Monday, December 8, 2008

மருந்து கம்பெனிகளின் மோசடி

அரசையும் மக்களையும் இந்திய மருந்து கம்பெனிகள் பெரிய அளவில் ஏமாற்றி வருகின்றன. அதிர்ச்சி தரும் இந்த தகவலை தருபவர் யார் தெரியுமா? இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) புதிய தலைவரான திரு.எ.கே.பானர்ஜீ.

சற்று விரிவாக பார்ப்போம்."இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இது வரை சுமார் 1600 கோடி ரூபாய் மருந்து கம்பெனிகள், நுகர்வோரிடம் இருந்து அதிகம் பெற்றுக் கொண்டதாக கூறி அந்த கம்பெனிகளுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிறது. இதில் சுமார் 1000 கோடி ரூபாய் கோரி ஒரே ஒரு (சிப்லா) நிறுவனத்திடமிருந்து மட்டும் வர வேண்டும்.இதை விட அதிர்ச்சி தரக் கூடிய தகவல் அடுத்தது. அத்தியாவசிய மருந்துகளின் மீது அரசு விதித்துள்ள விலை கட்டுபாட்டை மீற இந்த கம்பெனிகள் செய்யும் ஏமாற்று வேலை.

இவ்வாறு கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளில் சிறிது மாற்றம் செய்து (சமயங்களில் கிட்டத்தட்ட அதே பெயரில் கூட) அந்த மருந்துகளை அதிக விலைகளில் விற்க படுகின்றன. இதனால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து இந்த கம்பெனிகள் தப்பித்துக் கொள்வதுடன் கொள்ளை லாபம் அடிக்க முடிகிறது."(நன்றி: The Economic Times)மற்ற நுகர்வோர் சந்தைகளுக்கும் மருந்து வியாபாரத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மருந்து பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்த மருந்து பெயர்களைப் பற்றியும் அவற்றின் குணங்களை பற்றியும் அவற்றின் மீது உள்ள அரசு (அத்தியாவசிய மருந்துகள் குறித்த) விலை கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் இங்கு நுகர்வோர் பெரும்பாலும் நொடிந்த மனதுடனே காணப் படுகின்றனர். மருத்துவர்களில் சிலர் மருந்து கம்பெனிகள் தரும் சில அன்பளிப்புகள், சில வெளிநாட்டு உள்நாட்டு பயணங்கள் ஆகியவற்றிக்கு ஆசைப் பட்டுக் கொண்டு அதிக விலையில் உள்ள மருந்துகளையே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். எனவே, இந்த மருந்து சந்தை, பொதுவான சந்தை விதிகளுக்கு முரணாக உள்ளது.

அதாவது, விலை அதிகமுள்ள மருந்துகளே இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. இதனால், ஏற்கனவே உடலாலும் மனதாலும் நொந்து போன நோயாளிகள் பெருமளவு பணத்தையும் இழக்கின்றனர்.இது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அரசு தனது நல்ல முயற்சிகளை (அத்தியாவசிய மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாடு) கூட மக்களிடையே சரிவர கொண்டு செல்லாததுதான். மேலும் மக்களிடையே இருக்க வேண்டிய அரசு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் சற்று குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

ஒவ்வொரு தனியார் மருத்துவ மனையிலும் பல்வேறு வியாதிகளை குணப் படுத்த கொடுக்க வேண்டிய (அரசு பட்டியலில் உள்ள ) மருந்துகளின் பட்டியல் அனைவரும் கவனிக்கக் கூடிய அளவில் பெரியதாக இட்டிருக்க அரசு ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உரிய அளவில் ஏற்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வர வழி வகுக்கும். குறைந்த பட்சம் எந்த மருந்து எந்த வியாதிக்கு என்ற கேள்வியை மருத்துவரிடமும், இதே குணத்தில் உள்ள மற்ற கம்பெனி மருந்து என்ன விலை என்று மருந்து கடைக் காரரிடமும் நோயாளிகள் (அல்லது அவர்களது உறவினர்கள்)கேட்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப் படுமா என்று சொல்வது கடினம். நோயாளி மக்கள் கடவுளாக நம்பும் டாக்டர்கள் அனைவரும் (சில்லறைக்கு ஆசைப் படாமல் சேவை மனதுடன்) மனது வைத்தால் தான் உண்டு.ஏற்கனவே உடல் கெட்ட அந்த பாவப் பட்ட மக்களுக்காக கொஞ்சமாவது மனதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அந்த சில மருத்துவர்களிடம் நாம் கோரிக்கை வைப்போம்.

நன்றி : http://sandhainilavaram.blogspot.com/

No comments: