Tuesday, May 11, 2010

சிறப்புக் கொள்ளையடிக்கும் மண்டலங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி, 2005-08 வரையிலான மூன்று ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் இட்ட முதலீடு ரூ. 338 கோடி. ஆனால் தமிழக அரசிடம் இருந்து நோக்கியா பெற்ற வரிச் சலுகை ரூ. 638 கோடி ரூபாய்க்கு மேல். சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் தமிழகத்துக்குக் கிடைத்த லாபம் (!) இதுதான்.

'இந்தியா' என்ற கருத்தாக்கத்தை ஆங்கிலேயன் உண்டாக்கினான். அதற்கு முன்பு 56 தனிநாடுகளாக இருந்தன. வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயன் படிப்படியாக அடிமைப்படுத்தி, ஆள வசதியாக 56 தனிநாடுகளை ஒன்றாக்கினான்; 'இந்தியா' என்றான். "இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதலும் முதன்மையுமான செய்தி என்னவென்றால் இந்தியா என்ற ஒரு நாடு இப்போதும் இல்லை; அது எப்போதும் இருந்தது இல்லை. ஐரோப்பிய எண்ணங்களின்படி அரசியல், சமுதாய, மத ஒற்றுமை கொண்டதாகச் சொல்லப்படுகின்ற இந்தியா என்று எந்த நாடும் கிடையாது; நாம் அதிகமாகக் கேள்விப்படுகிற இந்தியா என்ற நாடும், இந்தியாவின் மக்கள் என்பவர்களும் நடப்பில் இல்லாத ஒரு விஷயமே ஆகும்" என்கிறார் சர் ஜான் ஸ்டிராச்சி. இதே கருத்துப்பட பல அரசியலறிஞர்கள் பல்வேறு நூல்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

காலனி ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை நேரடியாக அடிமைப்படுத்தி ஆண்டன. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது. ஆனால், இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை ஆட்சி செய்கின்றன. மறைமுகமான ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்காக காட் அமைப்பு 1995இல் உலக வணிக அமைப்பாக மாற்றப்பட்டு, வளரும் நாடுகளின் மீது ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இன்று உலகில் முதன்மையாக உள்ள 200 பன்னாட்டு நிறுவனங்களில் 83 அமெரிக்காவில் உள்ளன. ஆக, உலக வணிக அமைப்பு எனும் போர்வையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகியவற்றின் மீது ஆளுமை செலுத்தி வருகின்றன.

காட் ஒப்பந்தப்படி அரசுகள் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை, சந்தையை மாற்றியமைக்க வேண்டும். தனியார்மயமாக்கல் என்பது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அரசுத் துறைகளை, பொதுத் துறைகளைத் தனியார்முதலாளிகள் வசம் ஒப்படைக்க வைப்பதாகும். தாராளமயமாக்கல் என்பது ஒப்பந்தங்களில் கையழுத்திட்ட நாடுகளில் எவ்வகைத் தடையும் இன்றி பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களைத் தாராளமாகக் கொட்டி விற்பனை செய்வதாகும். உலகமயமாக்கல் என்பது தனியார்மயமாக்கப்பட்ட தாராளமயச் சந்தையை உலகம் முழுக்க விரித்துச் செல்வதாகும். இந்த உலகமயமாக்கல் என்பது முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த மிகப்பெரிய தந்திரம்.

உலகமயப் பொருளாதாரத்தின் ஒரு கூறே சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. 1986களில் இந்தியா தொழில் துறைக்கு புதிய வேகமளிக்கும் வகையிலும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் எண்ணத்துடனும் ஏற்றுமதிச் செயல்பாட்டு மண்டலங்கள் (Export Processing Zones) ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் அதிலிருந்து மீள, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உருவாக்கப்பட்டத் திட்டமே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். பகுத்தறிவு, மத எதிர்ப்பு பேசிய கும்பல் பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்று, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வணிக அமைச்சராக இருந்த மறைந்த முரசொலி மாறனால் 01-4-2000ல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து முன்மொழியப்பட்டது. அதுவரை செயற்பட்டு வந்த ஏற்றுமதிச் செயற்பாட்டு மண்டலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டன. 10-05-2005 அன்று நாடாளுமன்ற ஒப்புதலும், 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்ட நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் (சி.பொ.ம.சட்டம்) - 2005இன் சுருக்கம்:

இந்தியாவிலுள்ள இந்திய நிறுவனங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்துக் கொள்ளலாம். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தன்சான்று (Self Certification) அடிப்படையில் ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொள்ளலாம். அரசின் இசைவு பெறத் தேவையில்லை. எந்த இசைவும் பெறாமல் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெளிநாட்டு முதலீடு பெறலாம். இம்மண்டலத்தில் செயற்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 250 கோடி வரை வெளிநாட்டு வணிக வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அரசின் இசைவு தேவையில்லை. பல பொருள்களை உருவாக்கும் (Multi Product Zone) சிறப்புப் பொருளாதார மண்டலம் இருப்பின் குறைந்த அளவு 2,500 குறுக்கப் ((Acre) பரப்பில் அமைய வேண்டும். 3,500 குறுக்கம் வரை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குக் கையகப்படுத்தலாம். சிறப்புக் காரணங்களுக்காக வரம்பற்ற பரப்பளவிலும் இம்மண்டலங்கள் அமைக்கலாம். வேளாண் நிலம் உள்ளிட்ட எந்த நிலமானாலும் கையகப்படுத்திக் கொள்ள இந்திய அரசு - மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

