Saturday, August 16, 2008

இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 2

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் விரைவில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.

அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.இவர்களுக்கு பிரச்சனை பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ - பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த பணக்கார ஏழைகளிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்க்கின்றனர்.

அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த இந்தியத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இது தெரிஞ்சதுதானே!!அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் இந்திய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே இறக்குமதி வரியை விதித்துக் கொள்ளையடிக்கும்.இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து தேர்தல் அரசியல் கட்சிகள் கச்சா எண்ணெயைப் பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணெதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைக் கண்டித்து உள்ளுர் கேபிள் டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.யாருபா அது??தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம்.

வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம்.

"நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம்.இவர்கள் மட்டுமா?அப்போ இன்னும் இருக்காங்களா??தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ,

"அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா,அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார்,2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர்,திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் இந்தியா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.அட படுபாவிப்பசங்களா...!பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல் கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசைப் பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் செயல்படுகின்றனர்.

தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.என்னப்பா செய்ய சொல்ற ??

1. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும்.

2. ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும்.

3. முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் இங்குள்ள அரசுகளே அவர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

4. இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும்.

இம்புட்டு நேரம் சீரியஸா தானய்யா பேசிட்டு இருந்த, திடீர்னு காமெடி பண்றியே!!!இதெல்லாம் ஆவுறதில்ல...?ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா?கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன?தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..?

அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் 'இந்தி'யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

சரி... எப்படி...மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.முடிச்சிட்டியா...??!!

ஆமாம்... இதல்லாம் நாம எப்போ உணரப்போரோம்?!

No comments: