Monday, May 4, 2009

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ - டவுன்லோட்

முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்……

இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது.

ஆனால் இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? இலங்கைக்கு ஆயுத உதவி தொடர்ந்து செய்வோம், இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்த இயலாது, இலங்கை இறையாண்மையில் இந்தியா தலையிடாது என்றெல்லாம் பாரளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக அறிவித்துவிட்டார். இந்தப் போரில் சிங்களப் பேரினவாத அரசு வெற்றிபெற வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்யவிரும்பும் இந்தியாவிற்கும் அதன் முதலாளிகளுக்கும் ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் ஈழத்தமிழர்கள் சாவதைப்பற்றிக் கவலையில்லை. அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும் அக்கறையில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டினைத்தான் தேசிய ஊடகங்களும் அநேக கட்சிகளும் கொண்டிருக்கின்றனர். ஈழம் என்று பேசினாலே கைது செய்யவேண்டுமென ஜெயலலிதாவும், காங்கரசு அனாமதேயங்களும், பா.ஜ.கவும் ஊளையிடுகின்றன. கருணாநிதியும் அதற்கு செவி மடுத்து நானும் அதற்கு இளைத்தவனல்ல என்று கைது செய்கிறார். கூடவே மனித சங்கிலிப் போராட்டமும் நடத்துகிறார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற உதார் வேறு.

தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து இப்படித்தான் நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்காக தார்மீக ஆதரவைக்கூட தரக்கூடாது என்ற நிலை மெல்ல மெல்ல மீண்டும் உருவாக்கப்படுகிறது. பொதுவில் தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அதை தலைமை ஏற்று நடத்த வேண்டிய கட்சிகள் எல்லாம் இந்திய அரசின் துரோகத்துக்கு துணை போகின்றன.

ஆகவே நமது கடமை என்ன? தெற்காசியாவில் நாட்டாமையாக உருவெடுத்து வரும் இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு செய்யும் உதவியை அம்பலப்படுத்தி முறியடிக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியாவும்தான் எதிரி. இதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவில்லை. ஆனாலும் புலிகளும், தமழின ஆர்வலர்களும் இந்தியா தங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அந்தப் புரிதலை தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் நடிகர்களும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த நாடக்தத்தை அம்பலப்படுத்துவதோடு, இந்தியாவின் திமிரை அடக்குவதும்தான் நம் முன் உள்ள கடமைகள். அந்தக் கடமையை வலியுறுத்தும் நோக்கில் இந்த அவலச்சுவை நிரம்பிய குறும்படத்தை பார்க்குமாறு கோருகிறோம்.

[googlevideo=http://video.google.com/videoplay?docid=-5141890152798369676]
இதை டவுன்லோட் செய்ய - இங்கே சொடுக்கவும் Download Here

நன்றி: http://www.vinavu.com

No comments: