் ஆண்டுகளில் தட்டுப்பாடு இதைவிடவும் மோசமாகி, கடுமையான சூழ்நிலை உருவாகிவிடும் என்பது உறுதி.

புதிய பெருந் திட்டங்களைப் போராடிப் பெற்று உடனடியாகச் செயல்படுத்தவேண்டும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
- இக்குறளில் வாழ்க்கைக்குச் சொன்னது தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் பொருந்தும்.

நன்றி: பொறிஞர். கு.ம. சுப்பிரமணியன், கீற்று

தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு

கலைஞரின் எழுத்துகளில் ஒன்றுகூட இலக்கியமாகத் தேறாது என ஜெயமோகன் என்கிற தமிழ் எழுத்தாளர் தனது நூல்களின் வெளியீட்டு விழாவில் கூறியது இன்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. தமிழில் எழுதுபவர்களில் வெறும் மூன்று சதம் பேரே சிற்றிதழ் சார்ந்தவர்கள், மற்ற தொண்ணூற்றேழு சதம் எழுத்தாளர்களாகவும் உள்ளனர் என்று சில நாட்கள் முன்பு கலைஞர் கலந்து கொண்ட கூட்டமொன்றில் பேசப்பட்டதை ஒட்டி ஜெயமோகன் இந்தக் கருத்தைச் சொல்லியுள்ளார். அந்த மூன்று சத எழுத்தாளர்கள் சார்பாக நின்று கலைஞரை முற்றிலுமாக நிராகரித்துப் பேசியுள்ளார்.

சிற்றிதழ் சார்ந்த மூன்று சதம் எழுத்தாளர்களின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக் கொள்ள இவருக்கு யார் அதிகாரம் அளித்தது என்ற கேள்வி ஒருபுறமிருக்க இந்த ஜெயமோகனும் இவரால் பிரமாதமான எழுத்தாளர் எனப் பட்டியலிடப்படுகிற எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் என்ன மாதிரி விசயங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்து மத புராணக் குப்பைகளை எந்த விமர்சனமுமில்லாமல் மறுவாசிப்புச் செய்யும் திருக்காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ‘விஷ்ணுபுரம்’ ‘உப பாண்டவம்’ முதலிய நூல்கள் இதற்குச் சாட்சி.

புதுமைப்பித்தன் முதலியவர்களும் கூட நமது பழைய பஞ்சாங்கப் பார்வைகளைக் ‘கடும் விமர்சனமும்’ ‘நாரத ராமாயணமும்’ செய்த்து குறிப்பிடத்தக்கன. எனவே இவர்கள் புதுமைப்பித்தனின் பாரம்பரியத்தைக் கோருவது அபத்தம்.கலைஞரைப் பொருத்தமட்டில் அவர் வெகுசனத் தளத்தில் இயங்கியவர். வர்களையோ அல்லது இலக்கியத் தளத்தில் இயங்கிய இன்னொரு அரசல்வாதியான ராஜாஜியைப் போலவோ புராண இதிகாசக் குப்பைகள் போக்கம் போகாதவர். மதச்சார்பற்ற பண்டைய இலக்கியங்களை வெகுசனத்தளத்திற்கு கொண்டு சென்றவர். தனால்தான் இவர்கள் பெரியாரையும் திராவிட இயக்கத்தாரையும் வெறுப்பது போலவேக் கலைஞரையும் காய்கின்றனர்.

ஜெயமோகன் நூலகளை ஆர்,எஸ்.எஸ்.கடைகளில் வைத்து விற்பனை செய்வதையும் இவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் என்பதை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் ‘கணையாழி’ என்னும் இதழில் இது குறித்து அவர் என்னைக் கடுமையாகச் சாடியிருந்தார். தான் இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவதாகவும் ஆர்.எஸ்.எஸில் எப்போதோ இருந்து போலவே இப்போது மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்திலிருப்பதாகவும் பதட்டத்துடன் கூறியிருந்தார்.

எல்லாம் சரி நீங்கள் மார்க்சிசத்தை விமர்ச்சிக்கிற அளவு எப்போதாவது ஆர்.எஸ்.எஸ்.சை விமர்சித்திருக்கிறீர்களா என ஜாகிர் ராஜா என்றொரு வாசகர் அடுத்த இதழில் கேட்டிருந்தார். ஜெயமோகனிடம் பதிலில்லை. ராஜா மறந்து போன இன்னொரு கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. எப்போதே நீர் ஆர்.எஸ்.எஸ் சில் இருந்திருக்கலாம், ஆனால் இப்போதும் கூட அவர்கள் உம் நாவலைக் கடைபரப்பி விற்பதன் பொருளென்ன? இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியலுக்கு ‘விஷ்ணுபுரம்’ சார்பாக இருப்பதை தவிர இதற்கு வேறேன்ன காரணம் சொல்ல முடியும்?

தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானதுதான், எனினும் வெகுசனங்களிடமிருந்து விலகிய மேட்டிமைத் தன்மை, மக்களைப் பாதிக்கும் அரசியலிலிருந்து முற்றாக விலகி நிற்றல், மேற்சாதிப் பின்புலம், திராவிட /மார்க்சியக் கருத்தியல்களின் மீதான வெறுப்பையும் சிற்றிதழ்களைக் கூர்ந்து கவனிக்கும் போது இவற்றொடு இஸ்லாமிய வெறுப்பையும் சிற்றிதழ்களின் பண்புகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஆதரவான ஒரு கட்டுரை இந்துத்துவ அரசியல் இதழ்களைத் தவிர ‘காலச்சுவடின்’ முந்தைய அவதாரம் அது. அப்போது அதன் ஆசிரியர் இன்று ஜெயமோகன் வியந்து பாராட்டுகிற இன்னொரு எழுத்தாளர். இன்றைய காலச்சுவடு கண்ணனின் தந்தை சுந்தரராமசாமி. மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே இடிப்பது சரிதான் என்கிற ரீதியில் எழுதப்பட்டது அக்கட்டுரை.சிற்றிதழ்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெகுசன இதழ்களைப் போல கோயில், மாகத்மியம், சாமியார் புகழ் பாடாதிருந்த நிலை பாராட்டக் கூடிய ஒன்றாக இருந்தது.

இந்நிலையை மாற்றிப் புரட்சி செய்தவரும் ஜெயமோகன்தான். தனது ‘சொல்புதிது’ இதழில் நித்தய் சைதன்யயதி என்னும் சாமியாரை அட்டையில் போட்டு, பேட்டி வெளியிட்டு, கட்டுரை எழுத வைத்துச் சாமியார் புகழ்பாடினார் ஜெயமோகன். இன்னும் அந்நிலை தொடர்கிறது. வெகுசன ஊடகங்களில் ரஜினி போன்றோர் ‘பாபா’க்களைத் தேடிய போது அதே காலகட்டத்தில் இவர்கள் வாழும் பாபாக்களை முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பொருத்தம் இருப்பதால்தான் ஞானக் கூத்தன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சிற்றிதழ்கள் எளிதாகக் கமலஹாசனுடனும் ரஜினியுடனும் ஒட்டிக்கொண்டு விடுகின்றனர்.‘காலச்சுவடு’ இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள (செப்டம்பர்-அக்டோபர் 2003 )மதச்சார்பின்மையை மறு ஆய்வு செய்யும் சிறப்பிதழ் கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.

இன்று அமெரிக்காவில் குடியேறியிருக்கும் பழைய சிற்றிதழ்காரர்களின் துணையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘திண்ணை’ என்னும் இணையத்தளத்தில் இந்துத்துவச் சார்பாக அவ்வப்போது எழுதி வந்த காசு கண்ணனை ஆசிரியராகக் கொண்ட காலச்சுவடு இதழின் இந்துத்துவச் சார்பை விரிவாக ஆராய்தல் தகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். எனினும் சில குறிப்புகள்: அரவிந்தன் நீலகண்டன் என்றொரு ஆர்.எஸ்.எஸ் நபர் காலச்சுவடில் அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஒருமுறை ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் பெருமைகள் குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியிருந்தார். காசு கண்ணனின் பார்ப்பன மூளை அதை ஒரு கட்டுரையாக வெளியிடாமல் வாசகர் கடிதம் பொன்ற வடிவில் வெளியிட்டது.

சென்ற இதழில் (ஜூலை-ஆகஸ்ட் 2003)களந்தை பீர்முகம்மதின் கட்டுரை ஒன்றையும் சல்மாவின் கதையொன்றையும் வெளியிட்டது காலச்சுவடு. முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளத்தது நல்ல அம்சன் தான் என மகிழ்ந்து போய்விடாதீர்கள். தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்தவைக்கும் தந்திரம் அது. ‘சாபம்’ என்கிற சல்மாவின் கதையைப் பாருங்கள். திருமணமாகாத ஒரு ஏழை முஸ்லிம் பெண்ணின் மன உணர்வுகளாக விரியும் இக்கதை விரைவில் தடம் மாறுகிறது. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒவ்வொருவராகப் பைத்தியம் பிடித்து அழியும் கதை இது. அழிவதற்கு ஒரு சாபம் காரணமாக இருக்கிறது.

ஒரு பார்ப்பனக் கணவன், மனைவி, அவர்களின் சிறு குழந்தை ஆகியவர்களை அந்தக் குடும்பத் தலைவர் நகைக்காகக் கொலை செய்து கிணற்றில் போட்டு விடுகிறார். மோதிரத்திற்காகக் குழந்தையின் பிஞ்சு விரலை வெட்டுகிற கொடூர முஸ்லீம் அவர். பார்ப்பனக் குடும்பத்தின் சாபத்தால் இன்று அந்த முஸ்லிம் குடும்பம் அழிகிறது என்பதுதான் கதை.முஸ்லிம்களின் இன்றைய அவலங்களுக்கெல்லாம் அன்று முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்துக்களுக்குச் செய்த கொடுமைகள்தான் காரணம் என்கிற இந்துத்துவக் கருத்தியலுக்கு உடுக்கை அடிக்கிறார் சல்மா. ‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என்கிற நரேந்திர மோடி இக்கதையைக் குஜராத்தி மொழியில் பெயர்த்து வெளியிட வாய்ப்பிருக்கிறது. சல்மா முயற்சித்துப் பார்க்கலாம்.

களந்த பீர் முகமதின் கட்டுரையோ முஸ்லிம்கள் எத்துணை முறை ஹஜ் யாத்திரை சென்றார்கள் என்கிற தகுதியின் அடிப்படையிலேயே திருமண முன்னுரிமை பெறுவதாகப் பகடி செய்கிறது. முஸ்லிம்கள் மத நம்பிக்கைகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதாகக் குறிப்புணர்த்துகிறது. மனுஷ்ய புத்திரன் காலி செய்த காலச்சுவடு இடத்தை யார் நிரப்புவது எனச் சல்மாவுக்கும் களந்தை பீர் முகம்மதுக்கும் கடும் போட்டி. ‘சபாஷ்’ என மேலுதட்டைத் தடவுகிறார் காசு கண்ணன்.

காலச்சுவட்டின் மதச்சார்பின்மை மறு ஆய்வுச் சிறப்பிதழில் காசு கண்ணன் மற்றும் ரவிக்குமாரின் கட்டுரைகள் விஷமத்தனமானவை. காசுவின் கட்டுரை வெளிப்படையாக இதைச் செய்கிறது. ரவிக்குமார் அதையே நாசுக்காகச் செய்கிறார். முஸ்லிம்களிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என ‘வல்லினம்’ என்ற சிற்றிதழுக்குக் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்துத்துவ எதிர்ப்பை நான் முன்வைத்து வருவதற்காக என்னைத் தாலிபான் ஆதரவாளர் என்றும் அப்பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

இப்படியான செய்கைகள் மூலம் முஸ்லிம் மக்களின் நியாயங்களைப் பேசுகிற ஓரிரு வாய்களையும் மூடுவதே இதன் நோக்கம். எல்லோருடனும் சேர்ந்து கொண்டு எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்று நாமும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் பயங்கரவாதிகள் என்பார்கள். கட்டுரை எழுதி ஆள்காட்டிக் கொடுப்பார்கள்.

வடக்கே உள்ள அளவிற்குத் தமிழ்நாட்டில் இந்துத்துவ வகுப்புவாதம் தலைதூக்க இயலாமற் போனதில் இஸ்லாமியரையும் திராவிடராக ஏற்றுக் கொண்டு அணுக்கம் காட்டிய திராவிட இயக்கம் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது. அதை இருட்டடிப்புச் செய்வதே ரவிக்குமார் கட்டுரையின் நோக்கமாக உள்ளது. கடந்த எழுபத்தைந்தாண்டுகளில் இந்துத்துவவாதிகளின் சொல்லாடல்களுக்கு எதிர்ச் சிந்தனையாளர்களின் பங்கு மகத்தானது.

இந்திய, தமிழக வரலாறு குறித்த அரைகுறையான புரிதல்களுடனும் தர்மாகுமார், சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற மார்க்சிய எதிர்ப்பாளர்களின் துணையோடும் இந்துத்துவத்துக்கு எதிராக முற்போக்காளர்கள் மேற்கொண்ட பணி மீது சேறுவாரி இறைக்கிறது ரவிக்குமாரின் கட்டுரை.

புத்தமதம் வீழ்ந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிகிற வரலாற்றிஞர்கள் இதுவரை தோன்றவில்லை என்கிற தர்மாகுமாரின் கருத்தை வியந்தோதுகிற ரவிக்குமாரின் கண்களில் அம்பேத்கர், ஜமந்தாஸ், கெய்ல் ஆம்வெத் போன்ற தலித்திய அறீஞர்களும் சிந்தனையாளர்களும் கண்ணில்படாமற் போனது வியப்பே. பார்ப்பனச் சுங்க மன்னர்களின் காலத்தில் பவுத்த பிக்குகளின் தலைக்கு நூறு காசு வைத்து வேட்டையாடப்பட்டது பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளமை ஏன் ரவிகுமாரின் கண்ணில்படவில்லை என்பதும் விளங்கவில்லை.

பவுத்தம் வீழ்த்தப்பட்டதில் பார்ப்பனீயத்தின் பங்கை இவர்கள் வலியுறுத்துவது ரவிக்குமாருக்குப் பிடிக்கவில்லை.இஸ்லாமுக்குப் பெரிய அளவில் இந்துக்கள் மதம் மாறியதற்கான காரணங்களில் பிரதானமானது இங்குள்ள சாதீயமும் தீண்டாமையும்தான்.

சமீபத்திய உதாரணம் மீனாட்சிபுரம். அங்கொன்றும் இங்கொன்றுமான சிற்சில எடுத்துக்காட்டுகளைக் காட்டி இஸ்லாமுக்கு மதம் மாறியதற்கு ‘பிராமண ஒடுக்குமுறை’ காரணமல்ல என ரவிக்குமார் நிறுவ முயல்கிறார். தஞ்சைக்கும் குடந்தைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்டத்தக்க அளவிற்குப் பார்ப்பனர்கள் இஸ்லாமியராயினர். இதனால் தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களெல்லாம் ‘பூர்வ’ பார்ப்பனர்கள் எனச் சொல்லுவது போன்ற அவத்தம்தான் இதுவும்.மதவாதம் என்பது ஒரு நவீனத்துவ வெளிப்பாடு.