மண்டலங்களை நிறுவும் அல்லது அதில் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100%, அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு வழங்கப்படும். இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை. உற்பத்தி வரி, இறக்குமதி வரி கிடையாது; மத்திய விற்பனை வரியோ சேவை வரியோ கிடையாது. மற்ற இறக்குமதிப் பொருள்களைப் போல் இம்மண்டலத்திற்கு இறக்குமதியாகும் பொருள்கள் சுங்க ஆய்வுக்கு உட்படுத்தப்படாது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தயாரிப்புப் பணி நடைபெறாத பரப்பு மொத்தப் பரப்பளவில் 75% வரை இருக்கலாம். இங்குள்ள குடியிருப்பு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கிடங்கள், குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து ஆகிய கட்டுமானப் பணிகளுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முழு வருமான வரிவிலக்கு உண்டு. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம்; அவர்களுக்கு பணிநிலைப்போ பிற சட்ட உரிமைகளோ இல்லை; பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என மேலும் பல அதிகாரங்கள், சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள வணிகர்கள் அரசிடம் வரிச்சலுகைகளைக் கேட்டுப் போராடியும் கிடைக்காத நிலையில், எங்கிருந்தோ வந்து நாட்டைச் சுரண்டிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிவிலக்குகளை வாரி வழங்குவது என்ன ஞாயம்?

தொழிலாளர் நிலை

இம்மண்டலங்களில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையில்லாததால் 8 மணி நேரத்திற்கு மேலும் வேலை வாங்குவதும் விரும்பினால் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதும், மிகக் குறைந்த ஊதியம் அளிப்பதும் நடக்கிறது. ஐ.நா.வின் உலகத் தொழிலாளர் அமைப்பு உலகம் முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உழைப்புச் சுரண்டலை ஈவிரக்கமின்றிக் கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றன என்றும் அதனால் பல தொழிலாளர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

உலகமயமாக்கலால், புதிய தொழில்நுட்பத்தால் தொழிலாளர்கள் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு உட்படுகின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, போலந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உலகத் தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் பத்தில் ஒருவருக்கு மனஉளைச்சல் நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது தெரிகிறது. இதை வலியுறுத்தி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிவுரை வழங்கியும் இந்தியா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ரூ. 50 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்தவொரு தொழிலுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environment Impact Assessment Notification) தயாரிக்க வேண்டும். வளங்குன்றா வளர்ச்சிக்குப் பொருத்தமான வகையில் இயற்கை வளங்களைக் கையாளுவதை முறைப்படுத்தவே 1986இன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி 29 வகையான தொழில்களை உள்ளடக்கி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இவை மட்டுமன்றி குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மூலதனமிடப்படும் தொழில்களுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (1994) தயாரிக்க வேண்டும் என்று 1997 ஏப்ரல் 10இல் திருத்தப்பட்டது. பட்டியலில் உள்ள 29 வகை தொழில்களுக்கும் பொது விசாரணை நடத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், பல கோடிகளுக்கு மேல் முதலீடு செய்யப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தேவையில்லை என்று மத்திய அரசு தளர்த்தியுள்ளது வெட்கக்கேடானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. "நிலம் என்பது அரசமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆயினும், தொழில்வளர்ச்சி கருதி இந்தியாவின் எந்த இடத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் இறையாண்மையுள்ள உரிமை இந்திய அரசுக்கு உண்டு" என சி.பொ.ம சட்டம் கூறுகின்றது. இது அடிப்படையில் மாநில அரசுகளுக்கு எதிரானது.

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் 63, கர்நாடகாவில் 36, அரியானாவில் 34, ஆந்திராவில் 29, தமிழ்நாட்டில் 27, குஜராத்தில் 20, உ.பி.யில் 9, பஞ்சாபில் 7 என 225 மண்டலங்கள் தொடங்கப்படவுள்ளன. இவை 367 ஆக உயர்த்தப்பட்டு 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 18 மாதங்களில் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 237 மண்டலங்களுக்கு இசைவளிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானக் குறுக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒவ்வொன்றுக்கும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு வளர்ச்சி ஆணையர் உண்டு. அவரது உத்தரவின்றி உள்ளே யாரும் உள்ளே செல்ல முடியாது. மாநில அரசு அதிகாரிகள்கூட செல்ல முடியாது. ஆக, ஒவ்வொரு மண்டலமும் மாநில அரசுக்குக் கட்டுப்படாத தன்னாட்சிப் பகுதிகள்தான். ஆனால், இதை "சுதந்திர வர்த்தக மண்டலம்" என்கிறது இந்திய அரசு. உண்மைதான்! சுரண்டிக் கொழுக்கும் இந்திய முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்த மண்டலங்கள் "சுதந்திர வர்த்தக மண்டலங்கள்"தான்.

கடந்த சூலை 2006 வரை 67 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு தந்த சலுகைகளால் உண்டான இழப்பு ரூ. 1,75,000 கோடி என சர்வதேச நிதி நிறுவனம் கூறியுள்ளது. முன்பு செயல்பட்டு வந்த 28 மண்டலங்களால் மட்டும் ரூ. 90,000 கோடி இழப்பு என இந்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. "ஒரு லட்சம் கோடி மூலதனத்தைப் பெற ரூ. 90,000 கோடி வருவான வரியை இழக்க வேண்டுமா?" என நிதியமைச்சகம் அரசிடம் வினா எழுப்பியுள்ளது. 1998இல் தலைமைத் தணிக்கை அறிக்கை கூறியதாவது : "ஏற்றுமதி மண்டலங்கள் பெற்ற சலுகையால் சுங்கவரி இழப்பு ரூ. 7,500 கோடி உருவானது. நமக்கு வந்த வெளிநாட்டுச் செலாவணியோ ரூ. 4,700 கோடி மட்டுமே".

மற்ற மாநிலங்களில்...

டெல்லி அரசு ரிலையன்சு நிறுவன மின்திட்டத்திற்காக 25,000 குறுக்க வேளாண்நிலத்தை உழவர்களிடமிருந்து பறித்து அம்பானிக்கு வழங்கியுள்ளது. ஒரிசாவில் தென்கொரிய போஸ்கோ நிறுவனம் அமைக்கவுள்ள பலநோக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 1,601 குறுக்க நிலத்தை அரசு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.பொ.ம. எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்கள் மீது, அரசே "சல்வா ஜீடும்" எனும் ஆயுதமேந்திய குண்டர்படை துணையுடன் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு வங்கம் நந்திகிராமில் 14,500 குறுக்க வேளாண்நிலங்களையும் சிங்கூரில் 999.1 குறுக்க வேளாண் நிலங்களையும் கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கும் இந்தோனேசியவைச் சார்ந்த சலீம் குழு நிறுவனத்திற்கும் வழங்க முயற்சித்ததை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் நடந்தன. 06.01.2007 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உழவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்; பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். நவம்பர் 2007இல் நந்திகிராம் பகுதியில் உண்மை நிலையை அறியச் சென்ற நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவி மேதா பட்கர் தாக்கப்பட்டார். புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் சுமித் சர்க்கார், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தன், இதழாளர் பிரஃபுல் பித்வாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுத்துறையினர் நவம்பர் 13இல் "மேற்கு வங்க அரசை வன்மையாகக் கண்டித்து நந்தி கிராம் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் என்றும் இருப்போம்" என்று அறிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் 27 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய உழவர்களிடமிருந்து வேளாண் நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது "தகவல் தொழில்நுட்பப் பூங்கா" என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜெயங்கொண்டத்தில் மின் உருவாக்கத் திட்டம் உட்பட நாங்குநேரி, ஓசூர், மதுரை உட்படப் பல்வேறு இடங்களில் உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது. மதுரை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பரம்புப்பட்டி, வளையங்குளம், வளையப்பட்டி, சோளங்குருணி ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் நடந்தேறி வருகிறது. இப்பகுதிகளில் சகாரா நிறுவனம் பல ஆயிரம் குறுக்க நிலங்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி வைத்துள்ளது. சிறீபெரும்புதூருக்கு அருகே நோக்கியா கைபேசி குழுமத்திற்காகச் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைத்துத்தர தி.மு.க. அரசு முடிவெடுத்து அதற்குரிய வேலைகள் நடந்து வருகின்றன.

சென்னை - எண்ணூர் 2,500 குறுக்கம், ஓசூர் 3,600 குறுக்கம் மற்றும் நாங்குநேரி, துரைப்பாக்கம், கோவை என தமிழகத்தின் பிறபகுதிகளிலும் இதே வேலை நடைபெறுகிறது. ஆக, 11,000 குறுக்க விளைநிலங்களைப் பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்க உள்ளது தமிழக அரசு. 27 தனித்தனித் தன்னாட்சிப் பகுதிகள் உருவாகின்றன என்பதே இதன் பொருள். இந்த இடங்களில் தமிழக அரசின் அதிகாரம் செல்லாது.

தெலுங்கானா பிரிவினை குறித்துப் பேசும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு, தமிழகத்தில் ஏற்கனவே 27 தன்னாட்சிப் பகுதிகள் உருவாகி வருகின்றன என்பது தெரியாதா? அங்கு தமிழக அரசின் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்பதும் தெரியாதா? மாநிலத் சுயாட்சி கேட்கும் இவர், இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் புகழ்மிக்க ஊசுட்டேரின் வடபுறத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கரசூர், சேதராப்பட்டு, துத்திப்பட்டு ஊர்களில் உள்ள வேளாண் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண் தொழில் அடியோடு ஒழிந்துபோகும், ஊசுட்டேரிக்கு நீர்வரத்து குறைந்து போகும். மேலும், துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையில் தேங்காய்த்திட்டு மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். இங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்யும் எனக் கூறியுள்ளது. இம்மண்டலத்திற்காகவே இப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டமாநத்தம் எனும் ஊரில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் பல தொழிற்பேட்டைகள் நலிந்து வருகையில், "வளர்ச்சி" என்ற பெயரில் நல்ல விளைச்சல் தரும் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பது மேலும் சீரழிவையே கொண்டுவரும். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் - பொதுநல அமைப்புகள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றன. புதுச்சேரி அரசுக்கு நிதிநெருக்கடி எற்பட்டுள்ளதால் தற்போதைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் நேர்மாறாக சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. சீனாவில் நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே தனியார் முதலாளிகளுக்கு மாற்றித் தரப்படுகிறது. நிலம் அரசிடமே இருக்கும். தொழிற்சாலைகளுக்கு மட்டுமே சீனாவில் நிலம் ஒதுக்கப்படுகையில் இந்தியாவில் தங்கும் விடுதி, வணிகவளாகம், பெரிய உணவு விடுதி, மீதமுள்ள நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றல் ஆகியவற்றுக்கு இசைவு அளிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விளைநிலங்களை பயன்படுத்த சீன அரசு தடைவிதித்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

இந்தியத் தொழிற்சாலைகளை மூடச் செய்கிறது.

பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் துணை போகிறது.

விளைச்சல் தரும் வேளாண் நிலத்தையும் கையகப்படுத்துகிறது.

மண்ணின் மைந்தர்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டுகிறது.

நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, வறுமையை அதிகரிக்கச் செய்கிறது.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கிறது.

சுற்றுச்சூழலைச் சீரழிக்கிறது. அந்நியச் செலவாணியை மந்தமாக்கி உள்ளது.

நாட்டை மீண்டும் அடிமைப்படுத்தத் துணை போகிறது. இதனால்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கிறோம். இவற்றை சிறப்புப் கொள்ளையடிக்கும் மண்டலங்கள் என்பதே சரியாக இருக்கும்.

நன்றி :

சூழல் இதழ் எண்கள் 98, 99/2006, இதழ்கள்/பூவுலகின் நண்பர்கள் புதுச்சேரி, சிறப்புப் பொருளாதார மண்டலம் (தொகுப்பு - அ.சி. சின்னப்பத் தமிழர்)/ சவால்களை முறியடிக்கத் தமிழ்த்தேசியமே - கி. வெங்கட்ராமன், சிந்தனையாளன் பொங்கல் மலர் 2007/ க. முகிலன் கட்டுரை
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Thanks: புதுவை சீனு.தமிழ்மணி

மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்

இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது அது எப்பாடுப்பட்டாவது தன்னை சீரமைத்துக் கொள்ளும். மனிதனால் அதற்கு ஆபத்து உண்டாகுமானால், அது அவனை திருப்பித் தாக்கும். அப்போது இளமஞ்சள் நிறமுள்ள ஒரு டஃபோடில் மலரைவிட ஒரு மைக்கேல் ஏஞ்சலோவோ, ஒரு ஷேக்ஸ்பியரோ, ஒரு மொஸார்ட்டோ இயற்கைக்கு முக்கியமல்ல. ஏனெனில் இயற்கை அன்னைக்கு செல்லக் குழந்தைகள் என்று எவருமில்லை.

- ‘Vanishing Species’ புத்தகத்தின் முன்னுரையில் ரோமன் கிரே

இருவாட்சி பறவைகள் இரண்டும் அலறி பறக்கின்றன. காற்று வெளியெங்கும் அதன் கதறல்கள் கரைந்துக் கொண்டிருக்கின்றன. அந்த மரத்தின் உச்சியிலுள்ள பொந்தில் அதன் கூடும், அதற்குள்ளே அவற்றின் குஞ்சுகளும் இருக்கின்றன. ஆனால் அந்த மரமோ இப்போது வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதோ அது வீழ்கிறது. அது சாயும் திசையில் சிறிதும் பெரிதுமான சுமார் இருபதுக்கு மேல் வெட்டப்பட்ட மரங்கள். அம்மரங்களின் மேல் இது சாய்வதால், எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து 'சடசட'வென சரிந்து சாய்ந்து வீழ்கின்றன. ஒரு சிறு பூகம்பம் போல் நிலம் அதிர்ந்து ஓய்கிறது. பச்சையத்தின் குருதி வீச்சம் நாசித்துளைகளில் நிறைகிறது.

அந்தக் குஞ்சுகளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அலறிக்கொண்டிருந்த அந்த இருவாட்சிகளை எங்கே காணோம்? புள்ளினங்களும் காட்டு விலங்கினங்களும் எங்கே ஒளிந்துக் கொண்டு, இந்த அபாய கூக்குரலை எழுப்புகின்றன? யாரை நோக்கி எழுப்புகின்றன? உனக்கும் நாளை இதே கதிதான் என்று மனிதனை நோக்கி, அவை எச்சரிக்கின்றனவா? மனிதனின் காதில் அது விழுமா? விழாது. விழவில்லை. இதோ மறுபடியும் இயந்திரவாளின் ஓசை கர்ணகடூரமாக கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்னொரு மரம் மரணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஒரு மரணத்தைவிட அம்மரணத்துக்கு சாட்சியமாக இருப்பது பெருங் கொடுமை. வாழ்நாள் வரைக்கும் அது வதைத்துக் கொண்டே இருக்கும். ஒரு மழைக்காட்டின் மரணத்துக்கு நான்கு வருடங்களுக்கு மேல் நான் சாட்சியாக வாழ்ந்ததன் சுருக்கமான வாக்குமூலமே இக்கட்டுரை.

தஞ்சை மண்டலத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, அங்கு அறவே இல்லாத மலை, காடுகளின் மீது ஒரு மோகம் இருந்தது இயற்கை. அதனால்தானோ என்னவோ "போர்னியோ காட்டுக்குள் ஒரு பணி இருக்கிறது. சேர்ந்துக் கொள்கிறாயா" என்றொரு அழைப்பு வந்தது. அன்று நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட குறைவான சம்பளம்தான் கிடைக்கும் என்றபோதிலும், காடுகளிள் மீதிருந்த அதீத மோகத்தில் சரியாகக்கூட விசாரிக்காமல் உடனே ஒப்புக்கொண்டு விட்டேன். ஆனால் அங்கு சென்று பணியில் சேர்ந்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எந்தக் காட்டைக் காண ஆவலுற்று நான் அப்பணியில் சேர்ந்தேனோ, அந்நிறுவனத்துக்கு அந்த கன்னிக் காட்டை அழித்து வெட்டு மரங்களை (லிஷீரீs) ஏற்றுமதி செய்வதுதான் தொழில்.

