Saturday, October 11, 2008

பொதுப்புத்தி

பொதுப் புத்திக்காரனாய்
ஞாபகமறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்

பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்

வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்று விட்டவன்
பெயர் என்ன

அணை கட்டும் போது
இறந்த தொழிலாளிகளின்
அனைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்

பசு வலி கண்டரற்ற
வெளியேறும் பனிக்குடத்துள்
தெரியும் கன்றின் தலை போல்
கல்லுக்குள் அசாதாரணச் சிலை
காணும் சிறப்புப் புத்திக்காரன்தான்

துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகளேனோ கடைசியில்
கொருவாய் விழுந்து போகுமென
நொம்பலப்பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்

எந்தச் “சிற்பியின் நரகத்”தில்
எந்த மொழிக் காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்

Thanks: Kalapriya

No comments: