Thursday, April 15, 2010

நளினி விடுதலை -‍ என்ன செய்ய வேண்டும் நாம்?

தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். நளினி விடுதலை அல்லது விடுதலை மறுப்பில் அடங்கியிருக்கிற சட்டச்சிக்கலும் அரசியல் சிக்கலும் என்பது பற்றி கீற்று இணைய தளம் ஒழுங்கு செய்திருக்கிற கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்ட வாய்ப்பிற்காக‌‌ நன்றி!

சட்டச்சிக்கல் பற்றி முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனென்றால் வாழ்நாள் சிறைத்தண்டனை வழக்குகளில் விடுதலை என்பது பற்றி எத்தனையோ விவாதங்கள் நடைபெற்றும் ஒரு குழப்பம் நீடித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நளினியை விடுதலை செய்ய மறுக்கத் தமிழக அரசு குறிப்பிட்ட அந்த காரணங்கள், அப்போது அறிவுரைக்கழகம் காட்டிய காரணங்கள் இவற்றில் எதையுமே உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் இந்திய அரசின் அரசமைப்புச்சட்டத்தின் 161ஆவது உறுப்பின்படியோ குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433ஆவது பிரிவின்படியோ மீண்டும் இவ்வழக்கைப் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. பலருக்கும் ஓர் ஐயப்பாடு எழலாம். விடுதலையை மறுப்பதற்கு அரசு கூறிய காரணங்கள் எவற்றையுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை; அறிவுரைக் கழகம் கூறிய காரணங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் நளினியை விடுதலை செய்ய வேண்டியது தானே! அப்படி விடுதலை செய்யாமல் மீண்டும் ஒரு முறை நீங்கள் இந்தச் சட்டப்பிரிவின்படி விடுதலை செய்யலாம் என்னும் கருத்தை நீதிமன்றம் ஏன் முன்வைக்கிறது?

thiyaguஅந்நேரத்தில் நான் ஓர் இதழுக்கு அளித்த நேர்காணலில், 'குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433ஆவது பிரிவின்படியோ 432 முதல் 435 வரை உள்ள பிரிவுகளின் படியோ முன்விடுதலை பரிசீலனை என்றால் தான் அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும். அறிவுரைக்கழகம் அமைப்பது, பிறகு அறிவுரைக்கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் நாள், நேரம் கிடைத்து ஒன்றுகூடுவது, அவற்றுக்கான ஆவணங்களைச் சுற்றுக்கு விடுவது எல்லாம் நீண்ட காலத்தை இழுத்து அடிக்கக்கூடிய வேலை. இது உயர்நீதிமன்றத்திற்கே நன்கு தெரிந்ததால்தான் அரசமைப்புச்சட்டத்தின் 161ஆவது உறுப்பைப் பயன்படுத்தியோ குற்ற நடைமுறைச்சட்டத்தின்படியோ என்று இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்கள். எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரத்தை இவ்வரசு ஏற்றுக்கொள்வதாக இருந்தால் 161ஆவது உறுப்பின்படி உடனடியாக விடுதலை செய்யலாம். அதற்கு எந்த நடைமுறை சம்பிரதாயங்களும் தேவையில்லை; இதைத்தான் அரசு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டேன்.

ஆனால் வாழ்நாள்(ஆயுள்) கைதிகள் தொடர்பாக இந்த ஒரு வழக்கில் மட்டுமில்லை. இதற்கு முன் வந்திருக்கின்ற எத்தனையோ வழக்குகளில் எந்த வழக்கிலும் நேரடியாக உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ ஒரு வாழ்நாள் கைதிக்கு நேரடியாக விடுதலை வழங்கியதில்லை.

தமிழ்நாட்டில் இருந்து போன சில வழக்குகளைக் குறிப்பிடுவதாக இருந்தால் புலவர் கலியபெருமாள், அனந்தநாயகி, வள்ளுவன், நம்பியார் ஆகியோரை விடுதலை செய்யக் கோரித் தில்லியைச் சேர்ந்த‌ கன்சியாம் பிரதேசி என்னும் ('Statesman' இதழின்) இதழாளர் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அப்போது உச்ச நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்வது நியாயம் எனக் கருதியது. நீதிபதி கிருஷ்னய்யர் அந்நீதிபதிகளுள் ஒருவராக இருந்தார். ஆனால் அப்போதும் அவர்கள் அரசிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்; ‘ஒரு முடிவு எடுங்கள்! முடிவு எடுங்கள்; இவர்களிடம் ஏதாவது ஓர் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டாவது விடுதலை செய்யுங்கள்’ என்று வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

அனந்தநாயகி உயிருக்கு ஆபத்தான் நிலையில் இருந்ததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினார்கள். அவரை அரசுதான் பிறகு விடுதலை செய்தது. மற்றவர்களைப் பொறுத்தவரை ‘கருதிப் பார்த்து, பரிசீலித்து’ என்று பலவிதமாகச் சொல்லிப்பார்த்தார்கள். அரசு ஏதும் நகர்ந்து கொடுப்பதாக இல்லை. பிறகு அவர்களைக் காலவரம்பற்ற காப்பு விடுப்பில்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்றைக்கும் அவ்வழக்கின் நிலை அதேதான்! இன்னும் அவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்கப்படவில்லை; உச்ச நீதிமன்றம் கொடுத்த காலவரம்பற்ற காப்பு விடுப்பில்தான் அவர்கள் வெளியே இருக்கிறார்கள். புலவர் கலியபெருமாள் இறந்தே போய்விட்டார்.

1980 ஆம் ஆண்டு வந்த மாதுராம் வழக்கு, வாழ்நாள்(ஆயுள்) தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளுள் முதன்மையானது ஆகும். குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433 'A' பிரிவு செல்லுமா செல்லாதா என்பது பற்றி நடைபெற்ற வழக்கு அது! நான் அப்போது சென்னை மத்திய சிறையில் இருந்தேன். தில்லியில் இருந்து ஒரு வழக்கறிஞர் வந்திருந்தார். அவர் வாழ்நாள் கைதிகளை எல்லாம் அழைத்து 'உங்கள் எல்லோருக்கும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் விடுதலை வாங்கிக் கொடுக்கிறோம். அதற்குத் தேவையானதெல்லாம் நீங்கள் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்க வேண்டும்; நாங்கள் நீட்டுகிற இவ்விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும்; இதைத் தவிர ஐந்நூறு உரூபாப் பணம் கொடுத்தால் போதும்; உங்களுக்கு விடுதலை வந்துவிடும்' என்று அவர்கள் கூறினார்கள். அதை நம்புவதற்கே கடினமாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு சிலர் கொடுத்தார்கள்; ஆனால் இந்த வழக்கு அரங்கிற்குப் போவதற்கு முன்பே வட நாட்டில் 500, 600 வாழ்நாள் கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அதைப் பிணை விடுதலை என உச்சநீதிமன்றம் வழங்கியது. அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம் என்னவென்றால், 433 'A' என்கிற இந்தப் புதிய சட்டப்பிரிவு 1978ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டப்பிரிவின்படி ஒரு வாழ்நாள் கைதி மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய வழக்கில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டிருக்குமானால் அவர் குறைந்தது பதினான்கு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும். 1978க்குப் பின் தண்டிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும். அதற்கு முன் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது என்று நீதிமன்றம் ஒரு முடிவெடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த எல்லோருக்கும் பிணை விடுதலை வழங்கியது. வழக்கு இறுதியில் தீர்ப்பாகிற போது நீதிபதி கிருஷ்ணய்யர் ‘பிணையில் விடுவிக்கப்பட்டவர்களைத் திரும்ப அழைக்கத் தேவையில்லை; அவர்களைத் திரும்பச் சிறைக்கு அழைப்பதாக இருந்தால் அரசு அதற்கான காரணங்களை இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று ஓர் உத்தரவு போட்டார்.

இப்படி நடைமுறை வழிமுறைகளைக் கொண்டு சாமர்த்தியமாக நீதிமன்றம் சிலரை விடுவித்திருக்கிறதே தவிர நேரடியாக வாழ்நாள் கைதி எவரையும் நீதிமன்றம் விடுவித்ததில்லை. என் வழக்கில் இல்லை என்றாலும் வேறு சில வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன்; சில வழக்குகளை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இராமசாமி முன்னிலையில் இதே போன்ற ஒரு வழக்கை நடத்தினோம்; 'அரசு சொன்ன காரணங்கள் ஏற்புடையனவாக இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும்' என்று நாங்கள் கேட்டோம். நீதிபதி 'நான் அவரைக் காலவரம்பற்ற பிணையில் விடுவிக்கிறேன். அரசு பிறகு பரிசீலித்து முடிவெடுக்கட்டும்; அறிவுரைக் கழகம் எப்போது வேண்டுமானாலும் கூடட்டும்; எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கட்டும்; அதற்காக அவரைச் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை' என்று விடுதலை செய்தார். இப்படித்தான் வழக்குகள் எல்லாம் நடக்கின்றன. ஏன் இதற்கான காரணங்கள் என்ன?

மாருராம் வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர், 'பதினான்கு ஆண்டுகள் எவரையும் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை. எங்களுடைய பார்வையில் சீர்திருத்துவதற்கு எட்டாண்டுக் கருவாசம் போதும். (' Eight years of Gestation for reformation is enough') கருவறையில் ஒரு குழந்தை பத்து மாதத்திற்கு மேல் இருப்பது அக்குழந்தைக்கும் ஆபத்து; தாய்க்கும் ஆபத்து. ஒரு மனிதனை எட்டாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைப்பது அவனுக்கும் நல்லதன்று; அவனை அடைத்து வைத்திருக்கிற சமூகத்திற்கும் நல்லதன்று என்பதால் தான் கருவறை வாசத்தைச் சிறையறை வாசத்துடன் ஒப்பிட்டு எட்டாண்டுதான் அதிக அளவு; அதற்கு மேல் தேவையில்லை. ஆனால் நாங்கள் கருத்துச் சொல்லமுடியுமே தவிர, புதிதாகச் சட்டத்தை உருவாக்க முடியாது ('We can only construe and not construct'). சட்டத்திற்கு விளக்கம் அளிக்க உரிமை உண்டே தவிர புதிய சட்டம் இயற்ற எங்களுக்கு உரிமை இல்லை ('We can only decode and not make a code'). எனவே எட்டாண்டுகள் போதும் என்றாலும் குறைந்தது பதினான்கு ஆண்டுகள் வைக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் இயற்றியிருக்கிற இச்சட்டம் அரசமைப்புச்சட்டத்தை மீறுவதன்று; அரசமைப்புச்சட்டத்தின் எழுபத்து இரண்டாவது உறுப்பின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிற அதிகாரத்தையும் 161ஆவது உறுப்பின்படி மாநில ஆளுநருக்கு இருக்கிற அதிகாரத்தையும் இது பறிப்பதன்று’ என்று தீர்ப்பு எழுதி அவ்வழக்கை முடித்தார்.

வாழ்நாள் கைதியை விடுதலை செய்ய முடியாது என்னும் கருத்திற்கு அடிப்படையான வழக்கு கோபால் கோட்சே தொடர்ந்த வழக்கு ஆகும். அவர் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அண்மையில் கூடச் சுப்பிரமணியசாமி 'டைம்ஸ்நவ்' விவாதத்தில் சொல்லும்போது 'காந்தி கொலையாளி கோட்சேவை மன்னிக்கவில்லை; இராசீவ் கொலையாளி நளினியை ஏன் மன்னிக்க வேண்டும்?' என்று கேட்டார். அவருக்கு ஒரு விவரம் தெரியாது. என்ன விவரம் என்றால், நளினிக்கு விதிக்கப்பட்டிருப்பது இப்போதைய நிலையில் வாழ்நாள் தண்டனை. இதே வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டது காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவிற்கு. கோபால் கோட்சே தன்னுடைய தண்டனைக்காலம் பதினான்கு ஆண்டுகளை நெருங்குகிறபோது நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். அவ்வழக்கில் அவர் ' பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும் விடுதலை செய்துவிட வேண்டும். நான் சிறைக்குள் வேலை செய்திருக்கிறேன்; நல்லொழுக்கம் காட்டியிருக்கிறேன். எனவே தண்டனைக்கழிவு('Remission') கொடுத்திருக்கிறார்கள். எனவே என்னுடைய தண்டனைக்கழிவுகளை எல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் நான் பதினான்கு ஆண்டுகள் முடித்துவிட்டேன். என்னை விடுதலை செய்யாமல் இருப்பது தவறு. எனக்கு விடுதலை பெறுகிற உரிமை உண்டு' என்று கூறி ஒரு வழக்கு போட்டார்.

அப்போது நீதிமன்றம் 'ஒரு வாழ்நாள் கைதிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை' என்றால் 'உயிரோடு இருக்கிற வரை சிறை' என்று தான் பொருள். 'Life means life', 'Life sentence' என்றாலோ 'Imprisonment for life' என்றாலோ 'Imprisonment unto death' என்றுதான் பொருள். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக் கூட ஒருவர் உயிரோடு வெளியில் வந்தால் அது தண்டனை கழித்து வருகிற விடுதலை இல்லை; முன்விடுதலைதான்!('Mature Release' இல்லை; 'Premature Release') இது கோபால் கோட்சே வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

ஆனால் அதற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் கழித்து முடித்த பிறகு உண்மையிலேயே மகாராட்டிர காங்கிரசு அரசு கோபால் கோட்சேவை விடுதலை செய்தது. இப்போது குற்றத்திற்கு வருத்தப்படுவது ('Repentance') பற்றிப் பேசுகிறார்கள். வெளியில் வந்து ஓராண்டு கழித்து அமெரிக்க டைம்ஸ் இதழுக்கு கோபால் கோட்சே நேர்காணல் அளித்தார். 'மகாத்மா காந்தியைக் கொன்றது பற்றி நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'ஏன் வருத்தப்பட வேண்டும்? அது மக்களுக்கு எல்லாம் வருத்தமளித்தது என்பது உண்மை. ஆனால் எனக்கு வருத்தமளிக்கவில்லை. அவரைக் கொலை செய்ததற்காக நான் வருந்தவில்லை; யாரிடமும் மன்னிப்புக் கோரவும் இல்லை’ என்று சொன்னார். இது கோபால் கோட்சேவின் வாக்குமூலம்.

மகாத்மா காந்தி வழக்கில் கோபால் கோட்சேவிற்குப் பதினான்கு ஆண்டுகள் கழித்து விடுதலை! 'எனக்கு வருத்தமில்லை' எனப் பிறகு அவர் நேர்காணல் அளிக்கிறார். ஆனால் இராசீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியான கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர், சதிக்குற்றத்தில் ஈடுபட்டவர் என்றெல்லாம் ஒன்றுமில்லை; இதைச் செய்தவர்களுக்குத் துணை செய்தவர், இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு ஒரு மறைதிரையாகப் பயன்படுத்தப்பட்டவர் என்பது தான் வழக்கின்படியே குற்றச்சாட்டு! அவர் வருத்தப்படவில்லை என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். பதினான்கு ஆண்டுகள் கழித்ததற்குப் பிறகும் முன்விடுதலை இல்லை! ஏன்?

சட்டத்தின் அடிப்படையில் இந்த வாழ்நாள் (ஆயுள்) சிறைத்தண்டனை என்பது பிரித்தானிய ஆட்சிக்காலத்துத் தீவாந்திர சிட்சையின் தொடர்ச்சி! மரண தண்டனைக்கு மாற்றாக இன்னொரு தண்டனை என அவர்கள் கருதியபோது தொலைவில் ஒரு தீவில் கொண்டு போய் அவர் சாகும் வரை அடைத்து வைப்பது என்ற தண்டனை முறையை உருவாக்கினார்கள். அந்தமான் தீவுச்சிறை இதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ‘பட்டாம்பூச்சி’ படித்தவர்களுக்குத் தெரியும். இவ்வளவு வளர்ச்சி அடைந்த ஐரோப்பாவில், நாகரிகம் அடைந்த பிரெஞ்சு நாட்டில் தென் அமெரிக்கத் தீவுகளில் கொண்டுபோய் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விட்டுவிடுவது, சிறைப்படுத்துவது, சாகும்வரை அவர்கள் அங்கேயே கிடந்து சாக வேண்டும்; செத்தபிறகு அவர்களைக் கடலில் சுறாமீன்களுக்குத் தீனியாக்கி விடுவது என்ற நடைமுறை இருப்பதைப் ‘பட்டாம்பூச்சி’யிலேயே நாம் படித்தோம். இது வாழ்நாள் தண்டனையின் வரலாறு. வாழ்நாள் தண்டனை என்பது இந்த வகையில் விடுதலைக்கான உரிமையைக் (‘No right to release’) கைதிக்கு வழங்கவில்லை.