மனம் முரண்பட்ட அந்த சூழ்நிலையிலும் காட்டுக்குள் வசிக்க நேர்ந்தபோது பலவற்றை அனுபவ பூர்வமாக அறிந்துக் கொள்ளும் ஒரு நல் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஒரு 'கன்னிக் காடு' எப்படி இருக்கும் என்று அப்போதுதான் அறிந்துக் கொண்டேன். கன்னிக் காடு என்றால் இன்னமும் வெளிமனிதர்களின் (பூர்வக்குடிகள் அல்ல) காலடிப் படாதக் காடு என்றுப் பொருள்.

மேலும் ஒரு காடு அழிவுறும்போது ஏற்படும் சூழலியல் பாதிப்பு என்ன? அக்காட்டில் வாழ்ந்துவரும் உயிரினங்கள், பூர்வக்குடிகளின் வாழ்வாதாரச் சிதைவு எவ்வகைப்பட்டது? மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளத்தை மறைமுகமாக சுரண்டி, தன் ஊளைச் சதையை இன்னமும் பெருக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் நுண் அரசியல் எத்தகையது? இது போல் நிறைய... நிறைய... கற்றுக்கொண்டேன்.

காடு என்றால்?

காடு என்றால் நிறைய மரங்கள் இருக்கும். அதில் 'பயங்கரமான' மிருகங்கள் வசிக்கும். இதுதான் காடு பற்றிய நமது புரிதல். இவற்றையும் மீறி கூடுதலாக ஒரு தகவல் நமக்கு தெரியுமென்றால் அது காடு இருந்தால் மழை பெய்யும் என்பதே (சுவருக்கு சுவர் எழுதி வைத்திருப்பதால்). ஆனால் என்ன மாதிரியான காடு இருக்க வேண்டும்? எப்படி மழை வரும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் சமூகக் காடுகள் என்ற பெயரில் வணிக நிறுவனங்களுக்காக அரசாங்கம் வளர்த்துக் கொண்டிருக்கும் தைல மரத் தோப்புகளை 'காடு' என்று நம்பிக் கொண்டிருப்போமா?

ஓர் உண்மையான மிதவெப்ப மண்டல மழைக்காடு (பார்க்க: பெட்டி செய்தி) எப்படி இருக்கும் என்று அறிமுகம் செய்ய, உங்களின் கரம் பிடித்து அக்காட்டுக்குள் அழைத்து செல்கிறேன் வாருங்கள். இக்காட்டின் உள்ளே நுழைந்ததும் பாருங்கள் என்ன ஒரு குளுமை! என்ன ஒரு இருட்டு! என்ன ஒரு ஈரப்பதம்! மழைக் காட்டைத் தவிர இந்த பூமியில் வேறெங்கும் இந்த அற்புத சூழலை நீங்கள் அனுபவிக்க முடியாது. இச்சூழல் எப்படி உண்டானது?

பொதுவாக சூரியனின் கதிர்கள் காற்றை நேரடியாக வெப்பமூட்டுவதில்லை. அது வெறும் நிலத்தில் பட்டு, அதன்மூலம் நிலம் சூடாகி, அதனால் அதனையட்டி உள்ளக் காற்றும் சூடாகி மேலேறுகிறது. அப்படி மேலேறிய காற்றால்தான் வளிமண்டலம் வெப்பமடைகிறது. ஆனால் நிலம் கட்டாந்தரையாக இல்லாமல் மரங்களால் போர்த்தப்பட்டிருந்தால் அதன் வெப்பநிலை ஒரு மட்டத்துக்கு மேல் உயரமுடியாது. ஏனென்றால் மரங்கள் நீராவியை வெளியிட்டு, தன்மீது விழும் வெப்பத்தை குறைத்துக் கொள்ளுகின்றன. காடுகளில் உள்ள மரங்களின் உயரமும் அடர்த்தியும் அதிகரிக்க அதிகரிக்க, அதன் உட்புற குளுமையும் அதிகரிக்கிறது. காடுகள் குளுமையாக இருப்பதன் ரகசியம் இதுதான்.

இக்காட்டில் உள்ள மரங்கள் சுமார் 200 அடி உயரத்துக்கு வளரக்கூடியவை (ஒரு இருபது மாடி கட்டிடத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்). இம்மரங்களுக்கு அதன் தண்டு பகுதியில் கிளைகள் கிடையாது. ஆனால் அதன் உச்சியில் கிளைகள் விரிந்து, அடர்ந்த இலைகளுடன் ஒரு குடைபோல் விரிந்திருப்பதை பாருங்கள். இப்படி எல்லா மரங்களும் இக்காட்டில் நெருக்கமாக இணைந்து ஒரு போர்வைப் போல் மேலே படர்ந்திருப்பதால் மொத்த சூரிய வெளிச்சத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் மட்டுமே காட்டின் உள்ளே ஊடுருவுகிறது. எனவேதான் காட்டின் உட்புறம் எப்போதும் இருட்டாகவே காட்சியளிக்கிறது.

சூரிய வெளிச்சம் ஊடுருவி புகாததால் மண்ணில் உள்ள நீர் எளிதில் ஆவியாவதில்லை. இதனாலேயே மண் எப்போதும் ஈரப்பதத்தோடு இருப்பதோடு காற்றின் ஈரப்பதத்தையும் நிலையாக வைத்திருக்கிறது. இப்படி குளுமை, இருட்டு, ஈரப்பதம் இம்மூன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருந்தன. இந்த சூழ்நிலையில் இக்காட்டுக்குள் கோடிக்கணக்கான தாவரங்கள் வாழ்ந்து பெருகி ஒரு முழு மழைக்காட்டை, அதன் பல்லுயிர் வளத்தோடு உருவாக்கி வைத்திருக்கிறது.

இக்காட்டில் உயிர் செறிவானது மூன்று நிலைகளில் காணப்படுகிறது. முதலாவது இந்த நீண்டு உயர்ந்த மரங்களின் உச்சியில் ஒரு குடை போல் விரிந்து அடர்ந்த கிளை, இலைகளாலான "மர மேற்கவிகை" இருக்கிறதல்லவா? அதை ஆங்கிலத்தில் சிணீஸீஷீஜீஹ் என்பார்கள். இந்த மர மேற்கவிகையில் மட்டும் வசிக்கும் உயிரினங்கள் இருவாட்சி பறவைகள், சில குரங்கினங்கள். இரண்டாவது தரைப்பகுதி. இங்குதான் நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் மான் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. மூன்றாவது ஓடைகள், குட்டைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் வாழும் மீன்கள், நீர்-நில வாழ்விகள் இத்தொகுதியில் அடங்கும்.

இவ்வளவு அற்புதமான இயற்கையையும் செறிவான உயிர்ம சூழ்நிலையையும்தான் தன் ஒரே ஒரு செயலால் எங்கள் நிறுவனம் அடியோடு சீர்குலைத்தது. அச்செயல் - காடழிப்பு.

கானகத்தின் மரணம்

ஒரே ஒரு மரம் வெட்டப்படும் போது ஏற்படும் விளைவை முதல் பத்தியில் பார்த்தோம். ஒரு காடே அவ்வாறு அழிக்கப்படும்போது, அந்த பல்லுயிர் சூழலில் ஏற்பட்ட சீர்குலைவை இக்கட்டுரைக்குள் விளக்க முடியாது. ஒரு போர்க்களத்தைப் போல் காட்சியளித்த அந்த சூழ்நிலையில் பறவைகளின் இனிய ஓசைக்கு பதிலாக இயந்திர வாளின் கொடூர ஒலியும், விலங்குகளின் குரலுக்கு பதிலாக புல்டோசர்களின் கரடுமுரடான ஓசையும் கேட்டது நாராசம். குளுமையும் இருளும் குடியிருந்த இடத்தில் சுளீரென்று வீசும் சூரிய வெளிச்சம் கண்டது அதனினும் கொடிது.

காட்டில் வெட்டப்பட்ட மரங்களைத் தவிர மீதமுள்ள சிறு மரங்களும் இதர தாவரங்களும் மீண்டும் வளர்ந்து செழித்து முன்பிருந்த, பழைய மாதிரியான காட்டை உருவாக்க முடியாது. ஆண்டுக்கணக்கில் இப்படி இருட்டிலும் ஈரத்திலும் வளர்ந்த இத்தாவரங்கள் நேரடியான சூரிய வெளிச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றின் தன்மையை இழப்பதே இதற்குக் காரணம். இக்காட்டுக்குள் முன்பு வாழ்ந்த பறவைகளும் விலங்குகளும் தப்பி வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன.

எனவே பெரிய மரங்களை மட்டும்தான் வெட்ட அனுமதிக் கொடுக்கிறோம் என அரசாங்கங்கள் சொல்வது ஒரு ஏமாற்று வேலை. இயற்கையான ஒரு மழைக்காட்டை அழித்துவிட்டு, மீண்டும் அதேமாதிரியான ஒரு மழைக்காட்டை உருவாக்குவது என்பது இயலாது எனும்போது, "மறுகாடு வளர்ப்பு" என்பதும் ஒரு மோசடி வார்த்தைதான்.

என்னுடைய அனுபவத்தில் இவ்வாறு அழிக்கப்பட்ட காடுகள் பின்பு தீயிட்டு சுத்தமாக அழிக்கப்பட்டு கொக்கோ, செம்பனை (ளிவீறீ றிணீறீனீ) முதலிய வணிக பயிர்களை பயிரிடும் தோட்டங்களாகவும் சில காடுகள் கனிம சுரங்ககளாகவும் மாற்றப்படுவதைத்தான் கண்டிருக்கிறேன். இதற்காகவே பெரும் வணிக நிறுவனங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. பெரு நிலப்பரப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் இக்காட்டின் அற்புதமான மண் வளமும் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.

சூரிய ஒளிபுகாத மழைக்காட்டுக்குள் இலை தழைகள் கீழே விழுந்து, அதன் மேல் பறவைகள், விலங்குகளின் கழிவுகள் கலக்கின்றன. இவை நுண்ணியிரிகளால் உருமாற்றம் அடைந்து மக்கலான மேல்மண் படிவு உண்டாகின்றன. இந்த மேல்மண் படிவு வளமான சத்துக்கள் நிறைந்தது. இப்படி அரை அங்குல மண்ணை உருவாக்குவதற்கு ஒரு மழைக்காடு ஆயிரம் ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறது. போர்னியோ காட்டுக்குள் இம்மேல்மண் படிவு சுமார் ஒரு அடி உயரத்துக்கும் அதிகமாகவே இருந்ததை, பல இடங்களில் நான் கண்டிருக்கிறேன்.

இந்த வளமான மண்ணில் வணிகப் பயிர்களை பயிரிடும்போது, அதற்கான ஊட்டச்சத்து செலவில்லாமல் முதல் சில ஆண்டுகளுக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் மழையானது நேரடியாக இந்நிலத்தை தாக்கதாக்க, அக்காடுகளின் மர மேற்கவிகை தடுப்பால் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்த வளமான மேல்மண் படிவு, மண்ணரிப்பு மூலம் அகற்றப்படுகிறது. நாளடைவில் நிலம் தன் வளத்தை இழக்கிறது. நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன? கறக்கும் வரை இலாபம்தானே?

