Thursday, June 17, 2010

நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்

இராம்மோகன், எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் 76 துணை ராணுவத்தினர் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் காரண காரியங்களை அறியும் பொறுப்பை மத்திய அரசு இவருக்குக் கொடுத்துள்ளது. இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ...

வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டித் தாக்குதலுக்குப் பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது கருத்து?

rammohanஅவ்வாறு நடப்பின் அது ஒரு மிகப்பெரிய தவறாகும். நீங்கள் இந்தப் பிரச்சனையை(நக்சல்) எவ்வள‌வு தூரம் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மூலம் அணுகுகின்றீர்களோ, அந்த அளவிற்கு இப்பிரச்சனை மேலும் பலமான ஒன்றாக‌வே மாறும்.

சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய உங்களை உள்துறை அமைச்ச‌க‌ம் நிய‌மித்துள்ள‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ள் அனுப‌வ‌ம் ம‌ற்றும் முடிவு எடுக்கும் திற‌மையை வைத்து தான் இந்த‌ பொறுப்பை உங்க‌ளுக்குக் கொடுத்துள்ள‌து. இப்பொழுது இந்நாட்டில் நிலவி வ‌ரும் மாவோயிஸ்ட்டு பிர‌ச்ச‌னையை நீங்க‌ள் எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்?

முத‌லில் இதை ஒரு ச‌மூக‌நீதிப் பிர‌ச்ச‌னையாக‌வே நான் பார்க்கின்றேன். 1980ல் ஹைத‌ராபாத்தில் மைய‌ விசாரணைக் குழுவின் (CBI) பிராந்திய‌ த‌லைமை அதிகாரியாக‌ ப‌ணியாற்றிய‌போது ந‌க்ச‌ல் பிர‌ச்ச‌னைக‌ளை அறியத் தொடங்கினேன். என்னுட‌ன் ஒன்றாகப் ப‌யிற்சி பெற்ற‌ அஜ‌ய் தியோரா அப்பொழுது ஹைத‌ராபாத்தில் உளவுப் பிரிவின் த‌லைமை அதிகாரியாகப் ப‌ணியாற்றினார். அவர் நக்சல்களைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிக் கொண்டிருந்தார். நான் அசாமில் ப‌ணிபுரியும்போது இது போன்ற‌ க‌ல‌க‌ங்களைக் க‌ட்டுப‌டுத்தியுள்ளேன். மேலும் இந்திய‌ திபெத்திய‌ எல்லை காவ‌ல் ப‌டையிலும் இருந்துள்ளேன். அத‌ன் முக்கிய‌ நோக்க‌மே எதிரியின் ப‌குதிக்குள் சென்று ச‌ண்டையிடுவதே என்பதால், கொரில்லாப் போர் முறையை க‌ற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதிலிருக்கும் ச‌வால் என‌க்கு எப்போதும் பிடித்த‌ ஒன்று.

பெரும்பாலான‌ மாவோயிஸ்ட் த‌லைவ‌ர்க‌ள் ஆந்திராவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். இத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்று நீங்க‌ள் க‌ருதுகின்றீர்க‌ள்?

நான் பார்த்த‌வ‌ரையில் ஆந்திராவில் மிக‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னை நில‌ம் தான். ஆதிக்க‌ சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌லைமுறை, த‌லைமுறையாக‌ ப‌ழ‌ங்குடியின‌ரையும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ள‌து சுய‌ந‌ல‌த்திற்காக‌ பிழிந்து வ‌ருகின்றார்க‌ள். சுத‌ந்திர‌த்திற்கு முன் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு என்று எதுவுமில்லை. இத‌னால் இந்த‌ ஆதிக்க‌ சாதியின‌ர் பெரும‌ளவு நில‌ங்க‌ளை வ‌ளைத்துப் போட்டுள்ள‌னர். சில‌ நேர‌ங்க‌ளில் இது 1000 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வையும் தாண்டிச் சென்ற‌துண்டு. அதே நேர‌த்தில் இந்தப் ப‌ழ‌ங்குடியினர், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌மோ சிறித‌ளவு நில‌மோ அல்ல‌து நில‌மில்லாத‌ நிலையுமே இருந்து வ‌ந்துள்ள‌து. இந்த‌ சிறித‌ள‌வு நில‌ங்க‌ளையும் ஆதிக்க‌ சாதியின‌ர் பொய்க் க‌ண‌க்கு காட்டி, பிடுங்கி, அவ‌ர்க‌ளை எப்பொழுதும் க‌ட‌னாளியாக‌வே வைத்துள்ள‌ன‌ர். இந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ர் குத்தகை விவசாயிகளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு, இவ‌ர்க‌ளின் அறுவ‌டையில் மூன்றில் இர‌ண்டு ப‌ங்கு ஆதிக்க‌ சாதியின‌ருக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இந்தக் கார‌ண‌ங்க‌ளினால் முத‌லில் 1946ல் இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் தெலுங்கானா ப‌குதிக‌ளில் வேலை செய்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ழ‌ங்குடியின‌ரை ஒரு கூட்ட‌மாக‌ சேர்த்து அவ‌ர்க‌ளின் வில், அம்பை மட்டுமே வைத்து ஆதிக்க‌ சாதியின‌ரின் வீட்டைச் சுற்றி வ‌ளைத்து அங்கு உள்ள‌ தானிய‌ங்க‌ளை இம்ம‌க்க‌ளுக்கு பிரித்து வ‌ழ‌ங்கின‌ர். மேலும் அவ‌ர்க‌ளிட‌ம் சென்று இன்றிலிருந்து விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு மூன்றில் இர‌ண்டு ப‌குதியும், மூன்றில் ஒரு ப‌குதி நில‌ உரிமையாள‌ருக்கும் செல்ல‌ வேண்டும் என்றும் கூறினார்க‌ள். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ நில‌ உரிமையாள‌ர்க‌ள் காவ‌ல் துறையின‌ரிட‌ம் சென்று புகார் கொடுக்க‌, காவ‌ல் துறை அங்கு வாழ்ந்து வ‌ரும் ம‌க்க‌ளை கைது செய்து அடித்து துன்புறுத்தின‌ர்.

சுத‌ந்திர‌த்திற்குப் பின்ன‌ர் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ ஆனால் அவை ஒரு பொழுதும் ஆந்திராவில் ந‌டைமுறைக்கு வ‌ர‌வே இல்லை. 1989ல் அர‌சாங்க‌ம் மாறிய‌போது நான் தியோராவை அழைத்துக் கொண்டு புதிய‌ வ‌ருவாய்த் துறை அமைச்சரைச் சென்று ச‌ந்தித்தேன். 'உங்க‌ளால் ஒரு பொழுதும் இந்தப் பிர‌ச்ச‌னையை(ந‌க்ச‌ல்) தீர்க்க‌ முடியாது' என அவரிடம் கூறினேன். நான் பேசிய‌ வித‌ம் அவ‌ருக்குப் பிடிக்க‌வில்லை எனத் தெரிந்தது. மேலும் அத‌ற்கான‌ கார‌ண‌த்தைக் கூறினேன். நீங்க‌ள் இந்த‌ போராட்ட‌த்தை நீர்த்துப் போக‌ச் செய்ய‌ நில‌ உச்ச‌ வ‌ர‌ம்புச் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கூறினேன். ஆனால் அத‌ற்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்ச‌ர் கூறிவிட்டார். அத‌ற்குக் கார‌ண‌ம் கூறுகையில் ம‌ற்றொரு அமைச்ச‌ரான‌ சுதாக‌ர் ராவிற்கு சொந்த‌மாக‌ 1,100 ஏக்க‌ர் இருப்ப‌தாக‌வும், இது போன்ற‌வ‌ர்க‌ள் நிறைய‌ இருப்ப‌தால் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வாய்ப்பே இல்லை என்று அவ‌ர் கூறினார்.

இது போன்ற‌ சாதிய‌ அமைப்பு முறையே ஆந்திராவில் நில‌வுகின்ற‌து. பெரும்பாலான‌ காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் இன்ன‌மும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்யப் ப‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஏனெனில் அந்த அறிக்கைகள் ப‌திவே செய்ய‌ப்ப‌டாது , அவ்வாறு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டாலும் அத‌ன் மேல் விசார‌ணையும் ந‌ட‌க்காது. மேலும் பெண்க‌ள் பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கு உள்ளாக்கப் ப‌டுகின்ற‌ன‌ர். வேலை செய்யும் விவசாயிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌னைவியை திருமணத்தின் முத‌ல் நாள் இர‌வு நில‌ உரிமையாள‌ருக்குக் கொடுக்க‌ வேண்டும். இது ப‌ழ‌ங்குடிக‌ளின் நாட்டுப்புற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌து. இந்த நாட்டில் பெண் வாழ்வ‌த‌ற்கு எந்த‌ ஒரு ந‌ம்பிக்கையும் இல்லை என்றும் அதே பாட‌லில் வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டாம‌ல் எவ்வாறு நீங்க‌ள் பிர‌ச்ச‌னைக்குத் தீர்வு காண்பீர்க‌ள்? இராணுவத்தின் மூலம் இத‌ற்குத் தீர்வு காண‌ முடியாது.

ஊட‌க‌ங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளை தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்தியுள்ள‌ன‌. இதை நீங்க‌ள் ஏற்றுக் கொள்கின்றீர்க‌ளா?

இங்கே எல்லோரும் ந‌க்ச‌ல்களைப் ப‌ற்றி ம‌ட்டுமே பேசுகின்றார்க‌ள். மிக‌வும் சில‌ரே இங்கே இர‌ண்டு வ‌குப்புக‌ள் உள்ள‌தை புரிந்துகொள்கின்ற‌ன‌ர். ப‌ழ‌ங்குடியின‌ர் ம‌ற்றும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பினர் சமூகத்தின் அடி மட்டத்தில் உள்ளனர். இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) க‌ட்சியின் தலைமையிலும் 99 விழுக்காடு ஆதிக்க‌ சாதியின‌ரே. இருந்தாலும் இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் த‌த்துவ‌த்தின் கார‌ண‌மாக‌ இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாதியைப் புற‌க்க‌ணித்து ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌ர். மாவோயிஸ்ட்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். நான் ஒரு மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ விரும்ப‌வில்லை. ஆனால் நாம் த‌ற்பொழுது மேற்கொண்டுள்ள‌ காட்டுமிராண்டித்த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைகளைத் தொட‌ர்ந்தால் இந்தியா ஒரு மாவோயிஸ்ட் நாடாக‌ மாறியே தீரும். இங்கு ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ வேறுபாடு நிலவுகின்றது. க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளான‌ இர‌ஷ்யா, சீனா சென்று பாருங்க‌ள். இன்று அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாமே க‌டைநிலையில் இருந்தவர்களே. உய‌ர் குடி ம‌க்க‌ள் இப்பொழுது அங்கு இல்ல‌வே இல்லை. இந்தியாவிலும் இது போன்ற‌ கிள‌ர்ச்சிக‌ள் ஏற்ப‌டலாம். ந‌ம் க‌ண்முன்னே உள்ள‌ ச‌மூக‌ நீதிப் பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌த‌ற்கு நாம் ஏன் இன்னும் முய‌ல ம‌றுக்கின்றோம் என‌ப்புரிய‌வில்லை.

நீங்க‌ள் இதுவ‌ரை ஆந்திராவை ப‌ற்றி பேசினீர்க‌ள், நீங்கள் ச‌ட்டீசுக‌ரை எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்?

ச‌ட்டீசுக‌ரில் காடுக‌ளின் மீதான‌ உரிமை என்பதுதான் பிரச்சினை. ப‌ழ‌ங்குடியின‌ர் ஆயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே சாதிய ஆதிக்கம் கார‌ண‌மாக‌ காடுக‌ளுக்குள் த‌ள்ள‌ப்ப‌ட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நில‌மே இல்லை. காடுக‌ளில் கிடைக்கின்ற‌ பொருட்க‌ளை ச‌ந்தைக‌ளில் விற்ப‌த‌ன் மூல‌மே த‌ங்க‌ள் வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்க‌ள். இவ்வாறு அவ‌ர்க‌ள் காடுக‌ளை விட்டு வெளியே வ‌ந்து ஒரு வ‌ணிகரைத் தேடி விற்கின்றார்க‌ள். யார் அந்த‌ வ‌ணிக‌ர்க‌ள்? வைசிய‌ ம‌ரபைச் சார்ந்த‌ வ‌ணிக‌ர்க‌ள். இத‌ன் மூல‌ப் பிர‌ச்ச‌னையாக‌ நான் மூன்றைச் சொல்லுவேன். த‌ந்திர‌மான பார்ப்பனன், காட்டுமிராண்டித‌ன‌மான‌ ச‌த்ரிய‌ன், பேராசை கொண்ட‌ வைசிய‌ன். சித‌ம்ப‌ர‌ம் ஏதேச்சையாக‌ வைசிய‌ குல‌த்தைச் சார்ந்த‌வ‌ர். இந்த‌ மூன்று குல‌ங்களும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ இவ‌ர்க‌ளை ந‌சுக்கி வ‌ருகின்ற‌ன‌ர். பாதிக்கப்ப‌டும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கு ஆத‌ர‌வாக மாவோயிஸ்ட்கள் கை கொடுத்தால் எதற்காக‌ நாம் அவ‌ர்களைக் குறை சொல்ல வேண்டும்? அவ‌ர்க‌ள் வைசிய‌ர்க‌ளின் க‌ண‌க்குப் புத்த‌க‌த்தை பார்த்து ப‌ழ‌ங்குடியின‌ர் ச‌ரியான‌ தொகை பெறுவ‌த‌ற்கு உத‌வுகின்ற‌ன‌ர். நீங்க‌ள் இந்த‌ வியாபார‌த்தை ஆராய்ந்து இருக்க‌ வேண்டும். இந்த வைசியர்களின் ப‌ண‌ம் தில்லியில் உள்ள ப‌ண‌க்கார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்குச் செல்கின்ற‌து. ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்ப‌தில்லை.

எந்தக் கிள‌ர்ச்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ங்க‌ளை எடுப்ப‌து இய‌ல்பு. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி இல்லை. இங்கே மாவோயிஸ்ட்க‌ளின் மூல‌ம் ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள‌து உரிமைக‌ளுக்காகப் போராட‌ க‌ற்றுக் கொள்கின்றனர். மார்க்சியப் பாட‌ங்க‌ளும், கொரில்லாப் போர் முறையும் அவ‌ர்களது பாட‌ங்க‌ளில் ஒன்று. இங்கே அதிக‌ரிக்கும் வ‌ன்முறைக‌ள், போராட்ட‌ங்க‌ள் எல்லாம் ஆயுதங்களைக் கைப்பற்றுவதை நோக்கியே உள்ள‌து. இதை எதிர்த்து ந‌ம‌து ப‌டையின‌ர் போராடும் போது அவ‌ர்க‌ள் க‌டும் கோப‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாறுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் 'நாங்க‌ள் 76 வீர‌ர்களைப் ப‌றிகொடுத்துள்ளோம்' என‌க்கூறி, க‌ண்ணில் ப‌டுப‌வரையெல்லாம் சுட்டுக் கொல்வார்க‌ள்.

இவ‌ர்க‌ளை க‌ட்டுக்குள் வைக்க‌ ஒரு ச‌ரியான‌ த‌லைமை தேவை. என‌து அச்ச‌ம் என்ன‌வென்றால் அவ்வாறான‌ த‌லைமை என்ற‌ ஒன்று ந‌ம‌து ப‌டையின‌ருக்கு இல்லை என்ப‌தே. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும்.

அப்ப‌டியென்றால் நீங்க‌ள் இத‌ற்கு என்ன‌ தீர்வு சொல்கின்றீர்க‌ள்? இந்தத் தீர்வுக‌ளை நோக்கி ந‌க‌ராம‌ல் ந‌ம்மை த‌டுப்ப‌து எது?

பாராளும‌ன்ற‌த்தில் இர‌ண்டு ச‌ட்ட‌ங்க‌ள் இன்னும் நிலுவையில் உள்ள‌ன‌. ஒன்று நில‌ அப‌க‌ரிப்பு ப‌ற்றிய‌து, இர‌ண்டாவ‌து காடுக‌ளின் உரிமை ப‌ற்றிய‌து. ஆனால் இங்கே பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் இந்தக் காடுக‌ளில் தனிமங்கள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இது த‌ற்போது ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய புதையலாகும். இந்த‌ தாதுக்க‌ளை எடுப்ப‌த‌ற்கு ப‌ல‌ மில்லிய‌ன் ம‌திப்புள்ள‌ ஒரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் போடப்ப‌ட்டால் அதில் குறிப்பிட்ட‌ விழுக்காடு அரசியல்வாதிகளின் சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கிற்குச் செல்லும். காடுக‌ளில் வாழும் இந்த‌ ஏழை ம‌னித‌ர்க‌ள் எளிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். பிகாரில் நிலச்சுவான்தார்கள் இவ்வாறு வெளிப்ப‌டையாக‌ சொல்வார்க‌ள் "நாங்க‌ள் எங்க‌ள‌து நில‌ங்க‌ளையும், ப‌ட்ட‌ங்க‌ளையும் எங்க‌ள‌து பூனை ம‌ற்றும் நாய்க‌ளின் பெய‌ரில் வைத்திருக்கிறோம்". இந்நிலைமை, போராட்ட‌ங்க‌ள் இல்லாம‌ல் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் தொடர முடியும்?

மேலும் நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவ‌ம் வ‌ர‌ வேண்டுமென்று? நீங்க‌ள் ஏன் பிர‌ச்ச‌னையின் மூல‌ கார‌ண‌த்தைப் பார்க்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள்? அர‌சுக்கு மூளை என்று ஒன்று இருப்பின் அது பிர‌ச்ச‌னையைப் புரிந்து செயல்ப‌டும், இல்லையெனில் இது ஒரு மிக‌ப்பெரிய‌ பேரிட‌ரில் தான் சென்று முடியும்.

காவ‌ல்துறை, துணை இராணுவ‌ம் ந‌ட‌த்திய‌ ப‌ல‌ அட‌க்குமுறைக‌ள், க‌ற்ப‌ழிப்புக‌ள், கொலைக‌ள், ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை திருடுத‌ல் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ முறை தெக‌ல்கா ப‌திவு செய்துள்ள‌து. இதை நாம் அர‌சிட‌ம் கொண்டு சென்றால் நம்மை துரோகியாக‌வும், மாவோயிஸ்ட்க‌ளுக்கு உளவுத் த‌க‌வ‌ல்க‌ள் திர‌ட்டுப‌வ‌ர்க‌ளாக‌வுமே பார்க்கின்ற‌ன‌ர். காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோரின் ந‌ட‌த்தை ப‌ற்றிய‌ உங்க‌ள் பார்வை என்ன‌?

ச‌ல்வா ஜூடும் என்ப‌து அர‌சால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. அந்தப் ப‌டையின் செயல்பாடுக‌ள் நிலைமையை மேலும் மோச‌மாக்கின‌. முன்னர் நில‌ உரிமையாள‌ர்க‌ள் என்னென்ன கொடுமைகள் செய்தார்களோ, அதை இப்போது காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோர் செய்கின்ற‌ன‌ர். கிள‌ர்ச்சியை அட‌க்கும் போராட்ட‌ம் ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ப‌து என் ந‌ம்பிக்கை. இதைப் ப‌ற்றி பெரும்பால‌னோர் பேசுவ‌தில்லை. இராப‌ர்ட் தாம்ச‌னின் "க‌ம்யூனிஸ்ட் க‌ல‌க‌ங்க‌ளை வெற்றி கொள்வது எப்ப‌டி" என்ற‌ புத்த‌க‌ம் இந்த‌ வ‌ரியுட‌ன் துவ‌ங்கிற‌து "க‌ல‌க‌ங்க‌ளுக்கு எதிரான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ முக்கிய‌மாக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும்". இராப‌ர்ட் தாம்ச‌ன் போன்றோருக்கு கொரில்லா போர் ப‌யிற்சி அளித்த‌ வ‌ல்லுன‌ர்க‌ளே என‌க்கும் ப‌யிற்சி அளித்த‌ன‌ர் என்ப‌து என்னைப் பொருத்த‌வ‌ரை அதிர்ஷ்ட‌வ‌சமானது. இதை நான் அர‌சுக்கான எனது ப‌ரிந்துரைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தெரியப்ப‌டுத்தி உள்ளேன். இது போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் படையின‌ருக்கு த‌லைமையாக‌ இருப்ப‌வ‌ர் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்றார்.

கொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு, ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்களைப் பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று. அந்தப் ப‌டையின‌ரின் த‌லைவ‌ர் ச‌ரியாக‌ இருந்தால் இது போன்ற‌ செயல்க‌ளை செய்வ‌த‌ற்கே ப‌டையின‌ர் அஞ்சுவ‌ர். ப‌ணியிலிருக்கும் ப‌டையின‌ர் த‌வறு செய்தால் அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இது அங்கு உள்ள‌ கிராம‌வாசிக‌ளுக்குத் தெரிய‌ வேண்டும். அப்பொழுது தான் அவ‌ர்க‌ள் உங்க‌ளை ந‌ம்பி உங்க‌ள் ப‌க்க‌ம் வ‌ருவார்க‌ள்.

நான் இங்கே கூறியுள்ள‌ மைய‌ காவ‌ல் ப‌டை, எல்லை பாதுகாப்புப் ப‌டை என‌ எல்லாவ‌ற்றிலும் நான் ப‌ணியாற்றி உள்ளேன். மைய‌ காவ‌ல் ப‌டை ச‌ட்ட‌ ஒழுங்கை பாதுகாப்ப‌வ‌ர்க‌ள். த‌டிய‌டிக்குப் பெய‌ர் போன‌வ‌ர்க‌ள். ஆனால் இப்பொழுது காசுமீரில் அவ‌ர்க‌ள் ந‌ட‌த்துவ‌தோ வேறு. இவ‌ர்க‌ளும் கூட்ட‌த்தை நோக்கி க‌ற்க‌ளை எறிகின்ற‌ன‌ர். இது எப்பொழுதும் ந‌ட‌க்க‌கூடாத‌ ஒன்று. இப்பொழுது இங்கு ந‌ட‌ப்ப‌தெல்லாம் சீருடை அணிந்த‌ ஒரு க‌ல‌க‌க் கும்பல், சீருடை அணியாத‌ ஒரு கிள‌ர்ச்சிக் கும்பலின் மோதலே.

மைய‌ காவ‌ல் ப‌டையின் முக்கிய‌ பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் அவ‌ர்கள் ஒரு மாநில‌த்திற்குச் செல்லும் போது அங்கு உள்ள‌ காவ‌ல்துறையிட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளை கூட்ட‌த்தைக் க‌லைப்ப‌த‌ற்காக‌வும், க‌ல‌வ‌ர‌ங்க‌ளை க‌ட்டுக்குள் கொண்டுவ‌ருவ‌த‌ற்குமே மாநில‌ காவ‌ல் துறை பிர‌யோக‌ப‌டுத்துகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளின் ஒழுங்குமுறை மேலும் மோச‌ம‌டைகின்ற‌து. மிசோர‌ம், நாகாலாந்து போன்ற‌ இட‌ங்க‌ளில் இந்த‌ மைய‌ காவ‌ல் படையின‌ரே ஓரளவு ஒழுங்குட‌ன் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர் கார‌ண‌ம் அங்கு இவ‌ர்க‌ள் இராணுவ‌த்திட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌ட்ட‌ன‌ர்.

இராணுவ‌த்தை ந‌க்ச‌ல்க‌ளுக்கு எதிராக‌ க‌ள‌மிற‌க்குவ‌து ஒரு பேர‌ழிவைத் த‌ரும் என்று நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள், அத‌ற்கான கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா?

பீகார் ப‌டைக்குழுவில் உள்ள‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஆதிவாசிக‌ளே, இதுவே இராணுவ‌த்தின் முத‌ல் பிர‌ச்ச‌னை. நீங்களே யோசித்துப் பாருங்க‌ள் இது போன்ற‌ ஒரு ப‌டைக்குழு, இன்னொரு ஆதிவாசி குழுவை எதிர்க்கும்போது என்ன‌ ந‌ட‌க்கும்‌?

அவ‌ன‌து குடும்ப‌ம் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து உற‌வின‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து இன‌க்குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம். இதுவே ஒரு பேர‌ழிவைத் த‌ரும். இது போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்குள் இராணுவ‌ம் வ‌ரவே கூடாது. என‌து க‌ருத்து மிக‌வும் தெளிவான‌து, பிர‌ச்ச‌னையின் மூல‌கார‌ண‌ங்க‌ளை அர‌சு க‌ளைய‌ முய‌ல‌ வேண்டும்.

இந்தப் பிர‌ச்ச‌னையில் நீங்க‌ள் யாரைத் தாக்கப் போகின்றீர்க‌ள்? யாரைப் பிடிக்க‌ போகின்றீர்க‌ள்? நீங்க‌ள் அவ்வாறு யாரையும் பிடிக்க‌ முடியாது. அவ்வாறு ஒரு திட்ட‌ம் உள்ள‌தென்று தெரிந்தாலே, அவ‌ர்க‌ள் நூறு வெவ்வேறு திசைக‌ளில் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்களது ஆயுதங்களும் ம‌றைந்து விடும். நீங்க‌ள் அங்கே வாழ்கின்ற‌ அப்பாவிக‌ளை ம‌ட்டுமே பார்ப்பீர்க‌ள். ந‌ம‌து ப‌டையின‌ர் அங்கு உள்ள அப்பாவி பழங்குடியினர் 30 பேரைக் கொன்று விட்டு நாங்க‌ள் 30 ந‌க்ச‌ல்களைக் கொன்றுவிட்டோம் என‌க்கூறுவார்க‌ள். இத‌ற்குப் பிற‌கு அங்கு பிற‌க்கும் ஒவ்வொரு குழ‌ந்தையும் போராளியாக‌ மாறிவிடுவான்.

