Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, November 23, 2010

ஒபாமாவின் இந்திய படையெடுப்பு

ஒபாமாவின் இந்தியப் பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிப்படையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்திப் பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். பல்லாயிரம் கோடி பெறுமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தளவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்யப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சுக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாகக் கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது. ஒபாமா முக்கியமாகக் கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்கப் பொருட்களுக்கு சந்தை விரிவாகும் என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளைத் தொடங்கினால் நிச்சயம் அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தை விரிவடையப் போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்திப் பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாகக் குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லாப் பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தைக் கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிகப் பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தையும் அமெரிக்கப் பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லாக் கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போகப் போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள். அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பணத்தின் விளைவாகத் தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிகக் குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யப்படும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாகப் புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டுப்பாடுகளை மிகப் பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்கத் தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.

உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்கப்போவது இல்லை. பலன் அனைத்தும் மிகப் பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறியபடி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்திப் பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Thanks: சதுக்கபூதம், www.keetru.com

Monday, July 27, 2009

அமெரிக்காவிடமிருந்து இந்தியா கற்க மறுக்கும் பாடம்

"Too Big to Fail " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேசப்படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கித் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளன. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்கப் பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் விழவே கூடாது (Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது. அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்கத் தொடங்கின. நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டுப்பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Indian Bank இதிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கித் துறையில் அரசுத் துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. அரசுத் துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளன.

தற்போதைய மத்திய அரசோ அனைத்து அரசுத் துறை வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசுத் துறை வங்கிகளில் தனியாரின் (முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது. (அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பலமுறை கூறப்பட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவைக் குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே.

இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்:

1. சிறு சிறு வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளப்பட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதைக் காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும். அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதைக் காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலைமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்தபோது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றிணைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதைக் காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைப்படும். இதுவே அமெரிக்காவாக இருந்தால் மிகக் குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொதுத் துறை வங்கி என்று இல்லை, பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றித் தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறைப்படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்.

2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடப்போவது கிராமப்புறங்களைச் சேர்ந்த வங்கிகளைத் தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிகப் பெரிய வங்கிகள் பெரிய கார்ப்பொரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.

3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலைமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனித்தன்மை முழுமையாக பாதிக்கப்படும் (முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறிப் போக வாய்ப்புள்ளது.

4. அதிகாரப் பரவலாக்கத்தின் (Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல்பட்டு வருகின்றன. வங்கிகளை ஒன்றிணைப்பது மூலம் அதிகாரப் பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனைப்படுத்தப்பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணிவேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.

6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதைய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியைப் பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கணம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடைபெற அதிக வாய்ப்புள்ளது.

இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிப்பட்டவர்களின் நன்மையைப் பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.


ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்

அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயம் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நாடுகள் மிகப் பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

Paddy land சோமாலியா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்விப்பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதைபடுவது பற்றி நாம் பார்த்த புகைப்படங்களாகத் தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவுப் பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும். ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாளை உணவுப் பொருளுக்கும் வரக் கூடிய சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலவாணி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவுப் பொருட்களுக்கான தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களைக் கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1. உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி தங்கள் நாடுகளுக்குத் தேவையான உணவை நவீன விவசாயம் செய்து இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதித் துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர். இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடமும் ஐரோப்பியர்கள் நிலத்தைப் பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தைப் பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்தச் செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்குப் பின் இத்திட்டம் கை விடப்பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சீனா, கொரியா, ஜப்பான், அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளன. இந்தியக் கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயிறு வகைகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும், தொழிற்மயமாதலாலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாயத் தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க (காங்கோ, சாம்பியா, சூடான், சோமாலியா என பல நாடுகள்), தென் அமெரிக்க, ரஷ்யா, பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்தப் போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவுத் தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான், கம்போடியா, பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், கத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாயப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூறப்படுபவை

1. ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியைப் பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளிநாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளிநாட்டினர் முதலீடு செய்யும்போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்புக் கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவர். அதைப் பயன்படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சிப் பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும்.

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1. நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை. அதாவது அவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டைக் கவர எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின் நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்விக்குறியே.

2. லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள் கொண்டு விவசாயம் செய்யப்படும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்யப் போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4. ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது. இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும்.

5. ஒப்பந்தத்தால் பயிரிடப்படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்தப் பயிரினால் உள்நாட்டு மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்யப்படும் விவசாயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்கப்படும்.

7. நவீன விவசாயத்தால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்கப்பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடையப் போவது அங்கு பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவாணி கிடைக்கும் என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: சதுக்கபூதம், (sathukapootham@yahoo.com)

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?

ndia’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.

Youth in US வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருகப் போவதுதான். அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார். கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.

15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்கப் போகிறார்கள்.

பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறையப் போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை (patent) உலகெங்கிலும் கடுமையாக பின்பற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும். (அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்கப்படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலைநாடுகள் துரிதப்படுத்துகிறது.

அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிலாளர்கள் உலக சந்தையில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிலாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையும் அதிகமாகும். தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளிநாடுகளிருந்து வரும் தொழிலாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி: சதுக்கபூதம், (sathukapootham@yahoo.com)

Tuesday, December 9, 2008

"எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்" செல்லமுத்து குப்புசாமி

அந்தச் செய்தியைக் கண்டவுடன் ஜெயலலிதா தான் என் நினைவுக்கு வந்து போனார். என்ன இருந்தாலும் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டு முதலமைச்சராகப் பணியாற்றுவதென்றால் சும்மாவா! அதற்கெல்லாம் ஒரு BIG மனசு வேண்டும். அந்த BIG மனசு இப்போது BIG 3 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வந்துள்ளது; சரியாகச் சொன்னால் வந்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் ஆகிய மூன்று முக்கியமான வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே BIG 3 என அறியப்படுகின்றன. மேட்டுக்குடி சமூகத்தின் சொத்து எனக் கருதப்பட்ட மோட்டார் காரை வெகு மக்களும் வாங்கிப் பயனுறுமாறு வடிவமைத்து, அதற்கேற்ப தயாரிப்பு முறைகளையும் தொழிற்சாலையையும் தகவமைத்து மாடல் - T கார் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர் ஹென்றி ஃபோர்டு. அவரது 'ஃபோர்ட் மோட்டார்ஸ்' நிறுவனம் உலகின் முதன்மையான கார் கம்பெனியாக விளங்கியது. அதன் பிறகு தொடங்கிய ஜெனரல் மோட்டார்ஸ் ஃபோர்டை முந்திக்கொண்டு சென்றது. ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்த கிரைஸ்லர் தனியாகப் பிரிந்து சென்று ஆரம்பித்தது மூன்றாவது கம்பெனி. இவை மூன்றுமே BIG 3 என அமெரிக்க ஆட்டொமொபைல் அகராதியில் குறிக்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் நிறுவனங்கள் படிப்படியாகத் தலையெடுக்கும் வரை இந்த மும்மூர்த்திகளையும் அடித்துக்கொள்ள ஆளில்லை. பல பத்தாண்டுகளாக உலகின் மிகப் பெரிய கார் கம்பெனி என்று ஜெனரல் மோட்டார் கம்பெனி தக்க வைத்திருந்த இடத்தை இப்போது டொயாட்டா கம்பெனி பிடித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு பிரபலமான ஜப்பானிய கார் கம்பெனியின் அமெரிக்கத் தொழிற்சாலைக்காகப் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அப்போது ஃபோர்டு கம்பெனி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. ஜப்பானிய நிறுவனங்கள் இயங்குவதற்கும், அமெரிக்காவின் BIG 3 நிறுவனங்கள் இயங்குவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை உணரும் வாய்ப்பும் கிட்டியது.

அமெரிக்க நிறுவனங்கள் டெட்ராய்ட் நகர் உள்ள மிசிகன் மாகாணத்தில் அமைந்துள்ளன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மிக வலுவான United Auto Workers தொழிலாளர் யூனியனில் அங்கம் வகிக்கிறார்கள். அந்த கம்பெனிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மாதாமாதம் வீடு தேடி வந்து விடும். இந்த மூன்றுக்கும் போட்டியாக, பெரும் சவாலாக இருப்பவை டொயாட்டா மற்றும் ஹோண்டா ஆகிய ஜப்பான் கம்பெனிகள். ஆரம்பத்தில் ஜப்பானில் இவை உருவாக்கிய கார்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு BIG 3 பாய்ஸ் கலங்கித்தான் போனார்கள்.

அவை மூன்றும் ஆட்சியாளர்களிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இறக்குமதிக்கு முட்டுக்கட்டையும், உச்சவரம்பும் நிர்ணயிக்க முயன்றன. விளைவு? ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தொழிற்சாலை திறந்தன. மலிவான விலையில், நீடித்து உழைக்கும் எஞ்சினோடு, குறைந்தபட்ச பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறதும் நிறைய மைலேஜ் கிடைக்கிற மாதிரியானதுமான கார்களை அவை உருவாக்கின. அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நேரெதிர். தொடக்கத்தில் 'மக்கள் கார்' என்பதை மனதில் வைத்து வளர்ந்த ஃபோர்டு உள்ளிட்ட அமெரிக்க ஆட்டொமொபைல் நிறுவனங்கள் ஆடம்பரக் கார்களையே பெருமளவில் தயாரித்துக் கொண்டிருந்தன.SUV எனப்படும் படோபட வாகனங்களுக்கும், எருமை மாதிரி பெரிய கார்களையும் அமெரிக்கக் கம்பெனிகள் உருவாக்கின. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துப் பழகிய அமெரிக்க வெகுஜனத்தைக் குறிவைத்தே அது செய்யப்பட்டது. மைலேஜ் பற்றியெல்லாம் கவலையில்லை. எரிபொருள் குறைவாக இழுக்கும் கார்களைவிட இவை இலாபகரமானவை. SUV ரக வாகனங்களில் 15 முதல் 20 விழுக்காடு வரை இலாபம் சம்பாதித்த நிறுவனங்கள் சாதாரணக் கார்களில் 3 விழுக்காடு மட்டுமே இலாபம் ஈட்டின. மிசிகன் மாகாணத்திலேயே குவிந்து கிடந்த BIG 3 போலன்றி டொயாட்டாவும், ஹோண்டாவும் பிற மாநிலங்களில் கார்களை உற்பத்தி செய்தன. கடந்த 15 ஆண்டுகளில் 83,000 ஆட்டொமொபைல் வேலைகள் மிசிகன் மாகாணத்தில் குறைந்துள்ளன.

பிற மாகாணங்களில் சுமார் 91,000 பணிகள் உருவாகியுள்ளன. இதற்குப் பெருங்காரணம் BIG 3 அல்லாத நிறுவனங்களே ஆகும். மேலும் ஜப்பானிய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புச் செலவு கூடுதல். கடந்த காலத்தில் பணியாற்றிய ஊழியர்களின் ஓய்வூதியம், தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள், இதர வெட்டிச் செலவுகள், உயர் அதிகாரிகளின் படோபடம் என எல்லா வகையிலும் செலவுகள். ஒரு கார் தயாரிப்பதில் ஜப்பானிய நிறுவனங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கம்பெனிகளில் கிட்டத்தட்ட 1,500 டாலர் வரை கூடுதலாகச் செலவழிகிறது. வேறு விதமாகச் சொன்னால் ஒரே மாதிரியான காரை அமெரிக்க நிறுவனங்களைவிட ஜப்பானிய கம்பெனி ஒன்று சுமார் 75,000 குறைத்து விற்க இயலும்.

யுனைட்டேட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரம் 10-20 டாலர் வரை கூடுதலாக சம்பளம். இன்னொரு புறம் புதுமையான தயாரிப்பு முறைகள் மூலம் திறம்பட இயங்குவது ஜப்பானிய நிறுவனங்களுக்கே உரித்தானச் கூடுதல் அனுகூலம். 2006 இல் வெளிவந்த ஆய்வொன்று வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் முதல் பத்து மாடல்களும் ஜப்பானிய நிறுவனங்களின் தயாரிப்புகளே என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவில் 'முப்பெரும்' கம்பெனிகளின் மார்க்கெட் ஷேர் கடந்த பத்தாண்டுகளில் 70 இல் இருந்து 53 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே நாம் தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையை நோக்க வேண்டியிருக்கிறது.

இவ்வருட ஆரம்பத்தில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 140 டாலர் வரை போனது. ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, மலிவுக் கடன் கிடைக்காமை முதலிய அச்சுறுத்தல்களால் பெட்ரோல் குடிக்கும் அமெரிக்கக் கார்களை வாங்குவதை அமெரிக்கர்கள் குறைத்துக் கொண்டனர். அதிகக் காசு கொடுத்து, அதிகமாக எரிபொருள் குடிக்கும் காரை வாங்க வேண்டுமா என்ற பகுத்தறிவுக் கேள்வி அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாததை விட இப்போது வரவேற்கத் தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. லீமன் பிரதர்ஸ் உள்ளிட்ட சில மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் திவாலானதை அடுத்து ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நலிவடைந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக 700 பில்லியன் டாலர் மீட்புத் திட்டத்தை அறிவித்தது. அந்தப் பணம் பெரும்பாலும் நிதி நிறுவனங்களை மீட்பதற்கே பயன்படும் என்று கருதப்படும் நிலையில் அமெரிக்காவின் 'முப்பெரும்' வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் உதவி கேட்டுக் கையேந்தின.

உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் எல்லா நாடுகளிலும் தானியங்கி வாகனத் தொழிலில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாத கார் மற்றும் மோட்டர் பைக் விற்பனை, அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் போன வருடத்து எண்ணிக்கையில் இருந்து வெகுவாகக் குறைந்துள்ளது. மாருதி 27.4 சதவீத வீழ்ச்சி, டாடா மோட்டார்ஸ் 12.2 சதவீத வீழ்ச்சி, மகேந்திரா & மகேந்திரா 41.55 சதவீத வீழ்ச்சி, பஜாஜ் ஆட்டொ 37 சதவீத வீழ்ச்சி, டி.வி.எஸ் 12.7 சதவீத வீழ்ச்சி (ஹீரோ ஹோண்டாவிற்கு மட்டும் கூடவும் இல்லை குறையவும் இல்லை). உலகத்தில் அனைத்து தேசங்களிலும் இதே நிலைதான். அமெரிக்காவில் கார் விற்பனை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 17.7 சதவீதம் சரியுமெனக் கணிக்கப்படுகிறது. இது 1980 க்குப் பிறகு அந்தப் பொருளாதார வல்லரசு சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும். 1980 இல் தானியங்கி வாகனத் துறை 19.1 சதவீதம் வீழ்ந்தது.

நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக சரிவையே அது சந்தித்தது. மறுபடியும் அப்படிப்பட்ட பரிதாபக் காட்சிகள் அரங்கேறும் என்பதே அநேக நிபுணர்களின் அவதானம். ஆயிரம் பேருக்கு எத்தனை கார் விற்றது என்று கணக்குப் போட்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறைவாம். கடந்த காலத்தில் 1961 இல் ஆயிரம் மக்களில் 37.6 பேர் வாகனம் வாங்கினார்கள். 2008 நிலவரம் அதை விடக் கீழே இருக்குமாம். மறுபடியும் 2007 விற்பனை அளவை எட்ட அமெரிக்காவிற்குக் குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டுகள் பிடிக்குமாம். ஐரோப்பா, ஜப்பான், இந்தியா என மற்ற நாடுகளில் பார்த்தாலும் தெம்பு உண்டாகவில்லை. 2007 இல் 7.1 கோடியாக விளங்கிய உலக ஆட்டோமொபைல் விற்பனை 2009 இல் 6.22 கோடியாகக் குறையுமென்று எதிர்பார்க்கிறார்கள். முப்பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் "திவாலான ஃபைனான்ஸ் கம்பெனிக்கெல்லாம் உதவி செய்றீங்கோ! எங்களுக்கு ஏதாவது பாத்துப் பண்ணுங்க.

நாங்க போண்டியானா மில்லியன் கணக்கில வேலை போகும். அதனால ஒரு 25 பில்லியன் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்ற தொனியில் பிரைவேட் ஜெட் விமானத்தை எடுத்துக்கொண்டு வாஷிங்டன் சென்று பேசினார்கள். அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் டிசம்பர் முடிவில் திவாலாகும் அபாயம் தனக்கிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. அதன் அக்டோபர் விற்பனை 45 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஃபோர்டும், கிரைஸ்லரும் அதை விட மெச்சும்படியாக இல்லை. மீறிப் போனால் சில மாதங்கள் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கும். அவ்வளவே! ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் ஷேர் வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது, அதாவது 1946 இல் நிலவிய விலைக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. எனினும் இந்த முறை கொஞ்சம் பிகு பண்ணிய அமெரிக்க ஆளும் வர்க்கம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை.

பல காலமாகவே எரிபொருள் சிக்கனப்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதை இந்த மூன்று நிறுவனங்களும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினர். ஜப்பானில் ஒரு கேலன் பெட்ரோலுக்கு 45 மைல் (லிட்டருக்கு 19.125 கிமீ) அளிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அதே போல சீனாவில் கேலனுக்கு 35 மைல் (லிட்டருக்கு 14.875 கிமீ) என்ற நியதியும், ஐரோப்பாவில் 2012 க்குள் கேலனுக்கு 52 மைல் (லிட்டருக்கு 22.1 கிமீ) என்ற நியதியும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நிர்ப்பந்திக்கப்படுவது கேலனுக்கு 25 மைல் (லிட்டருக்கு 10.625 கிமீ) மட்டுமே. எனவே 2020 க்குள் கேலனுக்கு 35 மைல் கொடுக்குமளவு தொழில்நுட்ப மேம்பாடு செய்வதற்காக ஏற்கனவே அவற்றுக்கு 25 பில்லியன் உதவியளிக்க அமெரிக்க நிர்வாகம் சம்மதித்துள்ளது.

எனவே இதற்கு மேல் எதற்காகக் கூடுதல் நிதியுதவி என்ற கேள்வியும், நியாயப்படுத்துமாறு வேண்டுதலும் முன்வைக்கப்பட்டன. தவிர எப்படியெல்லாம் கம்பெனியை இலாபப் பாதைக்கு மீட்கப் போகிறார்கள் என்ற வரைவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அதே நேரம் இந்த மூன்று நிறுவனங்களையும் அப்படியே கைவிட்டு அவற்றை இழுத்து மூடினால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தப் போகும் கடுமையான பாதிப்புகளைப் பற்றி அமெரிக்க அரசு அறியாமல் இல்லை. 12.2 இலட்சம் பேருக்கு நேரடியாக வேலை பறி போகும். அவற்றை நம்பியுள்ள உதிரி பாக நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்களில் 17 இலட்சம் பேரும் வீட்டுக்குச் செல்ல நேரிடும். ஒரு வருடத்தில் 151 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மூன்று வருடத்தில் 398 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள்.

இருந்தாலும் குருட்டாம்போக்காக இந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதில் அமெரிக்க செனட் சபை இருதரப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. அதனால் தான் மேலே குறிப்பிட்டது போல, எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கார்களை விற்று கம்பெனியை மீட்புப் பாதைக்குத் திருப்பப் போகிறீர்கள் என்ற கேள்விக் கணையைத் தூக்கி வீசி நவம்பர் 19 ஆம் தேதி திருப்பி அனுப்பிவிட்டது செனட். அந்த மூன்று கம்பெனிகளின் உயரதிகாரிகள் மிசிகனில் இருந்து இருபதாயிரம் டாலர் கம்பெனிக் காசு செலவழித்து கார்ப்பரேட் சொகுசு பிரைவேட் ஜெட்டில் வாஷிங்டனுக்கு வந்திருந்தனர். மற்றவர்களைப் போல விமானம் பிடித்திருந்தால் இரு வழிப் பயணம் வெறும் 500 டாலரில் முடிந்திருக்கும் என்று பத்திரிகைகள் கரித்துக் கொட்டின. ஏற்கனவே நிதி நிறுவனங்களை மீட்பதற்கு ஒதுக்கிய 700 பில்லியன் டாலரில் பெரும்பகுதி உயரதிகாரிகளுக்குப் போவதாக ஒரு குற்றச்சாட்டு உலவுகிறது.