நான் 1983 அல்லது 1984ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாருராம் வழக்குத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி ஒரு வழக்கைத் தொடர்ந்து நானே அந்த அவ்வழக்கில் வாதிடுகிறபோது 'சட்டப்படி விடுதலை பெறும் உரிமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் ஒருவரை விடுதலை செய்வது, இன்னொருவரை விடுதலை செய்யாமல் இருப்பது என்றால் அது அரசமைப்புச்சட்டத்தின் சமத்துவம் பற்றிய உறுப்பை மீறுகிறது. விடுதலை செய்வதற்கும் விடுதலை செய்ய மறுப்பதற்கும் அரசு நியாயமான காரணங்களைக் காட்டாதபோது அது 'Right to life and liberty' என்பதை மீறுகிறது. எனவே அரசமைப்புச் சட்ட உறுப்புகளின்படி விடுதலை செய்வதைப் பரிசீலிக்கிற போது சமத்துவம் வேண்டும்; தற்போக்கான தன்மை இருக்கக்கூடாது; காரண நியாயங்கள் இருக்க வேண்டும்’ என்ற வாதத்தை முன் வைத்தேன். 'It should not be orbitrary, unreasonable' என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதே வாதத்தை இப்போது நளினி வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அறிவுரைக் கழகம் பரிசீலித்த முறையும் அரசு முடிவெடுத்த முறையும் நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களைச் சொல்வதாக இல்லை; அறிவுக்கு ஒத்த நடைமுறையாக இல்லை. இது தற்போக்கான முடிவாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்ததால் தான் மீண்டும் ஒருமுறை அறிவுரைக்கழகத்தை முறையாக வைத்து முறையாகப் பரிசீலித்து முடிவு தாருங்கள் என்று அது கேட்டது.

இப்படி ஒரு தீர்ப்பைப் பெற்றதற்கு வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் அரசு செயல்பட்டிருக்கிறது. என்ன பெரிய அறிவுரைக் கழகம்? நாங்கள் பார்த்து வைத்த ஆள்தானே என்று அவர்கள் வழியாக இந்த வஞ்சம் தீர்க்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்; வேக வேகமாகச் செய்கிறபோது அதை முறையாக செய்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கிற அடிப்படை, வாழ்நாள் தண்டனை என்பதிலே இருக்கிறது. நாம் மரணதண்டனையை எதிர்க்கிறோம். தூக்குத்தண்டனையை எதிர்க்கிறோம். ‘எல்லா இடங்களிலும் எல்லாச் சூழலிலும் எல்லாக் குற்றங்களிலும் எதிர்க்கிறீர்களா’ என்று நண்பர்கள் கேட்கிறார்கள். ஆம்! எல்லாச் சூழல்களிலும் எல்லா இடங்களிலும் எதிர்க்கிறோம்.

தூக்குத் தண்டனை கூடாது! கூடவே கூடாது! தண்டனையே கூடாது என்பதன்று! தூக்குத் தண்டனை கூடாது. இதில் வேடிக்கை என்னவென்றால் தூக்குத் தண்டனையை எதிர்ப்பதற்கான ஒரு காரணியை ஆந்திரத்தைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி K.G.கண்ணபிரான் சுட்டிக்காட்டுகிறார். மரண தண்டனை கொடுக்கப்படுகிற வழக்குகளில் சாட்சியத்தை நம்ப முடியுமா? முடியாதா? அது எந்த அளவுக்கு அடிப்படைகள் கொண்டது? அது திரும்புகிறதற்கு வாய்ப்பளிக்கிறதா இல்லையா? இவை எல்லாவற்றிற்கும் மேலான காரணத்தை அவர் சொல்கிறார்.

‘ஒரு சனநாயக சமூகம், குடியரசுக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிற ஒரு சமூகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு சமூகம் ஒரு மனிதனின் உயிர் நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை ஒரு தனிமனிதனின் விருப்புவெறுப்புகளுக்குத் தரக்கூடாது’ என்பதை ஒரு காரணமாக அவர் குறிப்பிடுகிறார்.

பசல் சிங் வழக்கில் நீதிபதி எடுத்துக்காட்டிய காரணம், ‘பெரும்பான்மையான நீதிபதிகள் அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை என்று கூறியபொழுது அரிதிலும் அரிதானது எது? என்பதை யார் சொல்வது’ என்று பகவதி கேட்டார். எது அரிதினும் அரிதானது? இராசிவ் கொலை அரிதினும் அரிதானது என்று என்ன அளவுகோலின்படி முடிவு செய்தீர்கள்?

சுவீடன் பிரதமர் உலோப் பானி கொல்லப்பட்டார். அவர் இராசீவ் காந்தியின் நண்பர். போபர்சுத் தொடர்புடைய ஓர் அரசியல் தலைவர். அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை நீதிமன்றம் விடுதலை செய்தது. உலோப் பானியின் மனைவியிடம் போய் ' உங்கள் கணவனைக் கொன்றவனை நீதிமன்றம் விடுவித்தது. இது பற்றி நீங்கள் வருந்துகிறீர்களா? உங்கள் மன உணர்வு என்ன?' என்று கேட்டார்கள். அந்த அம்மையார் 'அவர் குற்றம் செய்யவில்லை என நீதிமன்றம் சொல்லி விடுவித்திருக்கிறது. பிறகு நீங்கள் ஏன் அவரை என் கணவரைக் கொன்றவர் எனச் சொல்கிறீர்கள்?' என்று திருப்பிக் கேட்டார். உலோப் பானியின் கொலையில், சுவீடனில் அவர்கள் சொல்லி விட்டார்கள்; அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. ஒருவர் அவ்வழக்கில் பொய்க்குற்றச்சாட்டு என்று விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் இந்தத் தண்டனை கொடுக்கலாம்? கொடுக்க வேண்டாம் என்று யார் முடிவு செய்வது? கோவிந்தசாமி வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுவிக்கிறது. மேல் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்கிறது. நான் கடந்த காலங்களில் இவ்வழக்குகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். எதைச் சான்றாக வைத்து முடிவு செய்வது? இதுதான் முதன்மையான செய்தி, அப்படியானால் ஒரு வாழ்நாள் கைதியின் விடுதலை என்பதற்கு உரிமை இல்லை! அதற்கொரு காலவரையறை கிடையாது. கால வரையறை வேண்டும் என்கிற இக்கருத்து சிறையில் இருந்து இத்தண்டனையை அனுபவித்து தண்டனைப்பட்டவர்களின் துன்பங்களை, துயரங்களை நன்கு அறிந்திருக்கிற என்னைப் போன்ற ஒருவர் கூறுவது மட்டுமன்று; கிருஷ்ணய்யர், தேசாய் போன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய ஆழ்ந்த கருத்தும் கூட.

சனதா கட்சி அரசு நடத்திய காலத்தில் நீதிபதி முல்லா என்பவருடைய தலைமையில் ஓர் ஆணையத்தை நிறுவிச் சிறைச் சட்டங்களிலும் சிறைகளிலும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கையை அரசு கேட்டது. முல்லா அவ்வறிக்கையில் 'குற்ற நடைமுறைச் சட்டத்தின் 433 'ஆ' பிரிவின் படி ஒரு வாழ்நாள் கைதியைக் குறைந்த அளவு பதினான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றிருக்கிறது; இது தேவையற்றது. 433 'ஆ' பிரிவு தேவையற்றது. எட்டாண்டுகளுக்கு மேல் எவரையும் சிறையில் வைக்கத் தேவையில்லை என்பது தான் ஆணையத்தின் கருத்து' என்று எழுதினார். அவர் இவ்வறிக்கையை எழுதிய ஆண்டு 1980ஆம் ஆண்டு, மொரார்ஜி பிரதமராக இருந்த காலத்தில்! புதிய நடைமுறைச்சட்டம் 1978ஆம் ஆண்டு வந்தது. அவர் 'இந்தக் குற்ற நடைமுறைச் சட்டம் செயலுக்கு வந்து எட்டாண்டு, பத்தாண்டு கழித்து விடுதலையாக வேண்டியவர்கள் விடுதலை செய்யப்படாமல் இந்தச் சட்டத்தினால் தடுக்கப்படுகிற பொழுது சிறைக்கூடங்கள் புரட்சிக்கூடங்களாக மாறும்' என்று எச்சரிக்கிறார். இது நீதிபதி சொன்ன வாசகம்!

இத்தனை ஆண்டு கழித்து எங்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறாய் என்றால் அது அவனை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, பக்குவப்படுத்துவதற்கு, அவனுடைய சினங்களைக் குறைப்பதற்குப் பயன்படுத்துவதற்கு மாற்றாகச் சிறைகளைக் கலகக்கூடங்களாக மாற்றிவிடும் என்று அவர் எச்சரித்தார். 'பதினான்கு ஆண்டு தேவையில்லை! எட்டாண்டு போதும்' இது முல்லா குழுவின் அறிக்கை! இப்படி நிறைய சான்றுகளை நாம் காட்ட முடியும். எனவே நண்பர்களே! மரண தண்டனை மட்டுமன்று! காலவரம்பற்ற தண்டனையைக் குறிக்கிற வாழ்நாள் தண்டனையும் கூடாது என்பது அடிப்படை மனித உரிமை முழக்கமாக எழுப்பப்பட வேண்டும். நளினி விடுதலை மறுப்பில் இருந்து நாம் கற்கிற ஒரு பாடமாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இருபது ஆண்டா? முப்பது ஆண்டா? நாற்பது ஆண்டா? அந்த நாற்பது ஆண்டில் எவ்வளவு தண்டனைக் கழிவு பெற முடியும்? உழைப்பதன் மூலம் எப்படிப் பெற முடியும்? நன்னடத்தை மூலம் எப்படிப் பெற முடியும்? படிப்பதன் மூலம் எப்படிப் பெற முடியும்? எல்லாவகையிலும் பெறலாம்.

நளினியை வெளியே விட்டால் இராயப்பேட்டையே கலகக்கூடமாக மாறிவிடும் என்று ஒரு 'Clothes in a little authority' என்று சேக்சுபியர் சொல்வாரே அப்படி ஒரு காக்கிச்சட்டை போட்டதாலேயே அதிகாரம் வந்துவிட்ட கேவலமான ஓர் அலுவலர் மேலிடத்தில் இருந்து கேட்டுக் கேட்டு எழுதிச் சொல்கிறாரே. இதே இராசீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கும் ஒட்டுமொத்த மரண தண்டனை விதித்தீர்களே! நீதிபதி கிருஷ்ணய்யர் 'இது ஒட்டுமொத்த மரண தண்டனை! எல்லோருக்குமாக 'Wholesale Death sentence' கொடுத்திருக்கிறீர்கள்’ என்றாரே! இது 'Judicial Terrorism' என்றாரே!

இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் பயங்கரவாதம் என்று அவர் சொன்னார். அப்படிக் கொடுத்தீர்களே! அந்த இருபத்தாறு பேரில் பத்தொன்பது பேர் விடுதலையாகிப் போனார்களே! அவர்கள் போன பக்கமெல்லாம் புல் எரிந்ததா? நெருப்புப் பற்றியதா? கலகம் நடந்ததா? அவர்கள் யார்? எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? பத்மாவும் பாக்கியநாதனும் வாழ்வதால் இராயப்பேட்டையில் கலகம் வரவில்லை. நளினி வந்து சேர்ந்தால் வந்துவிடுமா? என்ன அபத்தம் இது? சிறை அமைப்பின் நோக்கம் பழிக்குப் பழி வாங்குவது, வஞ்சம் தீர்ப்பது என்றிருந்த காலம் வேறு! ஒரு நீதிபதி உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே, 'இராசீவ் காந்தி மட்டும் கொல்லப்படவில்லை! இன்னும் பதினைந்துப் பேர் கொல்லப்பட்டார்கள். அந்தப் பதினைந்து பேரில் பெரும்பாலானோர் காவல்துறையினர்'. என்று எழுதுகிறார்.

சாதாரண குடிமக்கள் செத்தால்கூட அவர் மனம் வருந்தாது. பதினைந்து பேரில் பலரும் காவல் அலுவலர்கள். சரி! அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்றா தனுவின் குண்டு வெடித்தது. இந்தப் பதினைந்து பேர் சரி! அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். 'நளினியின் குழந்தை பற்றி வருத்தப்படுகிறார்களே! இராசீவ் அருகிலே இருந்து கவிதை படித்துக் கொடுத்தாளே இலதாவின் மகள்! அந்தக் குழந்தை பற்றிக் கவலைப்படவில்லையா?' என்று நீதிபதி கேட்கிறார். சரி! அப்படியானால் வாதத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டு போவோம். இராசீவ் காந்திக்கும் அவர்களுக்கும் என்ன சிக்கல்? நீங்களே சொல்கிறீர்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் செய்தது. ('The IPKF committed atrocities against Tamils')' - இது நீதிபதிகளின் வார்த்தை.

அதற்காகப் பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்தக் கொலையை இவர்கள் செய்தார்கள்? அப்படியானால் அந்தக் குழந்தையுடைய உயிரைவிட இவருடைய உயிர் பெரிதா? இதற்கு என்ன முடிவு? காந்தி 'கண்ணுக்குக் கண் என்பது விதியானால் இந்த உலகம் குருடர்கள் நிறைந்ததாகி விடும்'('An eye for an eye makes the whole world blind'). என்றார். எல்லோரையும் குருடர்களாக்கி விடலாம். கண்ணுக்குக் கண் என்பதை விதியாக்கிக் கொண்டு! இது தான் உங்கள் தண்டனைக் கொள்கையா? இதுதான் சனநாயகமா? சீர்திருத்தம் செய்வதும் மறுவாழ்வு அளிப்பதும், ஏன் நளினி படித்தார் என்பதைச் சொல்ல வேண்டும். இது பொருத்தமான காரணம் இல்லையா? நளினிக்கு ஒரு குழந்தை இருப்பதை ஏன் சொல்ல வேண்டும்? நளினியின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதை ஏன் சொல்ல வேண்டும்? இன்றைய புதிய (நவீன) காலத்தில் ஒறுத்தலியலில் அடிப்படைக் கொள்கை என்ன என்பது இந்த அறிவுரைக்கழக அறிவிலிகளுக்குத் தெரியுமா?

மறுவாழ்வு ('Rehabilitation') என்பது ஓர் அளவுகோல் என்றால் அந்த மறுவாழ்வுக்குப் படிப்பு தேவைப்படுகிறது; குடும்பம் தேவைப்படுகிறது; தாய் தேவைப்படுகிறாள். இதுதானே அதைச் சொல்வதற்குக் காரணம். இது ஒரு காரணம் இல்லை என்றால் வேறு என்ன காரணத்தைச் சொல்வீர்கள்? இந்தக் காரணங்களை நீதிபதிகள் சொல்கிறார்கள். குழந்தை இருக்கிறது; படித்த பெண். இதே வழக்கில் இன்னும் அவருடைய கணவர் வேறு இருக்கிறார். சோனியா காந்தியே இதே வழக்கில் சொன்னார். நளினிக்குத் தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த போது அவரே 'என்னுடைய குழந்தையின் கதி அக்குழந்தைக்கு ஏற்படக்கூடாது என்று சொன்னார். இதை அறிவுரைக்கழகம் சொல்கிறதாம்! அதை அப்படியே அரசு ஏற்றுக்கொள்கிறதாம்!! அறிவுரைக் கழகம் சொல்வதை எல்லாம் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை.

எங்களுடைய வழக்கில் நாங்கள் நான்குப் பேர் இருந்தோம். எனக்கும் இன்னொரு தோழருக்கும் அறிவுரைக் கழகம் பரிந்துரைத்தது. காரணம் நிகழ்ச்சி நடைபெற்ற ஊருக்குத் தொலைவான ஊர் எங்கள் ஊர். ஆனால் சில தோழர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களை விடக் கூடாது என அறிவுரைக் கழகம் பரிந்துரைத்தது. அறிவுரைக் கழகப் பரிந்துரையைப் புறந்தள்ளி விட்டுத்தான் அன்றைக்கு அரசு எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் ஒருங்கே விடுவித்தது. ஒரு மாவட்ட ஆட்சியர் என்னுடைய விடுதலைக்குப் பரிந்துரைத்து எழுதினார். இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். இவருடைய விடுதலையை நாங்கள் அழுத்தமாகப் பரிந்துரைக்கிறோம். ஏதோ நளினி உண்ணாநிலையில் இருந்தார் என்று சொல்கிறார்களே, நாங்கள் உண்ணாநிலையைத் தவிர வேறு என்ன இருந்தோம்! ஆண்டுக்கு ஆண்டு அதனால் தான் நலமாக வெளியே வந்தோம்! அட்டை எல்லாம் சிவப்பாக இருக்கும்; வரலாற்று அட்டை! 'Most dangerous criminals' என்று எழுதி வைத்திருந்தார்கள்.!

