Tuesday, December 21, 2010

தனியார் மயமாகும் தமிழக சுகாதாரம்

சிலர் விஷம் கொடுத்து கொல்வார்கள், சிலர் வெல்லம் (இனிப்பு) கொடுத்துக் கொல்வார்கள். இதில் வெல்லம் கொடுத்துக் கொல்பவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பார்கள். தமிழக பொது சுகாதாரத்தை இன்று வெல்லம் கொடுத்து கொல்லும் வேலையை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செய்து வருகிறது. காலம் காலமாக சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளேயே நம்பி இருந்து வருகின்றனர். அதனை பல இடங்களில் `தர்ம' ஆஸ்பத்ரி என அழைப்பது இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் அங்கு சென்றால் தர்மம் செய்வது போன்று பிரதிபலனை எதிர்பாராமல் இலவசமாக சிகிச்சை செய்யப்படும் அதனை பெயரிலேயே சொல்வதுதான் தர்ம ஆஸ்பத்ரி. ஆனால் இன்று தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் தர்மம் செய்கிறதா? அதாவது காலம் காலமாக இருந்து வரும் தர்ம ஆஸ்பத்ரியின் உயிரை எடுத்து அதனை ஊட்டச்சத்தாக உட்கொண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நகர்ந்து மலைப்பாம்பாக செல்கிறது என்பதுதான் உண்மை. மேலோட்டமாக கலைஞர் காப்பீட்டை பார்த்தால் தனியார் மருத்துவமனையில் இலவசமாகத்தானே மருத்துவம் செய்றாங்க இதனை ஏன் குறை சொல்ல வேண்டும் என்று எண்ணத் தோன்றும். அதுவும் உண்மைதான். ஆனால் யாராவது கண்களை விற்று சித்திரம் வாங்குவார்களா? அதைத்தான் தமிழக அரசு செய்கிறது.

அதாவது ஒரு வருடத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணம் முழுவதும் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற தனியாரிடம் பிரீமியத் தொகையாக ஒப்படைக்கப்படுகிறது. ஏதாவது பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால். அதற்காக அவர்கள் கையில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையில் ரூ 1 லட்சம் வரை ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு அதனை காப்பீட்டுத் தொகையாக அளித்து விடும். இதுதான் நடைமுறை. அதே நேரத்தில் அனைத்து அறுவை சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின் கீழ் செய்து கொள்ள முடியாது. ஏன் சாதாரண வயிற்று போக்கு அல்லது காய்ச்சல் என்றால் கூட இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.

மேலும் மக்களை அதிகமாக தாக்கும் ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும் என்றால் அந்த அறுவை சிகிச்சையே இந்த திட்டத்தில் இருக்காது. உதராணமாக சிறுநீர் கல் அடைப்பு என்றால் அதன் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை வரும். ஆனால் அந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்று ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த சிகிச்சை கலைஞர் காப்பீட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சர்க்கரை நோய்க்கு இந்த திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. ஏனென்றால் நோய்களின் எண்ணிக்கை சுருங்கினால்தான் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் பெருகும். இதுதான் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் `காப்பீட்டு பார்முலா'.

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலாம் ஆண்டில் அரசு ரூ. 628.20 கோடி கொடுத்தது. இதில் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக செலுத்திய தொகை ரூ 415.43 கோடி. மீதமுள்ள ரூ 212.77 கோடி முதலாமாண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் ஆகும். இதில் அரசின் பணம் யாருக்கு ``காப்பீடாக'' மாறியிருக்கிறது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இரண்டாவது ஆண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டு தொகையாக அரசு ரூ.750 கோடியை செலுத்தியிருக்கிறது. ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தை கொட்டிக் கொடுக்க வேண்டும்? ஏன் பொதுத்துறையில் இன்சூரன்ஸ் நிறுவனம் இல்லையா?

இந்தியப் பொருளாதாரத்தையே அவ்வப்போது தாங்கி நிற்கும் நிறுவனமாக இன்று அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திகழ்ந்து வருகிறதே. அப்படியே காப்பீடு செய்ய வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனத்தில் காப்பீடு செய்யாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டும்? திமுக அரசுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை?. காலம் காலமாக பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இப்படி தனியாருக்கு திருப்பி விடுவது எந்த வகையில் நியாயம் ஆகும். அப்படி திருப்பிவிடும் பணத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருபவர்களை விட அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? அதுவும் இல்லை.

உதாரணமாக 2009ஆம் ஆண்டு ஜூலை முதல் 2010 செப்டம்பர் வரை 15 மாதங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 492 பேர். ஆனால் தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2002 ம் ஆண்டில் ( 12 மாதம்) மட்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 366 பேர் ஆவர். இந்தாண்டு (2009_10) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றிருக்கும் அறுவை சிகிச்சை புள்ளி விபரம் அரசு இணையதளத்தில் திட்டமிட்டு பதிவேற்றம் செய்யப்படவில்லை. 2002ஆம் ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதே உண்மை. புள்ளி விபரங்களை பதிவேற்றம் செய்தால் உண்மை ஊருக்கு தெரிந்து விடும் அல்லவா? அது ஆளும் அரசிற்கு ஆபத்தாக முடியும் என்பது நன்றாகவே தெரியும். அதனால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும்.

அரசு கலைஞர் காப்பீட்டுக்கு இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 750 கோடியை அரசு மருத்துவ மனைகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதும். தனியார் மருத்துவனைகளை விட நூறு மடங்கு எண்ணிக்கையில் அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் இருதய நோய்களுக்கான அறுவை சிகிச்சையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள 32 அரசு மருத்துவமனைகளில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தற்போது இங்கு இருதயவால்வு மாற்றுசிகிச்சைக்கு தேவையான வால்வு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க சுகாதாரத்துறையில் காசு இல்லை. ( பெரும்பகுதி பணம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.) அதனாலோயே மதுரை, சென்னையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சை நடந்து வந்தது.

தினமும் நடந்து வந்த இந்த அறுவை சிகிச்சையை தற்போது மதுரை மருத்துவமனையில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அறுவை சிகிச்சைகளே மேற்கொள்கின்றனர். காரணம் அதற்கான வால்வு மற்றும் மருந்துப் பொருட்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் பலர் காடுமேடுகளை விற்றும், வட்டிக்கு வாங்கியும் தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்கின்றனர். இருதய அறுவை சிகிச்சை செய்ய உபகரணம் மற்றும் வசதி ஏற்படுத்தி கொடுக்க ஒரு மருத்துவமனைக்கு ரூ 1 கோடி மட்டுமே செலவு ஆகும். கலைஞர் காப்பீட்டிற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் 32 கோடியை மட்டும் ஒதுக்கினால் தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இலவசமாகவே அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

ஒரு முறை முதலீடு செய்து வருடம் தோறும் இலவசமாக சிகிச்சை அளிப்பது சிறந்ததா? அல்லது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் தனியாருக்கு பல நூறு கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் தூக்கி கொடுப்பது சிறந்ததா?. இதே போல் சிறுநீரகம் அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் `` லித்தோட்ரிப்சி '' கருவி மதுரை மற்றும் சென்னை அரசு மருதுவமனையில் மட்டுமே இருக்கிறது. லித்தோட்ரிப்சி கருவி உள்ளிட்டு சிகிச்சை வசதி ஏற்படுத்த ஒரு மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடியே ஆகும். அப்படியானால் ரூ 80 கோடியை இதற்கென ஒதுக்கினாலே போதும். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய 32 அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதி வந்து விடும். ஆனால் இதனை செய்ய அரசு தயாராக இல்லை. அது மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பார்க்கும் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் தனியார் மருத்துவமனைக்கு நோயளிகளை அனுப்பி அரசே ஏன் பணம் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன?

தமிழகத்தில் உள்ள 1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008_09 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி ஒவ்வொரு நாளும் 1 லட்சத்து 99 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் 500 பேருக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே இருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 130 நகராட்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நலவாழ்வு சேவைகள் இல்லை. இன்னும் நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் இல்லை. இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது அது ஒரு தனி அத்தியாயம். இப்படி அரசு சுகாதாரத் துறையே அவசர சிகிக்சைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்திற்கு இருக்கும் நிதியையும் தனியார் மருத்துவமனை களுக்கும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

கடந்த பல ஆண்டுகளாக அரசுமருத்துவமனையையும், ஆரம்ப சுகாதார நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி அகில இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. உதாரணமாக தற்போது பல மருந்துகள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை வெளியில் சென்று காசு கொடுத்து வாங்கி அரசு மருத்துவரிடம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு மருத்துவமனையில் காசு கொடுத்தால் நல்ல சிகிச்சை என்ற பசப்பு வார்த்தைகளால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பணம் கொடுத்து சிகிச்சை பெறும் பிரிவு துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றிக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை மக்களிடம் உருவாக்கும் வேலை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற சுகாதாரத் திட்டங்களிலும் தனியாரின் பங்களிப்பு என்ற முறையில் தனியார் மயம் நஞ்சாக ஊடுருவச் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக காலம் காலமாக தொற்று நோய்களுக்கு அரசுதான் இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்கி வரும். ஆனால் தற்போது அந்த நிலையும் இல்லை என்றாகி விட்டது.

சமீபத்தில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை அரசே கொள்முதல் செய்து விலைக்கு விற்கும் அவலமும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நீதி மன்றம் தலையிட்டு தலையில் கொட்டிய பின்பும் பெயரளவிற்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. அரசு மருத்துவ மனைகளில் தனியார் மருந்து நிறுவனங்கள் கடைவிரித்து மருத்துகளை விற்று வருகின்றனர். இதனை திமுக அமைச்சர்கள் சென்று, முதல் விற்பனையை துவங்கி வைத்து வருகின்றனர். இப்படி அரசுத்துறையை காலி செய்து தனியார் துறையை போற்றி வளர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இதனை அப்படியே நேரடியாக செய்தால் மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் ``வெல்லம் கொடுத்து கொல்லும் முறையை திமுக பின்பற்றி வருகிறது''. கொஞ்சம் கொஞ்சமாக பொதுச் சுகாதார நிதியை தனியாருக்கு திருப்பி விட்டு அரசு மருத்துவமனைகளின் உயிரை காவு வாங்குவது. பின் அரசு மருத்துவ மனைகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மொத்த சுகாதாரத்தையும் தனியார் கையில் கொடுத்து விடுவது. அதில் ஏதாவது கிடைத்தால் அதையும் முடிந்த வரை சுருட்டுவது என்ற ரீதியில் தமிழகத்தில் திமுக அரசு வேலைகளை முழுவீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது.

Thanks: எம்.கண்ணன், keetru

Thursday, December 9, 2010

டாடா குழுமத்தின் கோர முகம் -2


நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.
ஜூக்சாலை-கழிவுப் பொருட்களின் மலைகள்:

ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.
ஜோடா சுரங்கங்கள்:

டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.
கரிக்குழம்புகளின் குவியல்:

மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.
பேராபத்து விளைவித்த நிகழ்வுகள் - நிறுவனர் நாள் தீ:

1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.
டாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்

1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.
தொழிலாளர் தற்கொலைகள்:

1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.

1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:

செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
கதவடைப்பு:

தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.
தொழிற்சங்கங்களை உடைப்பது:

1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.
படுகொலைகள்:

குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.
டாடாவுக்கு டாடா:

நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
டாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:

1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)
எம்ப்ரஸ் (பேரரசி):

1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.
பிரிட்டானிய விரிவாக்கத்துக்குத் தூபம் போடும் வேலை:

முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”
பிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:

1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.

(முற்றும்)
(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)

Thanks: vinavu

டாடா குழுமத்தின் கோரமுகம் -1

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.

தாராளமயம் புகுத்தப்பட்டதற்கு முன்புவரை, லைசென்சு (தொழில் துறையின் மீது உரிமக் கட்டுப்பாடு) ஆட்சியில் முடிசூடா மன்னர்களாக டாடாக்கள் இருந்தார்கள். வாரிக் கொடுக்கும் தாராள வள்ளல் தன்மைகள் மூலம் மனித உரிமை மீறல், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள் ஆகிய அவர்களின் திரைமறைவுச் செயல்களை மூடி மறைத்து வந்தார்கள். உலகமயமாக்கச் சூழலில் இத்தகைய உண்மைகள் சாக்கடைக் கழிவுகளாக வெளிப்படத் தொடங்கியபோது, அவர்களின் விசுவாச ஊழியர்கள் உட்பட மேலும் மேலும் கூடுதலான மக்கள் டாடாக்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

தேசத்தைக் கட்டியெழுப்புவது, கூட்டுப் பங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் ஆகிய டாடாவின் பசப்பு வார்த்தைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். டாடா கம்பெனிகளின் சொந்தப் பங்குதாரர்கள் தவிர, வேறு யாருடைய நலனுக்கும் பொறுப்பானவர்களாக அவர்கள் இல்லை என்பதையும் அறிந்தார்கள். டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் அவர்களின் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்று பின்வரும் தொகுப்புச் செய்திகள் காட்டுகின்றன.

================
கொலைகார கார்பைடுக்கு டாடாவின் உதவி

1984 டிசம்பரில் போபால் நச்சுவாயு பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்த ஒரு சில இந்தியர்களில் ஒருவராக ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியதாலும், நச்சு ஆலையில் சோதித்தறியப்படாத தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலும் நிகழ்ந்த பேரழிவுக்கு ஆண்டர்சன் நேரடிப் பொறுப்பாளராகிறார். முக்கியமாக, போபால் நச்சு ஆலையின் கழிவு மற்றும் பயன்பாட்டுச் சாதனங்கள் டாடா பொறியியல் கம்பெனி (Tata Consulting Engineers) யால் கட்டியமைக்கப்பட்டவை.

போபாலில் உள்ள நச்சு ஆலையில் யூனியன் கார்பைடு கம்பெனி விட்டுச் சென்றுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும் தர்ம காரியத்துக்குத் தலைமையேற்று யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் புதிய சொந்தக்காரரான டௌ கெமிக்கல்சின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2006 நவம்பரில் ரத்தன் டாடா முன் வந்தார். அக்கழிவுகளை அகற்றுவது டௌ கெமிக்கல்சின் கடப்பாடு என்றும், அதற்காக அந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு அப்போது வாதாடிக் கொண்டிருந்தது. டௌ கெமிக்கல்ஸ் கடப்பாடுடையது என்கிற சட்டப்படியான முயற்சியைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் டாடாவின் தர்மகாரிய முன் வருகை. மேலும், இந்த முன்வரவின் நோக்கம் இந்தியாவில் டௌ கெமிக்கல்சின் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கமுடையது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். போபால் நச்சுவாயு வெளியேற்றத்துக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான இயக்கத்தால் இந்தியாவில் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் நிலைகுலைந்து போகும், அதன் எந்தவொரு தொழில் முனைப்பும் அதிகரித்த சிக்கலுக்குள்ளாகும் என்ற பயத்தின் காரணமாக பெருமளவிலான முதலீடுகளை டௌ நிறுவனம் தானே மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.
ஜனநாயகத்துக்கு மாறான கொல்லைப்புற அதிகாரம்

இந்தியக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் டாடாவின் கட்டளை:

2005-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் கார்ப்போரேட் (கூட்டுப் பங்கு) கம்பெனிகளிடம் நட்புப் பாராட்டும் முனைப்புகளால் தூண்டுதல் பெற்று, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கும்பலைக் கொண்ட இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை என்ற அமைப்பை அமெரிக்கா மற்றும் இந்தியத் தொழில் – வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கின. “தொழில் வர்த்தகத் துறையில் இரு நாடுகளிடையே அதிகரிக்கும் அளவிலான பங்காளிகளாவது மற்றும் கூட்டுறவுக்கான ஒரு பாதை வரைபடத்தை வகுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதாக அந்தப் பேரவை இருக்கும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான வகையில் தற்போதைய சட்டத்தைத் திருத்தியும், புதிய கொள்கைகளை நிறுவியும், புதிய சட்டங்களை வகுப்பதற்கான பல பரிந்துரைகளை, ரத்தன் டாடாவை இணைத் தலைவராகக் கொண்ட அந்தப் பேரவை செய்துள்ளது. பலவீனமான தொழிலாளர் சட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வசதிகள், பட்ட மேற்படிப்புக்குக் கூடுதலான முனைப்பு, நட்டஈடு கடப்பாடுச் சட்டங்களைத் தளர்த்துவது, சர்ச்சைக்குரிய வழக்குகளை-குறிப்பாக போபால் பேரழிவு போன்ற நிகழ்வுகளை ஒட்டி எழும் வழக்குகளை விரைந்து முடிப்பது ஆகியவற்றைப் பேரவை முன்தள்ளுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் உச்சமட்டத்திலான ஒப்பிசைவு காரணமாக இப்போது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதாகப் பேரவை மாறியுள்ளது.
கார்ப்போரேட் சர்வாதிகாரப்பிடி

இந்தியாவிலுள்ள ஒரே ஒரு தனியார் நகரை டாடாக்கள் சொந்தமாகக் கொண்டு நடத்துகிறார்கள். 1904-ஆம் ஆண்டு ஜாம்சேத்ஜி டாடா நிறுவிய ஜாம்சேத்பூர் என்ற எஃகு நகர், ஒரு நகராட்சியோ, தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு எந்த உள்ளூராட்சியோ இல்லாத ஒரு சில இந்திய நகரங்களில் ஒன்று. ஆறு லட்சம் மக்களைக் கொண்ட அந்த நகரை டாடா எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாம்சேத்பூர் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் கம்பெனிதான் நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் 74-ஆவது திருத்தம், நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, அம்மாதிரியான உள்ளூராட்சிகளுக்குக் காலக்கிரமப்படி தேர்தல்கள் நடத்துவதற்கான சட்டங்களை இயற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வேண்டுகிறது. ஆனால், அம்மாதிரி ஜனநாயகபூர்வ உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் டாடாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரை மாற்றுவதற்கு டாடா எஃகு நிறுவனம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. ஒரு ஜனநாயக அமைப்பைவிட டாடா எஃகு நிறுவனம் போன்றதொரு பரோபகார ஆட்சியின் கீழ் அந்நகரம் இருப்பதுதான் அதிகப்படியாக விரும்பத்தக்கது என்றார்கள். “ஒரு நூறாண்டு காலம் வெற்றிகரமாக இருந்துவரும் மாதிரிக்கு மாற்றாக, எவ்வளவுதான் உயர்ந்த நோக்கமுடையதாக இருந்தாலும் இன்னமும் சோதித்தறியப்படாத வேறொரு மாதிரியைக் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்கிறார், டாடா எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பி.முத்துராமன்.
இராணுவ சர்வாதிகார கும்பலுடன் – தொழில் வர்த்தகக் கூட்டு

அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக உலகே வெறுத்து ஒதுக்கிய மியன்மார் இராணுவ சர்வாதிகார அரசாங்கம் இந்தியாவில் ஒரு நண்பனைக் கொண்டிருக்கிறது-அவன்தான் டாடா. ஜனநாயக சக்திகளுக்கு வழிவிட வேண்டுமென்று மியன்மார் இராணுவ அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு முயற்சியாக, பெப்சி கம்பெனி போன்ற பல பன்னாட்டுத் தொழில்கழகங்கள், அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஒரு சமயத்தில், அந்த ஒடுக்குமுறை ஆட்சிக்கு கனரக மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்குவதாக டாடா மோட்டார் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரவலான பாலியல் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், மியன்மாரின் செழிப்பான இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளில் கட்டாயப்படுத்தித் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும், மியன்மார் சர்வாதிகார இராணுவக் கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இராணுவ சர்வாதிகார கும்பலுக்கு எதிராகப் பழங்குடிக் குழுக்கள் கடுமையான வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். (தற்போது விடுவிக்கப்பட்டுள்ள – வினவு) நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி, 1989 முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இராணுவ பாசிச சர்வாதிகாரக் கும்பலுடன்தான் டாடாக்கள் தொழில் வர்த்தகக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
பழங்குடி மக்களின் நிலங்களை களங்கப்படுத்தும் டாடாக்கள்

பூமியைத் தீக்கிரையாக்கும் தந்திரங்கள்

டாடா எஃகு நகரம் உருவாக்கப்பட்ட இடம், சில வளமிக்க இரும்புக் கனிமங்களின் குவியல்களைப் பெற்றுள்ள, அடர்ந்த காட்டு நிலங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. அந்த நிலங்களுக்கு முன்போ, இப்போதோ உரிமைப் பட்டா, பத்திரங்களைப் பழங்குடியின மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய 364 ஏக்கர் நிலங்களை 46.32 கோடி ரூபாய்க்கு டாடா கம்பெனி விலைக்கு வாங்கியது. நோவா முடியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கத்துக்காகவும், ஜாம்சேத்பூர் நகரியம் அமைக்கவும் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய அரசாங்கம் டாடாக்களுக்கு நிலங்களைக் கையளித்தபோது பழங்குடி மக்கள் அகற்றப்பட்டார்கள்.

1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர். 2000-ஆம் ஆண்டு பூமியைத் தோண்டும் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியிலிருந்த ஒரு நீரூற்றை டாடாக்கள் அழித்து விட்டார்கள்; அந்த நீரூற்றுதான் டாடாக்களது நிலக்கரி சுரங்கத்தின் விளிம்பில் உள்ள 22 குடிகளைக் கொண்ட குக்கிராமமான அகாடிய தோலாவின் பழங்குடி மக்களுடைய ஒரே நீராதாரமாக இருந்தது. அவர்களுடைய நீராதாரமாக விளங்கியதோடு, அந்த நீரூற்று அருகிலுள்ள கிராமத்தவர்களுக்கான சமூக உறவாடுதலுக்கான மையமாகவும் இருந்தது.

குரோமிய நச்சு

சுகிந்தா பள்ளத்தாக்கை உச்ச அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட பகுதியாக அங்குள்ள குரோமைட் சுரங்கங்கள் ஆக்கிவிட்டன என்று இந்திய அரசாங்கத்தின் பொதுத் தணிக்கை அதிகாரி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று ‘டவுன் டு எர்த்’ என்ற பத்திரிக்கை எழுதியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய அளவுக்கு குரோமைட் வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா கம்பெனியாகும். அளவுக்கு அதிகமாகக் குவித்து வைத்துள்ள கிடங்குகளில் இருந்து கசியும் ஹெக்சாவேலண்ட் குரோமியம் என்ற நச்சு இரசாயனத்தால், அபாய அளவுக்கு மேல் மாசுபட்ட தோம்சாலா ஆறு மற்றும் 30 ஓடைகள் இப்பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்றன. சுவாசக் குழாயில் எரிச்சல், மூக்குக் குழலில் புண், எரிச்சலுடன் தோல் புண், மூச்சுத் திணறல், நிமோனியா காச்சல் ஆகியவை ஹெக்சாவேலண்ட் குரோமியத்தால் ஏற்படுகின்றன. ஒரிசா சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் நார்வே அரசாங்க நிதி உதவியுடன் நடந்த ஆய்வுப்படி அப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் 25 சதவீத மக்கள் இந்த மாசுபடுதலால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் புகலிடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி

1990-களில், கர்நாடகா மாநிலம்-நகராஹோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகளின் புகலிடம் அமைந்துள்ள பகுதியின் மத்தியில் ‘கேட்வே டஸ்கர் லாட்ஜ்’ என்ற சொகுசு விடுதி கட்டுவதற்காக டாடாவுக்குச் சொந்தமான தாஜ் ஓட்டல்கள் குழுமம் ஒரு பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு வனமுகாம் என்ற முன்மொழிதலைக் காட்டி, ஆனால் முழுமையான சுற்றுலா வசதிகள், மின்உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர் மற்றும் கலந்துரையாடல்களுக்கான அறைகள் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்காகத் திட்டமிடப்பட்டது. ஒரு தேசியப் பூங்காவிற்குள் எந்த நடவடிக்கைக்கும் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவே இல்லை. இத்திட்டத்துக்குப் பெருமளவு பழங்குடி மக்களின் எதிர்ப்பு மற்றும் அதற்கு எதிரான சட்டமுறைப்பாடு காரணமாக இறுதியில், புலிகளின் புகலிடத்திலிருந்து டாடாக்கள் பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.
டாடாக்களின் வன்முறைகளும் படுகொலைகளும்:

கலிங்கா நகர் நந்திகிராமம்

குவா படுகொலைகள்

பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு வன்முறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் சுரங்கத் தொழில் மாவட்டங்களில் சர்வசாதாரணமானது. நோவாமுடியில் டாடாவின் விமான நிலையம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1980 செப்டம்பர் 7 அன்று, நிலத்தைப் பறி கொடுத்த கிராமத்தவர்கள், டாடா எஃகு நிறுவனத் தலைவர் ரூசி மோடியை எதிர் கொண்டு மனு அளிப்பதற்காக விமான நிலையத்துக்குப் போனார்கள். கும்பலைப் பார்த்ததும், மோடியினுடைய விமானம் அங்கே தரையிறங்காமல் ஜாம்சேத்பூருக்குத் திரும்பியது. இவையெல்லாம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த, பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியைத் தனிப் பழங்குடி மாநிலமாக்குவதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடந்தது. பழங்குடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசாங்கத்தை டாடாக்களும் பிற சுயநலக் கும்பல்களும் நிர்பந்தப்படுத்தின. செப்டம்பர் எட்டாம் நாளே அவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; பழங்குடியினரின் கொந்தளிப்பை அடக்குவதற்காக குவா நகரின் சந்தையில் வைத்து அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நிராயுதபாணிகளான எட்டுப் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கலிங்காநகர் படுகொலை

2006, ஜனவரி 2 அன்று, ஒரிசா மாநிலம் கலிங்கா நகரில், கொடூரமாக ஆயுதமேந்திய ஒரு போலீசுப் படை பழங்குடி கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பன்னெடுங்காலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் டாடா எஃகு நிறுவனம் சட்டவிரோதமாக சுற்றுச்சுவர் கட்டியதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியபோது தான் இது நடந்தது. டாடா எஃகு நிறுவனம் அங்கு வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அந்தப் படுகொலைக்கு முன்புதான் டாடா எஃகு நிறுவன நிர்வாகத்தினர் மூன்றுமுறை ஒரிசா முதலமைச்சரைச் சந்தித்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்று சிதைக்கப்பட்ட எட்டு உடல்கள் போலீசாரால் பிரேதப் பரிசோதனைக்கு தரப்பட்டன. இறந்து போயிருந்த ஒரு பெண்ணின் மார்பு அறுத்தெறியப்பட்டிருந்தது; துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு சிறுவனின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா உடல்களிலும் இருந்து உள்ளங்கைகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. “இச்சம்பவம் தீவினைப்பயனானது (துரதிருஷ்டவசமானது)” என்று சொன்ன டாடா, “எதிர்ப்பிருந்தபோதும் அதே இடத்தில் திட்டமிட்டபடி ஒரு எஃகு ஆலை நிறுவுவது தொடரும்” என்று அறிவித்தார்.

சிங்கூர் ஒடுக்குமுறை

2006-ஆம் ஆண்டு டாடாவுக்கு ஒரு பெரும் கொடை கிட்டியது. கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. அங்கே லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்ற அறிவிப்புடன் கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது; ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த சிங்கூர் கிராமம் போர்க்களமாக மாற்றப்பட்டது; டாடா மோட்டார் நிறுவன இடத்தையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. (தொடரும்)

Thanks: vinavu

இந்தியா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்: யார் அந்த "ஜி'?

ஊரெல்லாம் இதே பேச்சுதான். "ஸ்பெக்ட்ரம்' என்கிறார்கள் சிலர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்கிறார்கள் வேறு பலர். எப்படி அழைத்தால்தான் என்ன, ஒட்டுமொத்த இந்தியாவையே சூறாவளியாகச் சுற்றியடிக்கும் விஷயம் எது என்று கேட்டால் "2ஜி'யாகத்தான் இருக்கும்.

கூகுள் இணையதளத்தில் 2ஜி என உள்ளிட்டுத் தேடினால், நொடிக்கும் குறைவான நேரத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து கொட்டுகின்றன. கூகுளில் இந்தி நடிகர் ஷாருக்கானை விடவும் 2ஜி 29 மடங்கு பிரபலம்; ரஜினிகாந்தை விட 17 மடங்கு! 2ஜி எந்த அளவுக்குப் பிரபலமோ அந்த அளவுக்கு ஊழலிலும் 2ஜியை விஞ்ச எதுவும் இல்லை போலிருக்கிறதே. 1.76 லட்சம் கோடி என்கிற பெரிய தொகையை எண்ணில் எழுதிக் கூட்டிப் பாருங்கள். தலைசுற்றும்.

இப்படி மலைப்பை ஏற்படுத்தும் விஷயத்தைப் பற்றித்தான் பிரதமரிடம் நாடு கேட்கிறது; "ஐயா 2ஜி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்று.

ஊஹூம்... பிரதமர் அசைந்து கொடுப்பதாக இல்லை. இங்கே மின்னஞ்சலிலும் எஸ்எம்எஸ்ஸிலும் பரபரப்பான விவாதமாகிக் கொண்டிருக்கும் ஒரு விவகாரம் பற்றி பிரதமர் மெüனம் சாதிக்கிறார். ஒரு வழியாக தனது மெüனத்தைக் கலைத்து அவர் ஏதாவது கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் என்னதான் சொல்வார்? எனக்குத் தெரிந்த 2ஜி என்பது சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று சொன்னால்கூட வியப்பில்லை.

இதைவிட வேதனையான இன்னொரு விஷயம் இருக்கிறது. அதை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர் என்று கடந்த 24-ம் தேதி அவருக்கு "அக்மார்க்' சான்றிதழ் வழங்கியிருப்பது யார் தெரியுமா? சோனியா காந்திதான், வேறு யார்? அத்தோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை. "நான் ஊழலைப் பொறுக்காதவள்' என்று ஒரு அண்டப்புளுகையையும் அடுத்த நாளே அவிழ்த்துவிட்டார்.

என்ன கொடுமை? சோனியாவிடம் இருந்து மன்மோகனுக்கு நற்சான்று. இதைவிடப் பிரதமரை இழிவுபடுத்தும் வேறொரு செயல் இருக்க முடியுமா என்று யாரும் அதிர்ச்சி அடையாதீர்கள். இது எதிர்பார்த்ததுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை இருக்கிறது. சோனியாவின் இத்தாலிய நண்பர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை (மிஸ்டர் க்யூ) மன்மோகன் காப்பாற்றிய கதை அது.

இங்குள்ள சிபிஐ போல ஸ்வீடனில் தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்று இருக்கிறது. ஸ்டென் லின்ட்ஸ்டோர்ம் என்பவர் அதன் தலைவராக இருந்தார். அவர்தான் போஃபர்ஸ் ஊழல் குறித்து விசாரித்தவர்.

6.4.1998 அவுட்லுக் இதழில் வெளியான அவரது பேட்டியில்,போஃபர்ஸிடம் இருந்து மிஸ்டர் க்யூவின் நிறுவனங்கள் பெருந்தொகையைப் பெற்றது எப்படி என சோனியா விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். யாரோ ஒருவர் பணம் பெற்றது பற்றி சோனியா ஏன் விளக்கமளிக்க வேண்டும்? என்றுதானே கேட்கிறீர்கள்! காரணம் இருக்கிறது. போஃபர்ஸýக்கு மிஸ்டர் க்யூவை அறிமுகப்படுத்தியவரே சோனியா காந்திதானே!

6 ஆண்டுகளுக்குப் பிறகு 8.4.2004-ல் "போஃபர்ஸ் ஊழல் பற்றி சோனியாவிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று லின்ட்ஸ்டோர்ம் மீண்டும் எழுதினார். அதற்கு அனுமதி வழங்காமல் காப்பாற்றியவர் இப்போது சோனியா காந்தியால் அப்பழுக்கற்றவர் என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் திருவாளர் மன்மோகன் சிங்தான். சோனியாவின் சர்ட்டிபிகேட்டுக்குக் காரணம் இப்போது புரிகிறதா?

இந்த ஊழலில் கமிஷன் கொடுத்த போஃபர்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஆட்போ தனது நாள்குறிப்பில், "காந்தி டிரஸ்ட் வழக்கறிஞரை' தாம் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார். போஃபர்ஸ் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய ஆவணம் இது.

இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மிஸ்டர் க்யூ இறுதியாக இந்தியாவுக்கு வந்தபோது, ஒரு திருடனைப் போல்தான் நடந்து கொண்டார். அவர் மீதான புகார்களுக்கு ஆதாரங்கள் கிடைத்த நிலையில், 1993-ம் ஆண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு, சோனியா கொடுத்த நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்பது உலகறிந்த ரகசியம்.

1999-ல் மிஸ்டர் க்யூவுக்கு சோனியா வெளிப்படையாக ஆதரவளித்தார். க்யூ ஒரு அப்பாவி; அவர்மீது வேண்டுமென்றே பாஜக அரசு பழிபோடுகிறது என்றார். பத்தாண்டுகள் கழித்து க்யூவை தொந்தரவு செய்ததற்காக மன்மோகன் அரசு சோனியாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. போஃபர்ஸ் ஊழலின் முக்கியக் குற்றவாளியான க்யூவை ஒவ்வொரு கட்டத்திலும் சோனியா தொடர்ந்து காப்பாற்றினார். சட்டச் சிக்கல்களிலிருந்து க்யூ தப்புவதற்கு மன்மோகன் அனுமதித்தார்.

இப்படிப் பலவகையிலும் போஃபர்ஸ் ஊழலில் சந்தேக நிழல் படிந்த சோனியா, இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்; தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர். அவர் சொல்கிறார் ஊழலை நான் பொறுப்பதில்லை என்று. மன்மோகனுக்கு நற்சான்று வேறு. இது இரட்டைச் சோகம் இல்லையா?

எதற்காக இந்த போஃபர்ஸ் பின்னணி எல்லாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள் புரியும்.

கடந்த சில மாதங்களில் ஊழல்களின் சுனாமி நம்மைப் பலமுறை தாக்கியிருக்கிறது. அதில் முதலாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்தான். சோனியாவால் திருவாளர் பரிசுத்தம் என சான்றளிக்கப்பட்ட மன்மோகன் சிங்தான் இந்தக் கொள்ளைக்கு அனுமதியளித்தவர். 2ஜி ஊழல் குறித்து விசாரணை கோரிய சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை கோப்பில் தூங்க வைத்த "திருவாளர் பரிசுத்தம்', இப்போது அதுபற்றிய சட்டப் பிரச்னைகளைப் பேசி, சட்டத்தின் பிடியிலிருந்தும், தனது தார்மிகக் கடமையிலிருந்தும் ஓடி ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறார்.

ராசாவை தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக்கும் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவுடன் அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பேசிய உரையாடல்கள் வெளியே கசிந்திருக்கிறது. 8 ஆயிரம் கோடி மோசடி நடந்திருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல். 600 கோடி ஊழல் நடந்த மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல். இப்படி ஊழல் சுனாமிகள் இந்தியாவை விழுங்கிவிடும் ஆபத்தான நிலைமை.

இவை அனைத்தையும் சேர்த்தால் சுமார் 1.85 லட்சம் கோடி வருகிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட்டில் இது 18.5 சதவீதம். இவ்வளவு பெரிய ஊழலுக்கு இடையே எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல் காங்கிரஸýக்குக் கிடைத்த ஆறுதல். நீ மட்டும் என்ன ஒழுங்காம் என்று திருப்பிக் கேள்வி கேட்கக் கிடைத்த வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட 1.86 லட்சம் கோடி ஊழலுடன் ஒப்பிட்டால் அது வெறும் கொசுறுதான் என்றாலும், ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை பாரதிய ஜனதா கட்சி இழந்துவிட்டது. அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது.

நாம் முன்னே குறிப்பிட்ட முறைகேடுகளின் பட்டியலில் உள்ளவை 2ஜி ஊழல் தொடர்பானது. இந்த ஊழலில் நாட்டுக்கு 67 ஆயிரம் கோடியிலிருந்து

1.76 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தலைமைத் தணிக்கைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதும் அரசுக்குப் பேரிழப்பு என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அது எப்படிப்பட்ட ஊழல் என்பது தெரியும்போதுதான் தலைசுற்றல் ஏற்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்படும் அலைக்கற்றை என்பது ஒருவகையான மின்காந்த அலையைக் குறிப்பது. செல்போனில் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், கணினிகளை இணைப்பதற்கும் ஸ்பெக்ட்ரம் பயன்படுகிறது. இது நாட்டின் சொத்து.

2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 2008-ம் ஆண்டு இதை விற்பனை செய்து நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதுடன் ஒரு சிலர் லாபம் ஈட்டியதுதான் இந்த மோசடியின் பின்னணி.

2001-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட 8 ஆண்டுகளின் பணவீக்க வேறுபாடு மட்டுமே இழப்பு அல்ல. நகருக்கு நடுவே 2001-ம் ஆண்டு வாங்கிய நிலத்தை, அதே விலைக்கு 2008-ம் ஆண்டில் விற்பதைப் போன்றதுதான் அன்றைய முறையைப் பின்பற்றி அதே விலை நிர்ணயத்தில் இப்போது அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருப்பது.

2008-ம் ஆண்டில் மட்டுமே பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன என்றால் 8 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

தனது செயலை நியாயப்படுத்தும் ஆ.ராசா, 2001-ம் ஆண்டின் விலையிலேயே 2003 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது தனது செயலை நியாயப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா முன்வைக்கும் நொண்டி வாதம் இது.

2003-ம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 5 பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். மொத்தமே தொலைபேசி வைத்திருந்த இந்தியர்கள் 1.3 கோடி பேர்தான். 2006-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வந்தன. அரசு உதவிக்கு ஏங்கிக் கிடந்தன.

ஆனால், 2003-க்கும் 2008-க்கும் இடையே நிலைமை மாறியது. தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்தது. தொலைத்தொடர்பு வருவாய் 4 மடங்கு அதிகமானது. அந்தத் துறையின் பங்குகள் 4.4 மடங்கு உயர்ந்தன.

2001-ல் செல்போன் வைத்திருந்தோரின் எண்ணிக்கை வெறும் 30 லட்சம்தான். அது 2003-ல் 1.3 கோடியானது. 2008-ம் ஆண்டில் அதுவே 18 கோடியானது. இப்போது 68.8கோடி. 2003-ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம். 2003-ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடியாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய், 2008-ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியானது.

தொலைத்தொடர்புத் துறை எந்த அளவுக்கு வளமானதாக மாறியிருக்கிறது என்பதையும், அந்தத் துறையில் தொழில் செய்யும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு லாபம் பெறுகின்றன என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதனால், 2008-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் என்பது 2003-ம் ஆண்டைக் காட்டிலும் பலமடங்கு மதிப்புடையதாக மாறியிருக்கும்; அதைப் பெறுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்திருக்கும் என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்?

]இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 99.3 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறதென்றால், ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு பற்றி வேறென்ன சொல்ல?

2007 செப்டம்பரில் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் குறித்த கொள்கையை அறிவித்தார் அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசா. இது தொடர்பாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 1 என செப்டம்பர் 24-ம் தேதி அறிவித்தார். ஆனால் அவரே ஒருவாரம் கழித்து, செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதாவது ஒரே நாள் அவகாசத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்று பொருள். எப்படி இருக்கிறது கதை? அப்படியும், பலர் விண்ணப்பித்திருப்பதால், தனக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர ஏனையோரைத் தட்டிக் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அதன் பிறகு 100 நாள்கள் கழித்து ஜனவரி 10-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அவரிடம் இருந்து இன்னொரு திடீர் அறிவிப்பு பறந்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பாக செப்டம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை உடனடியாக அன்றையதினமே மதியம் 3.30-க்குள் அனுப்பி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அரசின் ஒப்புதலைப் பெற்று, அன்று மாலைக்குள் உரிய தொகையைச் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. எப்படி இருக்கிறது பாருங்கள், ஆ. ராசாவின் முறையான ஒதுக்கீட்டுக் கொள்கை. இதற்குப் பெயர்தான் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதாம்.

இந்த அறிவிப்பையடுத்து தில்லி தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. வரிசையில் முதலில் வருவதற்குக் கடும் போட்டி. இருக்காதா பின்னே? முதலில் வரும் சிலருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றால் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வராமல் இருக்குமா?

மொத்தம் வந்த 574 விண்ணப்பங்களில் 454 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் பல விண்ணப்பதாரர்கள் திகைத்தனர். உண்மையில் என்ன நடந்தது என்பது தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்தானே தெரியும்?

இதுபற்றிய சிஏஜி அறிக்கை தெளிவாக நடந்தேறிய நாடகத்தைப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது. "13 விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையுடன் தயாராக இருந்தனர்' என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. அதாவது அந்த 13 பேருக்கும் முன்பே தகவல் தெரிந்திருக்கிறது!

ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா! பல கோடிக்கான வங்கி வரைவோலையுடனும், வங்கி உத்தரவாதத்துடனும், தேவையான ஆவணங்களோடும் ஒரு சில நிறுவனங்கள் தயாராக வந்திருந்தன என்றால் அது எப்படி சாத்தியம்? காசோலையை மாற்றுவதற்கே அரைநாள் வேண்டும் என்கிற நிலைமையில் இவர்கள் முன்தேதியிட்ட வங்கி வரைவோலைகளுடன் தயாராக வந்திருந்தார்கள் என்றால் எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்ட சதியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே விவகாரம் தொடங்கிவிட்டது. ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறையை நிராகரித்த பிரதமர், வெளிப்படையாக நடந்துகொள்ளும்படி 2007 நவம்பரில் வலியுறுத்தி இருக்கிறார். சில மணி நேரங்களிலேயே அதற்குப் பதிலளித்த ராசா, முந்தைய அரசுகளின் கொள்கைப்படியே தாம் நடந்து கொள்வதாகப் பதிலளிக்கிறார்.

இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்க ஒருமாத அவகாசம் எடுத்துக் கொண்ட பிரதமர், தான் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக மட்டும் தகவல் அனுப்பினார். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என ராசாவுக்கு அனுமதியளிப்பது போன்றதுதானே இது?

ஜனவரி 10-ம் தேதி ஆ.ராசா தனது மோசடித் திட்டத்தை அரங்கேற்றினார். ஆனால் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

ஏற்கெனவே இருக்கும் கொள்கையையே தாம் பின்பற்றுவதாக ராசா தம்மிடம் தெரிவித்தார் என்று 15 மாதம் கழித்து 24.05.2010-ல் பிரதமர் ஒப்புக் கொள்கிறார். வெளிப்படையாக நடந்து கொள்ளச் சொன்ன பிரதமரின் தடாலடி பல்டிக்கு என்ன காரணம்? இந்தக் கொள்ளை ரகசியமானது அல்ல; எல்லோருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நாம் அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை.

இந்தப் பகல் கொள்ளையில் பெரிய கூட்டுச் சதி இருக்கிறது. ராசாவை மட்டுமல்ல, முதலில் ஏனய்யா மறுப்புத் தெரிவித்தீர்கள்? பிறகு ஏன் மெüனமானீர்கள், கடைசியாக ஏன் ஆதரவளிக்கிறீர்கள் என்று பிரதமரையும் அல்லவா கேட்க வேண்டும்!

2ஜி ஊழல் தொடர்பான முறைகேடுகள் மூன்று வழிகளில் கசியத் தொடங்கின. முதலாவது வழி எஸ்டெல் வழக்கு. அனைத்திந்திய உரிமம் பெறுவதற்காக முயன்ற எஸ்டெல் நிறுவனம், உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே ராசாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. 1,658 கோடிக்கு விற்பனையாகும் உரிமத்தைத் தங்களுக்கு 13,621 கோடிக்குத் தரும்படி அந்த நிறுவனம் கேட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் எஸ்டெல் முறையிட்டது. அந்த நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உடனே ராசாவின் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்தச் சமயத்தில் என்ன நடந்ததோ, எஸ்டெல் நிறுவனம் தங்கள் மனுவை விலக்கிக் கொண்டு, வழக்கிலிருந்து ஒதுங்கியது. ஆனால், ஊழல் விவகாரம் வெளிவர இந்த வழக்கு உதவியது. எஸ்டெல் வழங்க முன்வந்த தொகையின் அடிப்படையில்தான் 67,300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள். தொலைத் தொடர்புத் துறைக்கு மிகவும் புதியவைகளான இந்த நிறுவனங்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் 2ஜி உரிமம் பெற்ற சில வாரங்களில் தங்களது நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை பல மடங்கு லாபத்தில் விற்றன.

1,658 கோடிக்கு உரிமம் பெற்ற யூனிடெக், தனது 67 சதவீதப் பங்குகளை 6,120 கோடிக்கு விற்றது. அதாவது உரிமத்தின் மொத்த மதிப்பு 9,100 கோடி இதேபோல், 1,537 கோடிக்கு உரிமம் பெற்ற ஸ்வான், தனது 44.7 சதவீதப் பங்குகளை 3,217 கோடிக்கு விற்றது. 25 கோடிக்கு சிறிய உரிமங்களைப் பெற்ற எஸ்டெல் நிறுவனம், தனது 5.61 சதவீதப் பங்குகளை 238.5 கோடிக்கு விற்றது. இதன் அடிப்படையில்தான் இழப்பு 57,600 கோடியில் இருந்து 69,300 கோடிவரை இருக்கலாம் என அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சிஏஜி முடிவு செய்திருக்கிறார்.

மூன்றாவதாக, 3ஜி ஏலம். இந்த ஏலத்தில் அரசுக்குக் கிடைத்த வருவாயின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மதிப்பு கணக்கிடப்பட்டதில் அரசுக்கு 1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைதான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியாகி பரபரப்புக்குள்ளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்திருப்பது வெளிப்படையான மோசடி. திருவாளர் பரிசுத்தம், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தமானவர், நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும் சோனியா காந்திக்கும் தெரிந்தேதான் இது நடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ராசாவின் அமைச்சகத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ராசா தெளிவாகத் திருப்பிக் கேட்டார், "எல்லாவற்றையும் பிரதமருடன் ஆலோசித்துத்தான் செய்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முந்தைய ஒதுக்கீடுகளைப் போல நடந்திருக்கிறது. பிறகு, நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்?' என்று!

ராசாவின் கருத்தை பிரதமர் மறுக்கவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து கடந்த மே மாதம், "இந்த விவகாரம் குறித்து ராசா தம்முடன் ஆலோசனை நடத்தினார்' என்று பிரதமர் ஒப்புக்கொண்டார். பிரதமருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான வாக்குமூலம் வேறென்ன வேண்டும்?

முதலில் "நிராகரிப்பு', பின்னர் "தடை எதுவும் இல்லை', அதன் பிறகு "ஒப்புதல்' என தனது நிலையை பிரதமர் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது சிஏஜி அறிக்கை மூலம் மோசடிகள் அம்பலமாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் உள்பட நாட்டில் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிய பிறகும் வாயைத் திறக்க மறுக்கிறாரே ஏன்? பிரதமருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லையா?

ராசா விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது உங்கள் பதவிக்கே கூட ஆபத்தாக முடியலாம் என 2007-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் யாராவது பிரதமருக்கு உணர்த்தியிருப்பார்கள். இல்லாவிட்டால் ராசாவின் செயலை முதலில் நிராகரித்தவர், ஏற்றுக் கொள்ளாதவர், எச்சரித்தவர், பிறகு ஏன் பார்த்தும் பார்க்காமல் மெüனம் சாதித்தார்? அப்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையையும் வாயையும் கண்களையும் கட்டிப் போடும் சக்தி ஒருவருக்குத்தான் உண்டு. அது நிச்சயமாக சோனியா காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

கதை இன்னும் தொடர்கிறது. 2ஜி விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தவை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. ஒருகையில் டாடா குழுமத்தையும் மறு கையில் ரிலையன்ஸ் குழுமத்தையும் வைத்திருக்கும் நீரா ராடியா, தில்லி அரசியல் வட்டத்தில் செல்வாக்குப் படைத்தவர். 9 தொலைபேசிகள் மூலமாக 180 நாள்கள் அவர் நிகழ்த்திய உரையாடலை வருமான வரித்துறை சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்தது. சிபிஐயின் வேண்டுகோள்படி 20.11.2009-ம் தேதி நடந்த உரையாடலின் சிறு பகுதியை மட்டும் விசாரணைக்காக அது வழங்கியது. அந்தச் சிறுபகுதியே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் கிழித்துப் போட்டிருக்கிறது.

ராடியாவின் 5,800 தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இணையத்தில் கிடைப்பது 104. அவற்றில் 23 மட்டுமே எழுத்து வடிவமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தையும் தோண்டினால் இன்னும் என்னென்ன பூதங்களெல்லாம் கிளம்புமோ?

வருமானவரித்துறை சிபிஐக்கு அனுப்பிய குறிப்பில் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, ராடியாவும் ராசாவும் நெருக்கமானவர்கள். யூனிடெக், ஸ்வான், டேடாகாம் நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுத்ததில் ராடியாவுக்குப் பங்குண்டு.

இரண்டாவது, தான் அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு உரிமத்திலேயே ராசாவுக்குப் பங்கு உண்டு.

மூன்றாவது, ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக்குவதற்கு பர்கா தத், வீர் சாங்வி ஆகிய பத்திரிகையாளர்கள் வழியாக ராடியாவும் கனிமொழியும் முயன்றிருக்கிறார்கள்.

நான்காவது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரும் ராடியாவும் நெருக்கமானவர்கள்.

ஐந்தாவது, யூனிடெக், ஸ்வான் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் ராடியா உதவி செய்திருக்கிறார்.

இந்த ஐந்தும் சிறு துரும்புதான். முழு விவரமும் இன்னும் வெளிவரவில்லை.

ராசாவுக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைப்பதை முதலில் அவரிடம் உறுதி செய்வதே ராடியாதான். தொலைபேசி உரையாடலில் அது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு நெருக்கடி கொடுப்பது பற்றிக் குறிப்பிட்டு வீர் சாங்வியுடன் ராடியா பேசும்போது, "ஸ்டாலினின் அம்மா தயாளுவிடம் ரூ.600 கோடியை தயாநிதி மாறன் கொடுத்திருப்பார்' எனக் குறிப்பிடுகிறார்கள். வெட்கமே இல்லாமல் அமைச்சர் பதவி விற்கப்பட்டிருக்கிறது. அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

2ஜி விவகாரத்தில் ராசா மட்டும் தனியொருவராகக் கொள்ளை அடித்திருக்க முடியாது. முக்கியப் பயனாளிகள் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமரையே எதிர்க்கும் அளவுக்கு ராசாவுக்கோ அல்லது திமுகவுக்கோ தைரியமும் கிடையாது, திறனும் கிடையாது. திமுக வெளியேறிவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால்தான் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பின்னணியில் இருப்பது யார்? அது நிச்சயமாக, கருணாநிதியோ, கனிமொழியோவாக இருக்க முடியாது. அவர்களுக்குப் பயந்து பிரதமர் மெüனம் சாதித்திருக்க முடியாது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்ட ஒருவர்தான் இந்த மோசடியை பின்னால் இருந்து நடத்தியிருக்கிறார். அவர் யாராக இருக்க முடியும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

அந்த உண்மை வெளிவந்தால்தான் பிரதமரின் ஆலோசனையை ராசா மீறியது ஏன் என்பதும், பிரதமர் அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பதையும், இந்த மெகா மோசடியின் பின்னணிதான் என்ன என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும்.

அதனால்தான் அதை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குத்தான், பிரதமர் உள்பட யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்க அதிகாரம் உண்டு. அதனால்தான் கூட்டுக் குழு என்று சொன்னாலே அரசு தரப்பு பயப்படுகிறது. அதை எதிர்க்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர். சரி, சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், 2ஜியின் பின்னணியில் இருக்கும் அந்த "ஜி' யார்?

Thanks: எஸ். குருமூர்த்தி, Dinamani

Wednesday, December 8, 2010

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஊழல் பற்றி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த போதிலும், இதில் மக்களின் கவனம் திரும்பிவிடாதபடி காங்கிரசும் தி.மு.க.வும் கவனித்துக் கொண்டன. கருணாநிதி குடும்பச் சண்டையில் இந்த ஊழல் மீண்டும் புகையத் தொடங்கிய போதிலும், பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட தற்காலிக சமரசத்துக்குப் பின்னர் அது ஈரப் போர்வையால் மூடப்பட்டது. நீதிமன்றத்தின் கண்டங்கள், கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த தொலைபேசி உரையாடல்கள் முதலானவற்றைத் தொடர்ந்து இந்த ஊழல் மீண்டும் பரபரப்பாகி, தொலைத்தொடர்புத் துறையின் தி.மு.க. அமைச்சரான ராசா இப்போது பதவி விலகியுள்ளார்.

ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா செல்போன்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கற்றைக் கதிர்கள் அவசியம். வான்வெளியில் உள்ள ரேடியோ ஃபிரீக்வன்சி ஸ்பெக்ட்ரம் எனும் அலைவரிசையைக் கொண்டு செல்போன்களை இயக்க முடியும். தனியார்மயமும் தாராளமயமும் திணிக்கப்பட்ட பிறகு, 2001 முதல் பொதுச்சொத்தான அலைக்கற்றைத் தனியாருக்கு ஒதுக்கித் தரப்பட்டதில் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கோடிகளைக் குவித்துக் கொண்டன.

பின்னர், புகைப்படங்கள் – வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளும் புதிய அம்சங்கள் கொண்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) அறிவியல் வளர்ச்சியில் வந்தது. இதற்கான ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சரான ராசா, தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ரூ. 1,76,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய ராசாவோ, “நான் எந்தக் கையாடலும் செய்யவில்லை, சட்டபூர்வமாகத்தான் செய்துள்ளேன், பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத்தான் செய்தேன்” என்கிறார்.

ஆனால், 2ஜி அலைக்கற்றை விற்பனை குறித்து அரசின் தணிக்கைச் செயலாளரின் யோசனைகள், பிரதமரின் கடிதம், சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் கருத்துக்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கள் எனப் பலவற்றையும் அமைச்சர் ராசா புறக்கணித்துள்ளார். 2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். வெளிப்படையான ஏல முறையைப் புறக்கணித்து முதலில் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம் என்ற அடிப்படையில் 122 பேருக்கு ஒரே நாளில் அதிரடியாக உரிமம் வழங்கினார். தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பெயர் தெரியாத தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் வீட்டுமனை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த நிறுவனங்கள் அடுத்த நிமிடமே அந்த ஒதுக்கீட்டை வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள தாராள அனுமதியும் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராசா இதுவரை பதிலளிக்கவில்லை. இதில் ராசாவும் ராசாவுக்குப் பின்னால் உள்ளவர்களும் ஆதாயமடைந்தது எத்தனை கோடிகள் என்பதும் இதுவரை தெரியவில்லை.

ராசாவின் ஒப்புதலுடன்தான் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் முதலான வீட்டுமனை நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன. ஷாகித் பாவ்லா, வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம், 1,537 கோடி கொடுத்து 13 தொலைத்தொடர்பு வட்டங்களைப் பெற்றது. மொரீஷியசைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது 44.73 சதவீதப் பங்குகளை ரூ.3,217 கோடிகளுக்கு விற்றது. இதன்படி பார்த்தால், ஸ்வான் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் மதிப்பு ரூ.7,192 கோடிகளாகும். இப்படி யுனிடெக், எஸ் டெல், டாடா டெலிசர்வீஸ் – எனப் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்குகளைப் பல்லாயிரம் கோடிகளுக்கு உடனடியாகவே விற்று ஏப்பம் விட்டன. இந்த உத்தேச மதிப்பை வைத்துத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசுக்குக் கிடைத்ததோ வெறும் ரூ.9,014 கோடிகள்தான்.

ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. அதன்படியே 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதை ஊக வணிகத்தின் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்குபப் பல முதலாளிகள் விற்றுக் கொழுத்த ஆதாயம் அடைந்திருப்பதை எப்படித் தவறானது, முறைகேடானதென்று குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் தனியார்மயத் தாசர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் எழுப்பும் கேள்வி.

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்-தாராளமயம் தொடங்கப்பட்ட 1991-92 ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ,3442 கோடிகள். 2000 ஆண்டு முதல் 2002 -க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல், உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபோது, அந்நிறுவனங்களின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பையும் முதலாளிகளுக்குக் கொழுத்த ஆதாயத்தையும் ஏற்படுத்தியதாக அரசின் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே குற்றம் சாட்டியது.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கு வசதியாக தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த ஏலத்தில் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.9,45,000 கோடி வருமானம் தரத்தக்க இச்சேவைப் பிரிவுகள் டாடா, எஸ்ஸார், ரிலையன்சு, பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு வெறும் 1,15,000 கோடி ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான தொலைத்தொடர்புத் துறையின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு கொழுத்த ஆதாயமடைந்த இத்தகைய நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை நிலுவையான ஏறத்தாழ 8,000 கோடிகளைக்கூடத் தள்ளுபடி செய்ய வைத்து ஏப்பம் விட்டன. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு தனியார்மய-தாராளமயத்தைத் தீவிரப்படுத்தி புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையால் அடுத்த பத்தாண்டுகளில் அரசுகக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்த போதிலும் அவசரஅவசரமாக இதை அறிவித்து முதலாளிகளின் கொள்ளைக்குக் காவடி தூக்கியது, பா.ஜ.க.

இப்படி காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிகள் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி, காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர் முதலான அனைத்தையும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தன. கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகையை அம்பானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோடு, வரிச் சலுகைகளையும் வாரியிறைத்தது அரசு. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி ரிலையன்சு நடத்திய மோசடியால் அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதிலும், ரிலையன்சுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. போஸ்கோ நிறுவனம், ஒரிசாவில் ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக, ஓராண்டுக்கு ஏறத்தாழ 96,000 கோடி மதிப்புடைய இரும்புத் தாதுவை அள்ளிச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

அதேபோலத்தான் விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்த சுக்ராம், பிரமோத் மகஜன், தயாநிதி மாறன் ஆகியோர் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் துணைநின்று ஆதாயமடைந்துள்ளனர். பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார். பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகுப் பெருமுதலாளித்து கும்பல்களும், அதிகார வர்க்கமும், காங்கிரசும், ஊடகங்களும் இப்போது விவகாரம் அம்பலமானவுடன், பந்தி பரிமாறிய ராசாவை மட்டும் பலிகொடுத்துவிட்டு, மற்றவர்களைத் தப்புவிக்க முயற்சிக்கின்றன. ஊழல் மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ராசாவைத் தண்டிப்பதென்பது மொத்த விவகாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய தனியார்மயச் சூறையாடல்களைக் கொள்கையாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதைவிட முக்கியமானது.

இத்தகைய கொள்ளைகள் அம்பலமாகி, விசாரணையின் போது நீதித்துறை கேள்விகள் எழுப்புவதை வைத்து ஏதோ கிடுக்கிப்பிடி போடுவதாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்பது போலவும் ஊடகங்கள் சூடேற்றுகின்றன. நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால்,விசாரணயின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு வேறு விதமாகவே உள்ளது. அரசுத்துறை நிறுவனங்கள், பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று காசாக்குவது என்பதுதான் அரசின் கொள்கை. அக்கொள்கை விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதுதான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் நீதித்துறை தெரிவித்துள்ள கருத்து. தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையிடுவது சட்டப்படி குற்றமல்ல, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் வர்த்தகச் சுதந்திரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கோகோ கோலாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது, கேரள உயர்நீதிமன்றம்.

இப்போது நாடாளுமன்றத்தில் பெருங்கூச்சல் போடும் ஓட்டுக்கட்சிகள் எவையும் அலைக்கற்றை ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த பெருமுதலாளிகளிடமிருந்து அதனைப் பறிமுதல் செய் என்று கோரவில்லை. தொடரும் இத்தகைய பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் காரணமான தனியார்மய -தாராளமயக் கொள்கையை எதிர்க்க முன்வரவுமில்லை. மாறாக, கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை நிறுவக் கோருகின்றன. ஆனால், 1987-இல் போபர்ஸ் ஊழல் தொடங்கி இதுவரை அமைக்கப்பட்ட நான்கு நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்களின் விசாரணையில் ஒருவர்கூடக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

Thanks: புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010

Saturday, December 4, 2010

 ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய திமுக சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஊழல்!

திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலுவும், ஆ.ராசாவும் பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட தவறான முடிவுகளால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் கணக்கெடுக்கப்படாத மற்றும் சரிசெய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இருவராலும் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுத்தும் குற்றங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், டி.ஆர். பாலு கடந்த 1999 அக்டோபர் 13ம் தேதி முதல் 2003 டிசம்பர் 21 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். பாலுவைத் தொடர்ந்து ஆ.ராசா 2004 மே 23 முதல் 2007 மே 17 வரை சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தார். இதற்கிடையிலான 2006 ஜனவரி மாதத்தில் ஆ.ராசாவுக்கும், நீரா ராடியாவுக்கும் இடையே அறிமுகம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நீரா ராடியாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பல திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி எளிதாக கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நீரா ராடியாவிற்கு இருந்த செல்வாக்கு அனைவரும் அறிந்த ரகசியம்.

ஆ. ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்தபோது அவருக்கும், சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதிக்காக அணுகிய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளே ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கான வேர்களாகும். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் பிரிவின் இயக்குனராக ஆர்.கே.சந்தோலியா இருந்தபோது நீரா ராடியாவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு சுற்றுச்சூழல் தடைநீக்கச் சான்றிதழ்கள் அதிவேகத்தில் வழங்கப்பட்டன. (பின்னர் ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்றபோது அங்கேயும் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே. சந்தாலியாவிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அமலாக்கப்பிரிவு தற்போது விசாரணை நடத்துகிறது)

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா இருந்த காலத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் “இருண்ட காலம்” என்றே சுற்றுச்சூழல் அமைப்புகள் குறிப்பிடுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கான அறிக்கை” (Environment Impact Assessment) 1994ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டான 1986 முதல் 2006 வரையிலான 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் 4016 பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய பெரும் தொழில் திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போதும், நவீனப்படுத்தப்படும்போதும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற விதி சுற்றுச்சூழல் சட்டங்களில் இருந்தது.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது 2006ம் ஆண்டில் இந்த விதி திருத்தப்பட்டது. இதன்படி விரிவாக்கம் அல்லது நவீனப்படுத்தப்படும் தொழிற்சாலை மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய தேவையில்லை; அதற்குப் பதிலாக 'தங்களுக்கு தாங்களே சான்றளித்துக் கொள்ளலாம்' என சுற்றுச்சூழல் சட்டங்கள் வீரியம் இழக்கச் செய்யப்பட்டன.

2006ம் ஆண்டில் திருத்தம் என்ற பெயரில் வீரியம் இழக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிகளின்படி 2006 – 2008 ஆண்டுகளில் மட்டும் 2016 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்தத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழலிலும், சமூகத்திலும் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மாதம் ஒன்றுக்கு 80 முதல் 100 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக நாளொன்றுக்கு நான்கு அனுமதிகள்! இந்த தொழிற்சாலைகளுக்கு எதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டன என்பதற்கான எந்த விவரங்களையும் பாதுகாத்து வைப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்வரவில்லை. இந்த தகவல்கள் அனைத்தும் கல்ப விருட்சம் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு 2009ம் ஆண்டு வெளியிட்ட “சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகளை கண்காணித்தலும், பின்பற்றுதலும் – மோசடி” என்ற வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து தொழில் திட்டங்களையும் தற்போது தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA Report) தயாரித்தல், பொதுமக்கள் கருத்தறியும் நிகழ்ச்சி (Public Hearing) ஆகியவற்றுக்குப் பின் மதிப்பீட்டு நிபுணர் குழு(Expert Appraisal Committee)விற்கு அந்த அறிக்கைகள் அனுப்பப்படவேண்டும். குறிப்பாக நீர் மின் உற்பத்தி, நிலக்கரி வெப்ப மின் உற்பத்தி, சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இந்த விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். 2005ம் ஆண்டில் பல்வேறு மதிப்பீட்டு நிபுணர் குழுக்களிலும் பங்கேற்ற 64 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் டெல்லியை அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது சுற்றுச்சூழல் குறித்த நிபுணர்களும்கூட திமுகவிற்கு ஆதரவானவர்களே!

ஆ.ராசாவால் 2007ம் ஆண்டில் நதிப்பள்ளதாக்கு மற்றும் நீர்மின்நிலையம் குறித்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக பி.ஆப்ரஹாம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆப்ரஹாம் இதற்கு முன்பு மத்திய அரசின் ஆற்றல்துறை அமைச்சரகத்தில் அரசுச் செயலாளராக இருந்தவர். மேலும் நீர்மின்நிலைய திட்டங்களின் ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். எனவே இவரை சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக நியமனம் செய்ததற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இறுதியாக இன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பதவிக்காலத்தில் ஆபிரஹாம் தமது பதவியை விட்டு விலகினார். ஆனால் அவர் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவராக இருந்தபோது அனுமதி அளித்த திட்டங்களை மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலம் நாட்டின் சுற்றுச்சூழலில் பேரழிவு ஏற்படுத்தியது என்றால், அவரது முன்னோடியான டி.ஆர். பாலுவின் பதவிக்காலமும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல. தொழில் நிறுவனங்கள் செய்யும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு அந்த நிறுவனமே பொறுப்பாக்கப்படவேண்டும். ஆனால் டி.ஆர்.பாலு 2003 மார்ச் 13ம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” (Government’s Charter on Corporate Responsibility for Environment Protection – CREP) ஒன்றை வெளியிட்டார். அதன்படி சுற்றுச்சூழலை மிக அதிகம் பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 64 தொழில்களிலிருந்து 17 தொழில்களுக்கு டி.ஆர்.பாலு விலக்களித்தார். (தொழிற்சாலைகள் சூழலை அதிகம் பாதித்தால் அது சிவப்புப் பிரிவிலும், நடுத்தரமாக பாதித்தால் ஆரஞ்சு பிரிவிலும், குறைந்த அளவு பாதித்தால் பச்சைப் பிரிவிலும் சேர்க்கப்படுகிறது) 2003ம் ஆண்டில் வரவிருந்த தேர்தலுக்கான நிதியை திரட்டுவதற்காக மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் தெரிவிக்க விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” வெளியிடுவதற்கு முன்னதாக 2002 டிசம்பர் 5 முதல் 2003 ஜனவரி 10ம் தேதிக்குள் 17 கூட்டங்கள் நடைபெற்றன. ஒரே நாளில் நான்கு கூட்டங்கள் வரை நடந்துள்ளன. இந்த இற்றுப்போன அறிவிப்பு தொடர்பான பேரங்கள் 2003 மார்ச் 12ம் தேதி வரை நடந்துள்ளது. இதனை பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல், அதை கண்காணித்தல் குறித்த எந்த விவரமும் இல்லாத இந்த அறிக்கையை வெளிட்டதோடு டி. ஆர். பாலு, “இந்த அறிக்கையின் அம்சங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் தாமாகவே முன் வந்து செயல்படுத்த வேண்டியவை. அந்த நிறுவனங்கள் அவ்வாறு செய்யத்தவறினால் அதற்காக அந்த நிறுவனங்களை தண்டிக்க மாட்டோம்” என்று மீடியாக்களிடம் கூறினார்.

இவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எந்த பயனுமற்ற ஒரு அறிக்கையை வெளியிட்ட டி.ஆர்.பாலு, வணிக நிறுவனங்களிலிருந்து வெளியாகும் மாசு குறித்து ஆய்வு செய்வதில் அந்த நிறுவன அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை மிகமோசமாக பாதிக்கக்கூடிய சிவப்பு பிரிவில் இருந்து விலக்களிக்கப்பட்ட 17 தொழில்களும் டி.ஆர். பாலு அறிவித்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” திட்டத்தின் கீழ் வந்தன. இந்த 17 பிரிவுகளில் 2098 தொழிற்சாலைகள் இயங்கின. சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுத்தக்கூடிய 525 சர்க்கரை ஆலைகள், 397 மருந்து நிறுவனங்கள், 232 சாராய ஆலைகள், 150 தோல் தொழிற்சாலைகள், 150 பூச்சி மருந்து தொழிற்சாலைகள், 126 சிமென்ட் ஆலைகள், 111 ரசாயன உரத்தொழிற்சாலைகள், 100 சாயத் தொழிற்சாலைகள், 96 காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகள், 83 அனல் மின் நிலையங்கள், 51 பெட்ரோலிய நிறுவனங்கள், 35 காஸ்டிக் சோடா நிறுவனங்கள், 17 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், 8 இரும்பு ஆலைகள், 14 அலுமினிய ஆலைகள், 6 தாமிர ஆலைகள், 4 துத்தநாக ஆலைகள் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டன. இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு” அனைத்து கழிவுப் பொருட்களையும் எரிஉலைகளில் எரிக்கும் ஆபத்து மிகுந்த ஒரு வழிமுறையை பரிந்துரை செய்தது. கழிவுப்பொருட்கள் எரிஉலைகளில் எரிக்கப்படும்போது மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த டையாக்ஸின் வாயு வெளிப்படும் என்ற ஆபத்தை புறக்கணித்து, எரிஉலைகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் இந்த அறிவிப்பு வழி வகுத்தது.

இதற்கிடையில் சுமார் 150 பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் அவற்றின் கழிவுகளை பிரித்தெடுத்து, நச்சுப்பொருட்களை நீக்கும் முறையை கையாள முன்வந்தன. இதுபோல சிமென்ட் தயாரிக்கும் ஆலைகளில் ஒரு பொதுக்கருத்து உருவாகவில்லை. சிமென்ட் ஆலைகள் மிகுந்த அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்த வல்லவை. ஒரு சிமென்ட் ஆலையால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கான எல்லை அந்த ஆலையிலிருந்து 3 கிலோ மீட்டரா அல்லது 7 கிலோ மீட்டரா என்ற பிரசினை எழுந்தபோது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் விகே துக்கல் என்பவர் தமது சிறப்பான கணித அறிவை பயன்படுத்தி அந்த அளவை 5 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்தார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பா”ல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மற்ற பிரசினைகளை களைவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு எளிய வழியை கண்டுபிடித்தது – தொல்லை தரும் அம்சங்களை அந்த அறிவிப்பிலிருந்து நீக்குவதே அந்த எளிய வழி! தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் டிசம்பர் 2004க்குள் ஐஎஸ்ஓ 14000 தரச்சான்று பெறவேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. தோல் தொழில்அதிபர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த அம்சம் நீக்கப்பட்டது. தோல் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து நச்சுப்பொருளான சல்பரை மறு பயன்பாட்டுக்காக பிரித்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டது. எனவே நச்சுப்பொருளான சல்பர் கழிவுகளுடன் கலந்து நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தையும் மாசுபடுத்த சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளால் குளோரின்-ஆல்கலி தொழில் நிறுவனங்களும் பெரும்பயன் அடைந்தன. இந்த ஆலைகள் அனைத்தும் நச்சுத்தன்மை அதிகம் உள்ள பாதரச செல் தொழில் நுட்பத்தில் இருந்து மெம்ப்ரேன் தொழில்நுட்பத்துக்கு 2005 டிசம்பருக்குள் மாற வேண்டும் என்று அரசு அறிவிப்பு கூறியது. தொழில் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த கெடு தேதி நீக்கப்பட்டது. இந்த கெடு தொடர்ந்திருந்தால் மெம்ப்ரேன் தொழில்நுட்பத்திற்கு அனைவரும் மாறியிருப்பார்கள். இந்த மெம்பரேன் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுக்கான இறக்குமதி வரியில் 10 சதவீதம் தள்ளுபடிகூட வழங்கப்பட்டது.

அரசு அறிவித்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-இன் படி பாதரசம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 கிராமுக்கும் குறைவான பாதரசம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வரையறை நிர்ணயிக்கப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக அளவாகும். நம் நாட்டில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது சுமார் 25 முதல் 30 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இதே அளவு காஸ்டிக் சோடா தயாரிக்கும்போது மேற்கொள்ளப்படும் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நச்சுப்பொருளான பாதரசம் 9 டன்னைவிட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய தொழில்களும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மிகவும் மென்மையாக நடத்தப்பட்டன. சுற்றுச்சூழலை சீரழிக்கும் தொழில்நிறுவனங்களை ஏன் தண்டிக்கவில்லை என அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் கேட்டபோது, “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு, தொழில் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை வலியுறுத்துகிறது. எனவே தொழிற்துறை தாமாகவே தன்னை சீரமைத்துக் கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.

இந்த “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு குறித்த அரசு அறிவிப்பு”-ஐ தயாரிப்பதில் சுற்றுச்சூழல் அமைப்புகளிடமோ, மற்ற மக்கள் அமைப்புகளிடமோ எந்த வித கருத்தும் கோரப்படவில்லை. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக டெல்லி அசோகா ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்குகூட வணிக நிறுவனங்களின் நிகழ்ச்சியாகவே நடந்தது.

2003ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 203 திட்டங்களில் சரிபாதிக்கும் குறைவான திட்டங்களுக்கே சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சூழல் கண்காணிப்பு அறிக்கைகள் (Monitoring Reports) தயாரிக்கப்பட்டன. 150 திட்டங்களுக்கு மட்டுமே அத்திட்ட நிர்வாகிகளால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கைகள் (Compliance Report) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பதவிக்காலத்தில் சுற்றுச்சூழல் ஆய்வில் மண் அரிப்பு, நிலவளம் குறைதல் போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டன. இதனால் நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான 328.60 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 146.82 மில்லியன் ஹெக்டேர் நிலம் சீர்கேடு அடைந்தது. மேலும் இவர்களின் ஆட்சிக்காலத்தில் 4.4 மில்லியன் டன் அளவிற்கு ஆபத்துமிகுந்த கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள் நஞ்சாயிற்று. பஞ்சாப் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கருவுற்ற தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்கும் தொப்பூள் கொடியில் 287 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரின் பொறுப்பற்ற மற்றும் ஊழல்படிந்த கொள்கை முடிவுகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான இழப்பு மிகவும் சிறியதாகவே இருக்கும்.

-சாந்தனு குஹா ரே

(டெஹல்கா இணையத்தில் வெளிவந்தது)

ஆங்கில மூலம்: http://www.tehelka.com/story_main47.asp?filename=Ws241110ENVIRONMENT.asp

தமிழில்: சுந்தரராஜன் ( sundar@lawyersundar.netஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Thanks: keetu

Wednesday, December 1, 2010

யாருக்கும் வெட்கமில்லை……

ரத்தம் கொதித்தது – நவம்பர் 18ந்தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வியில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்,

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தான் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தன் குடும்பமே பேரன் பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு… எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதி மாறன்.பக்கத்தில் அழகிரி.

இவர்கள் இரண்டு பேர் சண்டையில்தானே மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்களுக்குக் கொள்ளி வைத்தீர்கள்.. கொள்ளி வைத்த கும்பல் எல்லாம் சிறப்பு விருந்தினர்களாக எதிரே ஜொலிக்கும் பந்தலில்…

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லாரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப்படுத்தப்பட்ட நீரா ராடியா போன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் அஞ்சலி வரை அத்தனை நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. தமிழக வரலாற்றில் இதற்கு முன்பும் சரி, இனியும் சரி, இப்படி ஒரு குடும்பம் இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ்நாட்டின் மானத்தை டெல்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

இந்த வாரப் பூச்செண்டு

ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பம் முதல் தொடர்ந்து விடாபிடியாக அம்பலப்படுத்தி வந்திருக்கும் பயனீர் ஆங்கில ஏட்டின் செய்தியாளர் கோபிகிருஷ்ணனுக்கு
இ.வாப

இந்த வாரக் கேள்வி

தன் ஆட்சியில் பூஜைகளும் பூமி பூஜைகளும் நடத்திய ஜெயலலிதாவுக்கு அண்ணா, பெரியார் பற்றிப் பேச என்ன தகுதி என்று கேட்டிருக்கும் கருணாநிதியின் அரசு புதிய தலைமைச் செயலகம்/சட்டமனறக் கட்டடத்துக்கு அய்யர்களை வைத்து பூமி பூஜை நடத்தியது எந்தத் தகுதியில் ?

கல்கி 27.11.2010

Thanks: gnani & kalki magazine