மேலும் பரந்த காட்டுப் பகுதியில் வெட்டுமர நிறுனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மரம்வெட்ட அனுமதியளித்து, காடுகளை மொட்டையடித்துவிட்டு ஆங்காங்கே பல நூறு மைல் இடைவெளி விட்டு துண்டுதுண்டாக சில காட்டுப் பகுதிகளை 'பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதி'யாக அரசு நிர்வாகங்கள் அறிவித்து வைத்திருக்கின்றன. இதுவும் ஒரு பயனற்ற வேலைதான். ஏனெனில் காடுகளில் மூன்று நிலைகளில் உயிரினங்கள் வாழ்வதைக் கண்டோம். ஒரு பரந்த வனப்பகுதி இவ்வாறு துண்டாக்கப்படுவதன் மூலம் இந்த உயிரினங்களின் புழக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளேயே பலவந்தமாக முடக்கப்படுகிறது.

இதனால் என்ன விளைவுகள் நேருகிறது என்று பார்ப்போம். முதலில் இரு வனப் பகுதிகளுக்கிடையேயான 'மகரந்த சேர்க்கை' தடைப்படுகிறது. மேலும் மர மேற்கவிகைகளில் மட்டும் வசிக்கும் உயிரினங்களின் எச்சத்தின் மூலம் நடைபெறும் விதைப்பரவலும் நின்று போகிறது. இதோடு தரைப்பகுதி விலங்கினங்களின் உணவு சுழற்சியிலும் தடை ஏற்படுகிறது. யானை போன்ற விலங்கினங்களின் பாரம்பரிய வழித்தடங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இறுதியாக வெட்டுப்பட்ட வனப் பகுதியினூடே ஓடும் ஓடைகள் நின்று போகின்றன. கூடவே நதிகளும் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன.

இவ்வாறு துண்டிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளின் எல்லையோரங்களில் காணப்படும் தாவரங்கள் சூரிய வெளிச்சத்தின் நேரடி தாக்குதலால் மெல்லமெல்ல அழிவை சந்திக்கின்றன. எனவே இதன் எல்லைகள் குறுகிக்குறுகி, பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காட்டுப் பகுதியும் நாளடைவில் தன் பரப்பை இழந்து வருகின்றன என்பதே உண்மை.

போர்னியோ உயிர் மண்டலம் மிகவும் செறிவுமிக்க ஒன்று. உதாரணத்துக்கு ஒரு 25 ஏக்கர் நிலத்தில் 700க்கும் மேற்பட்ட மரவகைகளை காணலாம். இது வட அமெரிக்காவில் உள்ள மொத்த மரவகைகளுக்கு சமம். இப்படிப்பட்ட பசுமைக் காடுகளைதான் பணத்தாள்களாக உருமாற்றிக் கொண்டிருக்கின்றன கொள்ளைக்கார வணிக நிறுவனங்கள்.

இந்த பசுமைக் காடுகளையெல்லாம் நீங்கள் பணத்தாள்களாக உருமாற்றலாம். ஆனால் உங்கள் பணத்தாள்களால் பச்சையம் தயாரிக்க முடியுமா?

காடழிப்பின் அரசியல்

உலகில் மிதவெப்ப மண்டல காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் ஏழை நாடுகள்தான். எனவே தங்களின் வருமானத்துக்காகவே இந்நாடுகள் காடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன என பொதுவாக நம்பப்படுகிறது. இதனாலேயே இந்நாடுகளை 'சுற்றுச்சூழல் வில்லன்கள்' என வளர்ந்த நாடுகள் வர்ணிக்கின்றன. ஒரு பேச்சுக்கு இந்நாடுகளை வில்லன்களாக வைத்துக் கொண்டால்கூட இம்மரங்களையெல்லாம் இறக்குமதி செய்வது யார்? இந்த வளர்ந்த நாடுகள்தானே? அப்படியென்றால் இவர்கள் மட்டும் என்ன கதாநாயகர்களா?

மிதவெப்ப மண்டல நாடுகள் தன் வருமானத்துக்காகவே காடுகளை அழிக்கிறது என்பது அப்பட்டமான பொய். இக்காடழிப்பின் பின்னணியில் வளர்ந்த நாடுகளின் நுணுக்கமான பொருளாதார அரசியல் வலை பின்னப்பட்டுள்ளது. இதில் இம்மூன்றாம் உலக நாடுகள் சிக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை.

இந்த ஏழை நாடுகளின் மீது உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களுக்கு திடீர் என்று பாசம் பொங்கும். 'அய்யோ... உங்கள் நாட்டில் அணைகள் இல்லை, சாலைகள் இல்லை, மின்சார வசதி போதாது, வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை... உங்கள் வளர்ச்சிக்கு நாங்கள் உதவுகிறோம். வேண்டிய கடன் தருகிறோம். வாங்கி கொள்ளுங்கள்' என்பார்கள்.

ஆனால் இக்கடனை வாங்கிய பின், இதை எப்படி திருப்பி செலுத்துவது என்று இந்நாடுகள் யோசிக்கும் வேளையில் "இடுக்கண் களையும் நண்பனை" போன்ற தோற்றத்துடன் வரும் பெரு வணிக நிறுவனங்கள், 'இதற்கென்ன யோசனை? இவ்வளவு பெரிய காட்டை கையில் வைத்துக் கொண்டு யாராவது இப்படி நெய்க்கு அலைவார்களா?' என்று அறிவுரை கூறும். அவ்வளவுதான் விஷயம் முடிந்தது.