விடுதலை செய்யலாம் என்று எப்படிப் பரிந்துரைக்கலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சாந்தாசீலா நாயருக்கு அன்றைய அரசு அறிவிக்கை (Notice) கொடுத்தது. சாந்தசீலா நாயர், 'இது அறிவுரைக் கழகத்தின் உரிமை' என்று விடை கொடுத்தார். இப்போது அறிவுரைக் கழகம், இவர்கள் சொல்லும் இடத்தில் முத்திரை போட்டுக் கையெழுத்துப் போடுகிறது. எனவே இந்தத் தற்போக்கு அதிகாரம் (Arbitrary Power) ஆளுநருக்கும் இருக்கக்கூடாது; குடியரசுத் தலைவருக்கும் இருக்கக்கூடாது. அது குடியாட்சிக் கொள்கைக்கு எதிரானது. இது மன்னனுக்குரிய அதிகாரம்! மறந்துவிடாதீர்கள்!. ஒருவருடைய உயிரைப் பறிக்கும் அதிகாரம் அல்லது பறிக்காமல் விட்டுவிடுகிற அதிகாரம் மன்னனுக்கு உரியது. அரசமைப்புச் சட்டத்தின் 161 வது உறுப்புக்கும் 72 வது உறுப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்! 161 வது உறுப்பின்கீழ் ஆளுநர் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கலாம்; ஆனால் மரணதண்டனைக் கைதியை விடுவிக்க முடியாது. ஆனால் குடியரசுத்தலைவர் 72 வது உறுப்பின் படி ஒரு மரணதண்டனைக் கைதியை விடுதலையே செய்யலாம். இவ்வளவு இறுக்கமான சூழல் இப்படி ஓர் அரசு! இப்படிப்பட்ட அலுவலர்கள்! என்ன நடக்கிறது என்று தெரியாத அறிவுத்துறையினர்!

நண்பர்களே கையெழுத்து இயக்கத்தைப் பற்றிச் சொன்னார்கள். கையொப்பம் இடுவது என்றால் என்ன? பொறுப்பேற்பது என்பது பொருள்; ஒருசிலர் ஏதோ காரணம் சொல்லிக் கையொப்பமிட மறுத்து விட்டார்கள். சரியோ தவறோ அது அவர்களுடைய உரிமை! அவர்களைப் பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால் கையொப்பமிட்டவர்கள் 'நளினியை விடுதலை செய்' என்று கையொப்பமிட்டவர்கள். இப்போது விடுதலை செய்ய மறுத்திருக்கிற அரசைக் கண்டிக்கிறார்களா? வர வேண்டும்! தெருவுக்கு வந்து பேச வேண்டும்!

நளினி பயங்கரவாதி என்று அறிவுரைக்கழகம் சொல்கிறது; விடுதலை செய்ய முடியாது என்று அரசு சொல்கிறது. நீங்கள் விடுதலை செய் என்று கேட்டீர்களே! என்ன அடிப்படையில் கேட்டீர்கள்? முக தாட்சணியத்திற்காக ஒப்பம் இட்டீர்களா? யார் எதை நீட்டினாலும் ஒப்பமிட்டு விடுவீர்களா? ஒப்பமிட்டவர்களுடைய சமூகப் பொறுப்பு என்ன? மக்கள் புரிந்து கொள்கிறார்களா? புரிந்து கொள்ளவில்லையா? என மக்களிடம் போவது அப்புறம் இருக்கட்டும்.

தமிழ்ச் சமூகத்தின் அறிவுத்துறையினர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்? அவர்கள் தெருவுக்கு வரவேண்டும். அரசுக்கு வேண்டியவர்களா வேண்டாதவர்களா? அரசில் இருப்போர்க்கு உறவினர்களா இல்லையா? என்பதெல்லாம் பொருட்டே அன்று. நீங்கள் ஒரு காரணம் சொன்னீர்கள். இப்போது இந்த வாதத்தில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?

எனவே தான் நண்பர்களே! மரண தண்டனை ஒழிப்பு என்பது போல காலவரம்பு குறிப்பிடாத வாழ்நாள் தண்டனை ஒழிப்பு என்பதும். ஒரு வேடிக்கை பாருங்கள்! மரணமும் வாழ்வும் ('Death and Life') ஒன்றாக இருக்கின்றன. இரண்டும் மனிதனுடைய சீர்திருத்தத்திற்கு, மனமாற்றத்திற்கு எதிராக இருக்கிறது. 'உனக்கு என்றுமே விடுதலை இல்லை' என்று! ஒரு காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. அறிவுரைக் கழகப் பரிந்துரையை அரசு மறுக்கிறபோது அடுத்த தேதியைக் குறிப்பிடுவார்கள்! இது விதிகளில் உள்ளது. ஓராண்டு கழித்து முதல் முறை எனக்கு மறுத்தார்கள். ஓராண்டு கழித்துப் பரிசீலனை என்று கூறினார்கள். வாழ்நாள் கைதிகள் காத்திருப்பார்கள். ஓராண்டுச் சிறை எப்போது முடியும் அதுவரை என்ன செய்யலாம்? இப்போது நளினிக்கு மறுத்திருக்கிற உத்தரவில் அடுத்த பரிசீலனை எப்போது என்னும் குறிப்பே இல்லை! இதனுடைய பொருள் என்ன? நளினி என்று இல்லை; யாராகவும் இருக்கட்டும். இனி உனக்கு விடுதலை இல்லை. நீ சிறையிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்! என்று அறிவித்ததற்குப் பிறகு அந்த மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஏழாண்டு, எட்டாண்டு கழித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றிக் கலைஞருக்கு நன்றி சொல்லி நான் நக்கீரனில் கட்டுரை எழுதினேன். அதிலேயே கேட்டிருந்தேன். 'ஐயா ஏழாண்டு, எட்டாண்டு கழித்தவர்கள் விடுதலையாகிச் செல்லும்போது பதினேழு ஆண்டுகளாகச் சிறையில் இருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். விடுதலை செய்தது நல்லது. ஆனால் மற்றவர்களின் நிலை என்ன? முரசொலியில் நான் எழுதியதை எடுத்துக்காட்டிக் கலைஞர் ஒரு கடிதமே எழுதினார். இந்த வாக்கியங்களை மட்டும் நீக்கிவிட்டு அதை எடுத்து வெளியிட்டார். இது மாநில அரசு பற்றிய செய்தி மட்டுமன்று!

ஆந்திரத்தில் ஒரு காங்கிரசுத் தொண்டர் தெலுங்குத் தேசத் தொண்டரைக் கொன்றுவிட்டார். காங்கிரசு ஆட்சி அவரை விடுவித்தபோது நீதிமன்றம் குறுக்கிட்டது. 'இது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு' என்று அது கூறியது. அப்படியானால் அரசியல் காரணங்களுக்காக முடிவெடுக்கக்கூடாது அல்லவா? விடுதலை முடிவையும் எடுக்கக்கூடாது; விடுதலை மறுப்பையும் எடுக்கக்கூடாது. ஆனால் நளினிக்கு, நீங்கள் அந்தக் குற்றம் முன்னாள் பிரதமருக்கு எதிராக இழைக்கப்பட்டது. கொடுமையான குற்றம் என்பதைக் காரணமாகக் காட்டுவது அரசியலா இல்லையா? எங்களுக்கு (மாநில அரசுக்கு) அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டாலும் தில்லியைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம் என்று சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்கிறீர்களே! இதற்கு அரசியலைத் தவிர வேறு என்ன காரணம்? வழக்கை அரசியல் கருதாமல் உங்களால் (மாநில அரசால்) பார்க்க முடியவில்லை.

இதில் இருந்துதான் நம்முடைய அரசியல் சிக்கல் என்பது எழுகிறது. நீதிபதி தாமசு அவர்கள், 'நளினிக்கு வாழ்நாள் தண்டனைதான் விதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே எழுதினார். ஏன் மரண தண்டனை விதிக்கத் தேவையில்லை என்பதற்கு அவர் பெண் என்பது, குழந்தை உள்ளது என்பது என எல்லாக் காரணங்களையும் காட்டினார். இன்னொரு காரணத்தையும் காட்டினார். அது என்னவென்றால் நளினியின் சகோதரன் பாக்கியநாதன் அவனுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் நளினி தன்னிடம் கூறியதாக ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறான். அது 'சிறீபெரும்புதூர் போய்ச் சேர்ந்த பிறகுதான் இப்படி ஒன்று நடக்கப் போவது தனக்குத் தெரியும்' என நளினி கூறியிருக்கிறாள் என்பதாகும். 'அதை நான் நம்புகிறேன்' என நீதிபதி தாமசு எழுதுகிறார். 'அங்குப் போனதற்குப் பிறகு, இது நடக்கப்போவது தெரிவதற்குப் பிறகு அவரால் வெளியேறவோ தப்பிவரவோ அதைத் தடுக்கவோ வாய்ப்பில்லை. சிவராசன், தனு, சுபா ஆகியோரிடமிருந்து வெளியே வர வழியில்லை. எனவே அவர் ஒரு சூழ்நிலைக் கைதியாக கொண்டிருக்கிறார். இதையும் கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை தேவையில்லை என்று நான் முடிவு செய்கிறேன்' இக்கருத்து நீதிபதி எழுதியது.

மற்ற இரண்டு நீதிபதிகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் காட்டுகிற காரணம்தான் வழக்கின் அரசியலை நமக்கு வெளிப்படுத்துகிறது. நீதிபதி காக்ரி, மாக்பா ஆகியோர் மற்ற இரு நீதிபதிகள். அதில் ஒரு நீதிபதி எழுதுகிறார்; காவல்துறையினர் உட்பட பதினைந்துப் பேர் இறந்ததை எடுத்துக்காட்டி அவர் எழுதுகிறார். அவர் 'ஒரு முன்னாள் பிரதமரை இவர்கள் குறிவைத்தார்கள்; ஏனென்றால் இந்த நாடு அதன் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓர் அயல்நாட்டோடு உடன்பாடு செய்தது. (A former Prime Minister of the country was targetted because this country had entered an agreement with a foreign country in exercise of its sovereign powers). இராசீவ் காந்தி அந்நேரத்தில் அரசின் தலைவராக இருந்ததால் இலங்கை அரசுத் தலைவருடன் சேர்ந்து இவ்வுடன்பாட்டில் கையொப்பமிட்டார். இந்த உடன்பாடு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது. இராசீவ் காந்தி இவ்வொப்பந்தத்தைத் தனிப்பட்ட முறையிலோ சொந்த நலனுக்கோ செய்துகொள்ளவில்லை. இந்தச் சதியின் நோக்கம் பயங்கரவாதச் செயலோ சீர்குலைவுச் செயலோ செய்வது இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட நாட்டின் நலனுக்காகச் செயல்பட்ட ஒரு முன்னாள் பிரதமரைக் கொலை செய்தது என்பது இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கொடிய தன்மையை வெளிப்படுத்துகிறது. இது நாட்டின் வரலாற்றில், குற்றங்களின் வரலாற்றில் ஒப்புவமை இல்லாத ஒரு செயலாகும். இராசீவ் கொல்லப்பட்டது மட்டுமன்று; வேறு பலரும் கொல்லப்பட்டார்கள்; காயமடைந்தார்கள்' என்று சொல்கிறார். எனவே ஒப்பந்தம் பற்றிய விவாதத்தை இங்கே கொண்டு வருகிறார்கள்; இறையாண்மை பற்றிய விவாதத்தை இங்கே கொண்டு வருகிறார்கள்.

நண்பர்களே! நான் ஒன்றைக் கேட்கிறேன் நீதிபதிகள் செய்திகளையாவது ஒழுங்காகப் பதிவு செய்கிறார்களா? என்றால் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இந்திய நாடாளுமன்றத்தின் முன் வைத்து எப்போது ஒப்புதல் பெற்றார்கள்? எந்தப் பன்னாட்டு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெறுவதே கிடையாது. நாடாளுமன்ற சனநாயகம் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அணு சக்தி தொடர்பான இந்திய அமெரிக்க ஒப்பந்தம் ஒப்புதல் பெறப்பட்டதா? நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம் விவாதம் வந்ததே தவிர ஒப்பந்தத்தை முன்வைத்து அவர்கள் ஒப்புதல் பெறவில்லை. இப்போது வந்திருப்பது ஒப்பந்தம் இல்லை. இது சட்டம்; சட்ட முன்வடிவு (Nuclear Liability Bill) இது. அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கொடுக்கிற சட்ட முன்வடிவு இது!

இப்படி ஓர் ஒப்பந்தம் வந்தது; ஒப்பந்தம் போடப்பட்டதற்காக இராசீவ் கொல்லப்பட்டார் என்றால், அது இந்திய இறையாண்மை என்றால், எதைப் பற்றி ஒப்பந்தம் போட்டாய் என்று நாம் விவாதிக்க வேண்டாமா? ஈழத்தின் இறையாண்மையை மீறி அந்த மக்களின் வருங்காலத்தை மாற்றியமைக்க ஒப்பந்தம் போட உனக்கென்ன உரிமை? இந்த விவாதத்தில் நீதிபதிகள் ஈடுபட்டால் நாமும் ஈடுபடலாம். அதே போல் மற்றொரு நீதிபதி இந்த வழக்கில் ஏன் மரண தண்டனை விதிக்கிறார் என்பதற்கு வேறு ஒரு தீர்ப்பை எடுத்துக்காட்டி, 'சட்டத்தின் உயர்ந்த அளவு தண்டனையில் இருந்து தப்பவிடுவது என்பது நீதியைக் கேலிக்கூத்தாக்கிவிடும். இவர்களுக்குக் குறைந்த தண்டனை அளிப்பதாக இருந்தால் நாட்டின் நீதித்துறை மீது மக்கள் ஐயம் கொள்வார்கள். சாதாரண மனிதன் நீதிமன்றங்களிடம் நம்பிக்கை இழந்துவிடுவான்.’ என்று சொன்னார்.

இதுதான் முதன்மையானது இவை போன்ற வழக்குகளில் மனிதனைச் சீர்திருத்துவது பற்றிய சொல்லாடலைக் காட்டிலும் அச்சுறுத்தித் தடுப்பது என்ற மொழிதான் சாமானிய மனிதர்களால் பாராட்டப்படும். குற்றவாளியைத் திருத்துவதெல்லாம் தேவையில்லை எனப் பாமரன் நினைக்கிறான். ஏதோ மனித உரிமை ஆர்வலர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவனுக்கு எது முதன்மையானது என்றால் அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டும். இதைத்தானே இராஜஸ்தானில் செய்திருக்க வேண்டும். மக்கள் விரும்புகிறார்கள் என, சாதியாள் விரும்புகிறான் என சாதிவிட்டு சாதித் திருமணம் செய்ததற்காகக் கொலை செய்கிறான். இதை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தான் 'நளினிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என்கிறார். மரண தண்டனை தேவையில்லை என்னும் நீதிபதி தாமசின் கருத்தை இவர் மறுதலிக்கிறார்.

நண்பர்களே! இறுதியாக ஒரு கருத்து! இந்த அரசியல் என்பது உண்மையில் அப்சல் குரு வழக்கில் வெளிப்பட்ட ஓர் அரசியல். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் கிலானி விடுதலையாகி வெளியே வந்தவுடன், 'என்னை விடுதலை செய்திருந்தாலும் இந்தத் தீர்ப்பு அநீதியான தீர்ப்பு' என்றார். ஏன்? அப்சல் குரு ஒரு குற்றவாளி என்று காட்டுவதற்காக பொடா சட்டத்தின் படி வழக்குப் போட்டார்கள். உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் இவர்(அப்சல் குரு) எந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்படியும் தண்டிக்கப்படவில்லை. ஏனென்றால் பயங்கரவாதக் குற்றம் என்பது பயங்கரவாத அமைப்பில் இருந்துகொண்டு செய்வது! இவர் எந்தப் பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர் என்பதற்குச் சான்று இல்லை. எந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டும் இவர் மீது போடப்படவில்லை. எனவே பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விட்டோம். என்று சொன்னது. பிறகு எப்படி மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது? அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் மிகுந்த வேடிக்கைக்குரியது! தேசத்தின் ஒட்டுமொத்த உளச்சான்றை நிறைவு செய்வதற்குத் ('In order to satisfy the collective conscience of the nation') தண்டனை இல்லாமல் இவரை விட்டுவிடக்கூடாது என்றார்கள்.

சென்னையில் கருத்து அமைப்பின் கார்த்தி சிதம்பரத்தையும் கனிமொழியையும் இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன் நளினி விடுதலை தொடர்பாக ஒரு கருத்து அமர்வை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று. மரணதண்டனை வேண்டுமா வேண்டாமா என்று அவர்கள் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள். ஆழ்வார்ப்பேட்டையில் என்று நினைவு! பாரதிய சனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் 'மரண தண்டனை வேண்டும்' என்று வாதிட்டார். 'மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்ன காரணங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்தியாவில் பயங்கரவாதம் தலைதூக்கியிருக்கிறது. அதை ஒழித்துவிட்டுப் பிறகு மரணதண்டனையை ஒழித்துக்கொள்ளலாம். எனவே இப்போதைக்குப் பயங்கரவாதிகளுக்கு எதிரான மரண தண்டனை தேவை! அதற்கு ஒரு சான்று அப்சல்குருவைத் தூக்கிலிட வேண்டும். தூக்கிலிட்டால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்' என்று அவர் வாதிட்டார்.

நான் அவரிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். 'பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அப்சல்குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று சொல்கிறீர்களே! அப்சல் குரு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இரண்டு உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெரியுமா தெரியாதா உங்களுக்கு? 1. அப்சல் குரு எந்தப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் மெய்ப்பிக்கப்படவில்லை. 2.அப்சல் குருவிற்கு எதிரான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை இது தெரியுமா தெரியாதா?' இதுதான் இல. கணேசனிடம் நான் கேட்ட கேள்வி! அவர் நான் செய்தித்தாளில் படித்ததைத் தான் சொன்னேன். இது பற்றி எனக்குத் தெரியாது. இதுவே கடைசிக் கேள்வியாக இருக்கட்டும். இனி யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறிப் புறப்பட்டுப் போய்விட்டார். இதுதான் உண்மை!

தேசத்தின் ஒட்டுமொத்த உளச்சான்று, தேசத்திற்கு எதிரான குற்றம் ('Crime against nation') என்று சுப்பிரமணிய சாமி உயர்நீதிமன்றத்தில் வாதிடுகிறார். நம்முடைய வழக்கறிஞர் இராதாகிருட்டினன் சட்டப்பிரிவை எடுத்துக்காட்டிச் சொல்கிறார்; 'பொது மன்னிப்பில் விடுதலை செய்கிறபோது மையப் புலனாய்வுத் துறைக்கு (C.B.I) வந்த வழக்கு என்பது சான்று இல்லை. 161வது உறுப்பின்படி மைய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டத்தில் குற்றம் இழைத்திருந்தால்தான் மைய அரசிடம் கேட்க வேண்டும். இங்கே நளினி வழக்கில் அப்படிப்பட்ட எச்சட்டத்தின் கீழும் தண்டனை இல்லை. சட்டம் ஒழுங்கு என்னும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட வழக்குதான் இது! ஆனால் குற்ற நடைமுறைச்சட்டத்தின் 435ஆவது பிரிவின்படி அரசு ஒருவரை விடுதலை செய்கிறபோது தில்லிக் காவல் நிர்வாகம் (Central Police Establishment) நடத்திய வழக்காக இருந்தால் மைய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீங்கள் 161ஆவது உறுப்பின்படி தான் பத்தாண்டு கழித்தவர்களையும் ஏழாண்டு கழித்தவர்களையும் விடுதலை செய்கிறீர்கள். அப்படி விடுதலை செய்யும்போது நாங்கள் தில்லியில் கேட்டுக்கொண்டு விடுதலை செய்கிறோம் என்று சொல்வதற்குச் சட்டச்சான்று இல்லை' என்று எடுத்துக்காட்டுகிறார்.

சுப்பிரமணிய சாமி திமிரோடு சொல்கிறார், 'அவரை மீண்டும் சட்டக்கல்லூரியில் படிக்கச் சொல்லுங்கள்' என்று! சுப்பிரமணியசாமியை முதலில் ஒரு தொடக்கப்பள்ளியில் போய்ப் படிக்கச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? அவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் படிக்கவே இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது உறுப்பின்படி ஒருமுறை மன்னிப்பு, தண்டனைக்குறைப்பு வழங்கப்பட்டுவிட்டது. இன்னொரு முறை தர முடியாது என்று சொல்கிறார்.

இக்கருத்தை உயர்நீதிமன்றத்தில் அவர் சொன்னார், உயர்நீதிமன்றம் அக்கருத்தைத் தள்ளிவிட்டது. எத்தனை முறை வேண்டுமானாலும் 161ஆவது உறுப்பின்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் இது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. அங்கேயும் போய்த் தேசத்திற்கு எதிரான குற்றம் (Crime against nation) என்று புருடா விட்டார். 'Crime against nation' என்று இப்போதும் வந்து பேசுகிறார். இதெல்லாம் தேசத்திற்கு எதிரான குற்றம் என்றால் எது தேசம் என்னும் கேள்வியை நாங்கள் கேட்காமல் விடுவோமா? இது உன் தேசத்திற்கு எதிரான குற்றம் என்று வைத்துக்கொள்! எங்கள் தேசம் வேறு! அரசியல் விவாதமாக்கினால் நாம் அரசியலாகவே விவாதிப்போம். அது பற்றி நமக்கு ஒன்றும் அச்சமில்லை.

ஜெயின் கமிசனில் என்ன துடித்தார்கள்? நேரு குடும்பத்தின் வாரிசு, இராசீவ் காந்தி நேரு குடும்பத்தின் வாரிசு என்றும் முன்னாள் பிரதமர் என்றும் மக்களின் அன்புக்குப் பாத்திரமான தலைவர் என்றும் நீதிபதிகள் வருணித்துக் கொண்டிருக்க உரிமை உண்டு என்றால் எங்களுக்கு போபர்சுத் திருடன் என்றும் ஈழமக்களின் கொலைகாரன் என்றும் வருணிக்கிற உரிமை உண்டு. ஏன் நாங்கள் சொல்ல மாட்டோம்? அது அரசியல் என்றால் நீ அதைத் தீர்ப்புக்குள் கொண்டுவராதே! அது ஒரு மனிதனின் உயிர் என்று பார். அது ஒரு தற்கொலைப் படுகொலை . குற்றம் மனிதக் கொலை! அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அது என்ன இராசிவின் உயிருக்கு ஒரு தனி வருணனை, தனி விவாதம் எதற்கு? நேரு குடும்பம் என்பது என்ன? கலியுகக் குடும்பமா அது? இது எல்லாமே முடியரசு வாதச் சிந்தனை!

இந்த முடியரசுச் சிந்தனை குடியரசுக் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த முடியரசுச் சிந்தனைக்காகத் தான் சூலியசு சீசரைப் புருட்டசு கொன்றான். கொன்றதற்குப் பிறகு புருட்டசைப் போற்றிய மக்கள் 'மாமன்னன் புருட்டசு வாழ்க!' என்றார்கள். என்ன கொடுமை இது? சனநாயகம் என்பது மக்களின் விழிப்புணர்வில், சமத்துவ உணர்வில் 'நீயும் நானும் எட்டுச்சாண் உசரம் கொண்ட மனுசங்கடா' என்னும் சிந்தனையில் இருக்க வேண்டும். எந்தக் குடும்பமாக இருந்தால் என்ன? எந்தப் பதவியில் இருந்தால் என்ன? மானுடச் சமத்துவம் என்பது புனிதமான கொள்கை. இந்த மானுடச் சமத்துவத்தில் நம்பிக்கையில்லாச் சமூகம் இது. பார்ப்பனியப் பண்பாட்டில் ஊறிய சமூகம் இது. கருமம், தருமம், தண்டம் என்னும் சிந்தனையில் ஊறிய நீதிபதிகள் இவர்கள்! இவர்கள் வழங்குகிற தீர்ப்புகளை, அளிக்கிற முடிவுகளைப் புனிதமானவை என்று நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

நளினியை விடுதலை செய் என்பதற்கான போராட்டம் மட்டுமன்று இது! பேரறிவாளனை விடுதலை செய்! சாந்தனை விடுதலை செய்! முருகனை விடுதலை செய்! இராபர்ட்டு பயாசை விடுதலை செய்! செயக்குமாரை விடுதலை செய்! இரவிச்சந்திரனை விடுதலை செய்! நளினியையும் விடுதலை செய்! எழுவரையும் விடுதலை செய்! உடனே விடுதலை செய்!

விடுதலை செய்ய முடியாதா? ஐ.என்.ஏ வழக்கு விசாரணை பற்றிப் படித்துப் பாருங்கள். தில்லிச் செங்கோட்டையில்தான் நடந்தது. கோபால் தேசாய் வழக்கறிஞர். இளைஞர் ஜவகர்லால் நேரு ஓர் இளம் வழக்கறிஞராக வழக்கை நடத்தினார். நேதாசி சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசிய இராணுவத்தில் இருந்த மூன்று தளபதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கு அது! அந்த ஐ.என்.ஏ விசாரணைக்கு எதிரான போராட்டம் தான் இந்திய நாட்டில் 1945க்கும் 1947க்கும் இடையே பெரும் கலகமூட்டியது. இந்திய பிரித்தானியக் கடற்படையில் கலகம் எல்லாம் உண்டானது. காவல்துறைக் கலகம் ஏற்பட்டது. இந்த 'ஐ.என்.ஏ' விசாரணையை எதிர்த்து மிகப்பெரிய வேலைநிறுத்தம் சென்னையில் நடைபெற்றது. பிரித்தானிய அரசு இதற்கெல்லாம் விடை சொல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தேவைதானா? அது பிரித்தானிய மனித குலத்தின் மதிப்பிடமுடியாத மாணிக்கக்கல் என்று சர்ச்சில் சொன்னபோது பிரதமர் அட்லி 'இந்தியாவின் வெப்பநிலை புரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள்' ('It is quiet a different temperature in India') என்று சொன்னார். அந்த வெப்பநிலையை உருவாக்கியது ஐ.என்.ஏ வழக்கு விசாரணை என்பதை மறந்துவிடாதீர்கள். நேதாஜி பிழைத்தாரோ செத்தாரோ! அவருடைய பின்னால் இந்தியா கொதித்து எழுந்தது. ஏதோ காந்தி போய் கத்தரிக்காய்க் கடையில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது போல் அல்லவா சொல்கிறோம்! அப்படி எல்லாம் நடக்கவில்லை.

என்ன நடந்தது ஐ.என்.ஏ. வழக்கில்? மரண தண்டனை கொடுக்கிற வழக்கு அது! 'தீவாந்திர சிட்சை' என்று வாழ்நாள் தண்டனை கொடுத்தார்கள்; அனுப்பினார்களா அந்தமானுக்கு? அடுத்த நாள் அவர்களை விடுதலை செய்தார்கள். எவ்வளவு பெரிய குற்றம்? இராசத்துரோகம். பிரித்தானிய மன்னனுக்கு எதிராகப் போர் தொடுத்த குற்றம்! இரண்டாம் உலகப்போரில் சப்பானியப் படைக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றம்! இந்த நாட்டுமக்களின் பேரெழுச்சியால் அவர்களை விடுவிக்க முடிந்தது.

நாம் யாரிடமும் கெஞ்சிக் கேட்கவில்லை; மன்றாடிக் கொண்டிருக்கவில்லை. எங்களுடைய உரிமையை, மனித உரிமையை, என் இனத்தின் உரிமையை, என் தேசத்தின் உரிமையைக் கேட்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு என்ன விடை என்று கேட்கிறோம். ஓயமாட்டோம்! தலைசாயமாட்டோம்! இவர்களை விடுவிக்கிற வரைக்கும்! இவர்களை விடுவிப்பது என்பது எமது விடுதலையோடு இணைந்தது என்றால் அதுவரைக்கும் நாம் ஓயமாட்டோம். இதில் தெளிவாக நாம் இருக்க வேண்டும்.

மக்கள் எழுச்சியை நாம் உருவாக்க முடியும். மக்களிடம் நாம் உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வேலையை நாம் திறம்படச் செய்வோம். அதன் வழியாக மனித உரிமைகளை மதிக்கிற, மனித உரிமைகளை ஏற்றுக்கொள்கிற, மரண தண்டனையும் வாழ்நாள் சிறைத்தண்டனையும் இல்லாத ஒரு தண்டனை முறையை உருவாக்குவோம். அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக நளினியை விடுதலை செய் என்னும் முழக்கத்தை, அசைக்க முடியாத வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் என்னும் முழக்கம் இந்த உலகில் எழுந்ததே அதே போல் உலகில் தமிழன் இருக்கிற ஒவ்வொரு மண்ணிலும் நாட்டிலும் நகரத்திலும் நளினியை விடுதலை செய் என்னும் முழக்கத்தை நாம் எழுப்புவோம்.

அதன் வழியாக இந்திய அரசை, இந்திய அரசுக்கு முகவாண்மை செய்கிற, அவர்களோடு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அடிமைகளாக இயங்குகிற தமிழ்நாட்டு அரசைப் பணிய வைப்போம்! நளினியை விடுவிக்க வைப்போம்! நன்றி வணக்கம்.

(04.04.2010 அன்று சென்னையில் கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த 'நளினி விடுதலை சட்ட சிக்கலும் அரசியல் சிக்கலும்' என்னும் கூட்டத்தில் தோழர் தியாகு ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

தட்டச்சு உதவி: முத்துக்குட்டி

Thanks: keetru.com

பெண்ணெழுத்துப் பாதையில் முட் கற்கள் பதிக்கும் லீனா மணிமேகலை

இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

லீனா மணிமேகலைலீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.

பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.

ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.

அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்ப‌டி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?

குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.

பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?

சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?

leenamanimekalai‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?

இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.

நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.

உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.
பெண்ணியப் படைப்பு என்னவென்பதை முன்னோடிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. நல்ல படைப்புகளைத் தாருங்கள்! வாழ்த்துக்கள்!!

Thanks:- மினர்வா ( minerva@keetru.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Tuesday, April 13, 2010

அ.மார்க்சின் பிரச்சனை என்ன?

1

LTTEஅ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார்.

புலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால் அ.மார்க்சிடம் அப்படியொரு தெளிவையும் நேர்மையையும் அவரது ஈழம் தொடர்பான எழுத்துக்களில் மற்றும் பேச்சுக்களில் கான முடியவில்லை. அ.மார்க்சின் ஈழம் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் இதனைக் கான முடியும். இந்த நேர்காணலும் அவற்றின் தொடர்ச்சிதான். இதிலுள்ள அபத்தம் என்னவென்றால் ஈழத் தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போதும், கருகிச் செத்துக் கொண்டிருக்கும் போதும் அவர்களது உடலங்களின் மேல் தனது புலமைத்துவ ஆற்றலை நிருபிக்க முயல்வதுதான். தமது உறவுகள் அழிகின்றார்களே என்ற உணர்வில் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தமிழக செயற்பாட்டாளர்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளின் முகவர்கள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் என்றால் அ.மார்க்சின் மேதமையை என்னவென்பது.

ஒரு விடுதலைப் போராட்டம் அதன் வளர்ச்சிக் கட்டத்தில் பல்வேறு தடைகளை, சவால்களை சந்தித்தே வளர்வதுண்டு. அப்படியானதொரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதற்குரிய தடைகளை சவால்களை உள்ளக ரீதியாகவும் வெளியக சக்திகளிடமிருந்தும் எதிர் கொண்டிருக்கிறது. இதன்போது தவிர்க்க முடியாமல் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அது சிலருக்கு வேதனையான சந்தர்ப்பங்களாகவும் இருந்திருக்கும். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டே எப்போதும் ஒரு போராட்டத்தையோ அல்லது அதன் தலைமையையோ மதிப்பிட முயல்வது சரியானதொரு கணிப்பாக இருக்காது என்றே நான் சொல்வேன்.

விடுதலைப்புலிகள் குறித்து மார்க்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்திவரும் மதிப்பீடுகளில் மீண்டும் மீண்டும் பொதிந்திருக்கும் கருத்து, அவர்கள் ஏனைய இயக்கங்களை அழித்தார்கள், தடை செய்தார்கள் என்பது. புலிகள் மற்றைய இயக்கங்களை மட்டுப்படுத்தினார்கள், அமைதிப்படுத்தினார்கள்தான். ஆனால் அன்றைய புறச் சூழல் நிலைமைகளிலிருந்துதான் அதனை மதிப்பிட வேண்டுமே தவிர மன எழுச்சியினாலோ அல்லது யாரோ ஒரு சிலர் தமது சுய அனுபவத்தில் இருந்து சொல்வதைக் கேட்டோ மதிப்பிடக் கூடாது. டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் புளொட் தவிர்ந்த முக்கிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரு தேசிய அணியாக இணைந்து நின்றன. அவ்வாறு இணைந்து நின்ற அணிகளுக்கிடையில் எவ்வாறு பிளவுகள் தோன்றின, அதற்கு பின்னால் இருந்த றோவின் சதி முயற்சிகள் என்ன? இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் புலிகள் அழித்தார்கள் சிதைத்தார்கள் என்பது ஓர் அரை குறை பார்வையை பொதுமைப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும்.

2

அடுத்த விடயம், ஈழத் தமிழ் சமூக அமைப்பினை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயமாக காட்டுவது. அதில் முக்கியமானதுதான் தமிழக தலித்திய சிந்தனையை ஈழத்திற்கு பொருத்த முயல்வது. அதனைக் கூட சரி ஒரு சிந்தனைப் போக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதிலுள்ள மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனை பற்றி விவாதிக்கும்போது தலித்துக்கள் என்போருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது. இது பற்றி அ.மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. எக்ஸில் என்றொரு இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”

மேற்படி வாதமானது அ.மாவிற்கு ஈழ அரசியல் குறித்து எதுவுமே தெரியாதென்பதை நிரூபிக்கின்றது. முதலாவது அ.மா குறிப்பிடும் முஸ்லிம்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான தவறுகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழர் தரப்பால் விடப்பட்ட தவறுகளை சதா சுட்டிக் காட்டும் அ.மா போன்றவர்கள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரசுகளின் ஏவலாளிகளாக இருப்பது பற்றியும் தமிழரின் உரிமைகளை சிதைப்பதற்கான உப சக்திகளாக பயன்படுவதையும் ஏனோ பேச முன்வருவதில்லை. பேச்சுவார்த்தையில் சம அந்தஸ்து கோரிய முஸ்லிம் தலைமைகள் இன்று வன்னியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கும் போதும் பேரினவாத அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்களே அன்றி அதிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தயாராக இல்லை. நலன்களில் மட்டுமே சமசந்தர்ப்பம்; போராடுவதில் (சாவதில்) அல்ல.

அடுத்தது, தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியது. அ.மாவும் அவரை ஒரு தத்துவ ஆசிரியராகக் கருதும் சில புலம்பெயர் நண்பர்களும் சில வருடங்களாக ‘ஈழத்தில் தலித்தியம்’ பற்றி உரையாடி வருகின்றனர், ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு தலித்தியம் பற்றி பேசும் அவர்களுக்கோ அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அ.மாவிற்கோ ஈழத்தின் சாதிய நிலைமை பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான்.

3. ஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாகக் கருதி ஒளிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே.

ஆழமாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான். ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.

4. அதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயைப் பார்ப்போமானால், தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதிய அரசியல் அனுபவங்களையும் அரிச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போகக் கூடிய ஒன்றல்ல. அது வேறு இது வேறு.

ஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டானியலை தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டானியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டானியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டானியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டானியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டானியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று.

அ.மார்க்ஸ் இன்னொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்திருக்கிறார். “ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”. இது ஒரு அபத்தமான வாதம். இந்த வாதத்திற்கு ஆதாரம் சேர்க்க அவர் காட்டியிருக்கும் உதாரணமோ எம்.ஆர்.ஸ்டாலின். சமீபத்தில் ‘இனி’ என்னும் இணையத்தில் இந்த ஸ்டாலின் தற்போது பிள்ளையானின் ஆலோசகராக தொழிற்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான ஒருவர் ஏன் கிழக்கு பற்றி பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அ.மாவிடம் சுயசிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இப்போது அ.மார்க்ஸ்சின் தேவை தங்குவதற்கு ஒரு கூடாரம். சில புலம்பெயர்வாதிகள், புலி எதிர்ப்பு என்ற பேரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளையே எதிர்ப்பவர்கள் அந்த கூடார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அவர் வசதியாக அந்த கூடாரத்தில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசிய எதிர் அரசியலுக்கான மதிஉரைஞர் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் இது வசதியானது. ஆனால் பழ.நெடுமாறன் செய்வதோ அல்லது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்படும் தமிழக செயற்பாட்டாளர்கள் செய்வதோ கடினமானது. அதற்கு அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் தேவை. அவர்களுடன் இணைந்து கொள்வது அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு முடியாத காரியம். ஆனால் அதனை விமர்சிப்பது இலகுவானது. அதனால்தான் அவர்களது செயற்பாடுகளை எந்த குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளுக்கான முகவர் வேலையென கூறுகின்றார் அ.மார்க்ஸ். இப்படி கூறும் அ.மார்க்ஸ், அவர்சார்ந்த இன்னும் சிலருக்காக முகவர் வேலை செய்து கொண்டிருப்பதை ஏனோ மறந்துவிட்டார் போலும்.

Thanks:- தாரகா ( t.tharaga@yahoo.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

அ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்

புலிகளின் 20 விழுக்காட்டை, நூறு விழுக்காடாய் ஊதிப்பெருக்கி பழியை புலிகள் மீது சுமத்துகிற வன்மம் இங்குள்ள சிலருக்குள் ஆணிவேர் போட்டுள்ளது. இலங்கை இராசபக்சேக்களும் இந்திய மன்மோகன்களும் இந்தப் பழியிலிருந்து தப்பி விடுகிறார்கள். இலங்கை அரச பயங்கரவாதம், இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து எதைப் பேசி, எவ்வழியில் நடக்கிறார்களோ அதையே பேசுவது, அதே வழிநடப்பது என்பதைச் செய்கிறார்கள் இந்த மகானுபாவர்கள். இதற்கான ஆதாரம்- இவர்கள் எதைப் பேசுகிறார்கள் என்பதை விட, எதைப் பேசாமல் விடுகிறார்கள் என்பதில் அடங்கி உள்ளது.

புலிகளின் பாசிஸம் பற்றி மேளம் அடிப்பவர்கள், புலிகளுக்கும் முந்தி - கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த சிங்களப் பாசிசம் பற்றி மௌனம் காப்பார்கள். இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் பக்கங்களை விட, ஒளித்துவைக்கும் பக்கங்கள் அநாகரிகமானவை. இவை இவர்களை யாரென வெளிச்சப்படுத்துபவை. [Srilankan genocide]

இருபத்தேழாயிரம் பேர் விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம். ஆள் காட்டிகளின் துணையோடு முகாம்களிலிருந்து அகற்றப்பட்டதும், ஆம் அவர்கள் புலிகளே தான் என்ற குதூகலம் அரசுக்கு. இராணுவத்தால முகாம்களிலிருந்து அகற்றப்பட்டு, தனி சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 27ஆயிரம் பேர் பற்றி இவர்கள் பேசியதில்லை. 8 - வயது முதல் 14 வயது வரையுடையோர் நமக்குச் சிறுவர்கள்; இலங்கை இனவெறிக்கு அவர்கள் இளைஞர்கள். பெற்றோர்களிடமிருந்து, சேக்காளிகளிடமிருந்து விசாரணைக்காக பிரிக்கப்பட்ட 14ஆயிரம் சிறுவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எல்லோரும் கேட்டாயிற்று. இவர்கள் மட்டும் கேட்கவில்லை.

கைதுசெய்யப்பட்ட போராளித் தலைவர்கள் - பெயர் வெளியுலகுக்குத் தெரியவந்தது; ஒருவர், இருவராய், குழுக் குழுவாய் அழித்தொழிப்பு செய்ததும் உலகத்துக்குத் தெரியவந்தது. உலகமட்டம் வரை தெரிந்த சேதி - இவர்களுடைய கண்னோட்டத்தில் ஒரு கண்டன சம்பவமாகக்கூட பதிவாகவில்லை. கேட்டால் புலிகள் செய்யவில்லையா என எதிர்க்கேள்வி எழுப்பத் தயார். பதிலாய், அரசபயங்கரவாதம் பழி எடுக்கிறது என்பார்கள்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அ.மார்க்ஸ் அவர்களே?

வதைமுகாம்களில் சாகிறவர்களை, அவரவர் ஊர்களில், நிலத்தில், வீடுகளில் போய் சாகவிடுங்கள் என்று கேட்டதுண்டா? கொன்று போட்டவனின் கரங்களுக்கு பூமாலை சுற்றுவது மட்டுமே செய்கிறவர்களை எந்த மனித உரிமைப் போராளி ரகத்தில் சேர்ப்பது?

இந்தக் கட்டுரை எழுதுகிற நேரத்தில் தினமணி நாளிதழில் (9.9.2009) “இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்குக் காரணம்” - எனும் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் - 19.8%

இலங்கை அரசு - 21.33%

இந்திய அரசு - 58.69%

- மக்களின் கருத்துக்கள் முடிவுகளாய் வந்துள்ளன.

தமிழகத்தில் செயல்படும் பலமனித உரிமை அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து ‘வன்னி வதைமுகாம் தமிழர் விடுதலைக்கான இயக்கம்’ என்றொரு அமைப்பை சென்னையில் உருவாக்கியுள்ளன. மூன்று தீர்மானங்கள் அடிப்படையில் செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. தமிழகத்தில் பரப்புரை செய்து, எழுச்சியை உருவாக்கி அழுத்தம் தருவது.

2. இந்தியாவில் பிற மாநிலமனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு - இந்திய அளவில் விழிப்பை உருவாக்குதல்.

3. இராசபக்சேக்களை போர்க் குற்றவாளிகள் என விசாரித்து தண்டிக்க - ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் செல்வது.

என மூன்று நடைமுறைகளை மேற்கொள்ளும் நேரத்தில், இலங்கையில் இதே முனைப்போடு செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களை அழைத்து இங்கே பேச வைப்பது, அவர்களை நம்முடன் இணைந்து செயல்பட வைப்பது. இந்த குரலில் ஒன்றில் கூட உங்கள் குரல் காணப்படவில்லையே அ.மார்க்ஸ் அவர்களே!

நீங்கள் எப்போதுமே தன்னடையாளத்தை முன்நிறுத்தி தனித்து செயற்படும் நபர். இவர்களோடு இணைய முடியவில்லை என்றால் அவர்கள் எழுப்பும் இந்தக் குரல்களில் ஏதாவது ஒன்றையாவது நீங்கள் எடுத்துக் கொண்ண்டிருக்க வேண்டும். தன்னடையாளத்தை எப்போதுமே பிரதானப்படுத்தி வருகிற நீங்கள் தனியாக மனித உரிமைத் தளத்தை உருவாக்கி உடுக்கடித்திருக்கலாமே! தனித்து செயற்படும் உங்களுடன் இணைந்து செயற்பட்டதால் நாம் அறிந்தவை இவை. இம்மாதிரி அனுபவத் தொகுப்பின் அடிப்படையில் பாவப்பட்ட வன்னிமுகாம் மனிதர்களை மீட்க குரல் கொடுத்திருக்கலாம்.

அம்னெஸ்டி இன்டர்நேசனலின் முன்னாள் இயக்குனரும் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் மனித உரிமைத் தளத்தில் செயல்படுகிற ஒருவர். மனித உரிமைத் தளத்திலேயே நடந்து, இனப்படு கொலைக்கு தீர்வு என்னவாக இருக்கமுடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்”

(தலித் முரசு ஜூலை 2009 - பேராசிரியர் பாய்ல் நேர்காணல்)

மனித உரிமைத் தளத்தில் நீங்கள் ஒரு நேர்மையான பயணியாக இருந்திருந்தால், பிரான்சிஸ் பாய்ல் வந்தடைந்த அந்தப் புள்ளியில் வந்து சேர்ந்திருப்பீர்கள். நீங்களோ விடுதலைப் புலிகளின் மீதான வன்மத்தை ஒரு இனத்தின் விடுதலைப் போருக்கு எதிராக மாற்றியுள்ளீர்கள்.

நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து மேடை தயார் செய்கிறீர்கள். ஷோபா சக்திகளுடன், சுகன்களுடன் கூட்டாய் சேர்த்துக் கொண்டு விடுதலைப்போராட்டத்திற்கு எதிராய் விதைதூவச் செய்கிறீர்கள்.

“அவர்கள் புலிகளின் அரசியல் தவறுகளைப் பற்றிப் பேசுவதின் வழியே தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மாபெரும் இனப்படுகொலையை சமன்படுத்தி விடக் கூடும்.” என கவிஞர் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல் பணியாற்றும் இந்த இலங்கையர்களை தமிழகம் அழைத்துவந்தீர்கள்.

“இந்தக் காயம், இந்த வீழ்ச்சி - புலிகளின் வீழ்ச்சி அல்ல. வேட்டையாடப்பட்ட சமூகத்தின் வீழ்ச்சியின் சரித்திரம் இது” - மனுஷ்யபுத்திரன் போல ஆவேசம் கொள்ள முடியாத நீங்கள் எதிர் நிலையில் நின்று கொண்டாடுகிறவர்களுக்கு தளம் உண்டாக்கித் தருவீர்கள்.

வீரச் சாவுகளுக்கு எதிர் நிலையில் நின்று மரணத்தைக் கொண்டாடும் மனம் பாசிஸ்டுகளுக்கு மட்டுமே வாய்க்கும். ஒரு இலட்சம் மனிதர்கள் சர்வதேச அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட நிகழ்வு - ஒரு இனத்தின் இரத்தசாட்சியமாக உணரப்படாமல், துயரங்களின் சாம்பலில் கும்மியடித்துக் கொண்டாடும் மனத் துணிவு இனவெறியர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்குக் கிட்டும்?

II

கடந்த ஆறேழு மாதங்களாக ஈழத்தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் பரவலாய் ஏற்பட்ட எந்த எழுச்சிகளிலும் அ.மார்க்ஸின் முகம் இல்லை. இனப்படுகொலை முற்றுப் பெற்று, ஈழப்பிரதேசம் அவலத்தின் உச்சத்தில் நிற்கிறபோதும் இவருடைய குரல் இல்லை. ஆனால் மரணவாசனை உலக நாசியைப் புடைக்கச் செய்யும் சூழலிலும், விடுதலைப் புலிகள் மீதான அ.மார்க்ஸின் வன்மம் தீர்ந்த பாடில்லை.

இவருக்கும், இவரைப் போல் குரல் தரும் ஷோபாசக்தி, சுகன், சுசீந்திரன், புதிதாய் இணைந்து கொண்ட ஆதவன் தீட்சண்யா வகையறாக்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. பாசிசம் இவர்களை உள்வாங்கி அங்கீகரித்துக் கொண்டதின் இன்னொரு பக்கம்தான், சிங்களப் பாசிசத்தை நேரடியாய் கண்டிக்காத, அதற்கென அணிதிரளாமல் இருக்கிற இவர்களின் செயல்.

லசங்த விக்கிரமதுங்கே - என்ற உலகறிந்த ஊடகவியலாளர் படுகொலை, யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பதை உலகறியும். தன் கொலைக்கு முன் அவர் எழுதிவைத்துச் சென்ற மரண சாசனத்தையும் உலகறியும். அந்தக் கொலையைக் கூட புலிகள் செய்திருப்பதாக சந்தேகப்படுகிறார் சுகன். ‘வாழ்க நீ எம்மான்’ என கருணா அம்மானுக்கு வாழ்த்துப் பா இசைக்கிறார். லண்டன் புகழ் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதல் ஜெர்மனியின் சுசீந்திரன் வரை பங்கேற்ற திருவனந்தபுரத்தில் ஒரு திங்கள் முன்பு நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இலங்கை அரசாங்கச் செலவு 60 இலட்சம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்த புலம்பெயர் அறிவு ஜீவிகளை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய அழைக்கிறது. வரிந்து கட்டிக்கொண்டு இவர்கள் முதலில் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள். தமிழ்த் தேசியம், இஸ்லாமியத் தேசியம் எல்லாவற்றுக்குமான அச்சுறுத்தலாக சிங்களத் தேசியம் மாறியுள்ளது அது தேசியத்திலிருந்து பாசிசமாக உருக்கொண்டுள்ளது. நாமெல்லாம் இலங்கையர்கள் என்னும் மஹிந்தராசபக்சேயின் அழைப்பு - பிற இனங்களை மயிருக்குச் சமமாக கருதும் குரல்தான். இலங்கையர் எனும் ஒற்றை அடையாளம் போதுமென்றால் மதம் சார்ந்த குழும அடையாளத்துக்கு, வட்டார அடையாளத்துக்கு (மலையகம்), தலித் அடையாளத்துக்கு எந்த வித அவசியமும் இல்லை. தமிழ்த் தேசியம் பேசியவர்களைக் கொன்றொழித்த சிங்கள தேசியம், பிற அடையாளங்களையும் கொன்றொழிக்கும். பிற தேசியங்களை இலங்கையில் ஒரு புள்ளி கூட இல்லாமல் அழிப்பதற்குரியவன் யார்? இன்றைய மஹிந்தாதான். இவனை விட உயரம் கூடியவர்களாக எதிர்கால மஹிந்தாக்கள் வருவார்கள். மக்களை சனநாயகத்துக்கு எதிரானவர்களாய் பயங்கரவாதியாய் கருதும் உலக அரசுகள், தமிழ் மக்களையே பயங்கரவாதிகளாய்க் காணுகிற இலங்கைக்கு துணையாகின.

அனைத்துத் தேசியங்களையும் அடக்கும் சிங்களத் தேசியத்தைக் கண்டிக்கும் அவசியத்தைக் கருதாமல் பேராசிரியர் சிராஜ் மசூரை அழைத்து வந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் புலிகள் என்று பேச வைப்பது தனக்கிருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தக் கையாளுகிற உத்தியாக மட்டுமே மிஞ்சும். சிராஜ் மசூரின் கணிப்பில் விடுதலைப்புலிகள் மட்டுமே ஆயுதக் குழுக்களாம். இலங்கையிலிருந்து இங்கு வந்து, இலங்கையின் தூதுவராய் எதை வேண்டுமானாலும் பேசலாம்; கேள்விகேட்க நாதியில்லை எனத் துணிந்து விட்டார் போல.