நீங்க‌ள் ச‌ண்டை நிறுத்த‌ம் ஏதேனும் ஏற்ப‌டும் என்று க‌ருதுகின்றீர்க‌ளா?

நான் உங்க‌ளுக்கு உறுதி கூறுகின்றேன் அவ்வாறு எந்த‌ ஒரு ச‌ண்டை நிறுத்த‌மும் வராது. ஏனெனில் இதை ஒருங்கிணைக்கும் மாவோயிஸ்ட்க‌ள் ந‌ல்ல வேக‌‌த்தில் இயங்கிக் கொண்டுள்ள‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ள் இதை நிறுத்தினால் மீண்டும் இதை ஆரம்பிப்ப‌து என்பது அவர்களுக்கு மிக‌வும் க‌டின‌மான‌ ஒன்று. நான் அவ‌ர்க‌ள் ஆயுத‌ங்களைக் கீழே வைப்பார்க‌ள் என‌ நினைக்க‌வில்லை. நம‌து அர‌சு நில‌ம் ம‌ற்றும் காடுக‌ள் தொட‌ர்பான‌ கொள்கைக‌ளில் மாற்ற‌ம் கொண்டு வ‌ந்த பின் தான், அவ‌ர்களிடம் சொல்லிப் புரிய‌‌ வைத்து நம் மேல் ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியும்.

அவர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தைக் குறைத்து, இந்திய‌ ச‌ன‌நாய‌க‌த்தை மாவோயிஸ்ட் புர‌ட்சி அமைப்பை விட‌ ந‌ல்ல‌ ஒன்றாக‌ மாற்ற‌லாமே?

ச‌ரியான‌ வார்த்தை. இதை நிக‌ழ்த்துவ‌த‌ற்கு, எல்லா க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் அம‌ர்வுக‌ளில் இந்த‌ பிர‌ச்சனையைத் தீர்ப்ப‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்கச் சொல்லி அரசை வ‌லியுறுத்தி, அர‌சை நாம் ப‌லப்ப‌டுத்த‌ வேண்டும். க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை ச‌ரி செய்யாம‌ல் உங்க‌ளால் எதையும் மாற்ற‌ முடியாது. அதிகமான‌ இராணுவ‌ம் அல்ல‌து ப‌டை இப்பிர‌ச்ச‌னையை மேலும் மோச‌மான‌ ஒன்றாக‌வே மாற்றும்.

இதை அர‌சிட‌ம் கூறியுள்ளீர்க‌ளா?

எந்தக் கூட்ட‌ங்க‌ளிலெல்லாம் என்னால் பேச‌முடியுமோ அங்கெல்லாம் இதைப் ப‌ற்றி நான் பேசி உள்ளேன்.

இந்தப்‌ ப‌குதிக‌ளை முன்னேற்ற‌ வேண்டும் என‌ அர‌சு கூறுகின்ற‌தே?

முன்னேற்ற‌ம் என்ப‌து த‌வறான வார்த்தைப் பிரயோகம். அடிப்ப‌டை உரிமை என்ப‌தே ச‌ரியான‌ ஒன்று. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும். எப்ப‌டி நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ம் கேர‌ளாவில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து? ஏன் அங்கு மாவோயிஸ்ட் கிள‌ர்ச்சி இல்லை? அங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ தெரியுமா? ந‌ம்பூதிரிபாடின் ஆட்சியின் கீழ் அங்கே ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக‌ அம‌லுக்கு வ‌ந்தது. பனிரெண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு அந்த‌ நில‌ம் சொந்த‌ம் என்பது, நில‌ உரிமையாள‌ருக்கு எந்த‌ ஒரு இழ‌ப்பீடும் வ‌ழ‌ங்காமலும் அம‌லுக்கு வ‌ந்த‌து. ஆனால் நாம் இன்று 2010ல் உள்ளோம். பெரும்பாலான‌ ப‌குதிக‌ளில் ந‌ம‌து செய‌ல்பாடுக‌ளோ 1610ல் உள்ளதைப் போல‌வே உள்ள‌து. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ காடுக‌ளில் த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அங்கு வாழும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கே அது சொந்த‌ம் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியுமா? முத‌லில் இந்தியாவில் இதுபோல‌ த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அது அங்கு வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளுக்கே சொந்த‌ம் என்று அறிவிக்க‌வேண்டும். புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ங்களில் கையெழுத்திடுவது அங்கு வாழும் பழங்குடி ம‌க்களாக இருக்க வேண்டும். அத‌ன் பின்ன‌ர் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியான‌ உத‌விக‌ள் செய்து இலாப‌ம் அவ‌ர்க‌ள‌து க‌ண‌க்கிற்கு செல்கின்ற‌தா என‌ அர‌சு க‌வ‌னிக்க‌ வேண்டும். தில்லியில் உள்ள‌ அர‌சு இதை செய்வ‌த‌ற்குத் த‌யாரா? எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இதைச் செய்ய‌ மாட்டார்கள் என்றால், இங்கு ஒவ்வொரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்துட‌னும் அவ‌ர்க‌ளின் ஒரு சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கு இணைக்க‌ப்ப‌ட்டே உள்ள‌து.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ மாட்டேன் என்று. அதே போல‌ அவ‌ர்க‌ள் ஒரு திற‌மையான‌ ஆயுத‌ குழு (அ) 200 மாவ‌ட்ட‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் க‌ண்காணிப்பில் உள்ள‌து என்ப‌தையும் ஒருவ‌ராலும் ம‌றுக்க‌ முடியாது. இங்கே ப‌ல‌ பேரிட‌ம் உள்ள‌ ஒரு கேள்வியை நான் கேட்கிறேன். துணை இராணுவ‌த்தை அவர்க‌ளுக்கு எதிராகப் போராட‌ அழைத்த‌து இங்கு மாவியிஸ்ட்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தி உள்ள‌தா? ஏதாவ‌து ஒரு பிர‌ச்சினை தீர்ந்துள்ள‌தா?

ஒரு சிறிய‌ ப‌குதியை எடுத்துக்கொள்வோம். அங்கே ப‌த்து ப‌டைய‌ணிக‌ளை நிறுவுங்க‌ள். கோழி, ஆடு திருடாம‌ல் த‌டுக்க‌, பெண்களைக் க‌ற்ப‌ழிக்காம‌லிருக்க‌, வீடுக‌ளை எரிக்காம‌லிருக்க‌ ஒரு ந‌ல்ல‌ த‌லைமை அங்கு வேண்டும். நான் காசுமீரில் எல்லை பாதுகாப்புப் ப‌டையின‌ரின் த‌லைமை பொறுப்பில் இருக்கும் போது என‌து க‌ட்டுப்பாட்டில் 50 ப‌டைய‌ணிக‌ள் இருந்த‌ன‌. நான் தின‌மும் ந‌க‌ருக்குச் சென்று ஒன்று அல்ல‌து இர‌ண்டு ப‌டைய‌ணிக‌ளை சுழ‌ற்சி முறையில் க‌வ‌னித்து வ‌ருவேன். மேலும் அங்கு வாழும் ம‌க்க‌ளிட‌ம் ப‌டைய‌ணிக‌ள் ஏதேனும் குற்ற‌ம் புரிந்துள்ள‌ன‌ரா என‌வும் கேட்பேன். குறிப்பாக‌ அங்கு ஏதாவ‌து க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்கும் ப‌ணி முடிந்த‌வுட‌ன் அங்குள்ள‌ ம‌க்க‌ள் "உங்க‌ள் ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் எந்தத் த‌வ‌றும் செய்ய‌வில்லை" என‌க் கூற‌ வேண்டும். இவ்வாறு ம‌க்க‌ள் கூறினால் தான் நிலைமை க‌ட்டுக்குள் இருக்கின்றது என்று அர்த்தம். இது தான் ஒரு ச‌ரியான‌ த‌லைமை. என‌து ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளுக்குத் தெரியும் அவ‌ர்க‌ள் ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ த‌ண்டிக்கப்ப‌டுவார்க‌ள் என‌. அதனால் அவ‌ர்க‌ள் ஒழுங்காக‌ இருப்பார்க‌ள். இது தான் இங்கே தேவை. ஒரு ச‌ரியான‌ த‌லைமை ம‌ற்றும் க‌ள‌த்தில் ப‌ணிபுரிய‌ ஒழுங்கான‌ வீர‌ர்க‌ள். இந்த‌ அர‌சு செய்த‌ ஒரு த‌வ‌று என்ன‌வென்றால் அவ‌ர்க‌ளுக்கு 'ஆமாம்' சொல்பவர்களை மட்டுமே வைத்திருப்பது.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவத் த‌லைமை, துணை இராணுவ‌த்தை விட‌ சிற‌ந்த‌து என‌. ஆனால் வ‌ட‌ கிழ‌க்கு ம‌ற்றும் காசுமீரில் இராணுவ‌ம் செய்கின்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் இத‌ற்கு நேர்மாறாக‌ அல்ல‌வா உள்ள‌து?

ஆம். இராணுவ‌ம் வ‌ட‌கிழ‌க்குப் ப‌குதிக‌ளில் மிக‌ப் பெரிய‌ த‌வ‌றுக‌ளை செய்துள்ள‌து. நான் நாகாலாந்து ம‌ற்றும் மணிப்பூரில் வேலை செய்துள்ளேன். அந்தப் ப‌குதிக‌ள் மிக‌ தொலைவில் உள்ள‌தால் இங்கு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்றே தெரியாது. அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இந்தியாவுட‌ன் இருப்ப‌து பிடிக்க‌வில்லை என்ப‌தில் எந்த‌ ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை. இருந்தாலும் பொதுவாகக் கூறுகையில், இராணுவ‌ த‌லைமைக‌ள் ம‌ற்ற‌ படைத் த‌லைமைக‌ளை விட‌ மேல். ஏனெனில் இங்கு த‌லைமைக‌ள் அர‌சிய‌ல்வாதிக‌ளால் நிய‌மிக்கப்ப‌டுப‌தில்லை. முழு த‌குதி, திற‌மை அடிப்ப‌டையிலேயே இராணுவ‌த்தில் த‌லைமைப் ப‌த‌வி கொடுக்கப்ப‌டுகின்ற‌து. எல்லை பாதுகாப்புப் ப‌டையில் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பிற்கு வ‌ருவ‌த‌ற்கு நீங்க‌ள் எவ்வ‌ள‌வு கால்களை ந‌க்கியுள்ளீர்க‌ள் என்ப‌தே த‌குதி. இர‌ண்டிலும் அமைப்பு முறை மாறுப‌டுகின்ற‌து.

ந‌ன்றி: தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

மூல‌ப்ப‌திவிற்கான‌ இணைப்பு: http://www.tehelka.com/story_main45.asp?filename=Ne120610bringing_on.asp

- ப‌.ந‌ற்ற‌மிழ‌ன் ( esan.palani@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

ந‌ன்றி: Keetru.com, ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

Friday, June 11, 2010

மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!

"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்துகொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியில் தன்னையிழக்கும் ஏழைகள், தங்கள் நாட்டின் வளர்ச்சியால் தாங்கள் உயரவில்லை என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதுதான் சாபக்கேடு. மார்க்ஸ் சொன்னதுபோல் "தொழிலாளர்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும், இல்லையேல் இல்லாமல் போகவேண்டும்".

தன் நாட்டு பத்திரிக்கையாளன் தாலிபன்களால் கடத்தப்பட்டதற்காக பல மில்லியன் டாலர் செலவுசெய்கிறது அமெரிக்க அரசு. இந்தியாவோ, அமெரிக்கக் கம்பெனியால் கொல்ல‌ப்பட்ட 15 ஆயிரம் மனித உயிர்களுக்காக நீதியையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. போபாலில் 1984, டிசம்பர் 2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு இன்டியா லிமிட்ட‌ட் கம்பெனியிலிருந்து கசிந்த மீத்தைல் ஐசோ சயனேட் நச்சினால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 15 ஆயிரம் உயிர்கள் காற்றில் கரைந்து போயின. இந்த வழக்கில் 26 ஆண்டிற்குப் பிறகு தீர்ப்பளித்த போபால் நீதிமன்றம் எட்டு நபர்களுக்கு மட்டுமே இரண்டு ஆண்டு சிறைதண்டனை கொடுத்துவிட்டு, அவர்களையும் அன்று மாலையே பிணையில் வெளியிட்டுவிட்ட அநீதி உலகில் வேறு எங்கும் நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல். இதுபோன்ற பேரழிவிற்குப் பிறகும், மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மானியத்தோடு அனுமதியளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்திய அரசு ஏழை எளிய மக்களைத் தன்னுடைய குடிமக்களாக ஒருபோதும் கருதியது இல்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறேது?

உணவு, உறைவிடம், உடை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி என மனிதனுக்குரிய எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்ய விரும்பாத நாடாக இந்தியா இன்றும் இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும் கூட குடிநீருக்காகவும், மருத்துவமனைக்காகவும் இந்திய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இந் நிலையில் அணுஆயுத வல்ல‌ரசு என்று தன்னை வெட்கப்படாமல் அறிவித்துக்கொள்கிறது இந்தியா. ஏழை, எளிய மக்களை ஒரு பொருளாகக் காட்டி உலக வங்கியில் குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, இந்த நாட்டின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முதலாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறதே தவிர, ஏழ்மையைப் போக்க, பட்டினி சாவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் தீவிரமாக இங்கு மேற்கொள்ளவில்லை.

கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 158 பயணிகள் உயிரிழந்தார்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட‌ துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பேருந்தில் பயணித்த 30 பயணிக‌ள் கொல்ல‌ப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு மாநில அரசு ரூ 2 லட்சம் மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இதாவது பரவாயில்லை சாதிய வன்கொடுமையில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதுவும் அந்தப் படுகொலைக்கு முறையாக வழக்கு பதிவு செய்தபின்புதான் இந்த இழப்பீட்டைக் கூட கொடுக்க அரசு சம்மதிக்கிறது. என்ன ஓரு பாகுபாடு பாருங்கள்! தன் குடிமக்களின் மரணத்தில் கூட ஏழை, பணக்காரன் என தரம் பிரித்து இழப்பீடு வழங்கும் இந்த அரசை மக்கள் அரசு எனறால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அனைவரும் சமம், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற மக்களாட்சி தத்துவத்தையே மழுங்கடிக்கும் இந்த தேசத்தின் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள், பெரு முதலாளிகளைவிடக் கொடுமையானவர்கள்.

இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் உடமையிழந்தவர்களுக்கு எந்த ஒரு குறிபிட்ட தொகையையுமே இழப்பீடாக "பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005" இல் மத்திய அரசு நிர்ண‌யிக்கவில்லை. மாறாக உடனடி நிவாரண‌மாக சில ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத ஆளும் கட்சிக்காரர்களுக்கு மாநில அரசு கொடுத்தபின்பு, பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தபின்பே மத்திய அரசு நிவாரண‌த் தொகை அனுப்புகிறது. அப்படி தரும் நிவாரண‌ம் கூட முழுமையாக மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்தபின்பும் வீடுகள் கட்டித்தரப்படாத அவல நிலை நீடிப்பதைக் காணமுடிகிறது.

நிவாரண‌ம் வழங்குவதில் தமிழக அரசு யாருக்கும் குறைவைப்பதில்லை. எல்.சி.டி டிவி வைத்திருப்பவனுக்குக் கூட இலவச டிவி கொடுப்பதுபோல், வெள்ளம் வந்துவிட்டால் மூன்றாவது மாடியில் குடியிருப்போர்களுக்கும் கூட இரண்டாயிரம் ரூபாய் நிவாரண‌த் தொகை கிடைக்கிறது. வாக்கிற்கு ஐநூறு என்ற கணக்கு போலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண‌ம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது, உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? அதுமட்டுமல்லாமல் குடிசையை இழந்து தவிப்பவன் இரண்டாயிரம் ரூபாயில் மச்சிவீடா கட்டமுடியும்?சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டிசேலை தருவ‌தாகச் சொல்லி பலபேர் நெரிசலில் சிக்கி இறந்த கதையும் உண்டு.

இவைமட்டுமின்றி மரணங்கள் பல்வேறுவகையில் நம் மக்களைத் தழுவுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்துபோகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்களை நம் அரசு கவன‌க்குறைவு மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் பலிகொடுக்கிறது. வன விலங்குகளைக் கூட மின்வேலி அமைத்துப் பாதுகாக்கும் அரசு, மனிதர்களை மரணத்திலிருந்து பாதுகாக்க ஏன் தயங்குகிறது? முறையான போக்குவரத்து விதி, சாலை பராமரிப்பு, வாகன தணிக்கை, கட்டாய தலைக்கவசம், சாலையோர மருத்துவமனை மற்றும் சாலை விபத்துகள் பற்றிய விழிப்புண‌ர்வு போன்ற செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டாலே ஆண்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையாவது சாலை விபத்திலிருந்து காக்க முடியும்.

இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பின்மை மட்டுமல்ல, சாதி மாதங்கள் கடந்து ஏழை எளியமக்கள் ஒன்று படாதது, மேலும் நாட்டின் 60 சதவிகித வருமானத்தை ஈட்டித்தரும் சுமார் 93 சதமுள்ள முறைசார தொழிலார்களின் நலன் புறக்கணிப்பு, அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, முறையற்ற நிதி மற்றும் நீதி நிர்வாகம், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை, சாதி மத மற்றும் தீண்டாமை பிரச்சனை என காரணம் நீண்டுகொன்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போண்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு இலவச ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா குறைந்த அளவு சமூக பாதுகாப்பையாவது தன் குடிமக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும். ஒரு முழுநேர அரசு ஊழியருக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் கொடுக்கும் அரசு, வயதுவந்தோர்க்கு ஓய்வூதியமாக மாதம் ஐநூறு மட்டுமே அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இந்திய ஜனநாயகம் சாதி மத சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் மீண்டும் மீண்டும் கூறுபோடப்பட்டு முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே பாடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பணிக்கப்படுகிறார்கள். "சமூக விடுதலையை நீங்கள் வென்றெடுக்காத வரையில், சட்டம் அளித்த விடுதலை உங்களுக்குப் பயன்படப் போவதில்லை" என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நமக்குப் பொருந்துவதாக உள்ளது. சட்ட திட்டங்களால் உயராத நம் வாழ்க்கை, சகோதரத்துவத்தால் உயரும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? கைவிரலில் மை வைக்க காத்துக் கிடக்கும் கூட்டமாக நாம் இருக்கும் வரை, முதலாளிகளை மட்டுமே ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாயகம் என்பதை நம் புரிந்துகொண்டால் ம்ட்டுமே மக்களுக்கு சேவைசெய்யும் மக்களாட்சி மலரும். இல்லையேல் இந்திய மக்களாட்சி எப்பொழுதும் போல் முதலாளிகளாலே வழிநடத்தப்படும்.

Thanks: - ப.அப்ரகாம் லிங்கன் ( ablingan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

மனித உரிமைவாதிகள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா?

நமது மத்திய இந்தியாவில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டுகளின் இயக்கம் அரச படைகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் ‘மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்’ என்று வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகள் என்று மாவோயிஸ்டுகளை அழைத்து வந்த ஆங்கில காட்சி ஊடகங்கள் கடந்த ஓராண்டில் சிகப்பு பயங்கரவாதிகள் என்று பெயர் மாற்றி அழைக்கத் துவங்கி விட்டன. CNN IBN ஆங்கிலத் தொலைக்காட்சி நக்சல் என்ற ஆங்கில எழுத்தில் வரும் ஓ என்ற சொல்லை பெரியதாகக் காட்டி அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை வெளிப்படுத்தி வருகிறது.

adivasi_womenமாவோயிஸ்டுகளின் வன்முறைத் தாக்குதல்கள் நிகழும் சமயம் இந்தக் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் நாடகபாணி பின் இசைகளுடன் செய்திகளை பரபரப்பாக்கி வெளியிடுவதும், விவாதம் நடத்துவதும் நடக்கிறது. இவ்விவாதங்களில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களை நீங்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளரா என்ற வகையில் கேள்விகளைக் கேட்பதும், ஆனால் கேள்விக்கு மனித உரிமையாளர்கள் பதில் தரும்போது அதனை முழுதும் உள்வாங்காது அலட்சியப்படுத்துவதுமான போக்குகளும் தொடர்கின்றன. மாவோயிஸ்டுகள் காவல்படைகளுடன் மோதிய அன்னைத்து நிகழ்வுகளுக்குப் பின்னும் இவ்வூடகங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதப் பொருளாகி வந்துள்ளனர்.

கடந்த 07.04.2010-ம் தேதி மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். படையினரை கொன்ற நிகழ்வு, பேருந்து கண்ணி வெடியில் சிக்கிக்கொண்ட நிகழ்வு, இரயில் கவிழ்ப்பு - இவைகளுக்குப் பின் நாள்கணக்கில் நாடக பாணியில் ஒரு சேர ஆங்கில தொலைக்காட்சிகள் மனித உரிமையாளர்களைத் திட்டித் தீர்ப்பதைக் காண முடிந்தது. சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கள் தலையங்கங்களில் மனித உரிமையாளர்களுக்கு இனி நல்ல பிள்ளைகளாக நடக்கச் சொல்லி அறிவுரை கூறின. புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், வங்க எழுத்தாளர் மகேஸ்வதா தேவி போன்றோர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று இவைகள் முத்திரை குத்தி விட்டன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக மிரட்டி வருகின்றார். இதன் எதிர்வினையாக மகேஸ்வதாதேவி தன்னை கைது செய்வது பற்றி கவலைப்படவில்லை என்றும், அதற்கு முன் தனக்கு நக்சல்பாரி தொடர்பு உள்ளதை ப.சிதம்பரம் நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விட்டார்.

கடந்த 2010 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கொல்லப்பட்ட அன்று Times Now தொலைக்காட்சி திரைப்படக் கலைஞர் அபர்ணா சென்னிடம் பேட்டி கண்டது. அப்பேட்டியில் அவர் இந்த வன்முறைக்கு அரசுதான் காரணம், இவ்வாறு நிகழக்கூடாது என்பதால் தான் தாங்கள் ‘பச்சை வேட்டை’ கூடாது என்று பேசி வந்ததாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அத்தொலைக்காட்சி ‘துரோகி’ என்று தலைப்பும் கொடுத்தது. யார் தேசபக்தன், யார் துரோகி என்பதை - ஒரு மனிதனின் அரசியல் நேர்மையை - கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்ற அதிகார மையங்களாக இத்தொலைக் காட்சிகள் உருவாகி விட்டது ஆச்சரியமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

வணிகப்போட்டி சூழலில் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்திகளை முந்தித் தருவதிலும் அதன் மூலம் தங்களின் TRP என்ற இலாப வணிகத்தை உயர்த்தவும் தொடர்ந்து பரபரப்பான செய்திகளுக்குப் பின்னே இவை ஓடிக்கொண்டே உள்ளன. கொலைகள், பாலியல் வன்முறை உள்ளிட்ட பலவற்றை நாள் கணக்கில் ஒளிபரப்பி பார்வையாளர்களை திகிலடைய வைப்பதுண்டு. பிரபஞ்சம் பிறப்பு குறித்த “பெரும் வெடிப்பு” சோதனை நிகழ்வை இத்தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளாத சூழலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அச்செய்தியை வெளியிட இந்த கூட்டு ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் பின் இந்த நிகழ்வு பற்றி இத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஆனால் இதே ஊடகங்கள் டெல்லியில் 14 வயது சிறுமி அனுர்சி கொலை செய்யப்பட்ட செய்தியையும், அதில் அப்பெண்ணின் தந்தை டாக்டர்.தல்வார் என்பவர் காரணமாக உள்ளதாகவும் தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு புலனாய்வுத் துறையை நிர்ப்பந்தப்படுத்தியது. வேறு வழியின்றி அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். கைதான நபர் அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பின்னர் நடந்தது. இதுபோன்ற பரபரப்பான செய்திக் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட‌, அறிவியல் அற்புதமான பெருவெடிப்பு போன்ற நிகழ்வுகளுக்குத் தரவில்லை.

மாவோயிஸ்ட் பிரச்சனையில் 2010 மே 17-ம் தேதி NDTV தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு பெரிய அளவில் அதிகாரம் தேவை என்றும் வான்படைத் தாக்குதலுக்கு ஆதரவு தேவை என்றும் மாநில முதலமைச்சர்கள் இதனை விரும்புவதாகவும் கேட்டுக் கொண்டார். மென்மையாகவும், நயமாகவும் உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டும் அதே தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்தான் மனித உரிமை ஆர்வலர்கள் பழங்குடி மக்களுக்காகப் பரிந்து பேசும்போது மாவோயிஸ்டு ஆதரவாளர்களா என்று கேட்டவர்கள். உண்மையில் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 2004 வரை வேதாந்தா குழுமம் என்ற பகாசுர பன்னாட்டு கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அதற்காக வருடத்திற்கு 70,000 டாலர் சம்பளம் பெற்று வந்தார். (1) கம்பெனி பழங்குடி மக்களின் நிலங்களை சட்ட விரோதமாக அபகரித்ததற்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கும் பல சான்றுகள் உள்ளன. 2003-ம் ஆண்டு இந்த நிறுவனம் சுங்க வரி மோசடி செய்ததற்கு நடவடிக்கை எடுப்பதிலிருந்து தடுக்க ப.சிதம்பரம் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றுத் தந்தார். அவர் நிதியமைச்சர் ஆன பின்பும் சுங்கவரி பாக்கியை வசூ்லிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சட்ட விரோதமாக அரசாங்கப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டும் உள்ளது என பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் ப.சிதம்பரத்தைப் பார்த்து ஒரு நேர்மையான ஊடகம் அது குறித்தான கேள்விகளை கேட்டிருக்க முடியும். ஆனால் இவை அதுபற்றி கேட்டு ப.சிதம்பரத்தை சங்கடப்படுத்தத் தயாராக இல்லை.

அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஜோசப் ஆர்.மெக்கார்தே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு விஸ்கான்சின் பகுதி நீதிபதியாக பணிபுரிந்தவர். 1950 வரை இவரைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் 1950-ல் இவர் தன் அதிரடியான பேச்சுக்களால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசின் துறைகளில் 205 கம்யூனிஸ்டுகள் ஊடுருவி விட்டதாகவும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். இப்பரபரப்பில் 1952-ல் மீண்டும் இவர் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் செனட்டர்களின் புலனாய்வு கமிட்டிக்கு இவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த அதிகாரத்தை வைத்து இரண்டு ஆண்டுகளில் தான் சந்தேகப்படும் பலர் மீது கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டை சுமத்தி பணிநீக்கமும் செய்தார். தனது ஆதரவாளர்களுக்கு தன்னை தேசபக்தனாகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதனாகவும் காட்டிக் கொண்ட மெர்கார்த்தேயின் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான புளுகு மூட்டை என்பதும் மெக்கார்த்தே ஒரு தேர்ந்த புளுகினி என்பதையும் 1954-ல் அறிந்த அமெரிக்கா, சிவில் உரிமைகளை மறுத்த மெக்கார்த்தேயின் செயல்பாடுகளுக்காக அவரை கைது செய்தது. அப்பட்டமான புளுகுகளை அவிழ்த்து விடுவதும் தன்னுடன் சேராதவர்கள் எதிரியின் ஆட்கள் என சவடால் விடுவதையும் மெக்கார்த்தேயிசம் என்று அழைக்கப்படுகிறது.

ப.சிதம்பரம் மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா என்று கேட்பதும், தொலைக்காட்சிகள் ‘எங்கே போனார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்’ என்று கேலி செய்வதும் இந்த மெக்கார்த்தேயிசம் தான். மெக்கார்த்தேயிசம் பாசிச சிந்தனைப் போக்கின் இணைபிரியாத சக்தியாக இருந்து வந்திருக்கிறது. முன்பு அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11, 2001-ன் போது அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் சொன்னார் ‘நீங்கள் எங்களோடா அல்லது எதிரிகளோடா?’ என்று. பாரதீய ஜனதாக் கட்சி பொடா சட்டத்தைக் கொண்டு வந்த விவாதத்தின்போது எல்.கே.அத்வானி சொன்னார் “பயங்கவாத தடுப்புச் சட்டமான பொடாவை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்” என்று.

கடந்த 2010 பிப்ரவரி 18-ல் டெல்லி தீன் வடிகால் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் கோபன் காந்தி என்பவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப் பத்திரிக்கையில் அரச வன்முறையை விமர்சனம் செய்த PUCL உள்ளிட்ட சில மனித உரிமை இயக்கங்கள் மாவோயிஸ்ட் அமைப்பின் வெகுஜன அமைப்புகள் என்று முத்திரை குத்தப்பட்டது. இந்திய உளவுத்துறை மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு இயக்கங்கள் என்று PUCL உள்ளிட்ட 57 இயக்கங்களின் பெயர்களை வெளியிட்டு அவைகளைக் கண்காணிக்கும் வேலையும் செய்து வருகிறது.

கடந்த 2007 மே-17ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநிலத்தின் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) செயலரான டாக்டர்.பினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என முத்திரை குத்தி கைது செய்யப்பட்டார். அரசின் மெக்கார்த்தேயிச பிரச்சாரத்தால் உச்ச நீதிமன்றத்தில் கூட பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடும் சிறைவாசத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சத்தீஸ்கரில் ஆவணப்பட தயாரிப்பாளர் டி.ஜே.அஜ‌ய் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2010 பிப்ரவரியில் PUCL உத்திரபிரதேச மாநிலச் செயலாளர் திருமதி. சீமா ஆசாத் என்பவர் டெல்லி புத்தக கண்காட்சிக்குச் சென்று திரும்பும் வழியில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். இவர் தன் பத்திரிக்கையில் பழங்குடிகளுக்கு எதிரான அரச வன்முறையை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் வனவாசி சேட்னா ஆசிரமம் என்ற காந்தி வழி ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஹிம்மன்ஸ் குமார் என்ற PUCL அமைப்பைச் சார்ந்தவர். இவரது ஆசிரமம் சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையாலும் அரசப் படைகளாலும் உடைத்து எறியப்பட்டது. ஹிம்மன்ஸ் குமார் அரச வன்முறையைக் கண்டித்து மனித உரிமைகளுக்காகப் பேசி வந்தார் என்பதே அந்த காந்தியவாதி செய்த பிழை.

சில மாநிலங்களிலிருந்த நக்சல்பாரி இயக்கச் செயல்பாடு இன்று 250 மாவட்டங்கள், 23 மாநிலங்கள் என்று விரிவடைந்ததற்கு காரணங்களைத் தேட வேண்டியது அவசியமானது. நமது அரசியலமைப்பின் முகப்புரை இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச நாடு என்று பறை சாற்றுகிறது. நமது அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை மாநிலங்கள், அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சொல்கிறது. இயற்கை வளங்கள் பொது சமூகப் பயன்பாட்டிற்கு என்றும், ஏழைகள், பணக்காரன் என்ற பாகுபாடு சமூகத்தில் மறைய வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நமது அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை பழங்குடி மக்களின் நிலங்களை அம்மக்களின் கவுன்சில் அனுமதியின்றி பிற கம்பெனிகளோ, நபர்களோ அபகரிப்பதைத் தடை செய்கிறது. மேலும் 2005-ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் சட்ட வழி வகைகளைக் கொண்டுள்ளது.

இவ்வகையான பல்வேறு சட்ட பாதுகாப்புகளும் அதனை அரணாக நின்று காக்க நீதிமன்ற அமைப்புகளும் இருக்கும் சூழலில் ஏன் நக்சல்பாரிகளின் மாவோயிசம் வளர்கிறது? ஏனெனில் நமது அரசியலமைப்பின் உரிமைகளையும், நமது ஜனநாயக உயிர்ப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் நமது ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், செல்வந்தர்களின் கூட்டு செல்லரிக்கச் செய்து வீழ்த்தி தோல்வி பெறச் செய்த இடத்திலிருந்தே மாவோயிஸ்டுகளுக்கான சிந்தனையும், ஆதரவும் வேர் விடுகின்றது. உலக மயமாக்கல் என்ற பொருளாதார வன்முறை ஏழை, எளிய பழங்குடி மக்களின் மீது திணிக்கப்பட்ட சமயம் நமது பாராளுமன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறையின் செயல்பாடுகள் முழுவதும் ஜனநாயக சோசலிசம் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறி முதலாளித்துவ சேவை என்ற நிலைக்கு சென்று விட்டது. மத்திய இந்தியாவில் பழங்குடிகளை ஆயுதம் தூக்கச் செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கை விட ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த நமது ஆட்சியாளர்களின் பங்கே அதிகம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 வகை பெரும் கனிமங்கள் கிடைக்கின்றன. இரும்புத்தாது இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இது உள்ளது. பாக்சைட், டால்மியம் உள்ளிட்ட பல கனிமங்கள் இங்கு உள்ளது. இப்பூமியில் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் நிலச் சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் இப்பகுதியில் முன்பு மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதையும் எனவே கனிம வளங்களை எடுக்க வேறு முயற்சி அரசுக்கு தேவைப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. (2) எனவே ‘அமைதி இயக்கம்’ என்ற சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியது அரசு. இப்படைகளுக்கு இரும்பு கம்பெனிகளான டாடாவும், எஸ்ஸாரும் பெரும் தொகை கொடுத்து உதவி வருகின்றன‌. இக்கூலிப் படைகள் அரச படைகளுடன் சேர்ந்து மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களை பழங்குடி மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டனர். கொலைகள்? பாலியல் வன்முறை? சித்திரவதை என அது நீண்டது. அதன் விளைவாக சத்தீஸ்கர் மாநில தண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 664 கிராமங்களை முற்றிலும் கைவிட்டு பழங்குடி மக்கள் பக்கத்திலுள்ள மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திரா காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். காலியான இப்பகுதிகளை சுரங்க நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதாக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. (2)

சத்தீஸ்கரில் உள்ள கனிமங்களை இரயில் மூலம் கொண்டு செல்வதற்கு அதிகப் பணம் செலவாகிறது என்பதற்காக குழாய்கள் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பெனிக்கு நேரிடையாக கொண்டு செல்ல எஸ்ஸார் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு எதிராக 25 மீட்டர் அகலத்தில் 267 கிலோ மீட்டர் குழாய்கள் சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் வரை கட்டப்பட்டது. இதில் இரும்பு தாதுக்களுடன் தண்ணீர் கலந்து அனுப்பப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 2.5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.(3) எனவே எஸ்ஸார் கம்பெனிக்காக சபரி ஆற்றின் பெரும்பகுதி திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று சத்தீஸ்கரில் ஓடும் முக்கிய நதிகளான கேலு, குர்குட், கருணா, சியோநாத், மானத் போன்ற ஆறுகளும் தனியார் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்க்கர் என்ற ஊரின் வழியாக சென்ற கேலு நதி ஜிண்டால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டாகி விட்டது. தினமும் 35,400 கியூபிக் மீட்டர் தண்ணீரை இந்த ஆலைகள் தாங்கள் கட்டியுள்ள தனியார் அணைகள் மூலம் எடுத்துக் கொள்கின்றன.(4) ஆக பழங்குடிகள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான‌ தண்ணீர் பயன்பாட்டு உரிமையை முற்றிலும் இழந்து விட்டனர்.

tribes_331நமது வளர்ச்சித் திட்டங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பொது நலனைப் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் உருவாக்கப்பட்டவை. இதனால் உலகில் வேறு எங்கும் நிகழாத ஒரு பெரும் சோகம் இங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட எளிய மக்களின் எண்ணிக்கை 6 கோடியாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்தியதால் 200 ஆண்டு சோக நிகழ்வில் இடம் பெயர்ந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையே 5 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(5) இவ்வாறு சொந்த நாட்டில் அகதிகளாக ‘வளர்ச்சிக்காக’ இடம் பெயரச் செய்யப்பட்ட இம்மக்களுக்கு அரசின் மறு வாழ்வு என்பதும் வெறும் கான‌ல் நீரே. ஆக மலைகளிலும், வனங்களிலுமிருந்து இம்மக்கள் விரட்டப்படுவது குறித்துப் பேசுபவர்கள், அரசின் பொருளாதார வன் செயல்களையும், அரச வன்முறைகளையும் விமர்சிப்பவர்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் இதர அரசின் ஊதுகுழல்களில் முக்கிய இலக்காக குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தவிர பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறையை ஆதரிக்கின்றன. மாவோயிஸ்ட் பிரச்சனையில் பாரதீய ஜனதா கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. கனிம வளங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அனுமதிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பின் ஆட்சியாளர்களுக்கு வரும் பெரும் இலாபம் பற்றி விரிவாக விவாதிக்கத் தேவையில்லை. சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் கணக்கில் வராத சொத்து மதிப்பு மட்டும் ரூ.4000 கோடிக்கு மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் என எல்லா வகைக் கூறுகளையும் தூக்கி எறிந்து விட்ட இக்கொடிய பொருளாதார வன்முறையையும், அதைப் பாதுகாக்கும் அரச வன்முறையையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரிப்பது வெட்கக்கேடானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெருத்த பின்னடைவும் கூட.

இச்சூழலில் மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மட்டுமே ஒற்றைக் குரல்களாக இக்கொடுமைகளுக்கு எதிராக ஒலிக்கின்றன‌. எனவே மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), அருந்ததிராய், அபர்ணாசென், மகேஸ்வதாதேவி மற்றும் பிற மெல்லிய எதிர்ப்புக் குரல்களை நசுக்கிவிடத் துடிக்கிறது அரச வன்முறை. தாக்குதலை நியாயப்படுத்த தாக்குவதற்கு முன் வெறிபிடித்து விட்டது என்ற கதையாடல்கள் பரப்ப ஆதாய செய்திகளை (Paid News) வெளியிடும் ஊடகங்கள் தேவைப்படுகிறது. இவ்வூடகங்களின் கருத்துருவாக்கம் போலீஸ் மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. அது சமூகத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பயங்கரவாத இயக்கத் தொடர்பு, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், வன்முறையாளர்கள் என மெக்கார்தேயிசத்தை வெளிப்படுத்துகிறது.

அரச வன்முறைக்கு எதிராக ஜனநாயகக் கடமையாற்றுவது என்பதை பல்வேறு சூழல்களில் உயிருக்கும், வாழ்க்கைக்கும் அஞ்ச வேண்டிய நிலைக்கு அரச வன்முறை தள்ளுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் அரச வன்முறைக்கு மிக எளிய இலக்காக மாற்றப்படுகின்றனர். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, கொலை என பல்வேறு இழப்புகளைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும் மக்கள் ஆதரவு சக்திகள் போராடி வரும் நிலை உள்ளது. மனித உரிமை சக்திகளின் செயல்பாடு வெளிப்படையானது, ஜனநாயகப் பூர்வமானது, சட்ட ரீதியானது. மேலும் சமூக அமைதியை மையமாகக் கொண்டது. சட்டத்தை மதிக்கும் அறப்பண்புள்ள யாரும் இவர்களை விரோதிகளாகப் பார்க்க முடியாது. PUCL தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர் சின்கா கூறிய‌தைப் போல‌, ம‌னித‌ உரிமை செயல்பாட்டாள‌ர்க‌ள் பணி ஒரு ம‌ருத்துவரின் பணி போல‌த்தான். எந்தவொரு கொடிய குற்றவாளிக்கும் மருத்துவ உரிமையை மறுப்பது கூடாது என்பதைப் போலத்தான், அவருக்கான மனித உரிமைகளை மறுப்பதும்.

நீங்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கு, நாங்கள் வறுமையில் வாடும் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்படும் ஆதரவற்ற அந்த மக்களின் பக்கம். நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பது போல மாவோயிஸ்டுகள் பல சமயங்களில் நிற்கிறார்கள். அதற்காக மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. உண்மையில் ஏழைகளைப் புறக்கணிக்கும் இந்த அரசும் சொந்த மக்களின் மீது பச்சை வேட்டை என்ற பெயரில் விமானப்படை தாக்குதலுக்குத் தயாராகி வரும் அரச பயங்கரவாதம், வன்முறைகளுக்கெல்லாம் தலையானதாகவும், வரலாற்று பிழையாகவும் இருக்கப் போகிறது. 'நீங்கள் யார் பக்கம்? மாவோயிஸ்ட் பக்கமா? அரசு பக்கமா?' என்ற தொலைக்காட்சி வர்ணணையாளர் கேள்விக்கு நாம் வைக்கும் எதிர்க் கேள்வி 'ஊடகங்களே! நீங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் பக்கமா? இந்திய ஏழைப் பழங்குடி மக்களின் பக்கமா? இந்நாட்டில் ஏழை, எளிய பழங்குடி மக்கள் மனித கண்ணியத்தோடு வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளதா, இல்லையா? சொந்த மக்களைக் கொன்றொழிக்க போர்ப் பிரகடனம் அறிவிக்க இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சிறுதார்மீக உரிமையாவது உள்ளதா?'

குறிப்புகள்:

(1) Vedanta’s Billions by Rohit Poddar.

(2) Committee on State Agrarian Relations and Unfinished Task of Land Reforms. Volume I, draft report pg 161. Ministry of Rural Development, Government of India.

(3) http://radicalnotes.com, 28 August 2009.

(4) Deccan chronicle Newspaper 09.04.2010, Page-8.

(5) The Third position Non-alignment with violence by Sudhir Vombakere.

Thanks: - ச.பாலமுருகன் ( balatnpucl@rediffmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

(கட்டுரையாளர் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு புதுவை மாநிலங்களின் பொதுச் செயலாளர்)