தேசியம் முதலிய கருத்தாக்கங்களுடன் இணையாதத் தோற்றம் கொள்வது. மத்திய கால மதப் போராட்டங்கள், சமணம் ஒழிக்கப்பட்டது ஆகியவற்றுடன் இன்றைய குஜராத்தையோ இந்துமதவாதத்தையோ ஒப்பிடுவதில் பல சிக்கல்கள் உண்டு. எல்லாக் காலங்களிலும் மாற்று மதக்காரர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று நிறுவுவதும் அதன் மூலம் இன்றைய இந்து மதப் பாசிஸ்டுகளுக்கு நியாயம் வழங்க முயல்வதுமே கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

வரலாற்றின் தொடர்ச்சியை வலியுறுத்துவதைக் காட்டிலும் வரலாற்றில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியின்மையும் இடைவெளிகளையும் சுட்டிக் காட்டுவதே முக்கியம் என்கிற நவீன சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிராக ஒலிக்கிறது ரவிக்குமாரின் குரல்.பார்ப்பனர்களுக்கும் சைவ மடங்களுக்கும் இணையாகச் சமண பவுத்தப் பள்ளிகளுக்குத் தவறு.

மத்திய கால ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது இதற்கான சான்றுகள் ஏதுமில்லை. பவுத்த விஹார்களுக்கு அளிக்கப்பட்ட தானங்களில் சில வெளிநாட்டு பவுத்த மன்னர்களோடு தமிழ் மன்னர்கள் செய்து கொண்ட ஒப்பஎதத்தின் அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிரவும் தமிழகத்தில் சமணம் வன்முறையாக அழிக்கப்பட்டது போல பவுத்தம் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் பெருமளவில் இல்லை. நுணுக்கமாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகள் இவை.

கட்டுரை முழுவதும் பார்ப்பனரைப் ‘பிராமணர்’ என விளித்து ரவிக்குமார் பவ்யம் காட்டுவதும் கவனிக்கத்தக்கது. காசு கண்ணனின் கட்டுரை முஸ்லிம் வெறுப்பை உமிழும் அப்பட்டமான பார்ப்பனப் பார்வை. ஏதோ இங்கு இந்துத்துவத்திற்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதம் கொடிகட்டிப் பறப்பது போலவும் அதை மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் இடதுசாரிகளும் கண்டுகொள்வதில்லை எனவும் தாண்டிக் குதிக்கிறார் காசு. பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற அரசியற்பார்வை தேவையில்லை என்ற இந்துத்துவச் சொல்லாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை.

‘இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் பெரிய அளவில் ஒன்று திரண்டது ஷாபானு விவகாரத்தில்தான்’ எனக் காசு சொல்வது அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. அஸ்கர் அலி என்ஜினியரை முன்னிறுத்தி இந்த வாதத்தை நிறுவிவிட இயலாது. ஏ.ஜி. நூரானி போன்றவர்கள் இது குறித்து விரிவான ஆதாரங்களைத் தொகுத்துள்ளனர்.சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் சோகம் நிரம்பியது. அநீதிகள் நிறைந்தது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர்.

முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவராகிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுக்கத் தயாராக இல்லை.அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.

1.உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.
2.பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.
3.பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.

இதேகாலலட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம்.தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது.

எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அலவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவேயில்லை.1961ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10,11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி.

இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பீரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964 ல் ஜாம்ஷெட்பூரில் மிகப் பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8,9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ணா சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே,கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றிலிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும் தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான பார்ப்பனத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடந்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ள நரித்தனம்.இன்றைய சூழலில் முஸ்லிம்களின் தற்காப்பற்ற மனநிலையை வெளிப்படுத்தும் ஷாஜஹானின் கட்டுரைகளை, பின்னணியிலிருந்து விலக்கிய மேற்கோள்களைக் காட்டி தீவிரவாத ஆதரவுக் கருத்துகளாகப் படம் பிடித்துக் காட்டுவதில் காசு கண்ணனுக்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு.

காலச்சுவட்டின் ஆதிக்க வலையில் ஷாஜஹான் சிக்க மறுத்தத் தலைநிமிர்ந்து நிற்பதுதான் அது. எப்படியாவது அவருக்குத் தீவிரவாதப் பட்டம் கட்டித் தனிப்பட்ட முறையில் ஊறு விளைவிக்க முயற்சிக்கும் கண்ணனின் பல செயல்பாடுகளில் இக்கட்டுரையும் ஒன்று.இந்தியாவில் தோன்றிய மதங்கள் தவிர கிறிஸ்தவம் போன்ற இந்தியாவுக்கு வந்த மதங்கள் கூட சாதியத்திற்குப் பலியாகியுள்ளபோது முஸ்லிம் மதம் மட்டும் இந்நிலையை வென்றுள்ளது. இந்துமயமாகும் முயற்சியை இஸ்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்துள்ளது. அது பொறுக்கவில்லை கண்ணனுக்கு. (பசுஞ்)சாணியைப் புனிதமாகக் கருதி வீட்டில் மெழுகவில்லையாம், கோமூத்திரத்தைக் குடிக்கவில்லையாம், தர்காவில் பேயோட்டிச் சமாதி வணக்கம் செய்யும் பழக்கங்களுக்கு மாற்றுக் கருத்துகள் முஸ்லிம் சமுதாயத்தில் எழுகிறதாம்.

இதெல்லாம் முஸ்லிம் அடிப்படைவாதமாம்.இறுதியாக முஸ்லிம்கள் தனித்துவத்துடன் இயக்கமாகத் திரள்வது கண்டு எரிகிறது கா.சு. இதுவும் இந்துத்துவ சக்திகள் காலம் காலமாய்ச் சொல்லி வரும் அறிவுரைதான். தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டிய காலகட்டம் இது. பாசிசத்தை எதிர்கொள்வதற்கான சரியான வழியும் அதுவே. பன்மைத்துவம் என்பதன் பொருளும் அதுவே.சிற்றிதழ்ப் பாரம்பரியத்தின் முஸ்லிம் வெறுப்பையும் திராவிட/பெரியார் எதிர்ப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நாம் காணமுடியும்.

தமக்குள் எத்தனைக் குத்து வெட்டு, சண்டைகள், கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும் சுந்தர ராமசாமி, ஜெயமோகன், அசோகமித்திரன், காசு கண்ணன், ரவிக்குமார் முதலியோர் சந்திக்கும் புள்ளியாகவும் இது அமைகிறது. சந்திக்கும் புள்ளி என்பதைக் காட்டிலும் இதை ஒரு வலைப்பின்னல் என்று சொல்வதே பொருத்தம்.

அது சரி, இந்த வலைக்குள் கனிமொழி என்ற நல்ல கவிஞர் சிக்கிக் கொண்டதெப்படி? இவர்களின் திராவிட எதிர்ப்புக் கருத்துகளையும் பெரியார் எதிர்ப்பையும் ஆதரித்துப் பேட்டி கொடுப்பது, நந்தன் போன்ற இதழ்களில் கூட திராவிட இயக்க வெறுப்பை வெளிப்படுத்துவது, இவர்களது வெளீயீடுகளாகத் தன் புத்தகங்களைக் கொணர்வது, இவர்களிடம் முன்னுரை வாங்குவது என்பதையெல்லாம் எப்படி சொல்ல? என்ன சொல்ல?


நன்றி: அ.மார்க்ஸ், சமநிலைச் சமுதாயம்நவம்பர் 2003

செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.

எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.
ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.

வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.

நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.

“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.

அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.
குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.

1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.
அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன.

சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?
தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.

அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.

பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.
அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.

அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.

வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.
இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.

நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.

தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.

90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.

திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.

இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.
பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.

இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.

பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் “ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்” என்று அம்பானியிடம் உருகுவார்கள்.

70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.

இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.
ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.

மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.

எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.
“நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன.

நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.
வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.

“ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?

‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.” கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.

அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.

ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.

சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.
குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு “நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்” என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும்.

பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!

ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

நன்றி: வினவு

Thursday, December 11, 2008

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)

அஞ்சலி என்ற பெயரில் 'இந்தியா டுடே' கீழ்க்கண்ட கட்டுரையைப்
பிரசுரித்திருக்கிறது
----------------------------------------------------------------------------------
அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008
மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார்.

அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.
-எஸ். பி
----------------------------------------------------------------------------------

இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள்.

முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன.

கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா...? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்.... இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை... ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்.... கொலைகள்... கொள்ளைகள்... பாலியல் வன்கொடுமைகள்.... காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை.

பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை.

ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ... வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர்.

பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.

குறிப்பு: மேலேயுள்ள‌ ஆத‌வ‌னின் க‌ட்டுரையிலுள்ள‌ அழுத்த‌ம்( bold) என்னுடைய‌து.

ந‌ன்றி: கீற்று

Tuesday, December 9, 2008

Yôd¡e Gu\ôp Gu] ùR¬ÙUô?

"´m' úTôuß ùNXÜ ûYdLôR "Yôd¡e' Es°hP EPtT«t£Ls EPp SXàdÏ SpXÕ ùNnVdá¥VûY.

ϱlTôL NodLûW úSôVô°Ls, CRV úSôVô°Ls §]Øm "Yôd¡e' ùNpYÕ ªÏkR TXû] A°dÏm. NodLûW úSôVô°Ls §]Øm SûPl T«t£ûV úUtùLôsYRu êXm, LûQVj§p CuÑ#u EtTj§ ºWôÏm.

CR]ôp WjR NodLûW A[Ü A§L¬dLôÕ. §]Øm SûPl T«t£, EQÜd LhÓlTôhûP NodLûW úSôVô°Ls LPûUVôLd LûPl©¥dÏm ¨ûX«p, WjR NodLûW A[ûYd LhÓlTÓjR UÚkÕL°u úRûY Ïû\Ùm.

BWmT ¨ûX NodLûW úSôVô°Ls SûPl T«t£-EQÜd LhÓlTôÓ Gu\ CWiÓ RôWL Uk§WeLû[d LûPl©¥jRôúX úTôÕm. PôdPo, UÚkÕdÏ úRûY CÚdLôÕ. úUtùNôu]ûY GpXôm U] Eߧ Es[YoLÞdLô] ®`VeLs.

B]ôp, úUmúTôdLôL RôeL[ôLúY £X ®`VeLû[ U§l©hÓd ùLôiÓ ®YôRm ùNnúYôo £Xo EiÓ.

ARôYÕ, SôuRôu ÅhÓdÏs §]Øm SPd¡ú\ú], ©\Ï GRtÏ "Yôd¡e' G]j R²VôL LôûXÙm UôûXÙm ùNpX úYiÓm G]d úLhTôoLs.

Sh× Ã§VôL CkR YôRjûRd úLhÓ®hÓ ÑmUô CÚkÕ ®PXôm. B]ôp, CjRûLV YôRjûR ûYlúTôÚdÏ EiûUVô] A±®VpéoYUô] LÚjÕ úYiÓUô? Åh¥p Tôj§Wm úRnlTÕ, NûUVp Aû\ - Ï°Vp Aû\ - L¯lTû\ ùNpYÕ,

Uô¥dÏ SPkÕ ùNuß Õ¦ LôVl úTôÓYÕ, LôûXúVô ApXÕ UôûXúVô LônL±Ls YôeL UôodùLh ùNuß YÚYÕ, úLô«ÛdÏ SPkÕ ùNuß YÚYÕ-- -- CYtû\ùVpXôm "Yôd¡e' G] EPp Htßd ùLôsYÕ CpûX.

Hù]²p CkR úYûXLû[f ùNnÙm úTôùRpXôm, "Sôû[dÏ ªu LhPQ ©p LhP úYiÓúU, ÏZkûRdÏ Lp®d LhPQm ùNÛjR úYiÓúU,

AÛYXLm ùNu\ÜPu SiTÚdÏ U\dLôUp ùRôûXúT£ ùNnÕ Ï±l©hP úYûXûV Ø¥dL úYiÓúU....' úTôu\ LYûXLs KÓm. CqYôß U]m AûU§VôL CpXôUp SPlTÕ GpXôm "Yôd¡e' BLôÕ.

LôûX«úXô ApXÕ UôûX«úXô AûU§Vô] CPj§p GÕ Ï±jÕm £k§dLôUp, ûLûV Å£ Ïû\kRThNm 45 ¨ª`m "Yôd¡e' ùNpYûRúV EiûUVô] "Yôd¡e' Gu¡\Õ UÚjÕYm.

CqYôß ùNnYRu êXm WjR KhPm ºWôÏm. CRVm Su± ùNôpÛm. ûL-Lôp Es°hP EPp Eßl×LÞdÏm ºWô] T«t£ ¡ûPjÕ, RûNLs YÛl ùTßm. úVôLô, §Vô]m B¡VûYÙm U]jÕdÏ AûU§ A°dÏm.

NjRô] EQÜ, NodLûW - CRV úSôVô°VôL CÚkRôp EQ®u Et\ úRôZ]ôL ®[eÏYRôp, "Yôd¡e'-dÏ UÚjÕY çVôL CjRûLV Ød¡VjÕYm A°dLlTÓ¡\Õ.

NodLûW úSôVô°Lû[l ùTôÚjRYûW CuÑ#u F£ UÚk§u úRûYûVd Ïû\dÏm A[ÜdÏ Bt\p TûPjRÕ "Yôd¡e'. CRV úSôVô°Lû[l ùTôÚjRYûW EPp GûPûVf ºWôdÏm Bt\p TûPjRÕ "Yôd¡e'.

A§L úYLØm Cu± ªLÜm ùUÕYôL CpXôUp ®VoûY HtTÓm ¨ûX«p ºWôL SPlTúR "Yôd¡e' G] YûWVßdLlThÓs[Õ.

மரண வியாபாரிகள்




சென்ற வாரம் எனது மூளை ஸ்தம்பித்திருந்தது. ஒரு வரியைக்கூட கோர்க்கமுடியாமல் செயலிழந்து போயிற்று. அத்துடன் எழுதி என்ன சாதித்தோம் என்ற துயரமும் சோர்வும் மனத்தை ஆக்கிரமித்து வெறுப்படைய வைத்தது. மூளை செயலிழந்ததற்கு மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் உறைய வைக்கும் கொடூரமான தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சி மட்டும் காரணம் இல்லை என்று ஒரு வாரம் கழித்துப் புரிகிறது. மிகப் பெரிய அவமான உணர்வும் என்னை அதிர்ச்சி கொள்ள வைத்திருந்தது இப்போது தெளிவாகப் புரிகிறது.

இந்தியக் காட்சி ஊடகங்களின் மீது, முக்கியமாக மும்பையிலிருந்தும் தில்லியிலிருந்தும் இயங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி சானல்கள் மீதும், மைக்கை நீட்டியதும் பொன்மொழிகளை உதிர்க்கத் தயாராக இருக்கும், அல்லது சந்தர்ப்பத்தின் தீவிரத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கும் நமது அசட்டு அரசியல்வாதிகள் மீதும் ஏற்பட்ட எனது கோபம் கட்டுக்கடங்காமல் போனதே என்னை நிலை குலைய வைத்ததாகத் தோன்றுகிறது. சாமான்ய மும்பைக்காரரின் வெடித்துச் சிதறிய கேள்விகளை விடுங்கள் தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் தயார் நிலையில் நிர்வாகம் ஏன் இல்லை? அச்சுறுத்தல் வரலாம் என்கிற எச்சரிக்கைகளை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

பல முறை பயங்கரவாதத் தாக்குதல்களை, கடந்த மிகச் சில வருஷங்களாக அனுபவித்து வந்தும், இதை சும்மா விடமாட்டோம், தக்கபடி எதிர்கொள்வோம் என்று வீறாப்புப் பேசுவதைத்தவிர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போலீஸுக்குத் தேவைப்படும் கனரக ஆயுதங்கள் வழங்கப் படாதது ஏன்? ராணுவ கமாண்டோக்கள் வந்து சேர, தாமதமானது ஏன்? என்ற இந்தக் கேள்விகள் நியாயமானவை . பாதிக்கப்பட்டவரின் ஆவேசச் சொற்களில் ஏமாற்றப்பட்டதான உணர்வு வெளிப்பட்டதில் நிறைய அர்த்தம் இருந்தது. கேட்கும்போதெல்லாம் நம்மையும் குற்றவாளிகளாக்கிற்று.

ஆனால் மக்களது அதிர்ச்சியும் பீதியும் சோகமும் , 200க்கு மேற்பட்ட விவஸ்தையற்ற வெறியாட்டக்காரர்களின் கையில் பலியான உயிர்களும் வெறியர்களைப்பிடிக்க உயிரைப் பணயம் வைத்து போதிய நவீன தற்காப்புக் கவசமற்ற நமது கமாண்டோக்களின் 48 மணிநேரப் போராட்டமும் நமது தொலைக்காட்சி சேனல்களால் வியாபாரமாக்கப்பட்டது. மகாக் கேவலமாக TRP ரேட்டிங் போட்டியில் ஒவ்வொன்றும் இறங்கிற்று. விஷயத்தில் சரக்கு இருப்பதைக் கண்டு சேனல்களின் மூத்த நிருபர்கள் தில்லியிலிருந்து மும்பை பறந்து சென்றார்கள்.

சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் 56 பேரை - சாமான்ய மனிதர்களை- இரக்கமில்லாமல் கொன்றுவிட்டுப் போனதை எடுத்துச் சொல்ல எந்த நிருபருக்கும் நேரமோ அக்கறையோ இருக்கவில்லை. பணக்காரர்களும் வி.ஐ.பிக்களும் மட்டுமே செல்லும் , பயங்கரவாதத் தாக்குதலுக்கு உட்பட்ட தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் ஓபராய் ட்ரைடண்ட் ஆகிய இடங்களில் மட்டுமே டேரா போட்டார்கள். இஸ்ரேலிய யூதர்கள் இருந்த நாரிமன் ஹவுஸும் இரண்டாம் பட்சமாயிற்று. எல்லா நிருபர்களுமே தாங்கள் சொல்வதும் காண்பிப்பதும் பிரத்யேகக் காட்சி என்றார்கள். விநாடிக்கு விநாடி Breaking news என்று நிரூபிக்க முடியாத செய்தியை 'உடைத்தார்கள்.'

பார்ப்பவர்களின் காது செவிடு என்று எல்லாரும் நினைத்து கத்தோ கத்து என்று கத்தினார்கள். உணர்ச்சி வசப்பட்டார்கள். கண்ணில் பட்ட மும்பைக்காரரை எல்லாம் இழுத்துப் பிடித்து அவர்களது மன நிலையை அறியத் துடித்தார்கள். பிணங்கள் கிடக்க அவற்றைக்கடந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கலவரத்துடன் ஹோட்டலுக்கு வெளியில் வந்து சேரும் வெளிநாட்டு டூரிஸ்டுகளின் முகத்திற்கு முன் மைக்கை நீட்டி 'how do you feel?' என்றபோது நான் அவமானத்தில் குன்றிப் போனேன். நிருபர்களின் கேள்விகளுக்கு ஒத்துழைத்தவர்கள் வேடிக்கை பார்க்கவந்த அல்லது வீட்டில் அமர்ந்து என்னைப் போல் டிவியில் பார்த்த மக்கள். 'அதிர்ச்சியாக இருக்கிறது. கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.' என்றார்கள்.

பிறகு நம்மைப் பார்த்து நிருபர்கள் தவறாமல் சொன்னார்கள். மும்பைக்காரர்கள் கோபமாக இருக்கிறார்கள். யார்மீது? அரசியல்வாதிகள் மீது. நிர்வாகத்தின் மீது. நானும் கவனித்து வந்தேன். ஒருத்தர்கூட, மிகக் கோபத்தில் இருந்த தெருவில் நடந்த சாமான்ய மனிதர்கூட இது பாகிஸ்தான் செய்த சதி என்றோ, முஸ்லிம் தீவிரவாதிகளின் வேலை என்றோ சொல்லவில்லை. தாக்குதலை எதிர்கொள்ளத் தவறிய நிர்வாகத்தின் மீது தான் கோபம். ரயில் நிலையத்திலும் தெருவிலும் குண்டுபட்டு இறந்தவர்களில் அநேகம் பேர் முஸ்லிம்கள் என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.


எல்லா சேனல்களுக்கும் மகத்தான தீனிகிடைத்துவிட்டது. அதற்கு உப்பும் காரமும் சேர்ப்பதில் முனைந்தன. விவாதத்திற்கு அரசியல்வாதிகளைக் கூப்பிட்டன. பிரபலங்களை அழைத்தன. பாகிஸ்தான் பிரபலங்கள், மாஜி ராணுவத்தினர்,
பத்திரிகையாளர்கள் சாட்டிலைட் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டார்கள். விவாதம் இந்திய அரசியல் செயலின்மையைச் சாடியதோடு, பாகிஸ்தானை நேரடியாகக் குற்றம் சாட்டிற்று. பாகிஸ்தான் அரசியல் அதிகாரபூர்வ அங்கம் வகிக்காத மறுபக்கம் கலந்துகொள்ள வந்தவர்கள் அரசுசார்பில் பதில் சொல்லியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்கள் காதுபட விவாதம் என்ற பெயரில் நடக்கின்றன- தரக்குறைவான சாடல்கள்..

மும்பை மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்; ஆவேசத்தில் இருக்கிறார்கள் என்ற கூக்குரல்கள்.. அரசியல் தலைவர்களை மிகக் கேவலமான கோப வார்த்தைகளில், கச்சிதமான ஆங்கிலத்தில் உதிர்க்கும் மும்பை பிரபலங்கள். நீங்கள் யார் எங்களை விமர்சிக்க என்று தங்கள் கோபத்தை எதிரொலிக்கும் கூப்பிட்டவுடன் டி வி காமிராவுக்கு எதிரில் வந்து நிற்கும் இந்திய அரசியல் தலைவர்கள்...விவாதத்தின் முடிவில் எல்லை தாண்டிவந்த பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தானே பொறுப்பு என்கிற ரீதியில் பேச்சுகள். மறுபக்கம் இருந்த பாகிஸ்தானியர்களை இந்த விவாதம் எரிச்சல் மூட்டியதில் வியப்பில்லை.