புதுவிசை இதழில் (2009 - ஜூலை-செப்டம்பர்) இலங்கையில் ‘இஸ்லாமிய ஜிகாத் ஆபத்து என்று பாலசந்திரன் போன்றோர் எழுதுகிறார்களே என்ற கேள்விக்கு “புலிகளுக்கு பிந்திய சூழலை ‘இஸ்லாமிய ஜிகாத்’ என்ற போலிக் கண்டுபிடிப்பின் மூலம் மாற்றீடு செய்யலாம் என சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன... தனது மனஅரிப்புகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறான புதிய அபாயங்களை இவர்கள் கட்டமைக்கின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

இல்லாத ஒன்றைக் கட்டமைப்பது அல்ல இருக்கிற ஒன்றைத்தான் பாலசந்திரன் போன்றோர் எடுத்து வைக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராய் அவர்களை ஒழிக்கவும் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அரட்டி ஒடுக்கவும் இலங்கை ராஜதந்திரிகளால் பாகிஸ்தானிய மூளையால் உருவாக்கப்பட்ட ஜிகாத் அமைப்பினர் ஆயுததாரிகளாய் வலம் வந்தார்கள். ஆயுதங்களால் பேசினார்கள். அரசாங்கத்தின் ஆசியில் ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கியாகி விட்டது. இன்று ஜிகாத் அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களைவது எப்படி என்பது அரசபயங்கரவாதத்துக்கே பெரும் சிக்கலாகியுள்ளது. ஜிகாத் அமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அது முடிந்துவிட்டது (புலிகள் அழிப்பு) இனி ஜிகாத் அமைப்பினர் ஆயுதக் குழுவாக செயல்படாமல், ஒரு மத அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று கெஞ்சும் வேண்டுகோள் அரசிடமிருந்து வெளியாகி ஊடகங்களிலும் இடம் பிடித்தது. இத்தனைக்குப் பிறகும், யதார்த்தத்தை மறைக்கிற. அறிவுஜீவிப் பணியை சிராஜ் மசூர் தன்தோள் மேல் எடுத்துப் போட்டுக் கொள்கிறார்.

“போர் உக்கிரமாக நடைபெற்ற சூழல் ஆயுத சூனிய சூழலாக இருக்குமென்று யாரும் கனவு காணத் தேவையில்லை” என்று ஆயுதக் குழுக்கள் நீடிப்பதற்கான நியாயத்தை முன்வைக்கிறபோது, இதற்குமுன் ஒரு பொய்யை முன்னுரைத்தார் என்பது வெளிப்பட்டுப் போகிறது. இதையேதான் நாங்களும் பேசுகிறோம். ஒடுக்குமுறை எல்லை கடந்து விட்டபோது, ஒடுக்கு முறைக்கு எதிரான எதிர்வினைகள் அழகானவையாக இருக்க முடியாது என இதையே தான் நாங்களும் முன்வைக்கிறோம்.

நாங்கள் மட்டுமே இதைப் பேசவில்லை. இந்தியாவிலுள்ள தாரிக் அலி போன்ற இடது சாரிகள், தீர்க்கமாய் இதைப் பரிந்துரைக்கிறார்கள். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்கையில், உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது” என்கிறார் தாரிக் அலி.

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்கள், ஈராக்கியர் நடத்தும் கார்க் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த வாசகம் பொருந்துமானால் விடுதலைப் புலிகளின் எதிர்வினைக்கு ஏன் பொருந்தாது?

III

[Eelam refugees]

அ.மார்க்ஸின் புதுவிசை (ஜூலை - செப்டம்பர் - 2009) கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு, சில விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாய்க்கு வந்தபடி பேசுவது போலவே கைக்கு வந்தபடி எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் அது. புதுவிசை இதழ் சனநாயகத்தின் மிகப் பெரிய திறந்த வெளி என கருதப்படுவதால், புதுவிசையின் சனநாயக வெளியைச் சோதிப்பதற்காக இக்கட்டுரையை புதுவிசைக்கும் அனுப்பியுள்ளேன்.

புதுவிசையில் அ.மார்க்ஸ் எழுதுகிறார்: தமிழ் அறிவு ஜீவிகள் மத்தியில் மரண அமைதி நிலவுகிறதாம்; அதையும் வேறொருவர் சொல்லி வருத்தப்பட்டாராம். பொய் பேசுகையில் மற்றொருவரை துணைக்கழைத்துக் கொள்வது அ.மார்க்ஸின் வழக்கம். தனது குடும்ப அட்டையைத் அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக கன்னியாகுமரியிலிருந்து ஒரு எழுத்தாளர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாராம். எழுத்தாள நண்பர் பெயரைத் துணிவாய்க் குறிப்பிட வேண்டியது தானே? தான் முன்வைக்க வருகிற கருத்துக்கு இட்டுக்கட்டல்களை முன்வைப்பது அ.மார்க்ஸின் சிந்தனைக் கலாச்சாரத்தின் ஒரு கூறு.

அலட்சியப்படுத்தப்பட்ட சில பிரச்னைகளை முன்னிறுத்திப் போராடும் மக்கள் - குறிப்பான போராட்ட வடிவமாக ரேஷன் அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கின்றனர். அவர்களது ஒற்றுமையை எடுத்துரைக்கும் புதுமையான, யுக்தியான போராட்ட முறை இது. தான் சொல்லவருவதற்கு வலுச் சேர்க்க அதையும் கொச்சைப்படுத்துகிறார்.

எழுத்தாளர்களின் ஆறுமாதகால பருவ நிலையை கணிக்கிற வானிலை அதிகாரியாக தன்னைத் தீர்மானித்துக் கொண்டார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிக் கணிப்பது - இவருக்கு அல்வா சாப்படுவது போல. கணிப்பு அல்ல, விமர்சனமும் அல்ல, அவதூறுகளின் மட்டத்துக்கே அது மிஞ்சும்.

அ.மார்க்ஸின் பெரும்பாலான ஒதுக்குதல்கள், அரவணைப்புகள் பிரச்னையின் தாரதம்மியத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. தனி மனிதர்கள் மீதான அவருடைய வெளிப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் மீது எழுபவை. பிறரோடு கொள்ளும் உறவையும் இந்த வகையிலேயே அமைத்துக் கொள்வார். நேற்றிருந்தார் இன்றில்லை, இன்றிருப்பார் நாளை இல்லை - இவருடைய அறிவு ஜீவிப் பயணிப்பில்.

புதுவிசை கட்டுரையில், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மீது தனக்குப் பெரிய மரியாதை கிடையாது எனத் தெரிவிக்கிறார். இவர் எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் தமது பணியை முன்னெடுக்கவில்லை. தமக்கு ஒரு சமுகக் கடமையுள்ளது எனத் தீர்மானித்து போரை நிறுத்து என ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டத்தையும் பின்னர் தொடர்ச்சியான பணிகளையும் மேற்கொண்டனர். போர் என்ற பெயரில் நிறைவேறிய இனப்படுகொலையைக் கண்டித்து இருமாதங்கள் முன்பு பேரணி நடத்தினர். அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுடைய இவரால் அவர்களுடன் இணைய முடியவில்லை. ஈழப் போராட்டம் பற்றி, ஈழவிடுதலைப் போராளிகள் பற்றி இவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது தான் அதற்கு ஆதரவானவர்கள் மீதும் எந்த மரியாதையும் கிடையாது என்பதாக வெளிப்பட்டிருக்கிறது.

நக்கீரன், ஜீ.வி, ரிப்போர்ட்டர் போன்ற வாரஇதழ்கள் வியாபாரப் போட்டியில் கடந்த ஆறுமாதங்களாக புலிகளைப் பற்றிய செய்திகளை - ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை வெளியிட்டன என்கிறார் அ.மார்க்ஸ். வார இதழ்களுக்கிடையேயான வியாபாரப் போட்டியை நாங்கள் அறிவோம். நக்கீரன் - வெளிப்படையாக புலிகளை வைத்து - வியாபாரம் பண்ணுவதையும் அறிவோம். அதனுடைய ஒற்றைத் தனத்தோடு எல்லா இதழ்களையும் சமனப்படுத்தி விடக்கூடாது.

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், புலி ஆதரவு மாவோயிசம் பேசும் இளைஞர்கள் நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பதில்லை என்கிறார். தமிழ் நாட்டின் நாளிதழ்கள் மட்டுமல்ல இந்திய நாளிதழ்களும் இராசபக்சேயிசம் பேசின; பரப்பின. இலங்கை அரசும் இந்திய ஏகாதிபத்திய அரசும் என்ன கொடுக்கிறரர்களோ அந்தச் செய்திகளை அப்படியே ‘ஈயடிச்சாங் காப்பி’ பண்னின. எந்த நாளிதழ்களைத் தேடிப் படிக்கச் சொல்கிறார்? தினமலரையா? தினமணியையா? தி ஹிந்துவா, இன்டியன் எக்ஸ்பிரஸ்ஸா? ஈழப்பிரச்னை பற்றி துளி அக்கறையும் காட்டாத இந்திய நாளிதழ்களில் எதைத் தேடி இளைஞர்களை வாசிக்கச் சொல்கிறார்?

அதே பொழுதில் வார இதழ்கள் ஓரளவு சுயத்தன்மையுடன் அவர்களே தேடி, விசாரித்து எடுத்த ஈழச் செய்திகளைத் தந்தனர். அதனாலேயே கடந்த ஐந்தாறு மாதங்களில் அவைகளின் விற்பனை பெருகின. களப்பிர தேசத்திலிருந்து தமிழகத்தை ஏதோ ஒருவகையில் வந்து சேரும் சிலரையும் பலரையும் சந்தித்து செய்திகள் சேகரித்து, அலசி, பெருமுயற்சிக்குப் பின் வெளியிட்ட வார இதழ்ககளின் இந்த நடைமுறைக்கும், இலங்கை இந்தியா நாடுகளின் ஊதுகுழல்களாகச் செயற்பட்ட நாளிதழ்களின் நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாகக் காணமுடியும். வாரஇதழ்கள் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவாகவும் அந்த மக்கள் பக்கம் இருந்தன என்பதும் இயல்பானது. அதன் காரணமாகவே அ.மார்க்ஸுக்கு ஏற்படுகிற ஆத்திரமும் இயல்பானது. இலங்கைப் பாசிசத்தின் தூண்களாய் செயற்பட்ட இந்திய நாளிதழ்களை தேடிப் படியுங்கள் என்று அவர் சொல்வது ஒன்றை உறுதிப்படுத்துகிறது. அவருடைய இந்தப் பார்வை அவரை நோக்கியே விரல் நீட்டுகிறது. “நீர் ஒரு விடுதலை எதிர்ப்பாளர்”

அவர் குற்றம் சுமத்துகிற தமிழ்த் தேசியர்கள், புலிகளின் முகவர்கள் இதையே வேறொரு மொழியில் சொல்வார்கள். “நீரொரு தமிழினப் பகைவர்”

இதன் பொருள் வேறொன்றுமில்லை. மக்களின் எதிரி என்பதே.

கிறித்துவப் பாதிரிமார்கள், போதகர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத்தமிர்களுக்கு ஆதரவாக இருமாதங்களுக்கு முன் உண்ணா நிலைப் போராட்டம் நடத்தியபோது தொடங்கிவைக்க இவரை அழைத்தார்களாம். அழைத்திருக்கக் கூடாது; அழைத்தார்கள். இவரும் போயிருக்கக் கூடாது, போனார். ஏனெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் அது. ஈழத்தமிழருக்கு ஆதரவாய் போரை நிறுத்து என்ற முழக்கம் விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவானது தானே என்று அவர்களும் நினைத்துப் பார்க்கவில்லை, இவரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கிறபோது மட்டுமே எந்த மேடையையும் பயன்படுத்திக் கொள்வது என்ற சந்தர்ப்பவாதம் இல்லாமல் போகும்.

முதிய வயதில் முதல்வர் கருணநிதி ஓய்வு பெறுவது நல்லது என்ற கருத்தை பரிக்ஷா ஞாநி முன்வைத்தார். இன்ஸ்டன்ட் காப்பி என்பது போல் ஞாநியை சாடுவதற்காகவே உடனே ஒரு புதிய அமைப்பை உருவாக்கி அதன் பேரில் வாணிமகாலில் ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்தார்கள். அதில் ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), இமயம், அ.மார்க்ஸ் போன்றோர் பங்கேற்றார்கள். என்னையும் பங்கேற்குமாறு தொலைபேசியில் கேட்டார்கள். ‘ஞாநி எழுதிய அந்தக் குறிப்பிட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அதனால் கலந்து கொள்ள இயலாது’ என மறுத்தேன். அ.மார்க்ஸ் கலந்த கொள்கின்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளித்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டபோது, “என்ன இருந்தாலும் ஞாநிக்குள் ஒரு பார்ப்பன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கலைஞரைப் பற்றி விமரிசிக்கிறபோது எதிர்வினையாற்றுகிற இவர்கள் பெரியாரை காமுகன், பெண் விடுதலைக்கு எதிரானவர் என்று பழிசுமத்திய போது எங்கே போய் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பப் போகிறேன்” என்றார். அவ்வாறு பேசியதாகவும் நான் கேள்விப்பட்டேன். கலைஞரைத் தாக்கி எழுதியதைக் கண்டிப்பது மட்டுமே ஏற்பாட்டாளர்களின் நோக்கம். இதை தாண்டி வேறொரு பிரச்னையை அங்கு பேசுவது விவாதிப்பது அவர்களின் நோக்கம் அல்ல. அதனால் அவர்கள் அதற்குப் பதிலளிக்கவும் இல்லை. இதிலிருந்து கூட்ட ஏற்பாட்டாளர்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவதை விட, எந்த அரங்கையும் பயன்படுத்தி தனது அறிவாளி மேன்மையை நிறுவுகிறவர் இவர் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

புலிகள் எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் உறுதியாய் நின்றிருந்தால் கூட கிறித்துவ பாதிரியார்கள், கன்னியர் நடத்திய ஈழ ஆதரவு கூட்டத்துக்கு அ.மார்க்ஸ் போயிருக்கக் கூடாது. அந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சரசுவதி பேசிய பேச்சில் சென்னையில் நந்தம்பாக்கத்தில் பாதுகாப்புத் துறை மருத்துவனையில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தான் கூறும் செய்திகள் ஆதாரபூர்வமானவை என வலியுறுத்தியதாகவும் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் வரும் கேள்வி தான் மிகப்பெரிய முரண் நகைச்சுவை.

“பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை?” என்று அ.மார்க்ஸ் எழுப்புகிற கேள்விதான் அது. என்ன அபத்தம்! பெரியார் தி.க.வினர் ஈழ ஆதரவுப் போராட்டங்களை மட்டுமே நடத்தவில்லை. இந்திய அரசுக்கு எதிராக – விமான நிலையத்தை முற்றுகையிடுதல், மத்திய அரசின் வருமான வரி அலுவலகங்களை இழுத்துப் பூட்டுதல், ஆயுதங்களுடன் வந்த இராணுவ லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தல் என அவர்கள் தொடர்ந்து போராடித்தான் வருகின்றனர். அ.மார்க்ஸ் போல் அறிக்கை விட்டு காணாமல் போகிறவர்கள் அல்ல.

அ.மார்க்ஸ் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்மை அறியும் குழு அமைப்பார். விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். மனித உரிமைத்தளத்தில் அதன்பின் மூச்சுக் காட்ட மாட்டார். ஏப்ரல் 2008-ல், கருத்துரிமைக்கான மனித உரிமைகளின் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் அமைப்பாளர் அ.மார்க்ஸ்.

“மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்க்கும் விதமாக இனி கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் அதற்கு போலீஸ் அனுமதி வாங்கமாட்டோம். என்ன செய்கிறது இந்த அரசு என்பதையும் பார்த்து விடுகிறோம்” என்று அரசுக்கு அறைகூவல் விடுத்தார். பாராட்டுக்குரியது. ஆனால் அரசு தொடர்ந்து கருத்துரிமைப் பறிப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பின் எத்தனை நிகழ்வுகளை அ.மார்க்ஸ் அனுமதியில்லாமல் நடத்தினார்? உண்மையில் தமிழ்தேசிய உணர்வாளர்கள் தான் அனுமதியின்றியும், தடையை மீறியும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அ.மார்க்ஸ் உருவாக்கிய எத்னையோ அமைப்புக்கள் எந்த செயற்பாடுகளும் அற்று முடங்கிக் கிடக்கின்றன. அமைப்பு உருவாக்கியதாக அறிக்கை வரும். அதன் பின் அனாதையாய் அந்த அமைப்பு விடப்படும். அறிக்கை விடுதல் - அதன் பின் செயலற்ற தன்மை - இது தான் அ.மார்க்ஸ். எந்தப் போராட்ட களத்திலும் தெண்பட மாட்டார். அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பது ஒரு செயல் தன்மையாக ஆகிவிடுமல்லவா? இவர் மட்டுமல்ல, இவருடைய சீடர்கள் எனப்படும் ஷோபா சக்தி போன்ற ஆட்களும் அறிக்கை திலகங்கள் என்று பெயரெடுத்தவர்கள் தாம். இவர்கள்தான் தொடர்ச்சியாக களத்தில் நிற்கும் பெரியார் தி.க. மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது சேற்றை வாரியிறைக்க முற்படுகிறார்கள்.

அ.மார்க்ஸின் கற்றல் நேர்மை, சிந்திப்பு நேர்மை, செயல்பாட்டு நேர்மை ஆகியவை குறித்த கேள்விகள் முக்கியமானவை. கற்றதும் பெற்றதுமான கருத்து எந்தச் சூழலுக்கு சொல்லப்பட்டதோ அதில் இருந்து பிரித்து வேறொன்றிற்குப் பொருத்தி விடுவதை ஒரு புதிய கண்டுபிடிப்புப் போல செய்வது அதன் பயன்பாட்டு நேர்மை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. புதிதாக கற்றுப் பெற்ற ஒன்றை உடனே தன் சுயசிந்தனையிலிருந்து பெற்றது போல் இறக்கி வைத்து விடுவது சிலருக்கு கைவந்த கலை. எந்த விசயத்திலும் தானே அத்தாரிட்டி என்ற அறிவின் கர்வம் உச்சமாக வெளிப்படும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் நடைபெற்ற அரங்கில் ருசியாவில் நிலவிய சர்வாதிகாரத்திற்கு வித்திட்டவர் லெனின் என்று பேசினார். அந்த இடத்திலேயே அவருடைய கருத்துக்கு எதிர் வினையாற்றியிருக்க முடியும். நிகழ்ச்சியின் தன்மை குறித்தும், அரங்க நாகரிகம் கருதியும் அமைதி காத்தோம் - அதற்கு முன்னான தருக்கம் எதுவுமின்றி, திடு, திப்பென்று ஒன்றை கையெறி குண்டாய் வீசி விட்டு போய்கொண்டிருக்கிற ஆத்மா அவர். அதன் பின்னான உரையாடல், விவாதம், விளக்கம் எதற்குமே இடமில்லை.

உலகமயமாதல் இன்றைய காலத்தின் அவசியம்; அந்த ஜோதியில் கலப்பதற்கு அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என வக்காலத்து வாங்குவார். தலித்துகள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பார். தலித்துகளின் வாழ்வு நிலை பூமிக்கு அடியில் இருக்கிற போது, ஆரம்பக் கல்வி கூட வாய்க்கப் பெறாமல் அவலம் நிலவுகிற போது தலித்தோ அடித்தட்டு மக்களோ ஆங்கிலத்தை கைப்பற்றுவது எங்ஙனம் என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதற்கான எந்தப் பதிலும் அவருடைய விவாதத்தில் இருக்காது.

இறுதியாக ஒன்றைச் சொல்லி வைப்போம். சிதிலங்களில் இருந்து மேலெழுந்து வருவது பற்றி சமூக விஞ்ஞானி சிந்திப்பான். அவ்வாறு இல்லாமல் மாட்டுப்புண்னைக் கொத்திக் கொண்டேயிருக்கும் காக்கை போல் இருப்பவன் குதர்க்க விஞ்ஞானி.

“மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக் கோட்பாடுகள், உரிமைச் சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளன. இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்யக் கோருகிறது. அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.”

ஈழம் - விடுதலைக்கான இறுதிக் கணக்கீடு - என்ற கட்டுரையில் சிதிலங்களில் இருந்து மேலெழும் பார்வையில் பிரபா எழுதிய அறிவாந்திரமான சிந்திப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதுதான் புதிய சிந்தனையின் அடையாளம். வாய் புளித்ததோ கைபுளித்ததோ என்று விமர்சனம் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்குரிய சிந்தனைகளை முன்வைப்பது மட்டுமே சமூகவிஞ்ஞானம்.

Thanks:- சூரியதீபன் ( jpirakasam@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Monday, April 12, 2010

கச்சத்தீவு - திரும்பப் பெறுவதே நிரந்தரத் தீர்வு

கச்சத்தீவு... நம்மில் பலருக்கும் இது ஒரு சர்ச்சைக்குரிய தீவாகவே காட்சியளிக்கிறது. ஆம் இங்கு மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை இலங்கை ரானுவம்(கடற்படை) ஏதோ குருவிகளை Fishermenசுட்டுத்தள்ளுவதைப் போல சுட்டுத்தள்ளுவதும், பிடித்துப்(கடத்தி) போய் சிறையிலடைப்பதுமாய் தனது சேட்டைகளை அரங்கேற்றி வருகிறது. நாளுக்குநாள் தனது வன்முறை எல்லையை விரித்துக் கொண்டே போகிறது. பாவம் தமிழக மீனவனை காப்பாற்றத் தெரியாமல் ஏதோ சர்வதேச பாதுகாப்பில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு கடல் பகுதியில் சிங்கள ராணுவத்தால் பறிபோகும் தமிழனின் உயிரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன மாட்சிமை தங்கிய இந்திய கடலோரக்காவல்படையும், கப்பல் படையும்.

தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் குண்டடிபட்டு பலியாகிக் கொண்டிருக்கும் இந்திய(தமிழக) மீனவனை இந்திய அரசாலோ, இந்தியக் கடற்படையாலோ காப்பாற்றிட முடியுமா? என்ற கேள்வி மட்டும் மீனவர்களிடம் இன்றளவும் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவர்களின் கேள்விக்கு பதில் தான் இல்லை இந்திய அரசிடமிருந்து. இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆயிரம் மீனவர்களை ஒரே நேரத்தில் பிடித்துச் சென்று விசாரணை என்ற பெயரில் முடிந்தளவிற்கு கொடுமைப்படுத்திவிட்டு பிறகு விடுவித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. .

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே கடல் எல்லை வரையறை செய்யப்பட்ட பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கத் துவங்கியுள்ளது. 1974 ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்திற்கு முன்னர் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையே எந்தவிதமான பிரச்சனையும் ஏற்பட்டதே இல்லை. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் கடல் எல்லை வரையறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதே நேரம் இருநாட்டு மீனவர்களும் எந்தவிதமான பிணக்குமின்றி மீன்களை பிடித்து வந்துள்ள வரலாறும் உண்டு. அதே நேரம் ஒப்பந்தத்திற்கு பிறகு மீன் பிடிப்பதில் நிலைமைகள் மாறியுள்ளது.

1974ம் வருடத்திய ஒப்பந்தம் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதையோ, கடற்பகுதியில் மீன் பிடிப்பதையோ, மாதா கோவிலுக்கு செல்வதையோ, மீன் பிடிக்கும் போது ஓய்வு எடுத்து வலைகளை உலர்த்துவதையோ தடுக்காததால் சக்கத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்திய மக்களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. நிம்மதியாக தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கையில் 1983 ம் ஆண்டுக்கு பிறகு புலிகளுடன் மோதல் ஏற்பட்டதையடுத்து தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் என்பது தொடங்கியுள்ளது.

ஒரே நேரத்தில் இந்திய, இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்கள் என்பது தொடரத் தொடங்கியுள்ளது. புலிகளைக் காரணம் காட்டியே பல நேரங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர் இலங்கை கடற்படையினர். அதே நேரம் இலங்கையில் இருதரப்பினருக்கும் இடையே சண்டை நிறுத்தம் இருந்த காலங்களில் கூட தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் மட்டும் தொடர்ந்துள்ளன. ஆனால் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தான் அதிகளவில் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் பலமுறை நடந்த நிலையிலும் தமிழக சட்டசபையில் பல நேரங்களில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இலங்கை அரசு மட்டும் செவிசாய்த்தபாடில்லை.

2006 ம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் அப்பாத்துரை இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது உண்மையெனில் மீனவர்களைக் காக்க, மீன் பிடி உரிமையை நிலைநிறுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் இ.அகமது 1974ம் வருட ஒப்பந்த கடல் எல்லைபடியும், 1976 ம் வருடத்திய இரு நாடுகளும் பரிமாறிக் கொண்ட கடிதங்களின் படியும் இலங்கைக்கு சொந்தமான கடற்பகுதியலும், வரலாற்று ரீதியிலான மீன் பிடி உரிமையுள்ள பகுதிகளிலும் இந்திய மீனவர்களோ, மீன் பிடி கப்பல்களோ, சென்று மீன் பிடிக்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.

அதே நேரம் மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி 1974 மற்றும் 1976 ஆண்டு ஒப்பந்தங்களின்படி எல்லைக்கோட்டில் இலங்கைப் பகுதியில் தான் கச்சத்தீவு உள்ளது. ஒப்பந்தங்களும் நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் கச்சத்தீவிற்கு செல்லும் உரிமை என்பது அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடியதல்ல என்று குழப்பியுள்ளார். இப்படி தமிழக மீனவர்களின் நலன் இலங்கையிடம் இறையாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தெளிவில்லாத நிலைப்பாட்டின் காரணமாக நமது மீனவர்கள் மீது இலங்கையின் Fishermen2கொலைவெறித் தாக்குதல்கள் என்பது தொடர்கிறது. இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்ததால் தான் சுட்டோம் என்று ஓலமிட்டுக் கொண்டும் வருகின்றனர். பாக் நீரினைப் பகுதியில் காவல் காக்கும் மூன்று கடலோரக் காவல்படை கப்பல்களும். இந்தியக் கப்பல்படையின் போர்க்கப்பலும் ஏன் தமிழக மீனவர்களின் பக்கம் திரும்பவில்லை என்ற கேள்வியும் தற்போது எழத் தொடங்கியள்ளது. புலிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவாமல் தடுக்க்க் காவல் காத்து வருகிறோம் என்று கூறுபவர்கள் ஏன் இலங்கை படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்கவில்லை? புலிகளை தடுப்பது மட்டுமே தங்களின் பணி என்று அவர்கள் உள்ளனரோ?.

தற்போது அன்றாடம் தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொலை, கடத்தல், மாயம் என்பது தமிழகம் மட்டுமின்றி சர்வதேச பத்திரிகைகள் அனைத்திலும் தொடர் பார்வையாக மாறிவிட்டது. அதே நேரம் கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் முழங்கத் தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாக்கக் கோரியும், கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து.ராஜா நாடாளுமன்றத்தில் உரத்தக் குரலில் பேசியுள்ளார், அவர் சார்ந்த இயக்கமோ தமிழகத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கங்களை நடத்தியதுடன் அண்மையில் சென்னையிலுள்ள இலங்கை துனைத் தூதரகத்தின் முன் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி கைதாகியுள்ளனர்.

தி.மு.க.வினரோ தமிழகம் முழுவதும் உண்ணாவிரதத்தை நடத்திய நிலையில் அதன் தலைவர் மு.கருணாநிதியோ கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அ.தி.மு.க தலைவி ஜெ.ஜெயலலிதாவோ கச்சத்தீவ ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆக தமிழக அரசியலார்கள் அனைவரும் கிட்டத்தட்ட கச்சத்தீவு பிரச்சனையில் தனித்தனியாக நின்றாலும் ஓரணியிலேயே உள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்திலும், தமிழக மீனவர்கள் விசயத்திலும் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு இனிமேலாவது விழிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நமது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 1974 ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கேவுக்கும் இடையே எற்படுத்தப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்றும், ஒப்புதல் பெற்றாகிவிட்டது என்றும் இருவேறு விதமான கருத்துக்கள் உலவுவரும் நிலையில் பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து போர்பாணி யூனியனையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பான இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் எந்தவொரு பகுதியையும், மற்ற நாட்டிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 368 வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுளதா என்பதை தற்போதைய மத்திய அரசு ஆய்வு செய்து இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே முறையான ஒப்புதல் பெற்றிருந்தாலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதிலும் தவறேதும் இல்லை. எனவே மத்திய அரசு அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தமிழக மீனவர்களை காப்பதிலும், நமககுள்ள உரிமையை நிலைநாட்டுவதிலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மட்டும் அனைத்து தரப்பினரும் உணரவேண்டும்.

Thanks: - மு.ஆனந்தகுமார் ( anandhammu@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

நூற்றாண்டுக்கால பொய் - வெளிப்படத் துவங்கும் தடுப்பூசி உண்மைகள்

1.

மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அவற்றைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற டாக்டர்.புகழேந்தியின் குரல் தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் அவ்வப்போது ஒலித்து அடங்கும். எப்போதெல்லாம் சொட்டு மருந்தாலோ, தடுப்பூசியாலோ குழந்தைகள் இறந்ததாக புகார் எழுகிறதோ அப்போதெல்லாம் தடுப்பூசிகளை எதிர்க்கும் ஒரு சில மருத்துவர்களின் கருத்துக்கள் மேலோட்டமாக தமிழகத்தில் எதிரொலிப்பது வழக்கம். உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளையோ, மேலை நாடுகளில் தடுப்பூசி எதிர்ப்பு பற்றிய செய்திகளையோ நம் நாட்டில் கேட்கவே முடியாது. 1880 களில் துவங்கி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (Anti vaccination leaque)கனடாவில் தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் துவக்கப்பட்ட தடுப்பூசிகள் விழிப்புணர்வு அமைப்பு (VRAN)1980 களில் அமெரிக்காவில் தோற்று விக்கப்பட்ட தடுப்பூசி வழக்குகள் நீதிமன்றம் ( U.S. Vaccine court ) என தடுப்பு மருந்துகள் பற்றிய சர்ச்சை உலகமெங்கும் விவாதிக்கப்படும் போது இங்கே எந்தவிதமான எதிர்கேள்விகளும் இன்றி அறிவிக்கப்படாத கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் அமுலில் உள்ளது. தமிழகத்தின் மருத்துவ விழிப்புணர் விற்கு உதாரணமாக 2008 போலியோ தடுப்பு மருந்தால் இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைகளின் மரணத்தையே எடுத்துக்கொள்ளலாம்.

2008 மே மாதத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டுக் கொண்டிருந்தபோது 7 மாவட்டங் களில் 10 குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பிய போது - அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மருந்துகள் வைக்கப்பட்ட இடம், அவற்றை பராமரிக்கும் வசதிகள், அவை குழந்தை களுக்கு வழங்கப்பட்ட முறை என்று அனைத்தையும் விசாரித்த அக்குழு நடைமுறையில் தவறுகள் ஏதுமில்லை, வழங்கப்பட்ட மருந்துகளைத் தான் பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மருந்துகள் இமாசலப் பிரதேசத்தின் கசவுலி ஆய்வுமையத்திற்கு அனுப்பப்பட்டன. பரபரப்பு குறைந்த அடுத்த பத்துநாட்களில் அந்த ஆய்வு முடிவும் வெளியானது மருந்துகளில் தவறு எதுவும் இல்லை என்று. வழங்கப்பட்ட மருந்துகளி லும் பிரச்சினை இல்லை, வழங்கப்பட்ட முறையிலும் தவறுகள் இல்லை என்றால் இறப்பிற்குக் காரணம் என்ன? எல்லா தடுப்பூசி இறப்புக்களுக் கும் சொல்லப்படும்- அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை, வேறுநோய்கள் ஏற்கனவே இருந்திருக்கலாம் என்ற அதே காரணம் மீண்டும் சொல்லப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இப்படி யான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரியோடு அவைகள் மறக்கப்படுகின்றன. தடுப்பூசி விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வ ளவு எளிமையாக குழந்தை மரணங் களை மறக்கடித்துவிட முடியாது.

ஆரோக்கியம் தரும் என்று நம்பி, அரசு கொடுக்கிற அனைத்தையும் நாம் கேள்வி கணக்கின்றி குழந்தை களுக்கு கொடுக்கிறோம். யார் பரிந்து ரைத்தாலும் அவற்றைப் பற்றிய தெளிவின்றி நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களுக்கு எதிரான வன்முறையாகும்.

2

முதன்முதலில் அம்மை நோய்க்கான தடுப்பூசியை 1796ல் எட்வர்ட் ஜென் னர் என்பவர் கண்டறிந்தார். தன்னு டைய மகனுக்கு அத்தடுப்பூசியைச் செலுத்தி சோதித்ததன் மூலம் முதல் தடுப்பு மருந்தை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு சில வரு டங்களில் அத்தடுப்பூசி முதன்முதலில் போடப்பட்ட ஜென்னருடைய மகனும், இன்னும் சிலரும் மருந்தின் வீரியத்தால் இறந்தனர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஜென்னர் தடுப்பூசியைப் பயன்படுத்தவில்லை. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தடுப்பூசிக்கு எதிராக உலகம் எங்கும் ஆங்கில மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 1853இல் இங்கிலாந்தில் அம்மைத்தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இணைந்து உலக தடுப்பூசி எதிர்ப்புச்சங்கத்தை தோற்றுவித்தனர். 1880ல் பாரீஸில் நடைபெற்ற தடுப்பூசி எதிர்ப்பு மாநாட்டில் அரசுகளுக்கு பல பரிந்துரைகள் அளிக்கப் பட்டன. இங்கிலாந்தில் தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய 1889இல் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1896இல் வெளியான ராயல் கமிஷனின் அறிக்கையின் பேரில் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் கைவிடப்பட்டது. உலகம் முழுவதும் இவ்வாறான தடுப்பூசிக்கு எதிரான வரலாறு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1989ல் அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்க அரசின் நோய்த்தடுப்பு மையம் (Center for Disease Control ) நடத்திய ஆய்வில் அமெரிக்கக் குழந்தைகளில் 98% பேருக்கு அம்மை நோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஊசி போடுவதற்கு முன்பிருந்த அளவை விட மிக அதிகம். இந்நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல; உலகின் பலநாடுகளில் இதே நிலைதான். அமெரிக்காவில் 1990களில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. பின்னர் தடுப்பூசிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் இவற்றைப் பயன்படுத்தும் குழந்தை களுக்கு 13 விதமான நோய்கள் ஏற்படுவதாக அறிந்து 1997ல் கட்டாயத்த்டுப்பூசிச் சட்டம் நீக்கப்பட்டது. தடுப்பூசி வியாபாரம் அமெரிக்க உபயோகமின்றி தேங்கிய நிலையில்தான் உலகப் பணக்காரர் பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனம் மூலமாக இந்தியாவில் 4.5 மில்லியன் குழந்தைகளுக்கு இலவசமாக மஞ்சள் காமலை தடுப்பூசி போட்டார். இப்போது அதே தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களா லும், அரசு அமைப்புக்களாலும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

3

தடுப்பூசி குறித்த வெளிப்புறத் தகவல் களைக் கண்டோம். தடுப்பூசி என்பது என்ன? அது ஏன் இவ்வளவு விளைவு களை ஏற்படுத்துகிறது? என்பதற்கான அகக்காரணிகளை அறிவோம். தடுப்பூசி மருந்துகள் கிருமிகளால் வரும் நோய்கள் பரவாமல் தற்காத்துக் கொள்ளப் பயன்படுவதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர். கிருமிகளின் தோற் றம் குறித்த ஆய்வுகளில் கடந்த 150 வருடங்களாக இறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமல் அதன் ஒரு பகுதி ஆய்வு முடிவுகளைக் கொண்டு கிருமிகளுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படு கின்றன. இப்படியான கிருமிகளுக்கு எதிரான மருந்துகளைத்தான் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் என்று அழைக்கிறோம். இந்த நுண்ணியிர்க்கொல்லி மருந்துகள் புழக்கத்திற்கு வந்த பிறகுதான் புதிய பல மருந்துகளால் வரும் நோய்கள் தோன்றின. (இவை தான் பக்க விளைவுகள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன). இக்கிருமிகள் நோய் வந்த பிறகு மனித உடலிலேயே தோன்றுகின்றன என்று கூறும் பிளியோமார்ப்பிச ஆய்வுகள் இன்றளவும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளன. என்றாலும், கிருமிகளின் மீதான கரிசனமும், அதன் பின்னாலுள்ள பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மருந்து வர்த்தகமும் இன்றைய மருத்துவ உலகின் பிரச்சாரத்தை தீர்மானிக்கின்றன. முடிவே இல்லாமல் தொடரும் கிருமிகளைப் பரவாமல் கட்டுப்படுத்தும் மருந்தாகத்தான் தடுப்பூசி மருந்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி மருந்துகளில் அப்படி என்னதான் இருக்கிறது? நோயை ஏற் படுத்தும் என்று நம்பப்படுகிற கிருமிகள் தான் மருந்தாகக் கொடுக்கப் படுகிறது. அது மட்டுமல்ல; இந்த தடுப்பு மருந்தின் தன்மையைப் பாது காக்க பாதரசம் (Mercury)கலக்கப்படுகிறது. கிருமிகள் பரவிய பிறகு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிற பல நோய்களுக்கு கட்டுப்படுத்தும் மருந்துகளே இல்லாத நிலையில், நோய் ஏற்படும் முன்பே பாதுகாக்கும் தடுப்பு மருந்துகள் என்பவை கேலிக்கூத்தானவை. டாக்டர்.வில்லியம் ட்ரெப்பிங் 2000 ஆண்டில் எழுதி வெளிவந்த “Good bye germ theory” என்னும் தடுப்பூசி குறித்த ஆய்வு நூல் 2006க்குள் ஆறு பதிப்புகள் வெளியாகி பலலட்சம் பிரதிகள் விற்பனை யாகின. அமெரிக்காவின் கட்டாயத்தடுப்பூசிச்சட்டம் இப்போது நடை முறையில் உள்ளபோது இந்நூல் வெளியாகி தடுப்பூசி எதிர்ப்பாளர் களுக்கு புதுவேகத்தை அளித்துள்ளது. அந்நூலில் இருந்து சில குறிப்புகள்:

# அமெரிக்க குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ((Autism) தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு 3000 மடங்கு அதிகரித்துள்ளது. பாதரசம் மற்றும் பிற ரசாயனங்கள் கலந்த தடுப்பூசிகளைத்தவிர இந்நோய் இவ்வளவு அதிகரிப்பதற்கு வேறெந்த காரணமும் இல்லை.
# கட்டாய தடுப்பூசியின் விளைவாக நியூ ஜெர்ஸி பகுதியில் 149 பேரில் ஒரு குழந்தைக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுள்ளது. மேரிலேண்ட் பகுதியில் 1993-98 இல் மட்டும் மூளைக்கோளாறு 513 சதம் அதிகமானது.
# தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூறும் மிக மோசமான விளைவுகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் (AMA)தன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
#அமெரிக்க குழந்தைகளில் வாரத்திற்கு மூன்றுபேர் தடுப்பூசி யினால் மரணமடைகிறார்கள் என்று பெடரல் கவர்ன்மெண்ட் அறிக்கை கூறுகிறது.
# போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் கூறு கிறார்- 1966 முதல் 1976 வரை ஏற்பட்ட போலியோவில் மூன்றில் இரண்டு பங்கு தன் கண்டுபிடிப்பால் ஏற்பட்டது என்று.
# 1975களிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் DPT தடுப்பூசி தடைசெய்யப்பட்டுள்ளது. கொடிய நஞ்சுள்ள இந்த ஊசி இன்னும் அமெரிக்காவில் (இந்தியாவிலும்) பயன் படுத்தப்படுகிறது.
# சாதாரணநிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டிற்கு 10பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப் பூசிக்குப் பிறகு ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
# அமெரிக்க மத்தியஅரசு FDA அறிக்கையின் படி 90% டாக்டர்கள் தடுப்பூசி சம்பந்தமான மோசமான விளைவுகளை அறிவிப்பதில்லை.
# அமெரிக்க அரசாங்கம் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை தடுப்பூசியின் மோசமான விளைவுகளுக்கு நஷ்டஈடாக வழங்கிக்கொண்டிருக்கிறது.
# தடுப்பூசி போட்டவர்களை விட , தடுப்பூசி போடாதவர்கள் மிகவும் ஆரோக்கியமாக எவ்வித நீடித்த நோயுமின்றி வாழ்வதை உலகத்தின் எந்த அரசு இயந்திரமும் ஆய்வு செய்வதில்லை.
# நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது என்பது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசி போடுவதற்கு சமம்.

. . . இன்னும் ஏராளமான விபரங்களை தன் நூலில் தந்துள்ள டாக்டர். ட்ரெப்பிங் மக்கள் கருத்தரங்குகளில் பங்கேற்று தடுப்பூசியின் விளைவு கள் பற்றி உரையாற்றி வருகிறார். கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் என்பது எந்த நாட்டில் அமுலில் இருந்தாலும் சரி அது மனித உரிமைக்கும், அந் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான வன்முறை என்று கூறும் அந்நூல் தரும் கடைசித் தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) ஓர் கொள்ளை நோய் கண்டுபிடிப்பு சேவை மையம். நாடு முழுவதும் அலைந்து நோய்க்கான அறிகுறி களைத் தேடி அதை லாபமாக்கத் திட்டமிடுகிறது. (CDC) க்கு ஒரு ஆலோ சனைக்குழு உள்ளது. இந்தக் குழுவில் யார் யார் உறுப்பினர்கள் தெரி யுமா? மருந்து வியாபாரிகள், மருந்து தயாரிப்போர் ஆகியோர்தான்.

4

சரி, தடுப்பூசி மோசமானது தான். முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களைக் கூட்டம் கூட்டமாகத் தாக்கியதே. ஆனால் தடுப்பூசி வந்த தற்குப் பின்னால் கொள்ளைநோய்கள் கட்டுக்குள் வந்துள்ளதல்லவா? - இதுதான் தடுப்பூசியை ஆதரிக்கும் மனநிலையில் ஆங்கில மருத்துவத்தால் தயாரிக்கப்பட்ட சராசரி மனிதரின் கேள்வியாக இருக்கும். காந்தி எழுதிய சத்தியசோதனை நூலில் கூட காலரா நோய் ஏற்பட்ட காலத்தில் தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருப்பார். அதுவே ஒரு பெரிய மருத்துவ ஆவணம்தான். என்றாலும் கூட நாம் நிகழ்காலத்தின் ஆதாரங்களை பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாகக் கூறப்பட்டது. சீனாவில் ஏராளமான மக்கள் ஒருவகைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சார்ஸ் என்னும் சளிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ அல்லது பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஓரிரு வாரங்களில் தானாகவே குறைந்த அக்காய்ச்சல் படிப்படியாக மறைந்தது. அதே போல இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன் குனியா என்ற பெயர் சூட்டப்பட்ட காய்ச்சல் - எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே தானா கவே காணாமல் போனது. எந்த ஒரு நோயானாலும் மக்களில் உடல் நிலையைப் பொறுத்து அது தானாகவே ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையவும் செய்கிறது. உலகத்தின் எல்லா அரசாங்கங்களும் இயற்கையாய் தோன்றி மறையும் எல்லா நோய் களையும் கட்டுப்படுத்தியது தங்கள் சுகாதாரத்துறை என்று மார்தட்டிக் கொள்கிறது.

மருத்துவ வரலாற்றின் பழைய பக்கங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும். இங்கிலாந்தில் 1950களில் போலியோ நோயின் தாக்கம் 40 மில்லியன்களாக இருந்தது. அப்போது போலியோ விற்கென எந்த மருந்தும் பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் நோயின் தாக்கம் 1952 இல் 19 மில்லியன்களாகக் குறைந்தது. பின்பு, 1954 இல் 8 மில்லியன்களாக வும், 1956இல் 10 மில்லி யன்களாகவும் எவ்வித மருந்துகளும் இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடு இருந் தது. 1956க்குப் பின் தடுப் பூசி பயன்படுத்தப்பட்டது. போலியோ வெற்றிகர மாக அழிக்கப்பட்டதாக அரசு அறிவிக்கிறது. பின்பு 1960களிலிருந்து மீண்டும் போலியோவின் தாக்கம் இங்கிலாந்தில் இருந்துவருகிறது. அதேபோல, 186ற்கும் முன்பிருந்து சின்னம்மை வருவதும், பின் குறைவது மாக 200 மில்லியன் களுக்குள் இருந்து வந் தது. 1860ல் தடுப்பூசி போடப்பட்டதற்குப் பின்னால் 400 மில்லியன் களுக்கும் மேலாக அதன் பாதிப்பு உயர்ந்தது. இன்று வரை தொடர்ந்து வருகிறது. இப்படி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நோய்கள் மீண்டும் மீண்டும் வருவதை 150 ஆண்டு கால சுகாதார வரைபடம் விளக்குகிறது. ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910 களில் 500 மில்லியன்களுக்கும் மேல் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் படிப்படியாகக் குறைந்து 1920 களில் 200 மில்லியன்களாகவும், 1930களில் 100 மில்லியன்களாக வும் பின்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக முற்றிலும் குறைந்திருக்கி றது. இதேபோல இன்னும் ஏராளமான நோய்கள் மக்களின் உடல் நிலையைப் பொறுத்து, தானே தோன்றி மறைந்த வரலாற்றை மருத்துவம் மறந்து விடுவது நல்லதல்ல.

மலேரியாக்காய்ச்சல் என்ற நோயை எல்லா நாட்டு வரலாற்றிலும் காணமுடியும். 1600களில் இருந்து மீண்டும் மீண்டும் மருத்துவ வரலாற்றில் குறிப்பிடப்படும் காய்ச்சலாக அது இருந்து வந்துள்ளது. மலேரியாவிற்குக் காரணம் ஒருவகைக் கிருமிகள் என்றும், அவை கொசுக்கள் மூலமாக பரவுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக உலகத்தின் பெரும்பாலான அரசாங்கங்கள் கொசுவை ஒழிக்க என்று பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இன்றுவரை பல நோய்களைப் பரப்பும் எமனாக சித்தரிக்கப்படும் கொசுக்கள் உலகம் செலவழித்த டாலர்களையும், ரூபாய்களையும், யூரோக்களையும் ஏப்பம் விட்டு விட்டு பல்கிப்பெருகி உலாவருவதை நிரூபிக்க எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை தானே? இப்படித்தான் கிருமிகளை அழிக்க என்று உலக அரசுகள் செலவழிக்கும் தொகை அவ்வளவும் மருந்துக்கம்பெனிகளின் கையில் அகப்பட்டுக் கிடக்கின்றன. வெகுவேகமாகப் பரவும் எந்த ஒரு நோயும் ஒரு ஊரில் எல்லா மக்களை யுமோ, ஒருவீட்டில் எல்லா ரையுமோ பாதிப்பதில்லை. ஏன் இப்படி கிருமிகள் ஓர வஞ்சனை செய்கின்றன? காற்றில், நீரில், கொசு வில், பறவையில், பன்றி யில்... என பாகுபாடின்றிப் பரவும் கிருமிகள் மனிதர் களை மட்டும் ரகம் பிரித்து தாக்குகின்றனவா? இந்தக் கேள்விக்கு உலகம் முழு வதும் ஒரே ஒரு பதில்தான் சொல்லப்படுகிறது. கிருமிகளின் தாக்கம் என் பது ஒவ்வொரு உடலின் எதிர்ப்புச்சக்தியைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்புச்சக்தியும் கிருமி களை எதிர்த்து அழிக்கப் போதுமானவை என்றால், அதை வளர்ப்பதை விட்டு விட்டு கொசுவிற்கு ஆயிரம் கோடி, கிருமிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசிக்கு ஆயிரம் கோடி, தடுப்பூசியின் பாதிப்பிற்கு நஷ்ட ஈடாக ஆயிரம் கோடி என்று மக்கள் வரிப்பணத்தை மருந்துக் கம்பெனிகளுக்கு வாரி இறைக்க உலகின் எந்த ஒரு அரசாங்கத்திற்கும் உரிமையில்லை. கிருமிகள், தடுப்பூசிகள் என்று தடம் புரளும் வீணான ஆய்வுகளை விட்டு விட்டு, தனி மனித எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கும்படி செய்வதே உலக அரசுகளின் அடிப்படைக் கடமையாகும்.

***

Thanks: மரு.அ.உமர்பாரூக்

குறிப்புகள் மொழியாக்க உதவி : மருத்துவர்.இரா.ஞானமூர்த்தி



அய்யா துரை முருகா கீழ் உள்ள இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். நன்றகஹா தாய் மொழிஇல் ஒரு முறைகு பல முறை வாசித்து பாருங்கள் மக்கள் சாப்பிடும் மருந்து எல்லாம் போலி

"எல்லாம் மருத்துவமனையுளும் கீழ் கண்ட சட்டத்தைப் பற்றியும் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்" by KIBS

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்
Dr. பஸ்லூர்ரஹ்மான் M.B.B.S., Dr MRSH MD Ph.D(Acu)

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி

3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.



அய்யா துரை முருகா தடுப்பு ஊசி பற்றி மோலும் விபரம் அறிய "தடுப்பு ஊசிகல் ஓர் மாற்று பார்வை " என்ற புத்தகம் படிக்கவும் "தீப பதிப்பகம்" 29/9-a, பழைய ட்ரன்க் ரோடு, சாத்தூர் - 626 203 cell No. 94431 45700 ph No. 04562-263168.படித்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும். (தமிழ் நாடு அரசு தடுப்பு ஊசி பற்றிஆய்வில் மருத்துவர் குழுவின் உருபிநெர் )Dr. புகெழேந்தி M.B.B.S. மருத்துவர், உமர்பாரூக் M.Acu., D.Ed (Acu) (ஹோமியபதி மற்றும் அக்குபஞ்சர்)

visit: www.acuhome.org

Thanks: kibs, Kodaikanal,
cell : 9171418141