உலக நிதி நிறுவனங்களுக்கும் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களுக்கும் உள்ள உறவை நாம் விரிவாக விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களின் சூழ்ச்சி வலையில் விழுந்த நாடுகளுக்கு கடைசியில் எஞ்சுவது என்னவோ வில்லன்கள் என்ற அவப் பெயர் மட்டும்தான்.

உண்மையில் காடழிப்பின் மூலம் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை வணிக நிறுவனங்களே விழுங்குகின்றன. சம்பந்தப்பட்ட நாடோ அதன் மக்களோ அனுபவிப்பது வெகு சொற்பமே. நிலம் கையகப்படுத்துவதில் இருந்தே இது தொடங்குகிறது. காடுகளை இந்நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கே கைப்பற்றுகின்றன.

எடுத்துக்காட்டாக போர்னியோவின் ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதி ஒரு பழங்குடி சமூகத்தினர் வசம் இருந்தது. 1986இல் ஒரு மிகப் பெரிய நிறுவனம் வெறும் 2000 மலேசிய வெள்ளியைக் (இன்றைய மதிப்பில்கூட வெறும் 27,000 இந்திய ரூபாய்தான்) கொடுத்து 69 லட்சம் ஏக்கர் காட்டை ஆக்கிரமித்துக் கொண்டது. மில்லியன் டாலர் கணக்கில் கொள்ளையடித்த அந்நிறுவனத்திடம் அந்த அப்பாவி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் அந்நிறுவனத்துக்கே தினக்கூலிகளாக மாறி போயினர்.

இந்த அப்பாவி மக்களை போலவே இந்த நாடுகளும் இன்று நிர்கதியாக நிற்கின்றன. தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை உலக நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைக்கவே அவை பயன்படுத்துகிறன. இறுதியில் தாங்கள் எந்நாளும் திரும்பவே பெறமுடியாத இயற்கை வளத்தையும் இழந்து நிற்கின்றன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணக்கார நாடாக கருதப்படுவது பிரேசில். இந்நாடே தன் வருவாயில் 40 சதவிகிதத்தை கடனை அடைக்கத்தான் பயன்படுத்துகிறது என்றால், பிற ஏழை நாடுகளின் கதி? இவ்வாறு வளர்ந்த நாடுகளின் மேலதிக வளர்ச்சிக்காகவே மழைக்காடுகள் படுவேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது எவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது தெரியுமா?

ஒரு நொடிக்கு... ஆம் ஒரு நொடிக்கு ‘ஒன்றிலிருந்து ஒன்றரை ஏக்கர்’ காடுகள் அழிந்துக் கொண்டிருக்கின்றன.

என் வனவாசத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள். அழிக்கப்பட்ட காட்டின் நடுவே தன்னந்தனியாய் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் உறுப்புகள் அறுபட்டு மாய்ந்து கிடக்கும் மரப் பிணங்கள். அப்போது எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.

இக்காட்டு மரங்களை இறக்குமதி செய்யும் மேலை நாடுகள் அவற்றை பெரும்பாலும் சவப் பெட்டிகள் செய்யவே பயன்படுத்துகின்றனவாம். அது யாருக்கான சவப்பெட்டி? பூமிக்கான சவப்பெட்டி அல்லவா?

அழிக்கப்பட்ட இக்காடு பின்னர் விவசாய நிலமாக மாறும். இவ்வாறு காடுகளை அழித்துஅழித்து விவசாய நிலமாக மாற்றி, அதனால் மண் வளம் இழந்து பஞ்சம் ஏற்பட்டு, இறுதியில் மக்களும் மடிய... இப்படியாகத்தானே ஒரு மாயன் நாகரிகத்தை நாம் இழந்தோம்?

மரங்களை இழந்த ஒரு நாடு என்னவாகும்? கடைசி மரம் வரை வெட்டி சாய்த்து எல்லா உயிரினங்களும் அழிய, இறுதியில் உண்ண உணவில்லாமல் ஒருவரை ஒருவர் வெட்டி தின்று ஒரு மனிதர்கூட எஞ்சாத 'பாப்புவா நுய்' தீவு காலியான வரலாற்றை நாம் ஏன் மறந்து போகிறோம்?

அளவுக்கு அதிகமான நுகர்வு கலாச்சாரமே இயற்கையின் அழிவுக்கும் தொடர்ச்சியாக மனித குலத்தின் அழிவுக்கும் காரணமாகிறது. இதைப் பற்றி எப்போது சிந்திக்கப் போகிறோம்?

நுகர்வு கலாச்சாரம் என்பதே மிக அழகாக ஒப்பனை செய்யப்பட்ட ஒரு புன்னகை. அதன் பின்னே எப்படிப்பட்ட ஒரு கோர மனதையும் ஒளித்து வைத்துவிட முடிகிறது. எனவே அப்புன்னகைக்கு பின்னுள்ள அரசியலை நாம் அடையாளம் காண முயல வேண்டும்.

இதோ ஒரு வெட்ட மரத்தின் மீது அமர்ந்திருக்கிறேன் அல்லவா? இம்மரத்தின் பெயர் 'ஜெலுத்தோங்’ (Jelutong). இம்மரம் எதற்காக வெட்டப்பட்டது தெரியுமா? பியானோவின் தாளக்கட்டைகள் செய்ய.

ஒரு பியானோ இசைக்கப்படும்போது அதன் இன்னிசையில் நீங்கள் மெய் மறக்கலாம். ஆனால் எனக்கோ அதில் இருவாட்சி பறவைகளின் அலறல் இன்னும் கேட்கிறதே, என்ன செய்ய?

(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Thanks: நக்கீரன்