இந்தியாவுக்கு சாதகமாகப் பேசும் பாக் பத்திரிகையாளர்களும் கோபப் பட்டார்கள் . கடைசித் தீவிரவாதி தாஜ் ஹோட்டலில் பிடிபடுவதற்குள் சேனல்கள் இரு நாட்டுக்கிடையே போர் மூட்டிவிடும் என்று தோன்றிற்று.
இது ஜனநாயகம் என்கிற தெம்பில் நடக்கும் கேவலமான அத்துமீறல்கள். வேறு எந்த நாட்டிலாவது இத்தகைய அராஜகம் நடக்குமா? செய்தியை அளிப்பது மட்டுமே நிருபர்களின் வேலை. விவாதங்களில் ஓரளவு காரண காரியங்களை அலசலாமே தவிர, திட்டவட்டமாகக் குற்றம் சாட்டுவதும் , மிக அபாயமான காலகட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டுவதும் எந்தவிதத்தில் நியாயம்? பாதுகாப்பு அமைச்சரை அழைத்து பாகிஸ்தான் நமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் இனி இந்தியா போர் தொடுக்குமா என்கிற கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவேண்டிய அவசியமென்ன?

முதலாவது பேட்டிக்கு ஒப்புக்கொள்வானேன்? கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுசில் இறங்குவதை எல்லாம் விலாவாரியாக சேனல்கள் காண்பிக்கக் கூடாது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தடை விதித்திருக்கவேண்டாமா? சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அசைவையும் நடவடிக்கைகளையும் காட்டியது எதிரிகளும் பார்க்க நேர்ந்ததால் தங்களது செயல்பாடுகளுக்கு இடையூறாகிப் போயிற்று என்று கமாண்டோ அதிகாரிகள் பின்னால் சொன்னார்கள். ஊடகத்துறைக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் பொறுப்பானது. காட்சி ஊடகத்தின் தாக்கம் மிக வலுவானது. பொறுப்பை மறந்தால் அராஜகம் மட்டுமல்ல ,தேசத் துரோகம்.
பயங்கரவாதம் என்பது உலகம் இன்று எதிர்கொள்ளும் பொதுவான ஆபத்து. அதற்கு முகமில்லை; தேசிய அடையாளமும் இல்லை. அது சில அரசியல் தலைவர்களால் அவர்களின் அராஜகச் செயல்களால் கிளம்பிவிட்ட பூதங்கள். பாகிஸ்தானின் ISI இந்தியாவுக்கு எதிராகப் பயிற்சி முகாம்கள் நடத்திய தகவல்கள் உண்டுதான். ஆனால் அவற்றை விவாதிக்கும் சமயம் இதுவல்ல.

சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாரியன் ஹோட்டல் தாக்கப்பட்டது. இன்று நமது தாஜ் தாக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தால் இரு நாடுகளும் காயப்படுகின்றன. இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ஆன போரில்லை. பயங்கரவாதத்துடனான போர். பாகிஸ்தான் அதிபரின் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்தால் அவர் மிகுந்த உள்நாட்டு நிர்ப்பந்தத்தில் இருப்பது காரணம். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்டத்தில் ராஜதந்திர ரீதியில் பேசி பயங்கரவாதக் குழுக்களைக் கூட்டு முயற்சியில் அகற்ற முயற்சி செய்யவேண்டுமே தவிர பொறுப்பற்ற காட்சி ஊடகங்கள் அது தங்கள் வேலை என்கிற நினைப்பில் திமிர் பிடித்த விவாதங்களில் ஈடுபடக்கூடாது.

இன்றைய காட்சி ஊடகங்களின் போக்கு அநாகரிகமானது. பண்பற்றது. அவர்களது கேள்விகளுக்குத் தீனி போட அரசியல் தலைவர்கள் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களது அசட்டையான நிர்வாகத்தின் மேலிருக்கும் மக்களின் கோபம் இதனால் திசை திருப்பப்படும். ஒன்று மட்டும் நிச்சயம்.

இந்த மும்பை தாக்குதலில் எல்லா அரசியல்வாதிகளின் , பாஜகவோ, கம்யூனிஸ்டோ, காங்ரஸோ - முகத்திரை விலகிவிட்டது. கடவுளே , எத்தனை அசிங்கமான முகங்கள்! விழிப்புடன் பிரஜைகள் இருக்கவேண்டிய காலகட்டம் இது. அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பார்கள். ஜனநாயகத்தில் அது நேர் எதிர் . மக்கள் எவ்வழி அவ்வழி நிர்வாகம். அதை நாம் உணராதவரை நமக்குப் பேச வக்கில்லை.

நன்றி: வாஸந்தி, uyirosai@uyirmmai.com

"எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்" செல்லமுத்து குப்புசாமி

அந்தச் செய்தியைக் கண்டவுடன் ஜெயலலிதா தான் என் நினைவுக்கு வந்து போனார். என்ன இருந்தாலும் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டு முதலமைச்சராகப் பணியாற்றுவதென்றால் சும்மாவா! அதற்கெல்லாம் ஒரு BIG மனசு வேண்டும். அந்த BIG மனசு இப்போது BIG 3 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வந்துள்ளது; சரியாகச் சொன்னால் வந்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் ஆகிய மூன்று முக்கியமான வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே BIG 3 என அறியப்படுகின்றன. மேட்டுக்குடி சமூகத்தின் சொத்து எனக் கருதப்பட்ட மோட்டார் காரை வெகு மக்களும் வாங்கிப் பயனுறுமாறு வடிவமைத்து, அதற்கேற்ப தயாரிப்பு முறைகளையும் தொழிற்சாலையையும் தகவமைத்து மாடல் - T கார் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர் ஹென்றி ஃபோர்டு. அவரது 'ஃபோர்ட் மோட்டார்ஸ்' நிறுவனம் உலகின் முதன்மையான கார் கம்பெனியாக விளங்கியது. அதன் பிறகு தொடங்கிய ஜெனரல் மோட்டார்ஸ் ஃபோர்டை முந்திக்கொண்டு சென்றது. ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்த கிரைஸ்லர் தனியாகப் பிரிந்து சென்று ஆரம்பித்தது மூன்றாவது கம்பெனி. இவை மூன்றுமே BIG 3 என அமெரிக்க ஆட்டொமொபைல் அகராதியில் குறிக்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் நிறுவனங்கள் படிப்படியாகத் தலையெடுக்கும் வரை இந்த மும்மூர்த்திகளையும் அடித்துக்கொள்ள ஆளில்லை. பல பத்தாண்டுகளாக உலகின் மிகப் பெரிய கார் கம்பெனி என்று ஜெனரல் மோட்டார் கம்பெனி தக்க வைத்திருந்த இடத்தை இப்போது டொயாட்டா கம்பெனி பிடித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு பிரபலமான ஜப்பானிய கார் கம்பெனியின் அமெரிக்கத் தொழிற்சாலைக்காகப் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அப்போது ஃபோர்டு கம்பெனி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. ஜப்பானிய நிறுவனங்கள் இயங்குவதற்கும், அமெரிக்காவின் BIG 3 நிறுவனங்கள் இயங்குவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை உணரும் வாய்ப்பும் கிட்டியது.

அமெரிக்க நிறுவனங்கள் டெட்ராய்ட் நகர் உள்ள மிசிகன் மாகாணத்தில் அமைந்துள்ளன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மிக வலுவான United Auto Workers தொழிலாளர் யூனியனில் அங்கம் வகிக்கிறார்கள். அந்த கம்பெனிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மாதாமாதம் வீடு தேடி வந்து விடும். இந்த மூன்றுக்கும் போட்டியாக, பெரும் சவாலாக இருப்பவை டொயாட்டா மற்றும் ஹோண்டா ஆகிய ஜப்பான் கம்பெனிகள். ஆரம்பத்தில் ஜப்பானில் இவை உருவாக்கிய கார்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு BIG 3 பாய்ஸ் கலங்கித்தான் போனார்கள்.