அதே போல முப்பெரும் கம்பெனிகளின் மேலதிகாரிகளும் லவட்டிச் செல்லக் கூடாது என்பது பொதுமக்களின் நிலைப்பாடு. எனவே வேறு வழியில்லை. ஜெயலலிதா வழியில் ஜெனரல் மோட்டார், ஃபோர்டு, கிரைஸ்லர் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அடியெடுத்து வைக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. டிசம்பர் 2 ஆம் தேதி அவர்கள் மறுபடியும் வாஷிங்டன் வந்தனர். கூடவே, "எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்" என்ற அறிவிப்பு. அம்மாவே அசந்து போயிருப்பார். ஏனென்றால் சென்ற ஆண்டு ஃபோர்டு தலைவரின் ஊதியம் 21 மில்லியன், ஜெனரல் மோட்டார் தலைவருடையது 14.4 மில்லியன். கூடவே நிறுவனம் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்ப்பரேட் ஜெட் விமானங்களையும் விற்பதாக உறுதியளித்துள்ளனர். தனது 47 தொழிற்சாலைகளை 2012 க்குள் 38 ஆகக் குறைப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் வரைவுத் திட்டம் கூறுகிறது. அதில் 31,500 பேருக்கு வேலை பறி போகும்.

2000 சமயத்தில் 1,91,465 பேர் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் தற்போது 96,537 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். வகுத்தபடி இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினால் 2012 இல் டொயாட்டோ நிறுவனத்தை நேருக்கு நேர் சமாளிக்கும் அளவுக்கு முன்னேறிவிடுவோம் என்றும் அமெரிக்க பிரதிநிதி சபை காங்கிரஸிடம் அது உத்திரவாதம் கொடுத்துள்ளது. மூன்று கம்பெனிகளும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 31 பில்லியன் டாலர் நிதியுதவி கேட்டுக் கையேந்தியுள்ளன. இதில் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும் 18 பில்லியன் கோரியுள்ளது.

அமெரிக்க நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த வேண்டுகோளை மதித்து இணங்கும் என்ற கேள்விக்கு இந்தக் கட்டுரை பிரசுரமாகும் போது ஒரு வேளை விடை கிட்டியிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் திண்ணம். தொகை வேண்டுமானால் கூடக் குறைய இருக்கலாமே தவிர, வேண்டுகோளை அப்படியே நிராகரிக்க மாட்டார்கள் என்பதே அனைவரது கணிப்பும் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

நன்றி: uyirosai@uyirmmai.com , kuppusamy18@gmail.com

Monday, December 8, 2008

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.

சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர்.

பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.

அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.

இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன?

பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா?

அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?

அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார்.

இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது?

இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.

வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள், கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?

இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?

உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை, நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.

ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!

உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர்.

இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல.

உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

நன்றி: http://vinavu.wordpress.com/2008/11/14/tmstar5/

Wednesday, September 17, 2008

லேமேன் வீழ்ச்சியும்.. இந்திய அதிர்ச்சியும்

நியூயார்க்: திவாலாகிவிட்ட லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பிரிட்டனின் மாபெரும் வங்கியான பர்க்லேஸ் முன் வந்துள்ளது.உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings) நேற்று முன் தினம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்க தந்த பணம் 613 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், இந்தப் பணம் திரும்பி வரவில்லை.இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர்களாவது உடனடியாதத் தேவை என்ற நிலையில், யாரும் முதலீடு செய்ய முன் வராததால் மஞ்சள் நோட்டீஸ் தந்துவிட்டது.

பவேரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து 1850ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர் ஹென்ரி லேமேன், இமானுவேல் லேமேன், மேயர் லேமேன் சகோதரர்கள்.இந்த நிறுவனம் ஆரம்பித்த முதல் வர்த்தகம் பருத்தி வியாபாரம் தான். அடுத்ததாக புரோக்கரேஜ் உள்ளிட்ட துறைகளில் இறங்கியது.அடுத்து அமெரிக்காவின் ரயில் பாதையை அமைக்கும் திட்டத்துக்கே நிதியுதவி செய்யும் நிலைக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. அமெரிக்கா சந்தித்த மிகப் பெரும் பொருளாதார சவால்களை எல்லாம் கூட தாக்குப்பிடித்தது இந்த நிறுவனம்.

கொடுத்த கடனில் மூழ்கி...
இதுவரை நஷ்டத்தையே பார்த்திராத இந்த நிறுவனம், இப்போது தான் கொடுத்த கடன்களிலேயே மூழ்கிப் போய்விட்டது.மெரில் லின்ஜ் நிறுவனமும் இதே போன்ற நஷ்டத்தை சந்தித்தாலும் கூட, ஒரேயடியாக மூழ்கும் முன்பே அதை பேங்க் ஆப் அமெரிக்காவிடம் 50 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு தப்பிவிட்டது.ஆனால், லேமேன் நிறுவனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை.

இந்த நிறுவனத்தை வாங்க பர்க்லேஸ் வங்கி முன் வந்தது. ஆனால், அவர்கள் சொன்ன விலையைப் பார்த்துவிட்டு பர்க்லேஸ் ஓடிவிட்டது.இப்போது திவால் ஆகிவிட்ட லேமேன் நிறுவனத்தின் மதிப்பு முழுமையாக சரிந்துவிட்டதால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்க திரும்பி வந்துள்ளது பர்க்லேஸ் வங்கி.இப்போது இந்த நிறுவனத்தின், அதிகம் நஷ்டத்தை சந்திக்காத சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பர்க்லேஸ் முன் வந்துள்ளது. இதனால் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேருக்கு வேலை தப்பிவிடும் எனத் தெரிகிறது.

40,000 வேலைகள் பறிபோகும்...
ஆனால், லேமேனின் பெரும்பாலான பிரிவுகள் மூடப்படுவது நி்ச்சயமாகிவிட்டதால் சுமார் 40,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.மும்பையில் 2,500 ஊழியர்கள்..இதில் லேமேனின் மும்பை அலுவலகத்தைச் சேர்ந்த 2,500 பேரும் அடக்கம். இதில் பெரும்பாலானவர்கள் லேமேனின் பிபிஓ பிரிவைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் தவிர, லேமேன் நிறுவனத்தின் பல நாட்டு அலுவலகங்களில் பெரும் அளவில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது வேலைகளும் பறிபோகவுள்ளது.

ஐஐஎம் பட்டதாரிகள்...
இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு ஐஐஎம்கள் மற்றும் முன்னணி கல்வி நிலையங்களில் படித்தவர்கள். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆண்டுக்கு சில கோடி ஊதியத்தில் பணியில் உள்ளவர்கள்.ஐஐஎம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிதி நிறுவனங்களில் தான் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் வரும் ஆண்டுகளில், ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்துவது பெருமளவில் குறைந்துவிடும் என்றும் தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படாத வரை இந்த நிலை தொடரலாம்.

சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அடி...
இதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் புதிய சிக்கல் முளைத்துள்ளது. நெருக்கடிக்கு ஆளாகிவிட்ட லேமேன், மெரில் லின்ஜ், ஏஐஜி ஆகிய சர்வதேச நிதி-இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர்களை சத்யம், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.இப்போது இந்த நிறுவனங்களே கரைந்துபோய்விட்ட நிலையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது.மேலும் இந்த நிறுவனங்களுக்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பணியமர்த்தப்பட்ட டீம்கள் கலைக்கப்படலாம். இந்த டீம்களின் ஊழியர்களை வேறு பிரிவுகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் மாற்றியாக வேண்டும்.

இந்திய சந்தையில் ரூ. 2,000 கோடி கரைந்தது...
இன்னொரு சிக்கலும் உள்ளது. லேமேன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையிலும், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிலும் ரூ. 2,000 கோடி வரை முதலீடுகளைச் செய்துள்ளன. இந்த முதலீடுகள் இப்போது காற்றோடு கரைந்துவிட்டன. இந்த முதலீடுகளுக்கு இப்போது எந்த மதி்ப்பும் இல்லை.இதனால் இந்த முதலீடுகளைப் பெற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.ஐசிஐசிஐ...குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி. லேமேன் முதலீட்டைப் பெற்றுள்ள இந்த வங்கியின் இங்கிலாந்து கிளைக்கு 80 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ஐசிஐசிஐயின் ஒட்டுமொத்த லாபத்தோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் பெரிய நஷ்டம் இல்லை என்கின்றனர்.

ரிசர்வ் வங்கி கிடு்க்கிப்பிடி...
இதற்கிடையே லேமேன் நிறுவனத்தின் இந்திய கிளைக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தனது அனுமதியில்லாமல் எந்தவிதமான பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என ஆர்பிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Thanks: thatstamil.com