அவை மூன்றும் ஆட்சியாளர்களிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இறக்குமதிக்கு முட்டுக்கட்டையும், உச்சவரம்பும் நிர்ணயிக்க முயன்றன. விளைவு? ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தொழிற்சாலை திறந்தன. மலிவான விலையில், நீடித்து உழைக்கும் எஞ்சினோடு, குறைந்தபட்ச பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறதும் நிறைய மைலேஜ் கிடைக்கிற மாதிரியானதுமான கார்களை அவை உருவாக்கின. அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நேரெதிர். தொடக்கத்தில் 'மக்கள் கார்' என்பதை மனதில் வைத்து வளர்ந்த ஃபோர்டு உள்ளிட்ட அமெரிக்க ஆட்டொமொபைல் நிறுவனங்கள் ஆடம்பரக் கார்களையே பெருமளவில் தயாரித்துக் கொண்டிருந்தன.SUV எனப்படும் படோபட வாகனங்களுக்கும், எருமை மாதிரி பெரிய கார்களையும் அமெரிக்கக் கம்பெனிகள் உருவாக்கின. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துப் பழகிய அமெரிக்க வெகுஜனத்தைக் குறிவைத்தே அது செய்யப்பட்டது. மைலேஜ் பற்றியெல்லாம் கவலையில்லை. எரிபொருள் குறைவாக இழுக்கும் கார்களைவிட இவை இலாபகரமானவை. SUV ரக வாகனங்களில் 15 முதல் 20 விழுக்காடு வரை இலாபம் சம்பாதித்த நிறுவனங்கள் சாதாரணக் கார்களில் 3 விழுக்காடு மட்டுமே இலாபம் ஈட்டின. மிசிகன் மாகாணத்திலேயே குவிந்து கிடந்த BIG 3 போலன்றி டொயாட்டாவும், ஹோண்டாவும் பிற மாநிலங்களில் கார்களை உற்பத்தி செய்தன. கடந்த 15 ஆண்டுகளில் 83,000 ஆட்டொமொபைல் வேலைகள் மிசிகன் மாகாணத்தில் குறைந்துள்ளன.

பிற மாகாணங்களில் சுமார் 91,000 பணிகள் உருவாகியுள்ளன. இதற்குப் பெருங்காரணம் BIG 3 அல்லாத நிறுவனங்களே ஆகும். மேலும் ஜப்பானிய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புச் செலவு கூடுதல். கடந்த காலத்தில் பணியாற்றிய ஊழியர்களின் ஓய்வூதியம், தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள், இதர வெட்டிச் செலவுகள், உயர் அதிகாரிகளின் படோபடம் என எல்லா வகையிலும் செலவுகள். ஒரு கார் தயாரிப்பதில் ஜப்பானிய நிறுவனங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கம்பெனிகளில் கிட்டத்தட்ட 1,500 டாலர் வரை கூடுதலாகச் செலவழிகிறது. வேறு விதமாகச் சொன்னால் ஒரே மாதிரியான காரை அமெரிக்க நிறுவனங்களைவிட ஜப்பானிய கம்பெனி ஒன்று சுமார் 75,000 குறைத்து விற்க இயலும்.

யுனைட்டேட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரம் 10-20 டாலர் வரை கூடுதலாக சம்பளம். இன்னொரு புறம் புதுமையான தயாரிப்பு முறைகள் மூலம் திறம்பட இயங்குவது ஜப்பானிய நிறுவனங்களுக்கே உரித்தானச் கூடுதல் அனுகூலம். 2006 இல் வெளிவந்த ஆய்வொன்று வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் முதல் பத்து மாடல்களும் ஜப்பானிய நிறுவனங்களின் தயாரிப்புகளே என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவில் 'முப்பெரும்' கம்பெனிகளின் மார்க்கெட் ஷேர் கடந்த பத்தாண்டுகளில் 70 இல் இருந்து 53 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே நாம் தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையை நோக்க வேண்டியிருக்கிறது.

இவ்வருட ஆரம்பத்தில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 140 டாலர் வரை போனது. ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, மலிவுக் கடன் கிடைக்காமை முதலிய அச்சுறுத்தல்களால் பெட்ரோல் குடிக்கும் அமெரிக்கக் கார்களை வாங்குவதை அமெரிக்கர்கள் குறைத்துக் கொண்டனர். அதிகக் காசு கொடுத்து, அதிகமாக எரிபொருள் குடிக்கும் காரை வாங்க வேண்டுமா என்ற பகுத்தறிவுக் கேள்வி அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாததை விட இப்போது வரவேற்கத் தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. லீமன் பிரதர்ஸ் உள்ளிட்ட சில மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் திவாலானதை அடுத்து ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நலிவடைந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக 700 பில்லியன் டாலர் மீட்புத் திட்டத்தை அறிவித்தது. அந்தப் பணம் பெரும்பாலும் நிதி நிறுவனங்களை மீட்பதற்கே பயன்படும் என்று கருதப்படும் நிலையில் அமெரிக்காவின் 'முப்பெரும்' வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் உதவி கேட்டுக் கையேந்தின.

உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் எல்லா நாடுகளிலும் தானியங்கி வாகனத் தொழிலில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாத கார் மற்றும் மோட்டர் பைக் விற்பனை, அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் போன வருடத்து எண்ணிக்கையில் இருந்து வெகுவாகக் குறைந்துள்ளது. மாருதி 27.4 சதவீத வீழ்ச்சி, டாடா மோட்டார்ஸ் 12.2 சதவீத வீழ்ச்சி, மகேந்திரா & மகேந்திரா 41.55 சதவீத வீழ்ச்சி, பஜாஜ் ஆட்டொ 37 சதவீத வீழ்ச்சி, டி.வி.எஸ் 12.7 சதவீத வீழ்ச்சி (ஹீரோ ஹோண்டாவிற்கு மட்டும் கூடவும் இல்லை குறையவும் இல்லை). உலகத்தில் அனைத்து தேசங்களிலும் இதே நிலைதான். அமெரிக்காவில் கார் விற்பனை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 17.7 சதவீதம் சரியுமெனக் கணிக்கப்படுகிறது. இது 1980 க்குப் பிறகு அந்தப் பொருளாதார வல்லரசு சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும். 1980 இல் தானியங்கி வாகனத் துறை 19.1 சதவீதம் வீழ்ந்தது.

நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக சரிவையே அது சந்தித்தது. மறுபடியும் அப்படிப்பட்ட பரிதாபக் காட்சிகள் அரங்கேறும் என்பதே அநேக நிபுணர்களின் அவதானம். ஆயிரம் பேருக்கு எத்தனை கார் விற்றது என்று கணக்குப் போட்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறைவாம். கடந்த காலத்தில் 1961 இல் ஆயிரம் மக்களில் 37.6 பேர் வாகனம் வாங்கினார்கள். 2008 நிலவரம் அதை விடக் கீழே இருக்குமாம். மறுபடியும் 2007 விற்பனை அளவை எட்ட அமெரிக்காவிற்குக் குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டுகள் பிடிக்குமாம். ஐரோப்பா, ஜப்பான், இந்தியா என மற்ற நாடுகளில் பார்த்தாலும் தெம்பு உண்டாகவில்லை. 2007 இல் 7.1 கோடியாக விளங்கிய உலக ஆட்டோமொபைல் விற்பனை 2009 இல் 6.22 கோடியாகக் குறையுமென்று எதிர்பார்க்கிறார்கள். முப்பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் "திவாலான ஃபைனான்ஸ் கம்பெனிக்கெல்லாம் உதவி செய்றீங்கோ! எங்களுக்கு ஏதாவது பாத்துப் பண்ணுங்க.

நாங்க போண்டியானா மில்லியன் கணக்கில வேலை போகும். அதனால ஒரு 25 பில்லியன் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்ற தொனியில் பிரைவேட் ஜெட் விமானத்தை எடுத்துக்கொண்டு வாஷிங்டன் சென்று பேசினார்கள். அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் டிசம்பர் முடிவில் திவாலாகும் அபாயம் தனக்கிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. அதன் அக்டோபர் விற்பனை 45 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஃபோர்டும், கிரைஸ்லரும் அதை விட மெச்சும்படியாக இல்லை. மீறிப் போனால் சில மாதங்கள் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கும். அவ்வளவே! ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் ஷேர் வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது, அதாவது 1946 இல் நிலவிய விலைக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. எனினும் இந்த முறை கொஞ்சம் பிகு பண்ணிய அமெரிக்க ஆளும் வர்க்கம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை.

பல காலமாகவே எரிபொருள் சிக்கனப்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதை இந்த மூன்று நிறுவனங்களும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினர். ஜப்பானில் ஒரு கேலன் பெட்ரோலுக்கு 45 மைல் (லிட்டருக்கு 19.125 கிமீ) அளிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அதே போல சீனாவில் கேலனுக்கு 35 மைல் (லிட்டருக்கு 14.875 கிமீ) என்ற நியதியும், ஐரோப்பாவில் 2012 க்குள் கேலனுக்கு 52 மைல் (லிட்டருக்கு 22.1 கிமீ) என்ற நியதியும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நிர்ப்பந்திக்கப்படுவது கேலனுக்கு 25 மைல் (லிட்டருக்கு 10.625 கிமீ) மட்டுமே. எனவே 2020 க்குள் கேலனுக்கு 35 மைல் கொடுக்குமளவு தொழில்நுட்ப மேம்பாடு செய்வதற்காக ஏற்கனவே அவற்றுக்கு 25 பில்லியன் உதவியளிக்க அமெரிக்க நிர்வாகம் சம்மதித்துள்ளது.

எனவே இதற்கு மேல் எதற்காகக் கூடுதல் நிதியுதவி என்ற கேள்வியும், நியாயப்படுத்துமாறு வேண்டுதலும் முன்வைக்கப்பட்டன. தவிர எப்படியெல்லாம் கம்பெனியை இலாபப் பாதைக்கு மீட்கப் போகிறார்கள் என்ற வரைவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அதே நேரம் இந்த மூன்று நிறுவனங்களையும் அப்படியே கைவிட்டு அவற்றை இழுத்து மூடினால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தப் போகும் கடுமையான பாதிப்புகளைப் பற்றி அமெரிக்க அரசு அறியாமல் இல்லை. 12.2 இலட்சம் பேருக்கு நேரடியாக வேலை பறி போகும். அவற்றை நம்பியுள்ள உதிரி பாக நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்களில் 17 இலட்சம் பேரும் வீட்டுக்குச் செல்ல நேரிடும். ஒரு வருடத்தில் 151 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மூன்று வருடத்தில் 398 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள்.

இருந்தாலும் குருட்டாம்போக்காக இந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதில் அமெரிக்க செனட் சபை இருதரப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. அதனால் தான் மேலே குறிப்பிட்டது போல, எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கார்களை விற்று கம்பெனியை மீட்புப் பாதைக்குத் திருப்பப் போகிறீர்கள் என்ற கேள்விக் கணையைத் தூக்கி வீசி நவம்பர் 19 ஆம் தேதி திருப்பி அனுப்பிவிட்டது செனட். அந்த மூன்று கம்பெனிகளின் உயரதிகாரிகள் மிசிகனில் இருந்து இருபதாயிரம் டாலர் கம்பெனிக் காசு செலவழித்து கார்ப்பரேட் சொகுசு பிரைவேட் ஜெட்டில் வாஷிங்டனுக்கு வந்திருந்தனர். மற்றவர்களைப் போல விமானம் பிடித்திருந்தால் இரு வழிப் பயணம் வெறும் 500 டாலரில் முடிந்திருக்கும் என்று பத்திரிகைகள் கரித்துக் கொட்டின. ஏற்கனவே நிதி நிறுவனங்களை மீட்பதற்கு ஒதுக்கிய 700 பில்லியன் டாலரில் பெரும்பகுதி உயரதிகாரிகளுக்குப் போவதாக ஒரு குற்றச்சாட்டு உலவுகிறது.

அதே போல முப்பெரும் கம்பெனிகளின் மேலதிகாரிகளும் லவட்டிச் செல்லக் கூடாது என்பது பொதுமக்களின் நிலைப்பாடு. எனவே வேறு வழியில்லை. ஜெயலலிதா வழியில் ஜெனரல் மோட்டார், ஃபோர்டு, கிரைஸ்லர் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அடியெடுத்து வைக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. டிசம்பர் 2 ஆம் தேதி அவர்கள் மறுபடியும் வாஷிங்டன் வந்தனர். கூடவே, "எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்" என்ற அறிவிப்பு. அம்மாவே அசந்து போயிருப்பார். ஏனென்றால் சென்ற ஆண்டு ஃபோர்டு தலைவரின் ஊதியம் 21 மில்லியன், ஜெனரல் மோட்டார் தலைவருடையது 14.4 மில்லியன். கூடவே நிறுவனம் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்ப்பரேட் ஜெட் விமானங்களையும் விற்பதாக உறுதியளித்துள்ளனர். தனது 47 தொழிற்சாலைகளை 2012 க்குள் 38 ஆகக் குறைப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் வரைவுத் திட்டம் கூறுகிறது. அதில் 31,500 பேருக்கு வேலை பறி போகும்.

2000 சமயத்தில் 1,91,465 பேர் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் தற்போது 96,537 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். வகுத்தபடி இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினால் 2012 இல் டொயாட்டோ நிறுவனத்தை நேருக்கு நேர் சமாளிக்கும் அளவுக்கு முன்னேறிவிடுவோம் என்றும் அமெரிக்க பிரதிநிதி சபை காங்கிரஸிடம் அது உத்திரவாதம் கொடுத்துள்ளது. மூன்று கம்பெனிகளும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 31 பில்லியன் டாலர் நிதியுதவி கேட்டுக் கையேந்தியுள்ளன. இதில் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும் 18 பில்லியன் கோரியுள்ளது.

அமெரிக்க நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த வேண்டுகோளை மதித்து இணங்கும் என்ற கேள்விக்கு இந்தக் கட்டுரை பிரசுரமாகும் போது ஒரு வேளை விடை கிட்டியிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் திண்ணம். தொகை வேண்டுமானால் கூடக் குறைய இருக்கலாமே தவிர, வேண்டுகோளை அப்படியே நிராகரிக்க மாட்டார்கள் என்பதே அனைவரது கணிப்பும் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

நன்றி: uyirosai@uyirmmai.com , kuppusamy18@gmail.com

Monday, December 8, 2008

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.

சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர்.

பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.

அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.

இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன?

பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா?

அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?

அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார்.

இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது?

இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.

வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள், கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?

இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?

உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை, நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.

ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!

உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.

இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல.

உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

நன்றி: http://vinavu.wordpress.com/2008/11/14/tmstar5/